பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 11 septembre 2010

எண்ணப் பரிமாற்றம்

உலகக் கம்பன் கழகச் சரித்திரத்தில் முதன்முறையாக, முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்ட “பிரான்சு கம்பன் கழக மகளிரணி” தன் முதலாம் ஆண்டைச், செவ்வனே செயலாற்றிய மகிழ்வுடன் நிறைவுறச் செய்துள்ளது. தொய்வுறாத மனமும், ஆக்கச் செயல்களில் விழைவும் கொண்ட எங்கள் ஆர்வத்தைப் பயனுறும் வகையில் ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

உளந்திறந்த பாராட்டும், உழைப்பும், பொருளும் பங்காக அளித்த பாங்கும், நுாலகம் வளர புத்தகங்கள் நன்கொடையாகத் தந்து அளித்த உற்சாகமும் என்றும் எங்கள் நினைவில் மங்கா இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்த ஆதரவு, என்றும் எங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்குமென்ற நம்பிக்கையோடு,  இரண்டாம் ஆண்டுக்கான எங்கள் கடமைகள் தொடர்கின்றன.

இந்திய ஒற்றுமையைச் சீரழிக்க அரசு ஒரு வலிமையான ஆயுதத்திற்கு
 கூர் சீவ உள்ளது அறிந்து மனம் நொந்து போகிறது. சாதிவாரியாக மக்கள்  பட்டியல் தயாரிக்க உள்ளார்களாம்! சாதாரண குடிமக்களுக்குத் தீமையெனத் தோன்றும் ஒன்று அரசியல்வாதிகளுக்குத் “தெரியாமல்” போவது ஏனென்று புரியவில்லை. நாட்டுப்பற்று உள்ளவர்கள் கடவுளை இனி நாட்டுக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்!

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுடையக் கவிதை இந்தப் பொருமலையும், இதற்கானத் தீர்வையும் காட்டுகிறது.

--இராசேசுவரி சிமோன்--

இன்றைய அறிமுகம் -- அருட்சகோதரி எம்மானுவெல்

அன்னை தெரசாவின் வழியில் இறைவனின் முகத்தை ஏழைகளின் சிரிப்பில் கண்டவர்.  16-11-1908 ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகரான புருக்சேலில் பிறந்து, சிறு வயதில் தந்தையை இழந்து மனதால் வெறுமையுற்ற மதலேன் சென்கின், வளர்ந்த பிறகு மடத்தில் சேர்ந்து, துா்ப்பாக்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்குச் சேவை செய்ய எண்ணினார்.

அருட்சகோதரியாக எம்மானுவெல் என்று பெயர் மாற்றம் பெற்றவர், இலக்கிய, தத்துவப் பேராசியராகத் துனீசியா, துருக்கி, எகிப்து நாடுகளில் பணியாற்றினார்.

1971இல், பணி ஓய்வுக்குப் பிறகு, தன் வாழ்வை அழுக்கு, நோய், ஏழ்மை நிரம்பியச் சேரிகளில்-ஏழைகளுக்கு உதவுவதில் உள்ள இன்பத்தை உணர்ந்தவராய்க்-கழித்தார். பழைய செருப்பும், உடையும், புன்னகையும் அணிந்து அஞ்சாநெஞ்சத்துடன் உழைத்து ஆதரவற்றவர்களுக்கு வீடும், பள்ளியும், மருத்துவ நிலையமும் ஏற்படுத்தித் தந்த அவரது அன்பு பலரது வாழ்வை மலர்வித்தது. இவ்வாறு 22 வருடங்கள் ஓயாது உழைத்து, 85% குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளித்து, வன்முறையைக் குறையச் செய்து  பெண்களின் விடுதலைக்கு வழியும் வகுத்தார்.

