பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம்.  என்றுமே எழுத்து மனித நாகரிகத்தின் எடுத்துக் காட்டாக விளங்கி, வாழ்க்கையை அடுத்த சந்ததிக்குப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம், மனிதன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், முன்னேறவும் வழி வகுக்கிறது.

அறிவார்ந்த எழுத்துக்கள் வழியே  இலட்சியங்களும், கனவுகளும் பரவுகின்றன. மனக் கொந்தளிப்புகளுக்கு மாற்றும், தத்துவார்த்த விளக்கங்களும் அமைதிப் பாதைக்கு வழி காட்டுகின்றன.புனையப்படும் இலக்கியங்கள்    ரசனையை வளர்த்து வாழ்க்கைக்கு சுவை ஊட்டுகின்றன.

எழுத்தாளர்கள் பல விதம்.  பல் வேறு துறைகளில் விமர்சனம் செய்கிறவர்கள்,  அத்துறைகள் சம்பந்தப்பட்டச் செய்திகளை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்கள்,  அவற்றைக் கண்டித்துத் திருத்த முயல்பவர்கள், முற்றிலும் மாறானக் கருத்துக்களை முன் வைத்து சமூகத்தை வழி நடத்திச் செல்பவர்கள் என எழுத்து ஒரு ஆயுதமாகி இன்றைய உலகின் அச்சாணியாக விளங்குகிறது.

எழுத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் ஜனநாயகம் செழித்து வளரும்.பல்வேறு தரப்பட்டக் கருத்துகள், ஒரு செயலைப் பற்றி எழுகையில் அதைப் பற்றியக் கண்ணோட்டம் விரிவாகி, தெளிவான பார்வை கிடைத்து, உரிய முடிவினை எடுப்பது இலகுவாகிறது.

தமிழர்கள் பெரும்பாலும் பழமை விரும்பிகள். என்னதான் பெருமைக்குரிய வரலாற்றையும்,  பண்பாட்டையும் கொண்டிருந்தாலும் தற்காலத்தில் தன்னைச் சுற்றி உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியக் கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அது நமது வருங்காலத்தை செப்பனிடவும் உதவும்.

இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் கண்முன் நமது சமூக வாழ்வைப் பிரதிபலிப்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்!

திருமதி சிமோன்




இன்றைய அறிமுகங்கள்


  ஜெயகாந்தன்:

கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக எழுத்துலகில் தனிப்பட்ட இடத்தில் இருப்பவர்.  இவர் எழுத்துகளில் உண்மை பேசும், ஆன்ம தரிசனம் கிடைக்கும். இப்படிச் சொல்வதன் மூலம் இவர் ஆன்மிக எழுத்தாளர் என்று பொருளல்ல. தன் பாத்திரப் படைப்புகளின் வழியே மனச்சான்றினைப் படம் பிடித்துக் காட்டுபவர்.  வாசகரின் விருப்பத்தினை மனதில் கொண்டு கதைப் புனையாமல், பாத்திர தர்மத்திற்கொப்ப எழுதுவதே இவருடைய பலம்.
13  சிறுகதைத் தொகுப்பு
38  நாவல், குறுநாவல்
10  கட்டுரைத் தொகுப்பு
  2  அரசியல், கலை உலக அனுபவம்  2 வாழ்க்கை வர்ணனைகள்எழுதியவர். 
"உன்னைப் போல் ஒருவன்" என்ற தன் கதையைத் திரைப்படமாகத் தானே இயக்கி எடுத்தார். அது "சிறந்த மாநிலப் படம்", "ஜனாதிபதியின்  வெண்கலப் பதக்கம்" போன்றப் பெருமைகளைப் பெற்றது.
சில கவிதைகளும் எழுதிஉள்ளார். "தென்னங்கீற்றுச் சோலையிலே" என்ற கவிதை திரைப்படமொன்றில் இடம் பெற்றுள்ளது.

இவரது "சில மணி நேரங்களில் சில மனிதர்கள்" சாகித்திய அகாடமி பரிசு பெற்றது.

இனி இவரது கை வண்ணத்தில்:

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும் புதியதாய் மலர்ந்துள்ள ஒரு பூவின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று, நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு, சின்ன உருவமாய் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோன்றும்...

அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வந்து, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.....

வெளியே... வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!

ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்!

காலத்தின்அலைகளால்எற்றுண்ட,மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து
ஓய்ந்த ஓர் ஆத்துமாவின்  கதை இது!




புதுமைப் பித்தன்:
பதினைந்து வருட குறுகிய காலத்தில் நூறு சிறுகதைகளும், அவற்றுக் கிணையான கட்டுரைகளும், பதினைந்து கவிதைகளும் எழுதிக் குவித்தவர்.
தமிழுக்குப் புதிய பார்வை இவர் மூலம் கிடைத்தது. "இலக்கியத்தில் ஒரு சிலவற்றைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பது மரபாயிருக்கிறது. இராவணனையும், அவன் மன விகாரத்தையும் பற்றிப் பேசலாம் என்றால், நடைமுறையில் இருக்கும் ஒரு வேசியைப் பற்றி ஏன் பேசக்கூடாது? வேதாந்தியின் கைகளுக்கு அடங்காத கடவுள் போல்தான் நான் பிறப்பித்து விட்டவையும்!  உங்கள் அளவு கோலில் அவை அடைபடா விட்டால் நானோ அல்லது என் படைப்புக்களோ குற்றவாளிகளல்ல". என்று துணிவுடன் கூறியவர்.

தமிழ்ச் சினிமா வசனகர்த்தாவாகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும்
இருந்திருக்கிறார்.

இவருடைய "சாப விமோசனம்"  அகலிகையின் உயிர்ப்பினை மறு கோணத்தில்  பார்க்க வைத்தது. அவரது வார்த்தைகளில்:

சீதையும், ராமனும் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள்....இராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக் கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்துவிட்ட பிறகு துன்பத்திற்கு அவளிடம் இடம் ஏது? அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். "அவர் கேட்டாரா?...நீ என் செய்தாய்? என்று கேட்டாள் அகலிகை. "அவர் கேட்டார், நான் செய்தேன்" என்றாள் சீதை அமைதியாக!

அகலிகை மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவளுக்கு ஒரு நீதியா? சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை!  இது ராமன் மனசைச் சுட்டது. காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது.

உள்ளே வந்த கோதமன் அகலிகையைத் தழுவினான். அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! அகலிகை மீண்டும் கல்லானாள்!


 இந்திரா பார்த்தசாரதி:


குறு நாவல்கள் - மூன்று
 சிறுகதைகள் - ஐந்து
கட்டுரைகள் - இரண்டு
நாடகங்கள் - ஐந்து (தமிழ்நாடு அரசு பரிசு -அவ்ரங்கசீப்)
நாவல் - பதினான்கு
     வேதபுரத்து வியாபாரிகள் - பாரதீய பரிஷா பரிஷத் பரிசு
     குருதிப்புனல் -சாகித்ய அகாடமி பரிசு
      இயேசுவின் தோழர்கள் - ரங்கம்மாள் நினைவுப் பரிசு
      சுதந்திர பூமி - தமிழ் நாடு அரசு பரிசு


சிந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர்.  உயிரோட்டமாக எழுத்து இருக்கும்.
மனித மனங்களில் எழும் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை, உணர்வுகளை மிகத் துல்லியமாகக் காட்டுபவர். வித்தியாசமான பார்வை கொண்டு இவர் எழுத்து இருக்கும்.

இவரது நோக்கில்:

காலத்தின் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது தான் வரலாற்றுப் பெரியார்கள், மனிதத் தன்மையோடு சம்பந்தப்படாமல் புகைப்படங்களாய்,
நிழல் சித்திரங்களாய், தெய்வச் சிலைகளாய் காட்சி தருகிறார்கள். அவர் காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் இப்பெரியார்களின் மன பலங்களும், பலவீனங்களும் புரிந்திருக்கும்.

ஏற்படுகின்ற ஏமாற்றத்தினால்மனம்ஒடிந்து செயலழிவது ஏமாற்றத்துக்கு
வெற்றி. மரணம் என்ற சத்தியத்தை நாம் சந்தித்தாக வேண்டுமென்ற
 நிர்பந்தத்தின் காரணமாகத்  தான் காலதேவனை நாம் உதாசீனம்செய்கிறோம். கவிஞர்கள் 'காலா என் காலருகே வா', 'நமனை அஞ்சோம்'என்றெல்லாம் பாடக் காரணமென்ன? எப்படியும் சாவது நிச்சயம்.இதற்காகப் பயந்து தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டுமா?


திருமதி சிமோன்



பெண் எழுத்தாளர்கள்



சமுதாய நலனுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக்கூடிய கருத்துக்களை நாவல்களாகவும் சிறு கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பெண்  எழுத்தாளர்கள் பலர் படைத்துள்ளனர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர்கள் பங்கு, தொடக்கம் முதல் இருந்து வருகிறது. காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய  திருமணக் கொடுமைகள், தேவதாசி கொடுமைகள் போன்ற அக்காலத்திய பிரச்சினைகளைக் கு.ப.சேது அம்மாள், கமலா விருத்தாசலம், விசாலாட்சி அம்மாள், கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள் - இவர்கள் எழுத்துகள்  பிரதிபலித்தன. 1960 -க்கு பிறகு  சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோர் எழுத்துகளில் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தை இன்மை போன்றவை கருக்களாக அமைந்தன.
இதற்கு அடுத்த காலக் கட்டத்தில் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை வைத்து லட்சுமி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி போன்றோர்களால் எழுதப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பின் பெண் விடுதலை, பெண் உரிமை, சமூகப் பிரச்சனைகள் பற்றியும்  எழுதினர்.
தற்பொழுது பெண்களின்  எழுத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெண் கல்வி, பொருளாதார சுயச்சார்பு, வேலை வாய்ப்புகள், வெளியுலகத் தொடர்பு இவை காரணமாக இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந்து பரந்ததாகக் கதைக்களம் உள்ளது.   நவீன தொழில் நுட்பங்களால் உண்டாகும் பாதிப்பு, பெண் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகள், இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், பெண் சிசு கருவழிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் பாதிப்பு போன்ற கருத்துகளைப் பற்றிப்  பல துறைகளிலும் இருக்கும் பெண்களும் எழுதுகின்றனர் .  அம்பை, காவேரி, பாமா, திலகவதி, சிவகாமி, தமயந்தி, உஷா சுப்ரமணியம் , உமா மகேஸ்வரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவகாமி, பாமா - இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர். தவிரக் கவிதைகள் படைத்த கவிதாயினிகள் பலருண்டு.

சில எழுத்தாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்:


 ராஜம் கிருஷ்ணன்:
 கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவர்களுள் ஒருவர். தன் கதை, கட்டுரைகளால் வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். "வேருக்கு நீர்" என்ற நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.(1973).
இவர் பெற்ற ஏனைய விருதுகள்:
1950 - நியுயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953- கலைமகள் விருது
1975 - சோவியத் லாந்து நேரு விருது
1991 - திரு.வி.க.விருது. 
"அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை" என்று வருத்தப்படும் இவர்,  தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உள்ளார்.இவரின் 80 க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன . இவரின் 59 தொகுதிகள் அமெரிக்கக் காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.1970 -ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள் ' என்ற நாவலை எழுதினார். பிகார் கொள்ளைக்கூட்டத் தலைவனின் சந்திப்பு 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எழுத இவர்களைத் தூண்டியது.   மேலும் பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியுள்ளார்.           

அனுராத ரமணன்:
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1977 முதல் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என இவர் படைப்புகள் ஆயிரத்துக்கும் மேலே எனலாம். இவருடைய படைப்புகள்   'பாசம்', புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள்   ஆகிய தொலைகாட்சித் தொடர்களாகவும்,   சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய திரைப்படங்களாகவும் வெளிவந்தன.   இவர் சிறந்த ஓவியர்.சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு  போன்ற இதழ்களுக்கு "லேஅவுட் ஓவியராக இவர் பணியாற்றிருக்கிறார் .  மேலும் நேரடி கவுன்சிலிங் என்ற - பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கித் தீர்வுகாணும் பணியும் செய்துள்ளார்.
தினமலர் வாரமலர் இதழில் 15 ஆண்டுகளாக "அன்புடன் அந்தரங்கம்" என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பலதரப்பட்ட வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
உடல் நலக்குறைவால் இவர் தனது 62 -ஆம் வயதில் ( மே 17, 2010) இறையடி சேர்ந்தார் .

அம்பை:

பத்திரிகை உலகில்    பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. 1960 -இல் எழுதத் தொடங்கினார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம்  - ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பாகச் சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளைக் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவற்றையும் கிண்டலான தொனியில் கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். 
அந்திமாலை, சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, காட்டில் ஓர் மான், வற்றும் ஏரியின் மீன்கள் - இவருடையப் படைப்புகளாகும்.    சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்கள், தலித் எழுத்தாளர்கள் பற்றிய வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளைச் சொல்லாத கதைகள் எனத் தொகுத்துள்ளார்.
 பயணப்படாத பாதைகள் என்ற தன் படைப்பில்  ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய வாய்மொழியாக கூறப்பட்ட செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.
'தங்கராஜ் எங்கே' என்ற சிறுவர் திரைப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.'முதல் அத்தியாயம்' - சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.இவர் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார். தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
படைப்பு மற்றும் தான் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்குக் குழந்தைகள் தடையாக இருக்கும் என்று கருதியதால் குழந்தை  பெற்றுக்கொள்ளவில்லை.

