பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 novembre 2012

எண்ணப்பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். 'எழுத்தறிவிப்பவன்  இறைவனாகும்' என்னும் உயர்ந்த கொள்கை கொண்டது நம் நாடு. அறிவுக்கும், கற்பதற்கும் அவ்வளவாகத்  தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் அளவு, படிக்காத மேதைகளும், சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும்,அறிஞர்களும் இருந்தபோதிலும், சராசரி மனித அறியாமையைக் கல்வி போக்குகிறது, அறிவுக் கண்களைத் திறக்கிறது என்பதில் ஐயமில்லை ! அந்த உயர்ந்த சேவையைப் புரியும் உன்னதர்களைப்  போற்ற வேண்டும் என்கிற உணர்வு முன்பு எல்லோருக்கும் நிறையவே இருந்தது. அவர்களும் தங்கள் தகுதி அறிந்த பொறுப்போடு, முன்மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

இப்போது கல்வி கற்பிப்பது  ஒரு தொழிலாக, கடமையாக பலருக்கு மாறி விட்டது. எனவே வருமானம் கருதியே நேரம் பார்த்து, 'வேலை' செய்கிறார்கள் அதனால் சமூகத்தில் அவர்கள் மீதான மதிப்பும் குறைந்து விட்டது. படிக்க வருபவர்களுக்கோ அன்றி பெற்றோருக்கோ 'உண்மை அறிவின்' தாகம் குறைந்து, செய்தி விபரங்களின் பெட்டகங்களாக மாற, மாற்ற விழைகிறார்கள்.பலன், காணுமிடமெங்கும் பட்டதாரிகள்,  திறமை இல்லாத நகல்கள்! உண்மைத் திறனாளிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள் அல்லது இந்தப் போட்டிகளில் நசுக்குண்டு நலிந்து போகிறார்கள்.

ஆயினும் ஆசிரிய பீடம் முற்றாகத்  தகர்க்கப்பட முடியாதது. உலகின் தொடர் சுழற்சிச்  சங்கிலி இருக்கும் வரை, அறிவொளியை ஏற்றும் பொறுப்பினை ஏற்கும் இனமும் அழிக்கப்பட முடியாதது. தற்போது வேதாந்தம், தத்துவம், சரித்திரம், ஏன், மொழிக்குக் கூட முக்கியத்துவம் குறைந்து, விஞ்ஞானம்,பௌதிகம்,வேதியல் போன்றவற்றுக்கே வரவேற்பு உள்ளது. இவை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம். எனினும் மனிதன் ஆத்மார்த்தமாகத் தன்னிறைவு  பெற ஒரு சில உயர்ந்த கொள்கைகளும், கோட்பாடுகளும், நன்னெறிகளும் உள்ளன. அவற்றைப் பரம்பரையாக மனிதக் குலத்திற்கு எடுத்துச் செல்வது கல்வியாளர்களே !

வாழ்நாள் முழுவதும் கற்பது நிற்பதில்லை! நாம் எதிர்பாராத இடத்தில், எதிர் நோக்காச் சிந்தனையைத்  திடீரெனச்  சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. நாள்தோறும் நம் அறிவு புதுப்புதுச் செய்திகளை அனுபவங்களாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதன் பிரதிபலிப்பை வாழ்க்கையில் எந்த அளவு கொண்டுவருகிறோம் என்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்குகிறது.
அதற்கு அடித்தளமாக நாம் இடுவதே கல்வி.  அனுபவங்களைப் பாகுபடுத்தவும், சீரியவற்றைச்  செயல்படுத்தவும், அல்லனவற்றைப் பாடமாக எடுத்துக் கொள்ளவும் முயற்சிக்கும் தன்மையைச்  சிறு வயது முதலே வளர்ப்பதே பள்ளி.