தனது 74 ஆம் வயதில்,  “மீண்டும் பூஜ்யத்தில் ஆரம்பித்தல்” என்ற கொள்கையோடு அவா் உருவாக்கிய இயக்கம் உலகெங்கும் பரந்து எகிப்து, லிபான், பிலிப்பைன்சு, சூடான் ... என 60,000 குழந்தைகளுக்கு மேல் பராமரிக்கிறது.

1993 இல் கிட்டத்தட்ட தன்னுடைய 30 ஆண்டு சேவைக்குப்பின் பிரான்சு திரும்பிய அவர், “நீ வாழ வேண்டுமானால் பிறரை நேசித்தே ஆக வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி, கோவில்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனக் கோரினார்.

தனது அயரா உழைப்புக்கிடையில், பல நுால்களை எழுதினார்.

தன் 99 ஆம் வயதுவரை அளப்பரியாச் சக்தியுடன் செயல்பட்ட இந்த அம்மையார், “என்றும் முன்னேற்றம்” என்ற தாரக மந்திரத்துடன் கடமையை ஆற்றி 20-10-2008 இல் இறையடி எய்தினார்.

எகிப்து தன் குடியுரிமையை அளித்து நன்றி பாராட்டியது. பெல்ஜியக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கி மகிழ்ந்தது. பிரான்சு மருத்துவக் கல்விக் கழகம் தங்கப் பதக்கம் கொடுத்து கௌரவித்தது.

பெல்ஜிய நாட்டின் அதி உயர் விருதுகள் இரண்டும், பிரான்சு நாட்டின் மிக உயா்ந்த விருதுகள் மூன்றும் இவர் பெருமைக்குப் பெருமை சேர்ப்பவை.

--தமிழரசி--

இயலாமையும் இன்புறும் வழியும்

சாதிகளை ஒழித்திடவே முடியாதா? சமயத்
 சண்டைகளை நிறுத்திடவே இயலாதா? இங்கு
நீதிகளை நிலைநாட்டல் நடவாதா? நல்ல
 நெறிகளையே வளர்த்திடல்கை கூடாதா? என்றும்
வாதிகளாய் நின்றதினிப் போதாதா? வாழ்வில்
 வடலுாரார் துாயநெறி சேராதா? இன்பம்
மோதிவிளை யாடவழி தோன்றாதா? நாடு
 முன்னேற இயலாமை ஓடாதா தோழா?

எல்லோரும் ஒற்றுமையாய் இணைந்து வாழ்ந்தால்
 எழில்மேவும் சமுதாயம் இனிதே  பூக்கும்!
நல்லோரின் நன்னெறியில் வாழ்க்கை சென்றால்
 நலம்மேவும் பொற்காலம் இங்கே தோன்றும்!
வல்லோரின் நல்லறிவு வளரும் வண்ணம்
வழிகளையே வகுத்திடுவோம் மணக்கும் நாடே!
பொல்லாரும் தீயாரும் திருந்தி வாழும்
 புதுநெறியைப் படைத்திடுவோம் கருணை யோடே!

விழிதன்னைக் காக்கின்ற இமையைப் போன்று
 விளைபயிரைக் காக்கின்ற வேலி யாக
மொழிதன்னைக் காக்கின்ற நாடே ஓங்கும்!
 மூளுகின்ற தீதெல்லாம் தானே நீங்கும்!
வழிதன்னை எப்பொழுதும் மேன்மை யாக
 வடித்திட்டால் நிலையாக இன்பம் தேங்கும்!
பழிதன்னைத் தருகின்ற வினைகள் ஓயப்
 பண்பென்னும் மலர்ச்சோலை செழித்தல் வேண்டும்!

ஒன்றுக்கும் உதவாமல் வீட்டுக் குள்ளே
 உண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ?
இன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்
 என்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ?
நன்றிக்கே என்னபொருள் என்றே கேட்கும்
 நட்பறியா நெஞ்சங்கள் உயரப் போமோ?
என்றைக்கும் கடமையுடன் உழைத்(து) உயர்ந்தால்
 எழில்பொங்கும் சோலையென மின்னும் வாழ்வே!