தொகுப்பு: லூசியா லெபோ

   

கவிதை எழுத்து

பாரதியார்


அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின்மீது தனியர சாணை,

     பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே  நாட்டம்,  கரும யோகத்தில்

     நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

     குலவிடு தனிப்பரம் பொருளே!



பாரதிதாசன்


நிலவு வராதா எங்கும் உலவி வராதா!

நிலவு கண்டால் என்முகம் அவன் நினைப்பில் வராதா!

அவன் மறதி தீராதா!

மலர் விரியாதா அங்கு மணம் பரவாதா!

மணம் நுகர்ந்தால் என்குழல் அவன் மனதைத் தொடாதா!

மறதி கெடாதா!

குயிலும் கொஞ்சாதா அவன் செவியில்  விழாதா!

குரலால் என்மொழி நினைவு கொஞ்சம் வராதா!

காதற் பஞ்சம் தீராதா!

வெயில் தழுவாதா ஒளி இருள் கழுவாதா!

வெயில் கண்டால் என் புருவம் விருப்பம் தராதா!

காதற் கரிப்புத் தீராதா!

மின்னல் வராதா அவன் கண்ணில் படாதா!

மின்னல் கண்டால் என் இருப்பின் மென்மை நினைப்பான்!

வெப்பந்  தணிப்பான்!

கன்னல் ஓங்காதா அங்குக் காட்சி தராதா!

கன்னல் கண்டால் என் உதட்டுக் கதை மறப்பானா!

இங்கு வர மறுப்பானா!



கண்ணதாசன்


ஜனனம் தொடங்கி, தனிவழி நடந்து

கோடை வசந்தம் மழைபல கண்டு

ஆடைகள் திருத்தி ஆசைகள் மாற்றி

கோடி நினைத்துக் குறையவே முடித்து

உண்ணல்  உறங்கல்  ஊடல் கூடல்

எண்ணல் எழுதல் இவைதான் வாழ்வெனப்

பாதி வழிவரைப் பயணம் முடிந்தது

மீதி வழியிலோ வியப்பும் திகைப்பும்!

இலக்கியக் கால வகைப்பாடு

தமிழ் இரண்டாயிரம் ஆண்டு பரந்துவிரிந்த இலக்கியச்  செழிப்பினை உடையது.
96 இலக்கிய நூல் வகைகள் இதில் உண்டு. மு. வரதராசனார் தந்த தமிழ்  
 இலக்கியக் கால வகைப்பாடு பின் வருமாறு:

பழங்காலம்:
  • சங்கஇலக்கியம் -கி.மு. 300   முதல் கி.பி.300 வரை
  •  நீதி இலக்கியம்     - கி.பி.300 முதல் கி.பி. 500 வரை  
இடைக்காலம்:
  • பக்தி இலக்கியம் - கி.பி.700  முதல் கி.பி.900  வரை
                                                                                                                        
  • காப்பிய இலக்கியம் - கி.பி. 900 முதல் கி.பி 1200 வரை.                                                                             
  •  உரை நூல்கள் - கி.பி.1200  முதல் கி.பி.1500 வரை.
                                                                  
  • புராண இலக்கியம் - கி.பி. 1500  முதல்கி.பி.1800 வரை.
                                                                            
  • புராண-தல புராணங்கள் - கி.பி. 1800  முதல் கி.பி. 1900 வரை.
                                                                                       
  •   இஸ்லாமிய தமிழ் இலக்கியம்

இக்காலம்:  கி.பி. ஆயிரத்து தொள்ளாயிரம்
                        கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
                        புதினம்

                        கி.பி. இருபதாம் நூற்றாண்டு
                        கட்டுரை 
                        சிறுகதை 
                        புதுக்கவிதை 
                        ஆராய்ச்சிக் கட்டுரை


திருமதி சிமோன்
                          

எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம்


சாகித்ய அகாடமி:
 இந்திய அரசால் மார்ச் 12 1954 இல் துவக்கப்பட்ட அமைப்பு. இந்திய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் ஊட்டவும் அவர்களின் ஆக்கம் பெருக்கவும் இந்த அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும் அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத்  திகழ்கிறது இது. இலக்கிய  கூட்டங்கள்,  பயிற்சி முகாம்கள் நடத்துவது , இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப  பிற மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவது,தற்கால மாறுதல்களையும் புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது போன்ற பல அரிய சேவைகளை இவ்வமைப்பு ஆற்றிவருகிறது. சிறந்த  இலக்கியப் படைப்பாளிகளுக்குத் தேசிய அளவிலும் மாநில அளவிலும்  விருது வழங்கிப் பெருமை படுத்துகிறது.  இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய வரலாறு, இலக்கிய விமரிசனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாஞ்சில் நாடன் அவர்களின் 'சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பு இவ்விருதுக்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .
நாஞ்சில் நாடன், நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இவர் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார எழுத்துநடை . 6 புதினங்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 2 கவிதைகள், 6 கட்டுரைகள் இலக்கிய உலகிற்குக் கொடுத்துள்ளார்.  தலைகீழ்  விகிதங்கள் என்ற இவரது நாவலை, இயக்குனர் தங்கர்பச்சன் சொல்லமறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.  கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு  கொண்டவர்.  இவரைப்பற்றிய வலைத்தளத்தில் உள்ள முகப்புக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது:
'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்    புரிந்துக்கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி! எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம்; மாறுபடலாம் ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு"  

 பால  சாகித்ய புரஸ்கார் என அழைக்கப்படும் குழந்தை இலக்கியத்துக்கான விருது  இந்த ஆண்டு முதன் முறையாக அறிவிக்கப்பட்டது.    தமிழ் மொழிக்காக குழந்தைகள் எழுத்தாளர் கமலவேலன் விருதைப் பெற்றார். 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்னும் குழந்தைகளுக்கான இவருடைய நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.இந்த விருதினைப் பெரும் முதல் தமிழ் படைப்பாளி என்னும் சிறப்பைப் பெறுகிறார் கமலவேலன் அவர்கள்.  
இவருடைய எழுத்துப்பணியில் 50 ஆம் ஆண்டினைத் துவங்கும்போது இந்த அங்கிகாரம் கிடைத்து இருக்கிறது.விருது பெற்ற 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற புதினம் குழந்தைகளுக்குச் சாலைப் பாதுகாப்பு பற்றி மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் நல்ல கதை வழியாகச் சொல்கிறது.
நவம்பர் 15 2010 தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில், குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்று தீர்மானித்த பிறகு வேறு எந்த வகையான இலக்கியத்தையும் தான் படிக்க முயன்றது இல்லை என்றும் வேறு எந்த வகையான படிப்பின் மீதும் ஆர்வம் காட்டவில்லை என்றும் தன்னுடைய  ஏற்புரையில் குறிப்பிட்டார்.குழந்தைகளுக்காகவே தன்னை அர்பணித்துள்ள  அவரது நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது இது.
தன்னம்பிக்கை தந்த பரிசு, நம்ப முடியாத நல்ல கதைகள், மரியாதை ராமன் கதைகள், கம்ப்யூட்டரை வென்ற காரிகை மற்றும் குழந்தை நாடகங்கள், பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார்.  

குழந்தை  இலக்கிய  விருதுக்கு  (2010), புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா அவர்களின் 'சோளக்கொல்லை பொம்மை" என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது . 

"உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாகச் சோளக்கொல்லை பொம்மை நூலை எழுதினேன்.தகுதியான நூலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
40 -உக்கும் மேற்பட்ட  நூல்களை  இவர்  எழுதியுள்ளார் . சிறந்த மொழிப்பெயர்ப்பாளரான தங்கப்பா தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழக  அரசும் புதுவை அரசும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கலைமணி, கலைமாமணி போன்ற விருதுகளையும் வழங்கிக் கவுரவிக்கிறது.

தொகுப்பு லூசியா லெபோ 

mercredi 23 novembre 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். இன்று பொது அறிவு என்பது ஒரு மனிதனின் இன்றியமையாத தேவை ஆகிவிடுகிறது. அண்டை அயலாருடன் அன்போடு ஒத்து வாழ்வதே,மனித நேயமும்  இரக்கமும் கொண்டு விட்டுக்கொடுத்து அனைவரும்
 இன்புறுவதே இலட்சியம் என்பது போய்,  போட்டி போட்டுக்கொண்டு  பிறரை அழித்தேனும் முன்னேறுவதும், சகிப்பற்றத் தன்மையும், இதயத்தில் கனிவு சுரக்காத வறட்டு கௌரவமும் பரவிக் கிடக்கும் இந்நாட்களில் விரல் நுனியில் உலகச் செய்திகளை அடுக்கி வைத்திருப்போர் பிறரை மலைக்கச் செய்கின்றனர்.

ஒரு சாமானியனுக்குக் கிட்டாத விபரங்களை, இந்தக் கணணி யுகத்தில் 
திரட்டுவதோ  அல்லது    அவற்றை நினைவில் நிறுத்தி சொல்வதோ மிகப் பெரியக் காரியமல்ல! ஆனால் அவை மானுட நோக்கில் பயன் தருவதாய்  நடை முறைக்கு ஒத்து வருவதாய் இருக்க வேண்டும்.  சொல்பவர் தான் சொல்வதைச செய்பவராய் இருக்க வேண்டும். ஏனெனில் பொது வாழ்வில் பிறரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மகத்தானப் பணியில் அவர்கள் இருக்கிறார்கள்.

திரு ஈ.வே.ரா. ஒரு சிறுவனுக்கு இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது என்று அறிவுரை சொல்லுமுன், தான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பிறகு சொன்னதாக அறிகிறோம்.  திரு தமிழருவி மணியம் கடந்த கம்பன் விழாவில் "பார்த்து, படித்து அறிவதால்" மட்டுமே வாழ்வது வாழ்வல்ல - உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டாலும் கண் அழுவது போல பிறர் துன்பம் கண்டு உருகும் மனம் பெற வேண்டும் என்ற அரிய கருத்தைக் கூறினார்கள்.

இன்றைய வன்முறைக்கும், அமைதி இல்லா வாழ்க்கைக்கும் பொருளாதாரம், மதம் தாண்டிய இந்த வறண்ட மனம்தான் காரணமாகிறது. காந்தி எல்லார் இதயத்திலும் நிலை பெற்றது, அவர் வக்கீல் என்பதாலோ அல்லது வெளிநாடுகளில் வசித்து அனுபவம் பெற்றவர் என்பதாலோ அல்ல. " ஒரு இந்திய ஏழையின் உடல் முழுதாக மூடப்படும் நாள் வரை எனக்கு அவனைப் போல வாழ்வதே தர்மம்" என்று முடிவெடுத்த அவரது ஆண்மையும், அதற்கு அடிப்படையான அவர் மன விசாலமுமே அவரை மகாத்மா ஆக்கியது.

தற்போதைய உலகில் முன்னேற அறிவைப் பெருக்குவது அவசியம். அதைவிட, மனிதப் பண்பாட்டைக் காக்க, இன்னும் சொல்லப்போனால் "மனிதனாக" வாழ அன்பும், அறனும் அதைவிட அவசியம்.

திருமதி சிமோன்

இன்றைய அறிமுகம் - ரோசா பார்க்ஸ்

அதிகமாக கேள்விப்படாத பெயர்!  ஆனால் பெண்ணினம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய மனோதிடமும், உண்மை, நீதியின்பால் தாகமும் கொண்டவர்.

ரோசா லூயிஸ் மெக்காலே
1913  ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் தேதி பிறந்தார்.  மத்தியத்தரக் குடும்பம்.  திருமணத்திற்குப் பின் ரோசா பார்க்ஸ் ஆன அவர் 1955 இல் கைதானபோதுதான் உலக கவனத்தைக் கவர்ந்தார்.

பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாதக் காலம்!  தென்னாப்பிரிக்க ரயிலில் காந்திக்கு ஏற்பட்ட அதே அனுபவம்!  அமெரிக்க அலபமா நகரில் பேருந்து ஒன்றில் பணியாற்றச் சென்ற ரோசாவை ஒரு வெள்ளைக்காரர் எழச் சொன்னபோது, மறுத்து, 'காசு கொடுத்து பயணச் சீட்டு வாங்கியுள்ளேன்' என வாதாடினார்.  உடனே அந்த வெள்ளைக்காரர் போலீசிடம் புகார் கொடுக்க கைது செய்யப்பட்டார்! கோர்ட்டில் ரோசா மீது குற்றம் சுமத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.


இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த,  வீரம் மிகுந்த ஓர் இளைஞன் தலைமை ஏற்க, நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென அவர்கள் முடிவு செய்தார்கள்.  பின் நாளில் கறுப்பினத் தலைவரான மார்டின் லூதர் கிங் தான் அந்த வீர இளைஞன்! அந்தப் புறக்கணிப்புப் போராட்டம்
381  நாட்கள் நடந்தன!