குழந்தைகளை என்னதான் அறிவாளிகளாக்க பெற்றோர் முயன்றாலும், வெளி உலகில் அவர்களை வாழப் பழக்குவது ஆசிரியர்களே. அவர்கள் தங்கள் முக்கியத்துவத்தையும், கடமையையும் உணர்ந்தாலே ஓர் உன்னதமானத் தலைமுறை உருவாகிவிடும். அதற்கானச்  சூழலையும், கவுரவத்தையும் நாம் அளித்தலே நாம் அவர்களுக்கு அளிக்கும் உதவி !

திருமதி சிமோன் 

இன்றைய அறிமுகம் - டாக்டர் இராதா கிருட்டிணன்


1888  -ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 -ஆம் தேதி திருத்தணியில் ஏழை தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி. தாயார் சீதாம்மா.தம் இளமைக் காலத்தைச்  சொந்த ஊரிலும் திருப்பதியிலும் கழித்தார்.16 வயதில் வேலூரில் கல்லூரிப் படிப்பைத் துவங்கினார்.அப்பொழுது  பெற்றோர் தேர்ந்தெடுத்த தனது தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை மணந்தார்.அடுத்த  ஆண்டு சென்னையில் தத்துவத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தன்  மேற்படிப்பைத் தொடர்ந்தார்.விரும்பி இப்பாடத்தை எடுத்ததைக் காட்டிலும்  இந்தப் படிப்பை முடித்த அவரது உறவினர் தன்  புத்தகங்களை இலவசமாக கொடுக்க முன்வந்ததால் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையால் இதைப் படித்தார்.இத்துறையில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டானதால்  படிப்பைச் சிறப்பாக முடித்தார். முதுகலைப் பட்டம் பெற   அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை  ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.  20  -ஆம் வயதில் ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வேதாந்தத்தில் அறவியல் பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின்  தலைப்பு :"The Ethics of the Vedanta and Its Metaphysical Presuppositions". வேதாந்தத்தில் அறவியலுக்கு இடம் இல்லை என்னும் குற்றச்சாட்டை அக்கட்டுரை மறுத்தது.

படிப்பு முடிந்ததும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் தத்துவ  விரிவுரையாளராக ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.அப்பொழுது அவருடைய சம்பளம்  17 ரூபாய். தன்னம்பிக்கையினாலும்  சொந்த முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர் இவர். சென்னைப்  பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் செம்மையாகப் பணியாற்றினார்.1929   -இல் இங்கிலாந்து மான்செஸ்டர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.  இவர் கல்விப் பணிகளில் குறிப்படத்தக்க ஒன்று : கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் சியார்சு மன்னர் அறக்கட்டளை யில் அமைந்த மனநல-அறநிலை அறிவியல் துறையில் (Chair of Mental and Moral Science) இவர் பணி புரிந்தது.  1936 - 1939 கால கட்டத்தில், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழைச் சமயங்கள்-அறவியல் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1939 -இல் பிரித்தானியக் கழகத்தின்  உறுப்பினராகத் (Fellow of the British Academy) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938-1948 ஆண்டுகளில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

1946 - 1952 வரை UNESCO வில் இந்தியப் பிரதிநிதியாகப் பதவி வகித்தார்.ரஷ்யாவின் இந்தியத் தூதராக  (1949 - 1952 ) பணியாற்றினார்.அப்பொழுது ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்து உரையாற்றினார். இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. இந்தியா  திரும்பும் முன் இராத  கிருட்டிணனை சந்தித்த ஸ்டாலின் "மனிதனாக என்னை ஏற்று கொண்ட முதல் மனிதர் நீர்தான்" என உணர்ச்சிபட கூறினாராம்.இந்திய விடுதலைக்காக பாடுபட்ட காந்தி, நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ், தாகூர் போன்றவர்களுடன் நேரடியாக  தொடர்பு உண்டு இராதா கிருட்டிணன் அவர்களுக்கு. 1952 - 1962 வரை இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.இந்தக் காலக்கட்டத்தில் முக்கியமான காரசாரமான  விவாதங்கள் மக்களவை (மேல் சபை) யில் நடைபெறும்போது வடமொழி இலக்கியங்கள், பைபிள் இவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி அந்தச் சூழ்நிலையை மாற்றிக் குடும்ப நிகழ்ச்சி போல நடத்தி செல்வார் எனத் திரு நேரு அவர்கள் கூறுகிறார். 13 மே 1962 முதல் 13 மே 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுக்  கருணை மனுக்கள்  பரிசிலனைக்கு வந்தபோது மரண தண்டனை தேவையில்லை என்ற  கருத்தைத் தெரிவித்தார். பதவிக் காலம் முடிவடைந்ததும் அடுத்துப்  போட்டியிட விரும்பவில்லை.