--கவிஞர் கி. பாரதிதாசன்--

அறிஞர்களின் அருள்வாக்கு

ஸ்ரீ சத்ய சாயிபாபா

பற்றற்றத் தன்மையைச் சிறிது சிறிதாகப் பழகிக்கொள். ஏனெனில் மிகவும் நேசிக்கிற அனைத்தையுமே விட்டுவிட வேண்டிய வேளை ஒன்று வரும்.

பறவையின் சுமையால் கிளை ஆடலாம். அதனால் பறவை நிலைகுலைந்து விடுவதில்லை. ஏனெனில் அது தன் பாதுகாப்புக்குத் தன் சிறகுகளையே நம்பியிருக்கிறது. அத்தகைய நம்பிக்கையைப் பெற வேண்டும்.

ஸ்ரீ அன்னை

முழுமையின் பாதையில் முன்னேற விரும்புபவன் இடர்கள் பற்றிக் குறை கூறலாகாது. அது பலவீனத்தின் அறிகுறி.

இன்னல்களை எதிர்பார்க்காதே. அது அவற்றை வரவழைக்கவே செய்யும். இன்னல்களை வெல்வதற்கான வலிமை ஒரு புன்முறுவலில்தான் உள்ளது.

துறவுக்கும் அடிமைப்படலாகாது. வருவதை ஏற்றுக் கொள்ளவும், இழக்கவும் சித்தமாக இருக்க வேண்டும்.

அமிர்தானந்தமயி

தங்களுடைய ஆசைகள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற பேராவலாலும், பொறுமையின்மையினாலும் மக்கள் குருடர்களைப்போல் நடந்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் தெளிவான கண்ணோட்டத்தை இழக்கின்றனர். அது பேரழிவில் முடிகிறது.

ரஜனீஷ்

இளகிய மனநிலையில், சுதந்திரமாக, வெளிப்படையாக, புதிய அனுபவங்கள் பெறத் தயாராக, புதுமைகளைக் கண்டறியும் ஆவலுடன் இருங்கள். அந்த உலகுக்காக இதையோ, இந்த உலகிற்காக எதையுமோ துறக்க வேண்டாம். எங்கே இருந்தாலும், என்னவாக இருந்தாலும் “நீங்கள்” வாழ வேண்டும்.

மனிதனைத் தவிர வேறெந்தப் பிறவியும் மரணத்தைக் கண்டு பயப்படுவதில்லை. மனதில் பயமிருந்தால் வாழ்வில் சந்தோஷம் எங்கிருந்து வரும்?

யோகி ராம்சுரத் குமார்

கடவுளை விட மேலானது நம்பிக்கை. மனதில் நம்பிக்கை இருந்தால் அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும். மரத்தைப் பராமரிக்க வேரில் நீர் விட்டால் போதும். ஒவ்வொரு இலைக்கும் நீர் விடவேண்டியதில்லை. வேர் கிளைகளுக்கும், இலைகளுக்கும் வேண்டியதைத் தந்து காப்பாற்றும்.

இணையமெனும் இனிய வலை

இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போமா?

உலகின்  எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும்  உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. சில பத்திரிகைகள் முக்கியமான நேரங்களில்,  உதாரணமாக தேர்வு, தேர்தல், இயற்கைகேடுகள் முதலானவற்றை வெளியிடுவதால் உடனுக்குடன் செய்தியை தெரிந்துகொள்ள முடிகிறது.

நாளிதழ்களில் ஒருநாள் வெளியான தகவல் அன்றைய நாளிதழ்  கிடைக்கவில்லை என்றால் தேடிப்பெறுவது சிரமம். ஆனால் இணைய இதழ்களில் தகவல்களைச் சேமித்து வைக்கலாம் அல்லது தேவைப்படும்பொழுது தேடிக் கண்டுபிடிக்கலாம். -  சுலபமாக பக்கங்கள் தாவவும் முந்தைய நாள் இதழ்களைப் பார்க்கவும், மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும்  வசதிகள் இருக்கின்றன.