இடையே ரோசா தன் வழக்கை மிரட்டல்களுக்கும்,  தாக்குதல் முயற்சிகளுக்கும் நடுவே சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்றார்!
1956  நவம்பர் பதிமூன்றாம் தேதி 'ரோசாவுக்கு இழைக்கப்பட்டது அநீதிதான்' என்ற தீர்ப்பு வழங்கப்படும்வரை பஸ் போராட்டம் தொடர்ந்தது.

ரோசா பொறுமையாகத் தொடர்ந்து போராடியதன் விளைவாக, சிவில் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.  இன்றும் அவர் "சிவில் உரிமைகளின் தாய்" என அழைக்கப்படுகிறார்!

2005  அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி ரோசா  இறந்தபோது கருப்பு இனத்தவர் ஒருமிக்கக் கூறியது:

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது".  ஒரு சாதாரணப் பெண் நினைத்தால், சரித்திரத்தையே மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறார் ரோசா பார்க்ஸ்!


திருமதி சிமோன்

பொது அறிவைப் புதுப்பிக்கும் தகவல்கள்

மருத்துவம்:

மூன்றாம் மாதக் கருவில் ஆண்மைக்குரிய 'testostiraan'  என்ற ஹோர்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பை வளர வைப்பது இது.  ஒரு கரு xy குரோமோசோமும் பெற்று, இதுவும் சுரந்து ஆனால் சரியாக வேலை செய்யாமல் போனால் அது பெண்ணாய்ப்  பிறக்கும். கருப்பை இருக்காது. இது ஒரு வகை ஊனம். இவர்கள் அரவாணிகள் அல்ல. அரவாணிகள் ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்ந்து அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகத் தன்னை உணர்ந்து மாறுகிறவர்கள். ஆணின் உயிர் அணு 'xy'  பெண்ணின் உயிரணு 'xx'


பெரும் சத்தம் மனோரீதியாக பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது. வயிற்றுப்புண், அஜீரணம், உயர் ரத்த அழுத்தம் மட்டுமின்றி கண் பார்வை கூட பாதிக்கப்படலாம். 'பாவை' (pupil) குறுகச் செய்யும். வண்ணங்களை பிரித்தறிவதில் சிரமம், மாலைக்கண் நோய் ஏற்படலாம். உச்சக் கட்டமாக தற்கொலை, கொலை வெறி ஏற்படலாம். கருவைக்கூட சத்தம் பாதிக்கும்.


சமையல்:

அரிசி மங்கலாக இருந்தால் நீருடன் சிறிது மோர் கலந்து உலை வைத்தால் சோறு வெள்ளையாக இருக்கும்.

செம்பில் ரசம் வைத்தால் அதன் வாய் குறுகலாக உள்ளாதால் கொதிக்கிறபோது அதன் மணம், சுவை அப்படியே தங்கி நிற்கும்.


அறிவதில் அவசரத் தேவை:

கணணி திரை பார்வையின் கீழ்க் கோணத்தில் இருப்பது நல்லது.

வேலை இன்றி உட்கார்ந்து இருப்பதில் ஐந்து வருட ஆயுள் குறைகிறது.     

கியு வரிசையில் நிற்பதன் மூலம் ஆயுளில் இரண்டு வருடங்களை வீணடிக்கிறோம்    

ஆன்மிகம்:

பால்-நீர் போல் உலக பந்தத்தில் இணைந்து கலக்கிறோம். ஆன்மிக அனுபவங்களுக்குப்பிறகுவெண்ணெய்போல் அதிலிருந்து தனிப்படுகிறோம்.

குளம் என்பது உலகம். நீராடுதல் வாழ்க்கை. ஆடை அஞ்ஞான மறைப்பு. கோபியர் ஜீவாத்மா. கரை ஏறுதல் என்பது உலக பந்தத்தை விடுதல். வீடு என்பது மோட்சம்.  மறைப்புக்களை நீக்கி, ஞானம் வழங்கி, கரையேற வழி செய்கிறான் கண்ணன். ஆண்டவன் ஒருவனே அனைத்து ஜீவாத்மாக்களையும் தன்னோடு இணைக்கும் பரமாத்மா!


அறிஞர் கருத்துகள்:

நம் தேசத்தில் தாயின் கருவறை கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. - அப்துல் கலாம்

நாம் ஒருவரிடம் காட்டும் அன்பும், காதலும் ஆழமானதாகவோ, மகத்தானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! ஆனால்
தொடர்ந்து சோர்வில்லாமல் அதைச் செய்வதில்தான் அதன் முழுமையும் வெற்றியும் அடங்கி இருக்கிறது. - அன்னை தெரேசா.


சரித்திரம்:

பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டையத் தேசப்படங்களில் 'மட்ரா' எனக் காணப்படுவதும், ஆங்கிலத்தில் 'மதுரா' எனச் சொல்லப்படுவதும், கிரேக்கரால் 'மெதோரா' எனக் குறிப்பிடப்படுவதும் இத்தமிழ் மதுரையே!

உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வியந்து ஒரு கிராமத்தையே நன்கொடையாக அளிக்க முன் வந்தார். அதைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்; தமிழ்ப்பணி தடைப்படும் என்று அதைப் பெற மறுத்து விட்டார் உ.வே.சா.

உடல் நலம்:

சிறு குழந்தைகளுக்கு 'கற்பதில் குறைபாடு' என்ற பிரச்சனை ஏற்படுவதுண்டு. எழுத்துக்களை மாற்றி வாசிப்பது, எண்களை  மாற்றிச் சொல்வது போன்ற தடுமாற்றம்.

டிஸ்லெக்ஸியா - எழுதுவது, வாசிப்பதிலுள்ள குறைபாடு.
டிஸ்கால்குலியா -  எண்களை எழுதுவதில் , படிப்பதில் உள்ள குறை.
disgrafia - எழுதுவதில் மட்டும் உள்ள பிரச்சனை.
disprakcia - திட்டமிடுவதில் ஏற்படும் சிக்கல். இது உள்ள குழந்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிலையாக இருக்க மாட்டார்கள்.

செல்போனில் பேசுவது போலப் பொது இடங்களில் பெண்கள் பாவனை செய்வது, தனக்குத் தானே புதுச் சூழலில் துணிச்சல்  ஏற்படுத்திக் கொள்வதற்கும், பார்க்கிறவர்களுக்கு "நான் தனியாக இல்லை" என்று அறிவிக்கவுமான தன்னிச்சைச் செயலாக வளர்ந்து வருவதாக ஒரு மனோதத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


கவிதை சொல்லும் உண்மைகள்:

என்னை - இடிக்கத்தான் - வருகிறார்கள்!
யாரும் - கட்டுவதற்கு - வரவில்லை!   (முதிர் கன்னி-பாபர் மசூதி)

அனாதைக் குழந்தைகள் - கடவுளின் குழந்தைகள் - என்றால் -
கடவுளுக்கே செய்ய வேண்டும் - குடும்பக் கட்டுப்பாடு!

மகா பாரதம் - இதிகாசமானது. பகவத் கீதை - வேதமானது.
கண்ணன், அர்ச்சுனன் - கடவுளானார்கள்.
வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் செத்துப்போன
சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?


உலுக்கும் உண்மைகள்:

குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் உலக அளவில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

இந்தியாவில் நான்கு வருடத்திற்கு முந்தைய கணக்குப்படி
32 ,௦௦௦ கொலைகளும், 22 ,௦௦௦ கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. ஆனால் ஆறு சதவிகித குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்!
உலக முழுவதும் அறுநூறு கோடி கனரக ஆயுதங்கள் உள்ளன.  அதனால் 12  பேரில் ஒருவரிடம் துப்பாக்கி இருக்க, நிமிடத்திற்கு ஒருவர் வீதம் கொல்லப்படுகிறார்.


தொகுப்பு : திருமதி சிமோன்




பயனுள்ள செய்திகள்


பெயற் காரணம்

  •  ஆங்கிலத்தில் புலியை ‘டைகர்’ என்று அழைக்கிறோம். டைகர் என்ற பாரசீகச் சொல்லுக்கு அம்பு என்று அர்த்தம்.

  • நாவல் என்பது இத்தாலிய மொழிச் சொல். அம்மொழியில் நாவல் என்றால் கதை என்று பொருள்.
  • குடைக்கு ஆங்கிலத்தில் ‘அம்ப்ரெல்லா’ என்கிறோம். இலத்தீன் மொழியில் அம்ப்ரா என்றால் நிழல் தரும் என்று பொருள்.
  • வீடியோ என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் நான் பார்க்கிறேன் என்பதாகும்.

மரங்களின் வயது

மரங்களின் வயதை கண்டறிய ஒரு எளிய முறையைக் கையாளுகின்றனர். பொதுவாக ஒரு மரத்தின் அடிப்பாகப் பகுதியை குறுக்காக வெட்டினால் அதன் நடுப்பகுதியில் இருந்து வெளி வட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையங்களை வைத்து அந்த மரத்தின் வயதை கணக்கிடுகின்றனர்.
மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட உதவும் படிப்பின் பெயர்,’டெண்ட்ரோகுரோனாலஜி’.
வளர்ச்சி வளையங்கள்எனப்படும் அவை ஒவ்வோர் ஆண்டும் உருவாகின்றன. செழுமையான ஆண்டுகளில் அந்த வளையங்கள் சற்று பட்டையாகவும், வறட்சியான ஆண்டுகளில் அவை மெலிதாகவும் காணப்படும். எனவே அந்த வளையங்கள் மரங்களின் வயதை கண்டுபிடிக்க மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதியில் ஓவ்வொரு பருவமும் எப்படி அமைந்திருந்தது என அறியவும் உதவுகின்றன. ‘டெண்ட்ரோகுரோனாலஜிபடிப்பை உருவாக்கியவர் ஏ..டக்ளஸ் என்ற விஞ்ஞானி ஆவார்.

இளம் சாதனையாளர்கள்

  • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
  • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
  • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
  • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
  • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.


செயற்கை "கண்"

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.
முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3 ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர். 

முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம்மோ ஸ்லிம் செல்போன்!


மிகமிக ஸ்லிம்மான செல்போனை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ‘அமோலெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும். சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர, உடையாது என்பது இதன் சிறப்பம்சம். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய செல்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வளைத்தாலும் ஒன்றும் ஆகாத செல்போனை 2012-ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது:
வளைத்தாலும் பாதிக்கப்படாத ‘பிளெக்சிபிள்’ செல்போனை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘அமோலெட்’ என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.  செல்போனின் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கேமரா வசதியும் உள்ளது. கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது. இவ்வாறு சாம்சங் இன்ஜினியர்கள் கூறினர்.

 தொகுப்பு: லூசியா லெபோ  

பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

வருணனை : ‘புதுவை எழில்’

கம்பன் கழகம் – பிரான்சு :
எத்தனை வேதனைகள்! எத்தனை வாதனைகள்!! எவ்வளவு இடுக்கண்கள்!  எவ்வளவு துன்பங்கள்!
அத்தனையையும் தாண்டிப் பத்தாம் ஆண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.சொந்தப் பணத்தைத் தொட்டுப் பந்தக் கால் நட்டு இந்தக் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கவிஞர் கி. பாரதிதாசன். தோழர்கள் நாங்கள் தோள் கொடுத்தோம். ஐரோப்பாவில் முதல் முதலாகக் கம்பனுக்கு விழா எடுத்தோம்.