 இவர் சிறந்த தத்துவமேதை. தத்துவத் துறையில் ரஸ்ஸலுக்கு அடுத்தப்படியாக உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். உண்மையை உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையே தத்துவம் என்கிறார் இவர்.
இவர் நல்ல கல்வியாளர். ஆசிரியர் பணியைப்  பெருமையாய்க் கருதியவர். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். மாணவர்கள் சிலர் அவர் பிறந்தநாளை  கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்: "என் பிறந்த நாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமையாக உணர்வேன்" என்று. அவரின் வேண்டுகோளுக்கிணங்க 1962 ஆம் ஆண்டு முதல்,  செப்டம்பர் மாதம் 5 -ஆம் நாள் ஆசிரியர்  தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இராதா கிருட்டிணனின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவை.தம் வாழ்நாளில் பலப்பல நூல்களை எழுதிக் குவித்தவர் முனைவர் இராதாக்கிருட்டிணன். 'வாழ்வியல்  - இந்துக்களின் பார்வையில்' (The Hindu View of Life), 'கருத்தியல் கோணத்தில் வாழ்க்கை, சமயம், சமூகம்' (The Idealist View of Life , Religion and Society), ' ‘கீழை மேலை நாடு-களில் மெய்ப்பொருளியல் வரலாறு’ (Eastern Religions and Western Thought), 'இந்தியத் தத்துவங்களின் ஊற்று நூல்' (A Source Book in Indian Philosophy). மதிப்புக்குரிய பன்னாட்டுத் தாளிகைகளிலும் அவர் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 இராதாக்கிருஷ்ணன் இணையருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். இந்திய வரலாற்றுத் தொடர்பான துறையில் கோபால் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்.

விருதுகள்:


1954 -ஆம் ஆண்டு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஏறக்குறைய அதே சமயம் 'முனைவர் இராதாக்கிருட்டிணன் தத்துவங்கள்' (The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan) என்னும் நூல்  அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
உலகின் பதினேழு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டார்.ஆனால் வெற்றி பெறவில்லை.
1931 -இல் 'சர்' பட்டம் இவருக்கு  வழங்கப்பட்டது ; இந்திய நாடு விடுதலை அடைந்த பின் அப்பட்டத்தை  இவர் துறந்துவிட்டார். 1963  -இல் 'Order of Merit' வழங்கி இவரைக் கவுரவித்தது காமன்வெல்த் நாடுகள் சபை. 1961 -இல் 'German Book Trade ' வழங்கிய 'சமாதானப் பரிசை'ப் பெற்றார். இவர் மறைவுக்குச் சில காலம் முன்பு - 1975 இல் - டெம்பிள்டன் பரிசு இவரைத் தேடி வந்தது. நோபல் பரிசுக்கு வழங்கப்படும் தொகையை விட இப்பரிசுக்கு வழங்கப்படும் தொகை உயர்ந்தது. ஆயினும் இப்பரிசுப் பணம் அத்தனையையும் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கே கொடுத்துவிட்டார். இவர் நினைவாக அப் பல்கலைக்கழகம் 'இராதாக்கிருட்டிணன் உதவித் தொகை' வழங்கத் தொடங்கியது.
79 வயதில் சென்னைக்குத் திரும்பி "கிரிஜா" என்ற தன் இல்லத்தில் வசித்து வந்தார்.17 04 1975 அன்று  அமைதியாக இறையடி சேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது 87.

தொகுப்பு: லூசியா லெபோ.

