பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 16 novembre 2010

எண்ணப்பரிமாற்றம்


அன்புடையீர்,
31 10 2010 அன்று பிரான்சு கம்பன் கழகம் தன் 9 -ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றது. கம்பன் கழகத் தலைவர் திரு. பாரதிதாசனின்  மரபுக் கவிதை பயிற்சிப் பட்டறையில் தன்னைத் தயாரித்துக் கொண்ட திருமதி அருணா செல்வம் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.
'தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே, இராவணனே”     என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்ததில் ஐயமில்லை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் 10 -ஆம் ஆண்டு விழாவை நிறைவாக நடத்திட அனைவரும் தோள் கொடுப்போம்.
நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினம். நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம்.
இந்த   இரு பெரும் விழாக்களைக் கொண்டாடும் நேரத்தில் நமது தமிழகத்தில் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை நினைத்து உள்ளம் கொதிக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க - அவற்றைக் களைய நாம் ஏதாவது முயற்சி செய்கிறோமா? 
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால், நாளைய இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்களே அவர்களது எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு. தங்களது குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் அன்புடன் பழகுவதற்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நம் வீட்டுக் குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போலக் காக்கும் நாம் அண்டை வீட்டுக் குழந்தையின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம் அல்லவா..
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும். நேரு கண்ட கனவும் பலிக்கும்.

லூசியா லெபோ

இன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு


பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு செல்வந்தர் மற்றும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவருபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். உருது மொழியில்  'ஜவகர்லால்”என்ற சொல்லுக்கு 'சிகப்பு நகை” என்று பொருள். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில்  இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.  நேரு இங்கிலாந்து சென்று தம் உயர் கல்வியை தொடர்ந்தார்.
1912 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் ஆனார். கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார். அவர்களுக்கு இந்திராபிரியதர்சினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார்

1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, இந்த சம்பவம் நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய வரானார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934), சுயசரிதை, (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கௌரவம் மகாத்மா காந்திக்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது.

 இந்தியா சுதந்திரம் பெற்றதும்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். ஆகஸ்ட் 15 1947 புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி பெருமை நேருவுக்கு கொடுக்கப்பட்டது. அன்றுமுதல் தன் வாழ்வின் இறுதிவரை சுதந்திர இந்தியாவை கட்டியெழுப்பும் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மூன்று முறை ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து அவற்றை செவ்வனே நடத்தினார்.


குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளால் அவர் நேரு மாமா  என செல்லமாக அழைக்கப்பட்டார்.
குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால்தான் அவரது பிறந்தநாளை (நவம்பர் 14ஆம் நாள்) நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மே மாதம் 27 ஆம்நாள் நேரு அவர்கள் இறைபாதம் அடைந்தார்கள்


லெயா

lundi 15 novembre 2010

நேருவின் பொன்மொழிகள்:

  • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

  • விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

  • சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்

  • என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார்.

வந்தனை செய்ய வேண்டிய சிந்தனை :

-    இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயத்தில் உதவும் கரங்கள் புனிதமானவை

-    பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர்  நிறைவுகளில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு.

-    அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.

-    விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும். உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.

நம் தேசியகீதத்துக்குக் கொடுக்கபட்ட விளக்கம்

 நம் தேசியகீதத்துக்கு தமிழில் கொடுக்கபட்ட விளக்கம் ஒன்றை இணையத்தில் உலாவரும்போது பார்த்தேன். இணையத்தில் சுட்ட அந்த விளக்கம் இதோ:

 ஜன கன மன அதிநாயக ஜய ஹே
- மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா -
இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா
ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

(இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.)

விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா
 
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே -
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே -
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா
-
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே -
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா -
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! -
வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

இணையமெனும் இனிய வலை

             

இணைய இதழ்களுக்கு போட்டியாக இணையத்தில் உலாவரும் வலைப்   பூக்கள்    பற்றி பார்க்கலாமா தோழிகளே?

வலைப்பதிவு என்றால் என்ன?

தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி ஆங்கிலத்தில் ப்ளாக்கிங் (blogging) என்றழைக்கப்படும். Weblog என்ற  பெயர் முதன் முதலில் 17 12 1997இல் ஜாண் பார்சர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இச்சொல் பிறகு இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்று மாறி பயன்பாட்டுக்கு வந்தது.

வலைப்பூவா வலைப்பதிவா ?

ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ   என்று அழைத்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன் படுத்தியதால் அந்த பெயரே நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 தாய்மொழியாம் தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல உதவும் ஊடகமே வலைப்பதிவு. மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இருந்தால் நம் எழுத்துக்களை மின்னெழுத்துக்களால் பதிக்க முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.

அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?


வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களை எழுதலாம். என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, நம் கருத்துக்கள் எதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும் வாசிப்பவருக்கும் பயன்தருமோ அதை எல்லாம் எழுதலாம். தாம் சார்ந்த துறையைப்பற்றி எழுதலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை போன்ற தங்கள் படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளைப் பற்றி விவாதிக்கலாம், சுவையான சமையல் குறிப்புகூட தந்து அசத்தலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும்  எழுதலாம். இதனால் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. பலருடைய திறமைகளை, கருத்துக்களை, எண்ணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்கள் சொந்த பெயரால் எழுத விருப்பமில்லாதவர்கள் புனைபெயரால் பதிவு செய்யலாம். தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

வலைப்பதிவு என்பது  இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம்.
வலைப்பதிவை வாசிப்பவர் உடனே அந்த படைப்புக்கான விமர்சனத்தை தெரிவிக்க  முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். இதனால் வாசகரே விரைவில் வலைபதிவராகும் வாய்ப்பும் உண்டு.
இதுதவிர இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.


. இடுகையின் வாழ்நாள் :

ஒரு இடுகையின் வாழ்நாள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பொருத்தது. இதைத்தான் எழுதலாம். என்ற எல்லை இல்லாத ஊடகம் என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதினால் வாசகர்களை பெற இயலாது. வலைப்பதிவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் தினச் செய்திகளையோ, மற்றவர்கள் பதிவுகளில் வெளியான கருத்துக்களையோ தன் பதிவில் பதிவு செய்து இடத்தையும் நேரத்தையும் வீணடிப்பவர்கள் சிலர். எதையோ நினைத்து தேடப்போய் எதையோ வாசிக்க நேர்ந்து விடுவதால் நேரவிரயம் ஆகிறது. பிறந்ததும் இறந்துவிடும் பதிவுகள் தேவையா?

நுட்பம், துறைசார் பதிவுகளுக்கு வருகையாளர்கள் குறைவு. போதிய ஊக்கமும் வரவேற்பும் கிடைப்பதில்லை.

 நமது வலைப்பதிவுகள் நிலைத்து இருக்க வேண்டுமானால் நாம் தரும் தகவல் செறிவுடன் சுவையாக எழுதப்பட வேண்டும். பார்வையாளர்களின் எண்ணிக்கை பெரிதல்ல சரியான பார்வையாளர்களை அடைவதுதான் முக்கியம்.

நம் எழுத்து பலரையும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தால் நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது.

பின்னூட்டம் என்பது ஒரு பொழுதுபோக்காக, போதையாக தற்போது மாறிவருவது வருந்தத்தக்கது..

மற்றவை மறு சந்திப்பில் பார்ப்போமா?
- லூசியா லெபோ

குழந்தை இலக்கியம் - சிறுவர் இலக்கியம்:

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழைமையான ஓர் இலக்கியமாகக் காணப்படுகின்றது.
ஒரு மரம், செடியாக இருக்கும்போது, தினமும் நீர் ஊற்றி, மண்ணை கிளறிவிட்டு, உரம் இட்டு  ஆடுமாடுகள் கடித்துவிடாதவாறு வேலியிட்டு பாதுகாத்து அக்கறையுடன் வளுர்க்கிறோம். இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த செடி ஓரளவு மரமாக வளரலாம். ஆனால் நல்ல பயன்தரும் மரமாக அது திகழ்வதில்லை.
குழந்தைகளும் அப்படிப்பட்டவர்களே. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து நல்லறிவு பெறச் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால், நல்ல குடிமக்களாகவும் சான்றோர்களாகவும் திகழ முடியாது. கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டுமல்ல, நற்பண்பை அறிதலையும் குறிக்கிறது. இவ்விரெண்டையும் பெற்றால்தான் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்.  வருங்கால சமுதாயத்தை உருவாக்கித் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்கள்  நற்பண்புடையவர்களாகத் திகழ  வழிவகுப்பது சிறுவர் இலக்கியமே. பெரிய இலக்கியங்களைப் பிற்காலத்தில் படித்து பயனடைய வேண்டுமானால், அவர்கள் சிறுவர் இலக்கியத்தைப் படிக்க பழக வேண்டும். சிறுவர் இலக்கியத்தைப் புறக்கணித்தால், வருங்காலத்தில் பிற இலக்கியங்கள் புறக்கணிக்கப்படும்.
உலகில் குழந்தை இலக்கியங்கள் எங்கெல்லாம் செழுமையுடன் உள்ளதோ அங்கெல்லாம் சிறந்த சமூக உருவாக்கம் நிகழ்கின்றது என்பது கண்கூடு.

சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்களைக்  கற்றுக்கொள்ள இது உதவுகிறது.
அன்று குருகுலம் இருந்தது.  பெரிய குடும்பத்தில்  வயது வித்தியாசம் உள்ள அண்ணா, அக்காக்கள் இருந்தார்கள். .இன்றைய நடுத்தர குட்டி குடும்பத்தில் வளரும் சிறுவர்களுக்குத் தோன்றும் கேள்விகள் - வாழ்க்கைப் பாடங்கள், தற்கொலை, பொறாமை, கொடுமைகள், அன்றாட காமன்சென்ஸ், உள் இறுக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள இன்று யாரும் இல்லை. அவர்களின் மனதுக்குள்ளே அவை புதைந்து போகிறது. பள்ளிச்சிறுவர்களை அவர்களின் அடுத்த வயதுக்கு தயார் செய்யும் பொறுப்பை இலக்கியத்தின் வாயிலாக சொல்லி கொடுக்க வேண்டும்.

வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக்  கொண்டிருக்கிறது. அர்த்தமற்ற வீடியோ விளையாட்டுகளை வெறித்துப் பார்த்தபடி குழந்தைகள் முட்டாள் பெட்டிமுன் அமர்ந்திருக்கிறார்கள். இன்று தொழிநுட்ப ரீதியில் உலகம் முன்னேறிவிட்ட நிலையில் ‘கார்ட்டூன்’ மூலமான சித்திரங்களும், நாடகங்களும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது.
இதனை தாண்டி புத்தகங்களோடு பழக்கம் கொள்ள நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். சீரியல் பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துபவர்களா நீங்கள், உடனே அதைக் குறைத்துக் கொண்டு புத்தகம் ஒன்றினை எடுத்து  படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும்.

 பேச்சுவார்த்தையே தேவையில்லை என்று வன்முறைக்கும்பல்கள் அதிகரித்துப் போனதற்கு பழைய அற்புத நேயமிக்க கதைச்சொல்லிகள் இல்லாமற் போனதே காரணம். பாட்டி சொல்வது அவள் கேட்ட கதையா  அல்லது அவளுடைய சொந்த சரக்கா என்று தெரியாது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்காகத் தோன்றும். கதை சொல்லும் பாட்டிமார்களை நாம் இழந்துவிட்டது ஒரு பண்பாட்டு இழப்பு.

எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம்.   தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம்  பண்பாட்டில் அதிகம்.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும்  நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் 'ஆத்திசூடி”, 'கொன்றைவேந்தன்” ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இவற்றில் 'ஆத்திசூடி” மிகச்சிறிய வாக்கியங்களாலும் 'கொன்றைவேந்தன்” சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. 'இன்னதைச்செய்” அல்லது 'இன்னதைச் செய்யாதே”, 'இப்படிச்செய்தால் நல்லது”, 'இப்படியெல்லாம் செய்தால் தீமை” என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தில்; குற்றச்செயல்களின் விகிதம் இன்றைய நிலையைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை.

பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் தெனாலிராமன் கதை, பரமார்த்த குருகதை, விக்கிரமாதித்தன் கதை, சிபி சக்கரவர்த்தி கதை என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை.
குழந்தைகளுக்கான நாவல்கள், குழந்தை நாடகங்கள், குழந்தைக் கவிதைகள்,புதிர்கள், படக்கதைகள்  சுற்றுலா கட்டுரைகள், மகான்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை,விஞ்ஞான சம்பந்தமான தொகுப்புகள் இவையாவும் சிறுவர் இலக்கியத்தில் அடங்கும்.

குழந்தை இலக்கியத்தின் பண்புகள்

குழந்தைகளுக்கான தரமான இலக்கியங்களில் குழந்தைகளின் களங்கமில்லாத மனம் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தை உள்ளத்துக்குத் திருப்தி தரக்கூடிய பாடல்கள் தான் இலகுவில் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன.வியப்பான, எளிய உணர்ச்சிகளை இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் பாடினாலே குழந்தை பாடல்கள் சிறக்கும்.

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும்.
 சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்கள் அவர்களை கவரும் வகையில் அழகான பெரிய எழுத்துக்களுடனும், பொருத்தமான படங்களுடனும் எழுத்து பிழைகளின்றியும் அமைதல் சிறப்பானது.

இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை.

 குழந்தை எழுத்தாளருக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. சிறப்பான குழந்தை இலக்கியகாரர்கள் பலர் தமது துறைகளைத் துறந்து மனம் சலித்து வெளியேறிய சம்பவங்களும் உண்டு.

குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் அதனை ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்கள். 
குழந்தைகளைக் கண்டால் தாமும் ஒரு குழந்தையாக மாறிவிடும் அளவிற்குக் குழந்தை உள்ளம் படைத்தவர் இவர்.

பூவண்ணன், தூரன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரும் சிறந்த குழந்தை எழுத்தாளர்கள் ஆவர்.
அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், அரும்பு போன்ற சிறுவர் இதழகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவற்றில் சில இணையதளங்களிலும் வருகின்றன என்பது வரவேற்கதக்கது.

     காக்கையையும் குருவியையும் பசுவையையும் நாயையும் தன்னோடு இணைத்துக்கொண்ட பாரதியின் தேசத்தில், மற்றவர்களின் துன்பத்தில் ஏமாற்றத்தில் சந்தோஷம் கொள்வது போன்ற பொருள் உடைய ஆங்கில நர்சரி ரைம் தேவைதானா?

நமது சிறுவர் இலக்கியங்களில் வாழும் கலையை போதிக்கும் எவ்வளவோ வார்த்தைகள்.
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று
    தாயிற் சிறந்த கோயிலுமில்லை
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
    ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    அறம் செய விரும்பு ஆறுவது சினம்
    கூடிவிளையாடு பாப்பா
    வானரங்கள் கனி கொடுத்து மந்தியுடன் கொஞ்சும்”

 நமது சிறுவர் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் போது உற்சாகம் வரவழைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கை நெறி இங்குதானே இருக்கிறது?
திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், உலகநீதியையும் கொன்றைவேந்தனையும் பாரதியின் பாப்பா பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொடக்க வகுப்புகளில் கற்பிக்கலாமே? வளரும் தலைமுறையினரை வாழும் நெறிக்கு அழைப்போமா!

நூலகமும், புத்தகப்பண்பாடும் என்ற தலைப்பில் குழந்தை எழுத்தாளர்கள், ஓவியர்கள் அமைப்பு 5, பிப்ரவரி 2010 நடத்திய சர்வதேச கருத்தரங்களில், 'புத்தக வாசிப்பு மூலம் மனிதர்களின் மதிப்பை குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும், மேலும் நமது பண்பாடு, சமயம், பொருளாதாரம், நமக்கான அறிவியல் ஆகியவை குறித்து சமூக அமைப்புகள் குறித்தும் அறிந்துகொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.”என்றார் அப்துல் கலாம். 
 புத்தகங்களை சுமையாக நினைக்கும் நிலையினை மாற்றி புத்தகங்களை சுவையாக நினைக்கும் சூழ்நிலையை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்.

லூசியா லெபோ