ஆண்டு தோறும் – துண்டு விழுந்தாலும் துவண்டு விழாமல் உழைத்தோம்!கம்பனில் தோய்ந்தவர்களையும் ஆய்ந்தவர்களையும் அழைத்தோம்!ஆண்டுகொரு முறை விழா கொண்டாடிவிட்டுக் கும்பகர்ணனாக மாறிமீண்டும் மீண்டும் கொட்டாவி விடவில்லை நாங்கள் !திங்கள் தோறும் இறுதி ஞாயிறு அன்று ஒருங்குக் கூடி நெருங்கினோம்.கம்பன் காவியத்தின் சுவை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினோம்-  முற்றோதல் என்ற பெயரில்!
முற்றோதல் முற்றுப்பெற்றாலும் கற்றோர்க்குக் களிப்பருளும் களிப்பாம் திருக்குறளை ஓதத் தலைப்பட்டோம் மாதந்தோறும் ஓதி வருகின்றோம்  காலப் போக்கில்,கம்பன் மகளிரணி உருவானது ; கம்பன் இளையோரணி கருவானது!இந்த இரண்டு அணியினரும் எங்களோடு கைகோர்க்க விழா இனிதே நடைபெற்றது!
விழா வருணனை :
முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி.
திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின்,  கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர்.
ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு.பாடிடும் பச்சைக் கிளிகளைப் போலப் பச்சைப் புடவை அணிந்து நீடிய அரங்கேறிய மகளிரணி உறுப்பினர்கள்,’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடினர்.(இப்பாடல்தான் புதுவை அரசு ஒப்புதல் அளித்த தமிழ்த்தாய்ப் பாடலாகும்)
நாட்டியகலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணன் அளித்த பரத நடன விருந்துடன் விழா சிறப்பாகத்தொடங்கியது.பின்னொருமுறை பாரதியாரின் ,’ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார், அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தார் இவர்.
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் நகையும் சுவையுமாக வரவேற்புரை வழங்கினார்.புதுச்சேரி அரசில் சமூகத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
புதுவையில் இருந்து வந்திருந்த முதுபெரும் புலவர் (அகவை 92!)  தமிழ் மாமணி, பாவலர்மணி சித்தன் ஐயா  வழங்கிய வாழ்த்தில் கம்பன் கழகம் குளிர்ந்தது ; தமிழ் ஒளிர்ந்தது!
பத்தாம் ஆண்டுக் கம்பன் மலரை, புதுவைக் கம்பன் கழக இணைச் செயலர், நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரம் வெளியிட்டார். வண்ண வண்ணப் படங்களுடன் திண்ணமான கட்டுரைகள் கவிதைகளுடன் மலர் பொலிந்தது. பாவலர் மு.பாலசுப்பிரமணியன் படைப்பான ‘சிட்டு குருவி’ என்ற சிறுவர் இலக்கியத்தை வெளியிட்டவர் : புதுவையின் சாதனைச் சிகரம் வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்.
அடுத்துச் சிறப்புரை தொடர்ந்தது.உருகிவரும் பனிமலை அருவி எனத் தமிழ் மழை பொழிய எழுந்தார் திருமிகு தமிழருவி மணியன் அவர்கள்.
தலைப்பு : ‘கம்பனில் பண்பாடு.’ ’பண்பாடு’ என்ற சொல்லைப் பண்போடு உருவாக்கித் தந்த ரசிக மணி டி.கே சியைப் பாங்காக நினவு கூர்ந்த அவர், பண்பாடு என்ன என்பதை அழகாக விளக்கினர் ; தமிழ்ப் பண்பாடுகளை எல்லாம் கம்பன் எப்படித் தன் காவியத்தில் பதிந்து வைத்திருக்கிறான், பொதிந்து வைத்திருக்கிறான் எனப் பல எடுத்துக்காட்டுகளைக் காட்டிக் கொடுத்த விளக்கத்தில் மக்கள் தம்மை மறந்தனர்.‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் ..’ என்று இராமனுக்கு ஆயிரம் அடைமொழி கொடுத்து வருணித்த கம்பன் ’அவளும்’ என்ற ஒரே சொல்லுக்குள் சீதையை அடக்கி விடுகிறான்.  ஏன் தெரியுமா? இதனைச் சொல்பவன் ‘குகன்’ – காட்டு வாசி. இராமனைக் கண்டவுடன் காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி’அவன் அழகை எல்லாம் அள்ளிப் பருகியவன்.அவன்,  இராமனை வருணித்துச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால், அவன் அப்படிச் சீதையை வருணிக்கலாமா ? வருணிக்க விடுவானா கம்பன்! அதனால்தான் ‘அவளும்’ என்ற ஒரு சொல்லுக்குள் தமிழ்ப் பண்பாட்டை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான்,  ‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வைத்த புலவன்’ கம்பன் எனத் தமிழருவி மணியன் உணர்ச்சியோடு உரைத்தபோது மக்களின் கரவொலி எப்பக்கமும் எதிரொலித்தது. ஈழத் தமிழர்களின் இன்னல், தமிழர்களின் தமிழுணர்வு இன்மை… போன்றவற்றையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடத் தவறவில்லை.
இடையே -தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகத்தின் சார்பில், அதன் இணைச் செயலர் நல்லாசிரியர் கி.கலியாணசுந்தரம் அவர்கள் வழக்கம் போல், பிரான்சு கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். புதுவையில் இருந்து வந்திருந்த கவிஞர் வே. முத்தையன், பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திருமதி சரோசா தேவராசு இருவரும் ,’கம்பனுக்குப் பாமாலை’ என்ற தலைப்பில் கவி மலர் அளித்தார்கள்.
பங்குகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு, கழகப் பெயர் அச்சிட்ட துவாலைத் துண்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன.  மாலை ஐந்தரை மணி அளவில், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் அவர்கள் தம் உரையைத் தொடங்கினார்.தலைப்பு : ‘தெய்வக் கவியில் தெய்வப் புலவன்’. தெய்வமாக் கவி கம்பனின் காவியத்தில் திருவள்ளுவரின் குறளமுதம் எப்படி எல்லாம் நிறைந்துள்ளது, எங்கெல்லாம் கரைந்துள்ளது, எவ்வாறெல்லாம் மறைந்துள்ளது எனக் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு அவர் ஆற்றிய உரையில் அனைவரும் உறைந்து போனார்கள்.
  பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு தேவராசு அவர்களும் புதுவையிலிருந்து வந்திருந்த கவிஞர் திருமதி வைத்தி கத்துரி அவர்களும்  கவி மலர் அளித்தார்கள்.
தொடர்ந்து , நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரே. சண்முகவடிவேல் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.
தலைப்பு : ‘இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன்… கும்பகருணனா ? வீடணனா?’வீடணன்தான் என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா. துபாயில் , ‘தமிழ்ப் புயல்’  என்று பட்டம் வாங்கி வந்த இப்புயல் இங்கே,  பிரான்சில் மையம் கொண்டது.கம்பனே கூட வீடணனுக்காக அப்படி வாதாடி இருப்பானா என்பது ஐயமே! புயலாகச் சுழன்றடித்துப் பூகம்பமாய் அதிர்ந்து தம் வாதங்களை முன் வைத்தார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா.

புயலுக்குப் பின் அமைதிதானே! அந்த அமைதியின் வடிவாகத் தென்றலாகத் தவழ்ந்து வந்தார் திருமதி லூசியா லெபோ.காட்டிக் கொடுத்த கயவன் வீடணனை விட ஊட்டிக் கொடுத்த உணவுக்காகத் தன் உயிரையே கொடுத்த தியாகி கும்பகருணனே இன்றைய வாழ்வுக்கு வழி காட்டக் கூடியவன் என்று தொடங்கித் தன் தரப்பு வாதங்களை,  அதிராமல், பதறாமல், அழகாக அடுக்கித் தந்தார் அவர்.
பின் கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, திருமதி சுகுணா சமரசம் இருவரும் அறத்தின் பக்கம் நின்றவன் வீடணன்தான் என்று வாதாடினர். திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம் இருவரும் கும்பகருணனைத் தாங்கிப் பிடித்தனர்.நகைச் சுவையையே தன் பலமாகவும் ஆயுதமாகவும் கொண்ட நகைச்சுவைத் தென்றல், சிரிப்பு வெடிகள் சிலவற்றைக் கொளுத்திப் போட்ட பிறகு, ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வினாலும் தருமம் மறுபடி வெல்லும்’.அந்தத் தருமத்தின் முழு வடிவே இராமன்தான். அவன் பக்கம் சென்றவன், அவனைச் சேர்ந்தவன் வீடணனே!இந்த அதரும உலகில் நாம் தருமத்தின் பக்கமே நிற்கவேண்டும்,  தருமத்தின் வழியில்தான் செல்லவேண்டும் என்று இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் வீடணனே எனத்திருமிகு இரெ .சண்முகவடிவேல் அவர்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்க பட்டிமன்றம் இனிதாக நிறைவு உற்றது.முதல் நாள் விழாவும் முடிவு பெற்றது.
பொதிய மலைத் தென்றலாய்த் தமிழ் மணங்கமழ எதுகையும் மோனையுமாய்த் தமிழமுதை அள்ளி வழங்கி நிகழ்ச்சிகளை நகையும் சுவையுமாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, ’இன்று போய் நாளை வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார் ;மக்கள் உணவுப் பக்கம் படை எடுத்தார் (கள்).
ஞாயிறு, 13.11.2011 காலை 11 மணி.
கவிமணி விசயரத்தினம் ராசலட்சுமி இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின் கம்பன் கழகக் கவிஞர் சரோசா தேவராசு இறைவணக்கம் பாட,கம்பன் இளையோரணி தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.இவர்கள் எவரும் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுதிவைத்துப் பாடவில்லை.பாடலை மனப் பாடமாகவே பாடினர்.
பரி நகரின் புறநகராம் மோ’ நகரின் ‘பூக்கள் கழக’ மாணவியர், பாவேந்தரின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு ஏற்றவாறு பாவங்களோடு நாட்டிய விருந்து வழங்கினர். வந்தாரை வரவேற்கும் செந்தமிழர் மரபுக்கேற்பக் கம்பன் கழகச் செயலர், பேரா.பெஞ்சமின் லெபோ வந்திருந்தோர் அனைவரையும் செந்தமிழில் வரவேற்றார்.
புதுச்சேரியின் சாதனைச் சிகரம் வே.பொ.. சிவக்கொழுந்து தொடக்க உரை நிகழ்த்தினார் : “ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் அந்த அந்த நகரத்தார் ; இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருந்தால்தான் இந்தியர் ; அது போல் நம்மிடம் தமிழ் இருந்தால்தான் நாம் தமிழர் ஆவோம். எனவே நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தமிழ் வைத்திருக்கவேண்டும் ; தமிழில் பேசிப் பழகவேண்டும்” என்னும் கருத்து முத்தை எடுத்து வைத்தார்.
விழாவுக்குத் தலைமை தாங்கியவர் புதுவை கல்விச் செம்மல் முனைவர் வீ . முத்து அவர்கள்.பலபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்.  புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கூட.கம்பன் புனைந்த கவிதைகள் இத்தனை, கம்பன் வரைந்த சந்தங்கள் இத்தனை… என்று கம்பனைப் பற்றித் துள்ளி விழும் தமிழில் அள்ளி இறைத்த புள்ளி விவரங்களைக் கேட்டு மக்கள் அசந்து விட்டனர்.
புதுவைக் கவிஞர்கள் சிவ இளங்கோ, மு. பாலசுப்பிரமணியன் இருவரும் வாழ்த்துக் கவிதை வழங்கினர்.முன்னவர் புதுவையின் புகழ் பெற்ற கவிஞர் சிவம் அவர்களின் திருமகனார் ; பின்னவர் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர். கமபன் விழாவில் கலந்துகொள்ளவே இவர்கள் இங்கு வந்திருந்தனர்.
அடுத்து நடை பெற்ற தேனுரைக்குத் தலைமை தாங்கினார் பேராசிரியர் கலியன் எதிராசன் அவர்கள்.  பொறி இயல் துறை அறிஞரான இவர் பரோடா நகர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 26 ஆண்டுகள் பணியாற்றியவர்.பல பொறி இயல் நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்தவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ’Thiruppaavai, an Introduction’  என்ற தலைப்பில் நூல் எழுதியவர். இதனை , ‘Bhavans Journal’ வெளியிட்டுள்ளது. பெண்மையை எப்படி எல்லாம் கம்பன் ஏற்றிப் புகழ்ந்து போற்றி உள்ளான் என விரிவாகத் தம் தலைமை உரையில் எடுத்துரைத்தார்.
தேனுரை அளிக்க வந்திருந்த முனைவர் பர்வின் சுல்தானா,  ’கம்பனில் பெண்மை’ என்னும் தலைப்பில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு உரையாற்றினார். “பெண்களைக் கேலி பேசும் ஆண்கள்,பெண்கள் மனத்தில் மாறா வடுக்களை ஏற்படுத்தி விடுகிறார்கள் ;  அப்படித்தான், மண்ணுருண்டையால் அடித்த இராமன்,  கூனி மனத்தில் மாறா வடுவை ஏற்படுத்திவிட்டான் ; விளைவாக, மண்ணே இராமனுக்குக் கிடைக்காமல் காட்டுக்குக் காவடி எடுக்க வைத்துவிட்டாள் கூனி ; எனவே ஆண்களே, பெண்களைக் கேலியாகப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள்..” என்று சாடினார்.
கூனி, கைகேயி, தாடகை … முதல் சீதை நடுவாக மண்டோதரி ஈறாகக் கம்பனில் உலா வரும் பெண்கள் வெறும் கண்கவர் பொம்மைகள் அல்லர் ; ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டினார் பர்வின் சுல்தானா.’நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு’ என்ற சீதையின் வாயில் இருந்து ‘சுடு’ என்னும் சொல்எங்கெல்லாம், எப்படி எல்லாம் வெளி வந்து என்னவெல்லாம் நிகழ்த்திற்று என்று விளக்கிய அவர், இறுதியாக அந்தத் தீக் கடவுளையே தீய்த்த சீதையின் கற்புத் திண்மை கம்பன் காட்டிய பெண்மையின் உச்சக் கட்டம் என்பதே உண்மை என முடித்தபோது மகளிர் மட்டுமல்ல ஆடவரும் கூட பலத்த கைதட்டிப் பாராட்டினர். ”பாத்திரங்களைப் பெண்கள் புளி போட்டு விளக்குவார்கள் ; இங்கே பர்வின் சுல்தானா அவர்கள், கம்பன் பத்திரங்களைக் கம்பன் பாத் திறத்தால் தம் நாத்திறத்தால்  பளபளபாக்கிப் பளிச்சிட வைத்துவிட்டார்” எனத் தொகுப்பாளர் பேரா. பெஞ்சமின் லெபோ கூற மறுபடி கைதட்டல்.