அறிவுக் கடலில் சில துளிகள்

                                                        

இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர் 65%

பிரான்சிலுள்ள  'லியோன்' என்ற நகரில் இன்டர்போலின் தலைமையகம் உள்ளது. இந்தியாவிலிருந்து சி.பி.ஐ. உயர் அதிகாரி, முன்னாள் சென்னை நகரக் காவல் ஆணையர் அருள்,  இன்டர்போல் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது  அவரால் பரிசளிக்கப்பட்ட 'பகவத் கீதை' அங்கே வைக்கப்பட்டுள்ளது. ஒரு குண்டு வெடிப்பின்போது, கட்டடம் இடிந்தபோதும், சேதமாகாமல் புத்தகம் தப்பியுள்ளது.

1856ஆம் ஆண்டு 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை ராபர்ட் கால்டுவல் எழுதினார். 53 ஆண்டுகள் இந்தியாவில் தமிழ், திருமறைத் தொண்டாற்றிய அவர், 15 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய, தமிழின் தொன்மையினை நிலை நிறுத்தும் இந்நூலுக்காக, 'க்ளாக்ஸோ' பல்கலைக் கழகம் அறிஞர் பட்டம் வழங்கியது.

லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் தற்போது வழக்கிலில்லை. கிரேக்கம் வளர்ச்சி அடையவில்லை. சமஸ்கிருதம் மந்திர மொழியாக மாற்றம் பெற்று விட்டது. சீனம், எழுத்து-படம் வடிவிலுள்ளதால் செம்மொழித் தகுதி பெறவில்லை. தமிழ் மட்டுமே எல்லாத் தகுதியும் கொண்டுள்ளது.

உச்சரிப்பு ஒழுங்குற தமிழில் உள்ள சில வழக்குச்  சொல்லாடல்கள்:

ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்.
கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது.
யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை
ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி.
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான்.

தமிழின்  பொருள் மாறிய சில வார்த்தைகளுக்கு உரிய விளக்கம்:

இறுத்தல் - வடிகட்டுதல்
சுணங்குதல் - தாமதித்தல்
கெத்துதல் - ஏமாற்றுதல்
அழுக்கறுத்தல் - பொறாமைப்படுதல்
நொள்ளுதல் - விழுங்குதல்
தரித்தல் - அணிதல்
கெக்களித்தல் - குலுங்கிச் சிரித்தல்

பழமொழிகள்:

முதுமை வரையல்ல, மரணம் வரை கற்கிறோம். (யுக்ரேனியன்)
கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் பிரகாசிக்காது. (தமிழ்)
ஏகாந்தத்தில் படிப்பது, மனிதர்களின் பேச்சைக் கேட்பதற்குச் சமமாகாது.(சீனம்)
என் தவறுகளை எனக்குச் சொல்பவர் என்  ஆசிரியராகிறார்.(சீனம்)
உலகின் முதல் நாகரிகம் உயிரினம், உயிரினத்தின் முதல் நாகரிகம் மனிதன், மனிதனின் முதல் நாகரிகம் பெண்.(ஜப்பான்)

 கவரும் கவிதைகள்:

எனக்குப் பிடித்தவை அனைத்தும் தொலைவினில் உள்ளன. அன்று நிலவு, இன்று நீ !
கற்பனையை எழுதினேன்,கிறுக்கல் என்றனர். உன்னை எண்ணி கிறுக்கினேன்  கவிதை என்றனர்.
பறக்க முடியா பறவைக்குச்  சிறகுகளும், நடக்க முடியாக் கால்களுக்கு கொலுசும்  சுமைதான் !
காற்றே, நீயும் என்னைப் போல்தானோ? புத்தகங்களைப் படிக்காமல் புரட்டுகிறாய் !