பாதுகாத்து வைக்கும்போது அச்சேற்றப்பட்ட இதழ்கள் நாளடைவில் பழுப்பாகி எழுத்துக்கள் மங்கிவிடுகின்றன.  பழைய இதழ்களை சேர்த்துவைக்க இடவசதியும் தேவை. இணைய இதழ்களில் இந்தச் சிரமங்கள் இல்லை.

ஒரு நாளிதழை உருவாக்க ஏற்படும் இடப்பற்றாக்குறை, நியுஸ் பிரிண்ட் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள்  இணைய இதழில் கிடையாது.

அச்சு ஊடங்கங்களுக்கு இருக்கும் நிர்பந்தங்கள் ஏதும் இதற்கு இல்லை.

அச்சு இதழ்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்ற கணக்கு தோராயமாகத்தான் இருக்கும்.
இணைய இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது. உதாரணமாக  27 .11. 2008 தினமலர் இணையத்தில் மும்பை பயங்கர செய்தி 12 மணி நேரத்தில் 5 இலட்சம் பேர் படித்தனர் என்று இந்த புள்ளி விபரம் சொல்கிறது.

மேலும் இணைய இதழை தினமும் எத்தனை பேர், எந்தெந்த நாடுகளிலிருந்து வாசிக்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்த பகுதியை அதிகம் விரும்பி படிக்கிறார்கள் என்றும் கூறமுடியும். இந்தக் கணக்கு, விளம்பரங்கள் பெற உதவியாக இருக்கும். இந்தப் புள்ளி விபரங்களை வைத்துத்தான் விளம்பரத் தொகையும் நிர்ணயம் செய்கிறார்கள்.

படைப்பாளியே தன் படைப்பு வெளிவந்ததா என்று அறிய பத்திரிக்கை அல்லது இதழை காசு கொடுத்து வாங்கித்தான் பார்க்க வேண்டியுள்ளது. இணைய இதழில்  இந்தச் சிக்கல் இல்லை.

வளரும் பருவத்தினர் கைப்பேசிக்காக (மொபைல்), செலவிடும் அளவுக்கு  புத்தகத்துக்கோ பத்திரிக்கைகளுக்கோ செலவழிக்க விரும்புவதில்லை.
பழைய புத்தகங்களையோ, வாடகை நூல்களையோ பயன்படுத்துகின்றனர் அல்லது இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர்.

காசு கொடுத்து பல இதழ்களை வாங்கிப் படிக்க முடியாது.  இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது

தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுகிறது.

இணைய இதழால் மிக இலகுவாக, விரைவாக படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஆசிரியர் கடிதம், மக்களின் கருத்துக்கள், உணர்வுகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். பின்னூட்டம் (மின்னூட்டம்) இதற்கு வழிவகுக்கிறது. (பலர் பின்னூட்டம் கொடுக்க விரும்பினாலும் அதைச் செயல்படுத்தும் வழி அறியாது இருக்கிறார்கள். தமிழ் எழுத்துரு  இல்லாவிட்டாலும் ஜி மெயிலில் தமிழில் டைப் செய்யும் வசதி இருக்கிறது.)

சில மின்னிதழ்கள் பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்குகின்றன.

காசு செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்துள்ளன. இதனால் நிறைய செலவு செய்து கொஞ்ச வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிட, சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்.


இணைய இதழ்களால் பல நன்மைகள் இருந்தாலும் முற்றிலுமாக அச்சில் வரும் இதழ்களைப் புறக்கணிக்க முடியாது.

இணையத்தொடர்பு, சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு ஏற்படுமாயின் அச்சு ஊடகம் பாதிக்கப்படும்.  அதற்கு வெகுகாலம் பிடிக்கும். அதுவரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டிருக்கும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்றார் பாரதி. இணையத்திற்குச் சென்றாலே பன்னாட்டு கலைச்செல்வங்களைப் பற்றிய அறிவு நமக்கு கிட்டும்.