மதிய உணவு,  வயிற்றுக்கு விருந்து ; ‘சர்வதேச உயர்கல்வி நிலைய’ ‘நாட்டிய கலாசோதி’ சிவலிங்கநாதன் சர்மலியின் மாணவியர் வழங்கியதோ  கண்ணுக்கு விருந்து!
தொடர்ந்து காதுக்கு விருந்து தரத் தள்ளாடித் தள்ளாடி மேடை ஏறினார் முதுபெருங் கவிஞர் கண. கபிலனார் -தள்ளாதவர், ஆம்,   தமிழைத் தள்ளாதவர்! எள்ளளவும் இளைப்போ களைப்போ கொள்ளாதவர், கம்பன் கழகத்தின் பிதாமகனார் ;வண்ண மலர்ச் சொல்லெடுத்துத் தம் எண்ணத்தைக் குழைத்துக் கம்பனுக்குப் பாமாலை சூட்டினார் இவர்.

அடுத்து வந்த கம்பன் கழகக் கவிஞர் பாமல்லன் (கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசனிடம் யாப்புப் பாடம் கேட்டவர் இவர்!)ஒருபா, இருபா தருவார் எனப் பார்த்தால், அப்பப்பா எத்தனை, எத்தனைப் பா,  எத்தனை வகைப்பா,  வகையாய் வகையாய்ப் பாடி அவையை அசத்திவிட்டார்!
பிற்பகல் 3 .00 மணி :
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமையில் ; தொடங்கியது சுழலும் சொற் போர்.
தலைப்பு :
‘கம்பனைக் கற்போர் நெஞ்சத்தில் களிநடம் புரிவது – நீதியின் மேன்மையா ? தமிழின் இனிமையா?  காக்கும் இறைமையா? சகோதரப் பெருமையா?
‘நீதியின் மேன்மையே’ என வாதிட வந்தார் முனைவர் பர்வின் சுல்தானா. நீதி வேறு,  நேர்மை வேறு என்று பிரித்து அலசியவர் கதைகள் இரண்டு சொல்லித் தம் கருத்தை நிறுவினார்.”கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது நீதியின் மேன்மையே ” என்று அடித்துப் பேசி அமர்ந்தார் இவர்.
தமிழில் இனிமை தவிர வேறில்லை எனக் கனிவுடன் தம் பேச்சை தொடங்கிய பேரா. பெஞ்சமின் லெபோ, அவையினரைத்  ’தமிழ், தமிழ், தமிழ் ‘  என மெல்லச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி வேகமெடுத்த நிலையில் சட்டென்று நிறுத்தச் சொல்ல,  சொல்லியவர்கள் வாயில் இருந்து அமிழ்து என்ற ஒலி வரச் செய்தார்.

“பெயரைச் சொல்லும் போதே அமுது ஊறும் ஒரே மொழி நம் தமிழ்தான். எனவே,  தமிழ் = அமிழ்து= இனிமை ஆகவே தமிழ் என்றாலே இனிமைதான் ; இந்த இனிமை,  தமிழின் இயல்பான ஒலிகளால் வருவது ; இந்த இனிய ஒலிப்பு அடிபடையில் எழுவன எதுகை மோனைகள் ; இவற்றின் அடிப்படையில் எழுவன பல வகை சந்தங்கள் ; இந்தப் பலவகை சந்தங்களைக் கம்பன் காவியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை கேட்கலாம்.எனவே கம்பனின் காவிய மாளிகையுள் நுழைந்தது முதல் இறுதிக் கவிதை வரை இழையோடிக் கிடப்பது தமிழின் இனிமையே ; நீதியின் மேன்மை, காக்கும் இறைமை, சகோதரப் பெருமை எல்லாம் அவ்வப் போது வந்து தலைகாட்டிச் செல்லும் .ஆனால் தமிழின் இனிமையே காவியம் முழுமையும் ஊடுருவிக் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிகிறது” எனச் சொல்லித் தம் வாதத்தை நிறைவு செய்தார் அவர்.
‘காக்கும் இறைமைக்’குக் கொடியும் குடையும் பிடிக்க எழுந்தார் நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல்.  வழக்கம் போல் சிரிப்பு வெடிகள் இரண்டைக் கொளுத்திப் போட்டார். ”மனித இராமனைத் தெய்வமாக்கியவன் கம்பன். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக அமைபவன் இராமன், எனவே,”கம்பனைக்  கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது ‘காக்கும் இறைமையான’  காகுத்தனே! ” என்று முடித்து அமர்ந்தது நகைச்சுவைத் தென்றல்.

‘சகோதரப் பெருமையே’  எனப் பாசத்தோடு பேச வந்தார் கவிஞர் சரோசா தேவராசு. ”இராம இலக்குவன, பரத சத்ருக்கன சகோதரர்கள், சடாயு சம்பாதி சகோதரர்கள்,  வாலி சுக்கிரீவன் சகோதரர்கள், இராவணன், கும்பகன்னன், வீடணன் சகோதரர்கள் எனப் பலபடியாகச் சகோதர பாசத்தைக் கம்பன் காட்டுகிறான்.  உடன் பிறவாச் சகோதரர்களாகவும் பலரை ஏற்றுக் கொள்கிறான் இராமன். இப்படிச் சகோதரப் பாசத்தை காவியம் நெடுக வைத்திருப்பதால் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது சகோதரப் பெருமையே” என்று சொல்லி முடித்தார் சகோதரி சரோசா தேவராசு.
இரண்டாம் சுற்றும் முடிந்த நிலையில், தீர்ப்பு சொல்லுமுன், ’ நீதியின் மேன்மை’  எப்படிக் கம்பனில் விளங்குகிறது, ‘தமிழின் இனிமை’  எப்படிக் காவியத்தில் தவழுகிறது,’காக்கும் இறைமை’ யைக் கம்பன் எப்படிக் காட்டுகிறான், ‘சகோதரப் பெருமை’யைக் கம்பன் எப்படித் தீட்டுகிறான் என்பனவற்றை சிறப்பாகச் சொல்லி முடித்தார் இராமலிங்கம்.
“இவை நான்குமே கம்பனில் இருந்தாலும், இவற்றுள் எது ஒரு சத வீதம் அதிகமாக இருக்கிறது? தொடர் வண்டித் தொடரில் வண்டிகளைக் கோர்த்தாலும், முதல் வண்டிதானே பிற வண்டிகள் அத்தனையையும் இழுத்துச் செல்கிறது!அதைப் போல,  ’ நீதியின் மேன்மை’,  ’காக்கும் இறைமை’, ‘சகோதரப் பெருமை’…ஆகிய வண்டிகளை இழுத்துச் செல்வது தமிழின் இனிமைதான்” என்று சொல்லி நல்லதொரு தீர்ப்பை வழங்கித் தாம் என்றுமே இலக்கியச்  சுடர்தான் என்று மீண்டும் நிறுவினார் இராமலிங்கம்.
பின், கவிஞர்கள் அருணா செல்வம், லினோதினி சண்முகநாதன், எழில் துசியந்தி மூவரும் கம்பனுக்குக் கவிமலர் சூட்டினர்.நாட்டியக் கலைமாமணி செலினா மகேசுவரனின் மாணவியர் மூவர் பரத நடன விருந்து தந்தனர்.பரதத்தில் கற்றுத் துறை போகியவர்கள் மட்டுமே தரக் கூடியது ‘வர்ணம்’ .கதைப் போக்கில் அமைந்த நீளமான பாடலுக்கு ஏற்ற விதங்களில் பலவித முத்திரைகள் பதித்துப் பாவங்கள் காட்டி ஆடுவது இந்த நடனத்தின் சிறப்புகள்.  இந்த நடனத்தை மிகச் சிறப்பாக ஆடி , பாராட்டுப் பெற்றனர் இச்செல்வியர் மூவரும்.
இந்தியத் தூதரகத்தின் அதிகாரி திருமிகு கன்யலால் அவர்கள் தமிழில் வணக்கம்’ சொல்லி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் : பேரா பெஞ்சமின் லெபோ..  இங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் செய்து வரும் சேவைகளை விளக்கிய அவர், தமிழர்களின் கலை பண்பாட்டு நிகழ்சிகளுக்கு இந்தியத் தூதரகம் துணை நிற்பதை அறிவித்தார். இறுதியில் ‘நன்றி வணக்கம்’ எனத் தமிழில் சொல்லி விடை பெற்றார்.
2011 -ஆம் ஆண்டின் கம்பன் பட்டயம் , பாவலர்கள் மு .பாலசுப்பிரமணியன் , வைத்தி. கச்தூரி, சிவ இளங்கோ, வே .முத்தையன் ஆகிய நால்வருக்கு வழங்கப்பட்டது .இந்த ஆண்டுக் கம்பன் விருது, தமிழ்மாமணி ந, கோவிந்தசாமி முதலியார், தமிழ்மாமணி பாவலர்மணி சித்தன், கல்விச் செம்மல் முனைவர் வீ. முத்து, கலைமாமணி கவிஞர் தே. சனார்த்தனன் (கவிஞர் பாரதிதாசனின் தந்தையார்), பேராசிரியர் கலியன் எதிராசன், திருமிகு வெ. பொ. இராமலிங்கம், திருமிகு சு.ந. குப்புசாமி முதலியார், அருட்செல்வர் சுகுமாரன் முருகையன், திருமிகு செயராசசிங்கம், திருமிகு சக்கரவர்த்தி பாபு எனப் பத்துப் பேருக்கு வழங்கப்பட்டது.
இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. திருமிகு தமிழருவி மணியன் நடுவராக அமர்ந்தார். ‘மக்கள் சார்பாக மன்னர்கள் மீது வழக்கு’ தொடுத்தவர் இலக்கியச் சுடர் இராமலிங்கம். தசரதன் , வாலி,  இராவணன் ஆகிய முடி மன்னர் மூவரும் தம் தவறுகளால் மக்கள் நலன்களுக்கு ஊறு விளைவித்தனர். இதுவே வழக்கின் அடிப்படை. “இவர்கள் மூவருமே அக்கால மன்னர்கள் இயல்புப்படியே அரசாண்டனர் ; ஆகவே அவர்கள் மீது குற்றம் சாற்ற முடியாது” என வழக்கை மறுத்தார் நகைச்சுவைத் தென்றல் இரே.சண்முகவடிவேல்.மேலும்,  ”அவர்களால் மக்கள் பாதிக்கப் பட்டிருந்தால் மக்கள்  புரட்சி செய்திருப்பார்கள்.  இம்மன்னர்கள் காலத்தில் எந்த மக்களும் புரட்சியில் ஈடுபடவில்ல. ஆகவே, ” மன்னர்கள் குற்றம் அற்றவர்கள்” என நகையும் சுவையுமாக எதிர் வாதம் செய்து மன்னர்களுக்காக வாதாடினார் சண்முகவடிவேல்.
இறுதியில் தீர்ப்பு வழங்க எழுந்த திருமிகு தமிழருவி மணியன், அரிஸ்டாட்டில், பிளாடோ, தாமஸ் மூர் …போன்ற மேனாட்டுச் சிந்தனையாளர்களின் அரசியல் கோட்பாடுகளை மேற்கோள் காட்டிக் கம்பனின் அரசியல் கொள்கைகளைச் சுட்டிக் காட்டி,  ”முடி மன்னர்கள் தவறுகளால் மக்கள் பாதிக்கப் பட்டதால்,அவர்கள் குற்றவாளிகளே” என்று தீர்ப்பு வழங்கினார். கம்பன் கழகப் பொருளாளர் திருமிகு சமரசம் தணிகா அவர்கள் நன்றி கூற இனிதே விழா நிறைவுற்றது. இரவு உணவாக வழங்கப்பட்ட சிற்றுண்டியை மக்கள் அருந்தி மகிழ்ந்து விடை பெற்றுச் சென்றனர்.
இவ்விழாவில் பங்கு கொண்ட பேச்சாளர்கள், கவிஞர்கள், நடன மணிகள், மேடை அலங்காரம், ஒலிஒளி அமைப்பாளர்… எனப் பலருக்கும் கம்பன் கழகப் பெயர் பொறித்த துண்டு, நினைவுப் பரிசு, சான்றிதழ் தந்து கம்பன் கழகம் பெருமைபடுத்தியது. கம்பன் கழகத்தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் , அவர் துணைவியார் திருமதி குணசுந்தரி பாரதிதாசன், கம்பன் கழக, மகளிரணி, இளையோரணி செயற்குழு உறுப்பினர்கள், விழா சிறப்புற நடை பெற உதவிய அன்பர்கள்,  நண்பர்கள் என்று பலரும் கண் துஞ்சாது, பசிநோக்காது , எவ்வெவ்வருமையும் பாராது கருமமே கண்ணாகி உழைத்தனர். அத்தனை பேருக்கும், விழா அழைப்பிதழ், வர்ணனை வெளியிட்ட ‘வல்லமை’ இணையதள இதழுக்கும்,  செய்தி வெளியிட்ட ஏனைய பத்திரிக்கைகளுக்கும்பிரான்சு கம்பன் கழகம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

 படங்கள் : திருமதி லூசியா லெபோ, திருமிகு பால்ராசு தேவராசு.