தொகுப்பு: திருமதி சிமோன்


நாலந்தா பல்கலைக்கழகம்


நம் நாட்டின் கலாச்சாரம்,பண்பாடு, நாகரிகம்,என அனைத்து அருமை,பெருமைகளையும் உலகத்துக்கு  மிகச் சிறந்த அளவில் கல்வி மூலமாகப் பறைசாற்றிய இந்தியாவின் முதலாவதும் மிக மிகத் தொன்மையானதுமான பல்கலைக்கழகம் நாலந்தா.(தட்சசீலப் பல்கலைக் கழகம் கிறிஸ்து பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன் பிறந்தது எனினும் துரதிர்ஷ்டவசமாக அது பாகிஸ்தானுக்கு உரிமை ஆகிவிட்டது!)'அறிவை அளிக்கும் இடம்' எனப் பொருள் கொண்ட, 5 -ஆம் நூற்றாண்டில் (கி.பி.427) குமார குப்தரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தனது சீரிய பணியைக் கிட்டத்தட்ட 900 ஆண்டு காலம் தொடர்ந்தது .  இன்று இப்பல்கலைக்கழகம் தொடர்பாக நாம் அறியும் செய்திகள் எல்லாம் இப்பல்கலைக்கழகத்தில் வந்து படித்த பல வெளிநாட்டு மாணவர்கள்,மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே அறியமுடிகிறது. உதாராணமாக, வரலாற்றில் நாம் அடிக்கடி படித்த சீனப்பயணி யு வாங் சுவாங், ஈ ஜிங், உள்ளிட்டோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்.அதிலும் குறிப்பாக யு வாங் சுவாங், நாலந்தாவைப் பற்றிப் பல சுவையான முக்கியமான செய்திகளைத் தனது குறிப்புகளில் எழுதி உள்ளார். தற்போதைய பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து 55 மைல் தொலைவில் கிட்டத்தட்ட  14 ஹெக்டேர் பரப்பளவில், மிகமிக நேர்த்தியான  முறையில் திட்டமிட்டு  அமைக்கப்பட்டு இருந்தன. உதாராணமாக, ஒவ்வொரு வகுப்பறையும் கூட எந்த முறையில் அமைக்கப்பட வேண்டும்  (30மாணவர்களுக்கு 1 ஆசிரியர்) என்ற முறையில் வகுப்பறைகள்,தியான மண்டபங்கள்,புத்தமதத் துறவிகளின் மடங்கள், பூங்காக்கள், குளங்கள்,மற்றும் எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள்  என அனைத்தும் மிக சிறப்பாக  அமைக்கப்பட்டன.

இங்குப் புத்தமதத் தத்துவங்களுடன், இதர இந்தியத்  தத்துவங்கள்,மேற்கத்தியத்தத்துவங்கள்,மருத்துவம்,சுகாதாரம்,கட்டிடக்கலை, 
சிற்பக்கலை,வானியல்,வரலாறு,சட்டம்,மொழியியல், யோகசாஸ்திரம், தர்க்கவியல், என அனைத்துப் பாடங்களும்    முறையாகக்  கற்றுத் தரப்பட்டன. கிட்டத்தட்ட  10000 மாணவர்கள்  கல்வி கற்க,  2000  ஆசிரியர்களும் இங்குத் தங்கி இருந்து அவர்களுக்குக் கல்வியைப் போதித்தார்கள். 

இப்பல்கலைகழகத்தில்துருக்கி,Greece,இந்தோனேசியா,சீனா,,திபெத்,
ஜப்பான்,கொரியா,பெர்சியா,போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் கல்வி கற்றனர், தற்போது நடைமுறையில் இருக்கும் நுழைவுத் தேர்வு முறையானது அப்பொழுதே நாலந்தா பல்கலைகழகத்திலும் இருந்தது. சீனப்பயணி  யு வாங் சுவாங் எழுதிய குறிப்பில் இருந்து இது தெரியவருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பிற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
  