தோழிகளே, இணைய இதழ்கள் சிலவற்றை அடுத்தமுறை உங்களுக்கு
அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன்.

- லூசியா லெபோ

பெண்களே பெண்களுக்கு -- 2

தற்போது தலைமுறை இடைவெளியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிறைய மாற்றங்கள் வந்த பின்பும் இரு தலைமுறையினரின் பழக்க வழக்கங்களில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை!  மேலும் மாற்றங்கள் நல்லவையாக இருந்தால் வரவேற்கலாம்.திருமணம்வரை பிரச்னைகள் பெரிதாக வர வாய்ப்பில்லை. திருமணமாகிய பின்பு இன்னொரு குடும்பத்திற்கு வாழ வந்தவள் அங்குள்ளவர்களை பழகி புரிந்து கொள்ள முயல வேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறு செயல்படாது, பின் தங்களோடு இணைந்து வாழ முற்படாத அவளை அவர்கள் ஒதுக்கி வைக்க முனையும்போது பிளவுதான் வளர்கிறது. அந்த தொல்லைகளை மனதில் வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி பழி தீர்த்துக் கொள்வதால் குடும்பம் இன்னும் பிரிந்துதான் போகும்.

மாமனார் மாமியார் தன் கணவனைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, இவ்வுலகில் வாழ ஒரு தகுதியுள்ள மனிதனாக்கி, தன்னையும் அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினார்கள் என்பதை மறந்து-வயதான காலத்தில் அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களைத் தொல்லையாகக் கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு யோசனை தருபவர்களும் பெண்களே!  தொலைபேசி மூலம் மற்ற பெண்களைப் பற்றி வம்பு பேசி அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவதும் அவா்களே! தனக்கு வேண்டாதவர்களைச் சந்திக்கும்போது, குதர்க்கமாகப் பேசி அவர்கள் மனதைப் புண்படுத்தி அதைப் பார்த்து ரசிப்பவர்களும் பெண்கள்தான்.

இவைகளையெல்லாம் குடும்பங்களில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளாக நினைக்கிறோமே தவிர, இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே சுதந்திரமின்றி நடைப்பிணமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால், பெண்களே பெண்களுக்கு எதிரியாகி, தங்களினத்தை அழிப்பதும், அடிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் முறையற்ற செய்கள் என்பதை ஏனோ உணர்வதில்லை. பெண்களே பெண்களை புரிந்துகொள்ளாததை நினைத்தால் வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் உள்ளது. மற்றவர்களால் தாங்கள் பாதிக்கப்படும்போது, நெஞ்சம் கசிந்துருகி கண்ணீர் விடும் பெண்கள், மற்றவர்களை அதே நிலைக்கு ஆளாக்க எப்படித் துணிகிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது.

இதில் ஆண்களுக்கு சம்பந்தமே இல்லையா? நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண்கள் வீட்டு விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் அநேகமாக பெண்களின் போக்குப்படியே எதையும் செய்வார்கள். ஆனால் ஏதேனும் தவறாகிப் போனால் உடனே பழியைப் பெண்கள் மீது சுமத்திவிடுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் துணிந்து நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து, தவறு செய்தவர்களுக்கு அதைப் புரிய வைத்து, வீட்டில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் நிலவச் செய்தால் எவ்வளவோ பிரச்னைகள் காணாமல் போகும். வீட்டில் உள்ள இருவருக்கிடையில் பிரச்னை வரும்போது மூன்றாமவர்தானே நியாயத்தைப் புரிந்துகொள்ளவும் அதை நிலைநாட்டவும் முடியும்?