வேண்டியது வேண்டும் பொழுது…! (தொடர் கதை)



    'ஆயா.. இந்த பொறிகடலை பாக்கெட் எவ்வுளோ..?”
    'பன்னன்டு ரூவா..” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவி இவளை உற்றுப் பார்த்தாள்.
    'ஏ புள்ள.. நீ மீன்கட அந்தோணி பொண்டாட்டி சகாயந்தானே..?”
    கேள்வியைக் கேட்டதும் சகாயம் நிமிர்ந்து  அந்தக் கிழவியைப் பார்த்தாள்.
    வேளாங்கன்னித் தெருவில் கிழங்கு மல்லாட்டை சோளம் என நேரத்திற்கு தகுந்தார்  போல் வேகவைத்ததைக் கூடையில் விற்கும் செல்லாயிக் கிழவிதான் அவள்! இப்பொழுது கோவில் தெருவில் கடைவைத்து பொறிகடலை பேரீச்சம்பழம் என பாக்கெட் போட்டு விற்கிறாள்.
    சுனாமி பலபேரின் உயிரையும் உடமையையும் கொண்டு சென்றாலும் சில பேரைச் செல்வந்தராகவும் ஆக்கிவிட்டுத் தான் சென்றிருக்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அன்றாடம்  போராடும் கிழவி இன்று கடை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறாள்! காது மூக்கு கழுத்தில் தங்கம் பளபளத்தது.
    ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியுமாம்! இந்தக்கிழவி எதைஎதை எல்லாம் இழந்த பிறகு இவைகளைப் பெற்றாளோ!!
    'ஏண்டி .. கேக்குறேன் இல்ல.. சகாயந்தானே? ஆமா.. ஒம்புருஸன் சுனாமியில செத்துப்போயி நாலு அஞ்சி வருஸமாவுது. நீ புள்ளதாச்சியா இருக்க? வேற கண்ணாலம் கட்டிக்கிட்டியா..?”
    கிழவியின் குரல் ஆறுதலாக ஒலித்தாலும் கண்கள் சகாயத்தின் வெற்றுக் கழுத்தை யோசனையுடன் பார்த்தப்படி  இருந்தது.
    சகாயம் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்தச் சில்லரையை எண்ணிப் பலகையின் மேல் வைத்துவிட்டு ஒரு பாக்கெட் பொறியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
    செல்லாயிக் கிழவி குழப்பத்துடன் கேள்வியாக அவள் போவதையே பார்த்தபடி  நின்றாள்.


    கோவில் தெரு! புதியதாக முளைத்தக் கடைகளில் உள்ளவர்களுக்குத்  தன்னை அடையாளம் தெரியாது என்றாலும் செல்லாயிக் கிழவிப்போல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்கள்  கண்களில் விழுந்துவிடக் கூடாது என்று முந்தானையை முக்காடாக இட்டுக்கொண்டு நடந்தாள்.!
    அந்தத் தெரு முழுவதும் அவள் பழகியத் தெரு!  அவள் கணவன் அந்தோணி வியாபாரம் செய்தத்தெரு! அந்தத் தெருவில் உள்ள ஓட்டல்கள் மீன் கடைகளுக்கு அவள் கணவன் அந்தோணி தான் மீன் சப்ளை செய்வது வழக்கம். அவனைத் தெரியாதவர்கள்  வேளாங்கன்னி நகரில் இல்லை என்றே சொல்லலாம்! அந்த அளவுக்கு அவன் அங்கு பிரபலமானவன்.
    சகாயத்திற்கு  அந்தோணியைக் கட்டிக்கொண்ட போது பெருமிதமாகத்தான் இருந்தது. அவனும் நல்லவன் தான். ஆனால் ஒன்றே ஒன்று…
   ஆசையாகக் கட்டிவந்தவள் ஐந்து வருடம் ஆகியும் மலடியாகவே இருக்கிறாளே… ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுக்க வக்கில்லாமல் இருக்கிறாளே…
   அதனால் அவன் ஆண்மைக்கு அல்லவா இழுக்கு!! இது இவளுக்குத் தெரியவில்லையே என்று மனத்தில் இருந்தக் கோபத்தைக் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டுவான். கோழை அவன்! குடிக்காமல் அவளை அடித்ததில்லை.
   ஒருமுறை அல்ல. இருமுறை அல்ல. எப்பொழுதெல்லாம் குடிக்கின்றானோ… அப்பொழுதெல்லாம் அவன் ஆண்மையை நிருபிக்க ஒரு வாரிசு இல்லையே என்று இவளை வதைப்பான்.
   மருத்துவரிடம் போனாள். அவர்  சோதித்து..
   ‘அம்மா உனக்கு எந்த பிரட்சனையும் இல்லை. உனக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது. வேண்டுமானால் உன் கணவரை நல்ல மருத்துவரிடம் போய் பார்க்கச்  சொல்லு.’ என்று சொல்லிவிட்டார;.
   இதை எப்படி கணவனிடம் சொல்வது? சான் பிள்ளையென்றாலும் ஆண்பிள்ளை நான் என்று மீசையை முறுக்கும் கணவனிடம் ‘உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று ஒரு நல்ல மருத்துவரிடம் சோதிக்க சொன்னார் ’ என்பதை எப்படி சொல்ல முடியும்?
   இருந்தாலும் இதை எவ்வளவு நாள் தான் மூடி மறைக்க முடியும்?
   நீறு பூத்த  நெருப்பாயிற்றே! சற்று ஊதினாலும் பற்றிக் கொள்ளுமே..!
   ஒருநாள் அவன் குடித்துவிட்டு இவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து நெற்றியைச் சுவரில் மோத வலி பொருக்க முடியாமல் கத்தினாள்…. ‘ஒனக்குத்தான் கொழந்த பெத்துக்க தகுதி இல்லைன்னு டாக்டர் சொன்னார் … எனக்கொன்னும் பிரட்சனை இல்லையாம்… ஒம்மேல தப்பவச்சிக்கினு என்னைப் போட்டு அடிக்கிறியே….’ முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
   உண்மை எப்பொழுதும் சுடும் தான்! ஆனால் இந்த உண்மை  எறிகிறத் தீயில் எண்ணை வார்த்ததுப்  போலாக்கி விட்டது அவனுக்கு. கொதித்தெழுந்தான்!!

                                    (தொடரும்)

அருணா செல்வம் 

  

mardi 25 octobre 2011

செவாலியே சிமோன் யூபர்ட் அவர்களுக்கு முதலாண்டு நினைவஞ்சலி

செவாலியே சிமோன் யூபர்ட் அவர்களுக்கு     முதலாண்டு  நினைவஞ்சலி 


படத்தைப் பெரிதாக்க படத்தின் உள்ளே சொடுக்குக.

vendredi 14 octobre 2011

இன்றைய எண்ணப் பரிமாற்றம்


 அன்புடையீர்,


நாட்டுப் பற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால், சரித்திரம் என்ற ஒன்று இல்லாமலே போயிருக்கும். குடும்பத்தில் உற்றவரிடையே பற்று இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு மனிதனுக்கும் மத, நாட்டுப் பற்று மட்டும் தேவைக்கும் அதிகமாகவே சில சமயங்களில் அவனை ஆட்டி வைக்கும் அளவுக்கு உண்டாகிவிடுகிறது.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது மிக உயர்ந்த பண்பாடென்றால், அந்தப் போர்வையின் கீழ் நாடு பிடிக்கும் ஆசையும் எல்லாவற்றையும் தனதாகவே பார்க்கச் சொல்லுகிறது. அதனால் விளையும் சிறப்புகளையும், சங்கடங்களையும் இந்தியாவைவிட வேறெந்த நாடும் அனுபவித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, பல நாட்டவர் இங்கே ஆக்கிரமித்து, அதிகாரம் செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பலதரப்பட்ட பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், கலைகளையும் தன்னகத்தே ;கொண்ட நம் நாடு, இந்தப் பல்வேறு கலாச்சாரங்களையும் ஏற்று இன்னும் 'இந்த நாட்டில் இல்லாததில்லை' என்று சொல்லுமளவுக்கு எல்லாத் துறைகளிலும் தன்னிகரற்று விளங்குகிறது.

'இறக்குமதி'  என்னும்போது அதில் அரிய ஒன்றுடன் குப்பையும் வர வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தியனின் பொறுப்பு முன்னெப்போதையும்விட இப்போது கூடியிருக்கிறது. பணம், பதவி, படாடோபம், வளர்ச்சி என்ற பேரால் வரம்பின்மை, பண்பாட்டு மறுதலிப்பு, பழைமை மீதான வெறுப்பு என்று அவனைப் படு குழியில் தள்ள, கவர்ச்சிகள் பல சுற்றி வருகையில் விழிப்புணர்ச்சியுடன் தள்ள வேண்டியதைத் தள்ளிக் கொள்ள வேண்டியதைக் கொள்ள அறிவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான்!

எத்தனையோ இடர்களில் மாயாத அவன் மாண்பு என்றும் சாயாது என்ற நம்பிக்கையுடன் தொடர்வோம்!

திருமதி சிமோன்

இன்றைய அறிமுகம் - மகாத்மா காந்தி

 



  பாரதத்தின் தந்தை என்றும், மகாத்மா என்றும் அழைக்கப்படும் காந்தி அடிகள் 1869     -ஆம் ஆண்டு, அக்டோபர் 2 -ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்ற இடத்தில் மோகன்தாஸ் காந்தி என்ற பெயரில் கரம்சந்த் காந்திக்கும், புத்லி பாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் தென்னாப்ரிக்காவில் வேலைக்குச் சேர்ந்தார். அச்சமயம் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியும், இனப்பாகுப்பாடும், இவரை ஆங்கிலேயர்களுக்கு எதிராகப்   போர்க்கொடி தூக்கவைத்தன.

      பிறகு, பாரதத்தில் உள்ள மக்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்காகப் போராடவேண்டும் என்ற முடிவில், தாயகம் திரும்பினார். 1930 -ஆம் ஆண்டு நடத்திய உப்பு சத்யாகிரகப் போராட்டமும், 'வௌ;ளையனே வெளியேறு” என்ற போராட்டமும் சரித்திரத்தில் முத்திரை பதித்தன. எந்த ஆயுதம் இன்றி, இரத்தம் சிந்தாமல், அகிம்சா வழியில் விடுதலை பெற முடியும் என்று உலகிற்கு நிரூபித்தார். இவருடைய கொள்கையில் அதிருப்தி அடைந்து,         1948 -ஆம் ஆண்டு சனவரி 30 -ஆம்; தேதி நாதுராம் கோட்சே என்ற நபர் காந்தியைச் சுட்டுக் கொன்றார்.

      காந்தி இந்த உலகத்தை விட்டு நீங்கினாலும், அவருடைய கொள்கைகளும், கருத்துகளும் உலக மக்களின் மனத்தில் நீங்காமல் வாழ்கின்றன. காந்தி வழியை மார்டின் லூதர் கிங், சேம்ஸ் லாசென், நெல்சென் மண்டேலா, ஆங் சண் சூகி ஆகியோர் கடைப் பிடித்துப் போராடி வெற்றி கண்டனர். ஐரோப்பாவில் ரோமன் ரோலன் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐயின்ஸ்டன் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'இப்படி ஒருவர்   மனிதராக வாழ்ந்தார் என்பதை வருகின்ற தலைமுறை நம்புவதற்குக் கடினமாக இருக்கும”; என்றார்.

தாகூர் இவருடைய சிறந்த கோட்பாடுகளை மதித்து இவரை மகாத்மா என்று அழைத்தார். ஐக்கிய நாட்டுச் சபை இவர் பிறந்த நாளை அகில உலக அகிம்சை தினமாகக் கொண்டாடவேண்டும் என்று 2007  -ஆம் ஆண்டு சூன் 15 -ஆம்; தேதி, தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நீங்காப் புகழுக்கு அடிப்படைக் காரணம், காந்தி, சத்திய நெறிகளை வாழ்க்கை முழுதும் கடைபிடித்ததுதான். தமது  சிறந்த கொள்கைகளை,  சோதனைகள் வந்த பொழுதும் தீவிரமாகக் கடைப்பிடித்தார். சத்தியாக்கிரகத்தின் அடிப்படைத் தத்துவம் : எந்த எதிர்ப்புகளையும் எதிரிகளுக்கு எந்த விதமான தீமைகளையும் செய்யாமல் முறியடிப்பதுதான். இந்த உறுதி பூண்டு, அகிம்சை கொள்கையை அரசியலில் கடைப்பிடித்த முதல் மனிதர் இவரே ஆவார். கல்வியில், அறிவும் வேலையும் சேர்ந்த கல்வியே சிறந்தது என்றும், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காந்தி கருதினார். இந்துவாகப் பிறந்து அதைக் கடைப்பிடித்தாலும், எல்லா மதங்களும் சமம் என்றும் அதே நேரத்தில் எல்லா மதங்களும் கருணையையும் அகிம்சையையும்தான் வலியுறுத்துகிறது என்று கருதினார்.

அரிஜன், இந்தியன் ஒபினியன், எங் இந்தியா,  நவஜீவன் போன்ற பத்திரிகைகளை நடத்தினார். காந்தி தன் சுய சரிதையைச் சத்திய சோதனை என்ற தலைப்பில் எழுதினார்.

திருமதி சுகுணா சமரசம்

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் - ஒரு கண்ணோட்டம்


சிந்து சமவெளிப் பகுதிகளில், அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நகரங்களின் அடையாளங்கள், இந்தியாவின் தொன்மையையும்(கி.மு.6000  -கி.மு.1900  ) நாகரிகத்தையும் உலகுக்குப் பறை சாற்றுகின்றன. வெண்கலம் மற்றும் இரும்பு ஆகிய உலோகங்கள் உபயோகத்தில் வந்தன. வேதங்கள் இயற்றப்பட்டன. பின்னர் கங்கைக் கரைச் சமவெளிகளில் சிறுசிறு அரசுகள் உருவாயின.