இதுவரை பார்த்த அளவில், பெண்கள் அனைவருமே மோசமானவர்கள்தானா, இரக்க குணமே அவர்களிடம் கிடையாதா என்று தோன்றலாம். இயற்கையில் நல்லவர்களான அவர்கள் தங்களையறியாமல் செய்யும் தவறுகளே இவை. ரோசா மலரைப்போல மென்மையாக மணம் வீசும் அவர்கள் சில சமயங்களில் முள்ளாகத் தைத்துக் காயப்படுத்தி விடுகிறார்கள். இறைவனால் தாய்மை என்ற வரத்தைப் பெற்றவர்கள் நல்ல குணங்களும், பண்புகளும் உடையவர்களே! தங்களிடமுள்ள அரிய பண்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் இனத்திற்குத் தாங்களே எதிரியாகும் நிலையினை மாற்றி பெண்குலத்தின் பெருமையையும், அதே வேளையில் உரிமையையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியைப் பார்க்கும்போது “இவளும் நம்மைப்போல ஒரு பெண்” என்று நினைத்தால் போதும். எந்தப் பிரச்னைக்கும் இடமில்லை!

வெளியில் சென்று “பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். சுயமரியாதை, கௌரவம் வேண்டும்” என்று போராடுவதற்குமுன், நாம் விரும்பும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் நம் வீட்டிலுள்ள பெண்களுக்கு வழங்கி    அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்குலத்தின் பெருமையைத் தாங்களும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்தால் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும், வளமும் நிச்சயம் சிடைக்கும்.

பெண்களைப்பற்றி இத்தனை உரிமையுடனும், வேதனையுடனும், ஆதங்கத்துடனும் ஏன் எழுதினேன் என்றால்-அவர்களைப் போல

“நானும் ஒரு பெண்”

-விமலா துருவோ

குடிமைப் பயிற்சி

மத சார்பற்ற குடியரசு

உணா்வு சுதந்திரத்தை அளிக்குமென குடியரசு உறுதி கூறுகிறது.
ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் அவரவரின் சுதந்திரமே! மதத்தைப் பொருத்தவரை நாடு நடுநிலையாக இருக்கிறது. எந்தவொரு மதத்திற்கும் முக்கியத்துவமோ அல்லது அதனை வளர்க்க ஊதியமோ நாடு தருவதில்லை. மேலும் எந்தவொரு நபரும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் சுதந்திரத்தை அளிக்கிறது.

பிரான்சு நாட்டில், மற்ற மக்களாட்சிகளில் உள்ளதுபோல் இல்லாமல், மதசார்பின்மை என்பதை சகித்துக் கொள்ளாமல்-அதை ஒரு கொள்கையாகவே கருதுகிறது. அதைவிட ஒரு படி அதிகமாகவே அது கருதுகிறது. மதசார்பின்மை என்பது ஒரு பொது கருத்தாக இருந்தாலும், மதம் என்பது ஒரு தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. இன்னும் அமலில் இருக்கும் 1905 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி தேவாலயத்திற்கும், அரசிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

1946 ஆம் ஆண்டு மதசார்பின்மை அரசியல் சட்டமைப்பின் கொள்கையானது. 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி எந்தவொரு மனிதரும் அவர் பின்பற்றும் மதத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு சின்னத்தையோ அல்லது உடையையோ வெளிப்படையாக பள்ளியிலோ, கல்லுாரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ அணியக்கூடாது.

உணர்வு சுதந்திரம்--எந்த ஒரு மனிதனும் தன்னுடைய மதம் சம்பந்தமான கருத்து உட்பட, எந்த ஒரு சட்ட ஒழுங்கையும் பாதிக்காவண்ணமுள்ள ஒரு கருத்தை வெளியிடக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு மதத்தை அல்லது ஒரு நம்பிக்கையை, பின்பற்றவோ அல்லது அதனை பின்பற்றாமல் இருக்கவோ, மதம் மாறவோ ஒவ்வொரு மனிதனுக்கும் பிரான்சு நாட்டில் அனுமதி உண்டு.

--தொடரும்--