              மகத வம்சத்தில் தோன்றிய சித்தார்த்தர், தனது அரச வாழ்வைத் துறந்து ஞானம்பெற்று,”கௌதம புத்தர்”ஆனார்; இவர் உருவாக்கிய மதமே புத்தமதம்.

மௌரிய வம்சத்தில் தோன்றிய, சந்திரகுப்த மௌரியர், பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு தென்னிந்தியாவின் சிறு நிலப்பகுதியைத் தவிர பண்டைய இந்தியாவின் பெருநிலப் பகுதியை ஆட்சி செய்தார்; தமது ஆட்சியில் தொழில்,வணிகம், நீதி போன்ற பல்வேறு துறைகளைப் பிரித்துத் தமது மந்திரியான சாணக்கியரின் துணையோடு சிறப்பாக நிர்வகித்தார்.  சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அசோகர் (கி.மு மூன்றாம் நூற்றாண்டு) தனது ஆட்சிக் காலத்தில், மக்கள் உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்கு நலம் தரும் பல திட்டங்களை உருவாக்கினார்.  தனது நாட்டை விரிவு படுத்தப் பல போர்களைச் செய்து வெற்றிகண்ட அசோகர், கலிங்கப் போருக்குப் பிறகு, 'இனி, போர் செய்வதில்லை' என உறுதி பூண்டு புத்த மதத்தைத் தழுவினார்.

               குப்தர்களின் காலத்தில் (கி.பி.மூன்றாம் நூற்றாண்டு) நாட்டின் கல்வி மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சியை அடைந்தன.  குப்தர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் 'பொற்காலம்' எனப்பட்டது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
                கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஹர்ஷவர்த்தனர், மிகப் பெரிய யானைப் படையையும் குதிரைப் படையையும் கொண்டிருந்தார். நாட்டைப் ,பெரும் மற்றும் சிறு நிலப்பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தார். படை பலத்தால் மட்டுமன்றி நட்பு முறையிலும் அண்டை நாடுகளுடன் வாணிபத்தைப் பெருக்கினார்.
                
இதே கால கட்டங்களில் தமிழகத்தை ஆண்ட முற்காலச் சோழ மன்னர்களில் கரிகால் சோழன் (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு) மிகச் சிறந்த மன்னன் ஆவான். காவிரியில் 'கல்லணை'யைக் கட்டி விவசாயத்தைப் பெருக்கினான்; சிறந்த நீதிமானாகவும் விளங்கினான். முற்காலச்  சோழர்களின் தலைநகரம் உறையூர்.

                பிற்காலச் சோழ மன்னர்களில் ”முதலாம் இராஜராஜன்” (கி.பி985-1014) மிகவும் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த மன்னன் ஆவான். 'ஐம்பெரும் குழு', 'எண்பேராயம்' போன்ற அமைப்புகளை உருவாக்கி அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தான்;'குடவோலை' முறையில் மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்; நாட்டை மண்டலங்களாகவும் கோட்டங்களாகவும் பிரித்து ஆட்சி செய்தான். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன். தேவாரப் பாடல்களைத் தொகுக்கச் செய்தவன். இவனுடைய தலைநகரம் தஞ்சையாகும்.

                இராஜராஜ சோழனின் மைந்தன் 'முதலாம் இராஜேந்திரன்' தந்தையைப் போலவே நல்லாட்சி புரிந்தான்; இமயம் வரை உள்ள பல அரசர்களை வென்று இமயத்தில் 'புலிக் கொடியை' நாட்டியவன் தன்னுடைய வெற்றியின் அடையாளமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோவிலைப் போன்று பெரியதோர் கோவிலைக் கட்டினான் முற்காலச் சோழர்களுக்கும் பிற்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கே களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது

                மேலும், தமிழகத்தில், சேரர், பாண்டியர், சாளுக்கிய மன்னர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ மன்னர்களில் 'முதலாம் நரசிம்மவர்மன்' காலத்தில் சிற்பக்கலை செழித்தோங்கியது.
                 சேரமன்னர்கள் ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர்; பாண்டியன் முடத்திருமாறன் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவன்.

                 கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியா மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. வட இந்தியாவில் டெல்லி சுல்த்தான்களும் தென்னிந்தியாவில் விஜய நகர அரசர்களும் ஆட்சிசெய்தனர்.

                 மொகலாய அரசர்களில் பாபரும் அக்பரும் சிறந்த அரசர்களாக விளங்கினார்கள். அக்பர் இந்தியர்களோடு; திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். சிற்பக்கலையும் கட்டிடக்கலையும் மேன்மை அடைந்தன. எல்லா மதங்களையும் நேசித்தார். மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய 'தாஜ் மஹால்' உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

                மொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவின் இயற்கைச் செல்வங்களின்மேல் ஆசை வைத்த ஆங்கிலேயர்களும் மற்றும் சில ஐரோப்பியர்களும் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
                ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் போல இந்தியா பிற நாட்டவர்களின்   ஆட்சிகளுக்கு உட்பட்டே இருந்திருந்தாலும், அன்று மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் தோன்றிய கோவில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கோபுரங்களும் உலகளவில் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுப் பெருமைகளை எடுத்துரைக்கும் சின்னங்களாகவும், இலக்கியங்கள் நம்நாட்டின் மொழியியல் வளத்தினைச் செப்புகின்ற வாயில்களாகவும் திகழ்கின்றன என்பதே உண்மை!
                                                                                                         -  சரோஜா தேவராசு.


இந்திய வரலாற்று கருவூலங்கள்

  நம் நாட்டின் கட்டிடக் கலை, சிற்பக்கலை, இவற்றை வெளிப்படுத்துபவை அக்காலத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களும்  கோட்டைகளும் புராதன சின்னங்களாக    விளங்கும் கட்டிடங்களுமாகும் . மன்னர்களின் வரலாற்றைப் புத்தகங்களில் படிப்பதைக் காட்டிலும் அவர்களாளல் கட்டப்பட்ட இத்தகைய கட்டிடங்களைக் காணும்போது வரலாற்றை உணர்ந்த  அனுபவம் ஏற்படும். அப்படி நான் சென்று பார்த்த    இடங்களில் ஒரு  சிலவற்றைப்  பற்றிய  செய்திகளை  உங்களுடன் பகிர்ந்து  கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோல்கொண்டா: 

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது புராதன கோல்கொண்டா ராச்சியத்தின் (கிபி 1364 - 1512) தலைநகராக இருந்தது.  

கோல்லா கொண்டா  என்கிற தெலுங்கு  வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனைக் கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது  ஆட்சியில்  இருந்த ககாதியா வம்ச அரசர்(13 ஆம் நூற்றாண்டு) ஒரு களிமண்  கோட்டையை  எழுப்பினார்.ககாதியா வம்சத்தை அடுத்து இக்கோட்டை வாரங்கல் அரசு,  பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு   கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி  அரசர்கள்  தங்களை முகலாயர்களின்  ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் இருந்த  இந்த களிமண்  கோட்டையைப்  பெரும் கருங்கல் கோட்டையாகக்   கட்டியெழுப்பினர்.(இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன). இவர்கள்  கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர்.  1590  -ஆம் ஆண்டு தலைநகரம் ஐதராபாத்  நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீ தூர சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டது.கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான  நீள வெளிச் சுவர் கொண்ட நான்கு தனித்தனிக்  கோட்டைகள்  உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள்  ஆகியவை  இருக்கின்றன.    கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில்  சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது. இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.( இதை இன்றும் வெற்றி வாயிலில் உணரலாம்).
 கோட்டைக்குள் இருக்கும் அரண்மனைகள், ஆலைகள், நீர் வழங்கு அமைப்பு மற்றும் பிரபல ‘ரபான்’ பீரங்கி ஆகியவை பார்ப்பவர்களைக் கவரத்தக்கவை.கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

ரகசியமான ஒரு சுரங்கப்பாதை சபை அரங்கில் துவங்கி மலை அடிவாரத்தில் இருக்கும் அரண்மனைகளில் ஒன்றில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. குதுப் ஷாஹி அரசர்களின் கல்லறைகளும் இந்த கோட்டையில் உள்ளன. இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு சுமார் 1 கிமீ வடக்கே அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் ஏராளமான அழகுறச் செதுக்கிய கற்களும் இடம்பெற்றுள்ளன. சார்மினாருக்கு ஒரு ரகசிய சுரங்கப் பாதை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது.முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்த கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றி சிதையத் துவங்கியது.

 இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது.

கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும். சுத்தமாக அல்லது மிகக் குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள வைரங்கள் கோல்கொண்டா வகை எனப்பட்டன. இவை 2ஏ எனவும் குறிக்கப்பட்டன. இவை மதிப்பு மிக்க வைரங்களாகும்.மேலும்  கோல்கொண்டா கோட்டையின் பாதுகாப்பு அறையில் புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை பாதுகாக்கப்பட்டிருந்தன. 
 சுற்றுலாத் துறை தற்போது இக்கோட்டையைப் பராமரித்து வருவதுடன் பொழுது சாய்ந்ததும் ஒலி - ஒளி காட்சிகள் நடத்துவதன் வாயிலாக பல மக்களை ஈர்க்கிறது என்றால் மிகையாகாது.(காட்சிகள் ஆரம்பிக்கும் முன்பாக கொசுமருந்து அடிக்கப்பட்டாலும் அவை நம்மை ஒரு கை பார்த்துவிடுகின்றன)         
 குதுப்மினார் கோபுரம்: 

இந்தியாவிலேயே உயர்ந்த கோபுரமாகக் குதுப்மினார் கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை இக்கோபுரத்தின் மீதிருந்து கண்காணித்துள்ளனர். இப்போதும் டெல்லி மற்றும் அதன் அருகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பயன்பட்டு வருகிறது.     
தெற்கு ஆசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர் குத்புதின் இபுக் . மத்திய ஆசியாவில்  துருக்கியர் வம்சத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயை அடிமையாக விற்கப்பட்டார். பல  கைமாறி கடைசியில் முகமத்கொரியால்  விலைக்கு வாங்கப்பட்டார்.தனது வீரதீர செயல்பாடுகளால் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.    முதலில் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் இபுக் , 1199 ஆம் ஆண்டு குதுப்மினாருக்கு அஸ்திவாரம்  போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்காக இந்தக் கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் இவர் தீடிரென மரணம் அடைந்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு  வந்த இவருடைய மருமகன் சம்சுதீன் இல்துமூஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குக்களை அமைத்தார். 1211 முதல் 1236 ஆம் ஆண்டுவரை கட்டடப்பணிகள் நடந்தன. அடிப்பாகத்தில் சுற்றளவு 14.32மீ, கோபுரத்தின் சுற்றளவு 2.75, உயரம் 72.5மீ.    கடைசி அடுக்கு 1386 ஆம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.     14,15 -ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்களால் பழுது பார்த்துச் சரி செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பக் காலத்தில் 7 அடுக்குகளுடன் 300 அடி உயரத்துடன் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, 5 அடுக்குகளுடன் 233 அடி உயரத்துடன் காணப்படுகிறது. உச்சிக்குச் செல்ல 379 வட்ட வடிவில் அமைந்த படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.  சிகப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டது. திருக் குரான் வாசகங்கள் இதில் பொறிக்கப்பட்டுக் காண்போர் கண்களையும் கருத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில்  ராபர்ட் ஸ்மித் என்ற கட்டடக்கலை வல்லுநர் இதைப் பழுதுப்பார்த்து அதிகபிரசங்கித் தனமாகக் குதுப்மினருக்கு ஒரு சிறிய கோபுரம்(ஆங்கில முறைப்படி) மரத்தால் செய்து பொருத்தினார். இயற்கை அதை அனுமதிக்கவில்லை! இடிவிழுந்து அது கோணலானது. பிறகு அது  இறக்கிக் கீழே வைக்கப்பட்டுப்   பரிதாபமாகச் சுணங்கிக் கிடப்பதை இன்றும் பார்க்கலாம். 

1993  ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இக்கோபுரம்  உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.    ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் டெல்லி மாநில சுற்றுலாத் துறையால் மூன்று நாட்கள் குத்துப் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் இசை, நடனம், நாட்டியம் நடைபெறும். 
இதன் வளாகத்தில் உள்ள  அலை தர்பாஷா மெயின் கேட் , அல்துமிஷ் ஸ்தூபி  போன்றவை கலைநயம் மிக்கவை.

இரும்புத் தூண் (Iron piller)

சந்திரகுப்த விக்கரமாதித்ய மன்னர் கட்டியதாகச் சொல்லப்படும் இரும்புத் தூண் இந்த குதுப் மினார் வளாகத்தில்  இருக்கிறது.6 டன் எடையும் 22 அடி உயரமும் இருக்கும் இந்த இரும்புத் தூண் மழை, வெயிலினால் 1600 வருடங்கள்  எந்த வகையிலும் பாதிப்பு அடையவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
  பழங்கால இந்தியாவின் அதிசயச் சின்னமாகவும் கருதப்படுகிறது.உறுதியான இரும்பினால் 32 அடி 8 அங்குல உயர ஸ்தூபியாக உள்ளது. அடிப்பாகம் 6 அடி 4 அங்குலத்துடனும், உச்சி 2 அடி 4 அங்குலப் பருமனுடனும் காணப்படுகிறது. இதனை, 8 இரும்புக் கம்பிகளால் பூமிக்கடியில் கட்டி உறுதியாகவும் உயரமாகவும் நிறுவியுள்ளனர்.
அலை தர்பாஷா மெயின் கேட்
குதுப்மினாருக்குத் தென்கிழக்குப் பாகத்தில் காணப்படும் பெரிய நுழைவு வாயில். இது  உலகின் பெரிய உன்னத கேட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாயிலின்  வெளிப்புற உள்புற வேலைப்பாடு, இந்தியா மட்டுமல்ல வேறு எங்கும்  பார்க்க முடியாத அழகான வேலைப்பாடுகளைக் கொண்டது எனலாம்.

 உலக வரலாற்றில் குதுப்மினார் கோபுரம், இரும்புத்தூண், அலை தர்பாஷா மெயின் கேட் ஆகியன உயிரோவியங்கள் என்ற பான்ஷேப் கூற்று நினைவுகூறத்தக்கது.


செஞ்சிக் கோட்டை

இந்தியாவின் தமிழ் நாடு  மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில  கோட்டைகளுள்  ஒன்றாகும்.  விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள செஞ்சியில் ,  மாநிலத் தலைநகரமான  சென்னையில்  இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான   பாண்டிச்சேரிக்கு  அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான   சிவாஜி , "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.  ஆங்கிலேயர்கள்  இதனைக் "கிழக்கின்   ட்ராய் " என்றனர். பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

 (எனக்கு பத்து வயது இருக்கும்போது என் தமிழ்ப் பாடநூலில் செஞ்சிக்கோட்டையின்  வரலாறு பாடப்பகுதி. எனவே நான் படித்த தனியார் பள்ளியிலிருந்து எங்களை இங்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். தற்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூர் செல்லும் போதெல்லாம் இந்த வழியாகத்தான் போகிறோம்.  அன்று பார்த்தவை இன்னும் பசுமையாக நினைவில்  உள்ளன).

வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே  வலிமையாகத் திகழ்ந்த ஊர் செஞ்சி.
  முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு, சிங்கபுரி கோட்டம் என்றும் அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. 
கி.பி .3 முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.
 பல்லவர் காலத்தில் (கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது. செஞ்சிக்கு   கிழக்குப்  பகுதியில்   காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகவும்  அவர்கள்  ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்ததாகவும் தெரிகிறது.  1014-1190 களில்  செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்டத் துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையைப் பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம்  -ஆண்டு முதல் 1529ம்  -ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.இக் கோட்டையைக் கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களின் கைக்கு வந்தது. அவர்கள், 1750  -இல் இதனைப் பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 -இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு.
அமைப்பு செஞ்சிக் கோட்டை இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய குன்றுகள்  (ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி  ), இரண்டு சிறிய குன்றுகள்  அவற்றை இணைக்கும் 12கி.மி.மதில் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள்   ராஜகிரி மட்டுமே  தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.  240  மீட்டர்  (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள   அகழியினால்  காப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக்   குளம்  ஒன்றும் இருந்தது. 
இந்தியாவில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சிக்கோட்டை உள்ளது.
இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.
கோட்டையின் முழு அமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை இங்கே காணலாம். எதிரிகள் புக முடியாத கோட்டையாக மட்டுமின்றி இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரணாக செஞ்சி கோட்டையை வடிவமைத்துள்ளனர். இயற்கையின் கொடையாக மலைக் குகைகளில் நீர் சுனைகள் இருந்தாலும், மழை நீரை பாதுகாக்க மலை உச்சி முதல் அடிவாரம் வரை குளங்களை நமது முன்னோர்கள் அமைத்துள்ளனர். இந்தக் குளங்கள் நிறைந்த பிறகும் மழை நீர் வீணாகாமல் இருக்க இரண்டு அடுக்கு அகழிகளை அமைத்தனர். அகழிகள் ஆழமாகவும், அகலமாகவும் மழை நீரைச் சேமிக்கும் கிடங்காகவும் இருந்தன. போர்க்காலத்தில் கோட்டையை எதிரிகள் முற்றுகையிடும் போது நீர் நிலைகளைப் பயன்படுத்திக் காய்கறிகள், தானியங்கள் விளைவித்தனர். மேலும் பல மாதங்களுக்குத் தேவையான தானியங்களை சேமித்து வைக்கத் தானியக் களஞ்சியம், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மூலிகைக் காடுகள் கோட்டைக்குள் இருந்தன. இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பும் போது கோட்டையின் தேவை மட்டுமின்றி செஞ்சி நகரிலும், சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இதனால் ஆண்டு முழுவதும் தடையின்றி விவசாயம் நடக்கக் கோட்டையின் நீர் நிலைகள் உதவின. செஞ்சிக் கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தப் பகுதிகான முக்கியத்துவம் குறைந்து அதிகாரம் முழுவதும் சென்னையில் இருந்து செயல்பட்டது. இதனால் செஞ்சிக் கோட்டை நீர் நிலைகளும் பாதுகாப்பின்றி தூர்வாராமல் அழியும் நிலைக்கு போயின. அகழிகளின் ஆழம் குறைந்து, சேமிக்கும் தண்ணீரின் அளவு 20 சதவீதமாகக் குறைந்தது.

கிருஷ்ணகிரி: இது தற்போதைய திருவண்ணாமலை சாலையின் தெற்கில் அமைந்துள்ள குன்றாகும்.இது ராஜகிரியை விடச் சிறியது.இதன் உச்சிக்குப் போகக் கருங்கல் படிகள் உள்ளன. இங்குக் காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன. (பிற்காலத்தில் இதில் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கள் சில இருந்ததால் இது ஆங்கிலேயர்களின் குன்று என்றும் அழைக்கப்பட்டது)  
ராஜகிரியுடன் தொடர்பு கொண்ட மற்றொரு குன்று சந்திரகிரியாகும்.  இது அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.
தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921  -ஆம் ஆண்டில் இது    தேசிய நினைவுச் சின்னம்  என அறிவிக்கப்பட்டுத்   தொல்லியற் துறையின்  கீழ்க் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில்   சுற்றுலாத்துறை  பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.

(விழுப்புரம் மாவட்டத்தில் காதலர்கள் விரும்பும் சுற்றுலா இடமாகச் செஞ்சிக் கோட்டை உள்ளது. பரந்து விரிந்துள்ள கோட்டையின் பல பகுதிகள், காதலர்கள் விருப்பம் போல் தனிமையில் இருக்க ஏற்ற இடமாக உள்ளன. இதனால், சாதாரண நாட்களிலும் ஏராளமான காதலர்கள் வருகின்றனர்.இங்கு பல பாலியல் வன்முறைகளும் திருட்டும் பாதுகாப்பு இன்மையும் உள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக  அறிந்து வருத்த மடைகிறோம்.  


 தஞ்சைப் பெரிய கோயில்

பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் எனவும் தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால் ‘பெரியகோயில்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. இக்கோயில், 10  -ஆம் நூற்றாண்டில்,  சோழப் பேரரசு  அதன் உச்ச நிலையில் இருந்த பொழுது,   இராஜராஜ சோழ  மன்னனால் கட்டப்பட்டது.

இக்கோவில்  எழும்பியுள்ள தஞ்சாவூர்ப் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் எனப் பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே மன்னனின்பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
அமைப்பு :
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான்.
இந்தக்  கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்விரு  வாயில்களையும் கடந்து சென்றால் ஆலயத்தைக் காணலாம்.ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது.
ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது.
இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.

தஞ்சாவூர் நகருக்குள் நுழை ந்ததும், நம் கண்ணில் படுவது பெரிய கோயிலில் உள்ள விமானமே. இதை “தென்கயிலாயம்’ அல்லது “தட்சிண மேரு விமானம்’ என்பர். கயிலாய மலையைப் போலவும், புராணங்களில் சொல்லப்படும் மேரு மலையைப் போலவும் உயரமாக இரு ப்பதாக இது வர்ணிக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 216 அடி உயர முடை யது. பீடம் முதல் கலசம் வரை கருங் கற்களால் அமை க்கப்பட்டது. வாய் அகலமான கூம்பு வடிவப் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தது போல இருக்கும் இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக அமைத்தி ருப்பது அரிய விஷயமாகும் (புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது). விமானத்தின் மேலுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செப்புக்கலசம் 12அடி உயரமுள்ளது. விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கும் மேல் பார்வதியும் சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 
கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும். இக்கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது.
 இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை.

இக்கோவில்  ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டக மாகத் திகழ்கிறது.

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள் , இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும்,சிற்பிகளும் தேவார ஓதுவார்களும்  இசைவாணர்களும், நடன மாதர்களும் , மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம்.

நந்தி

நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை.  நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும்.இந்த  மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது.
தென்னக பண்பாட்டு மையம் தங்கள் கலை நிகழ்ச்சிகளையும், நாட்டியம், இசை போன்றவற்றை இவ்வாலயத்தின் நந்தி மண்டபம் அருகே நடத்துகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர்.

   தஞ்சை பெரிய கோவிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954 ஆம்  ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

இங்கு அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ நிறுவனம் 1987 -இல், இக்கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக ஏற்று அதற்குரிய பட்டத்தையும் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் உலகப்போர் மூண்டாலும் இக்கோயிலின் மீது எவ்விதத்தாக்குதலையும் எந்த நாடும் நடத்திச் சேதப்படுத்திவிடக்கூடாது என உலக நாடுகள் அனைத்திற்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரியச் சிறப்புக்குக் கிடைத்த கவுரவமாகும்.
தஞ்சை பெரிய கோவில் 1006   -ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010   -ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது . ஆயிராம்  ஆண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில்  2010 செப்டம்பர் 25, 26   ஆகிய 2 நாட்கள்  சிறப்புற நடத்தப்பட்டது. இதன் பெருமையை ஒரு முறையாவது நேரில் வந்து பார்ப்பவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்.



மாமல்லபுரம்

 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இருக்கும் ஒரு  பேரூராட்சி  ஆகும்.  7  -ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின்  முக்கிய துறைமுகமாக  விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.சென்னையில் இருந்து சுமார்      60 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களைக் கொண்டது என்று தெரிவித்து உள்ளனர். அதேபோல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்தத் தகவல் தெரிய வருகிறது. இப்போது உள்ள ஒரு கோவிலைத்  தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கிவிட்டன.
இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728 -உக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.

ஐந்து இரதம்


இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில்,  தேர்  போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன்      என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.


இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுப் பட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம்,  பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம் மற்றும் கெஜபிருஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ் இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத்  தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத் திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும் மேலும் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.

அர்ச்சுனன் தபசு


சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு  என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் எனத் தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காகச் சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததைக் குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

  இதில் நான்கு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்கிறது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்


கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
 மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கடவுளரின்  உருவங்கள்,புராணக்கதை    நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே  காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி,-  சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.

சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

தாஜ் மகால்:   


இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள் , உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ராவில் யமுனை ஆற்றின்  கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களில்  தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம்   முகலாய  மன்னனான  ஷாஜகானால் , இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ்  நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு  1631  முதல்  1654  ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக கூறுவர்.
தாஜ்மகால், பாரசீக கட்டிடக்கலை  மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது.  தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான சமர்க்கண்டிலுள்ள தைமூரின் சமாதி, ஹுமாயுன் சமாதி , ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித்  ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிறக்  கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச்    சலவைக் கற்களைப்  பயன்படுத்தியுள்ளான்.

தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக் கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர்  வடிவம் கொண்டதும்,வளைவு    வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம்  ஆகியவற்றைக் கொண்டதுமான  கட்டிடம்.  இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட  அமைப்பு ஆகும். இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது.   வெங்காய  வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை  வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில்  தாமரை  வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800  -ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை  திறந்து உள்ளதால் அவற்றினூடாகக் கட்டிடத்தின் உட்பகுதிக்குச் சூரிய ஒளி     செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.

அடித்தளத்தின்  ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள்  அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.

அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள்  அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.

வெளிப்புற அழகூட்டல்


தாஜ்மகாலின்  வெளிப்புறம்  முகலாயக் கட்டிடக்கலைச்  சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துகளும் , செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது.  இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக் கற்கள்  பதித்து உருவாக்கப்பட்டவை.

உட்புற அழகூட்டல்


இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம்  எண்கோண   வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள வாயில்  மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா


தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் பிம்பம்  இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன.

 இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும் பழமர  வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும்  குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.

வெளிக் கட்டிடங்கள்


தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது.  சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.
தற்போதைய நிலை:
தாஜ் மஹால் அமில மழையால்  மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.1996  -ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்மஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்துத் தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.

-தொகுப்பாளர் : லூசியா லெபோ