பல்வேறு துறைகளிலும் ஒவ்வொரு பாடமும் வெறுமனே கற்றுத்தரப்படவில்லை. மாறாக விவாதங்கள் மூலமாகப் பல துறைகளிலும் விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.  இப்பல்கலைகழகத்திற்கு, குப்த,ஹர்ஷமன்னர்கள், என்று பல மன்னர்கள் புரவலர்களாக இருந்து நிதிஉதவி அளித்துக் காத்துள்ளனர்.குறிப்பாக 200 கிராமங்களின் வருவாய் இப்பல்கலைக் கழகத்திற்கு என்று ஒதுக்கப்பட்டது.நாலந்தாவுக்கென்று தனியே விளைநிலங்கள்,காய்கறி தோட்டங்கள், பசுக்களும் இருந்ததாகத் தகவல்கள் நமக்குத்  தெரிவிக்கின்றன.  இந்து மதம்,பௌத்தம்,வானிலை,அறிவியல்,மருத்துவம்,கணிதம்,தர்க்கவியல்,யோகசாஸ்திரம் என்று  பல தலைப்புகளில்  லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இப்பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த  தர்மாகஞ் (தர்மத்தின்  புதையல்) என்ற பெயர் கொண்ட 9 மாடி கட்டிட நூலகத்தில் இருந்தன. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படை எடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய தளபதி இந்த நூலகத்தைச் சூறையாடி எரித்தபோது இந்த நூலகம் எரிந்து முடிய மட்டும் 6 மாதங்கள் ஆனது எனபது வரலாறு.இப்படி அந்நிய நாட்டுப் படை எடுப்பால் அடிக்கடி பாதிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஒரு சில ஆசிரியர்கள்,சிலநூறு மாணவர்கள் மட்டுமே இருந்து கல்வி கற்கும் அளவுக்குச் சீர்குலைந்தது. இறுதியில் 14  -ம் நூற்றாண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவினை அடுத்து ஆதரிப்போர் யாருமின்றிப் பொலிவிழந்து செயலிழந்தது.

இங்குப் பல தத்துவ மேதைகளும், அறிஞர்களும் ஆசிரியர்களாகப் பணி யாற்றினர்,இவர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், ஸ்திரமதி, குணமதி ஆகியோர் ஆவர். இந்த நாலந்தா பல்கலைக்கழகமானது தற்போதைய Oxford பல்கலைக்கழகம், Cambridge பல்கலைக்கழகம், போன்ற பல்கலைக் கழகங்களுடன்ஒப்பிடும் போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது, ஆனால் துரதிஷ்டவசமாக நாம் நாலந்தாவை இழந்து விட்டோம். நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த திரு.அப்துல் கலாம் அவர்களின் முயற்சியால் அமர்தியாசென் அவர்களின் தலைமையில் நாலாந்தாவை மறுபடி புனரமைக்க ஒரு குழு தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது .இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் தேவைப்படும் என்பதால்  Singapore போன்ற வெளிநாட்டு உதவிகளை பெறத் துவங்கி உள்ளது இந்தக் குழு.. 


அப்துல் தயுப்  



கல்வியின் ஏற்றமும், இறக்கமும்

                                                       Étudiants en amphi


"சீனா தேசம் சென்றாவது கல்வி பயிலுங்கள்"  - இறைத்தூதர் முகமது நபி  சல் அவர்கள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை -  வள்ளுவர்
(பொருள்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு இணையான செல்வம் ஏதும் இல்லை).

 மேலே குறிப்பிட்ட வரிகள் கல்விக்கு மனித சமுதாயம் கொடுத்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. அதிலும் குறிப்பாக நம் பாரத நாடு கல்விக்கு அளித்த  முக்கியத்துவம் போல் உலகில் வேறு எந்த நாடும் தந்தது கிடையாது என நாம் பெருமிதத்துடன் சொல்லலாம். அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் கல்வி எந்த முறையில் யாரிடம் கற்க வேண்டும் என்பதில்கூட ஒரு நடைமுறையை முறைப்படுத்தி வைத்து இருந்தார்கள். இதிகாச காலத்திலேயே தற்போது உள்ள PRE  K..G. எனப்படும் பால பாடத்தைக் கற்பிக்கும் முறை இருந்தது. எடுத்துக்காட்டாக அரண்மனையில் இருந்த இராமர், இலட்சுமணன் போன்றோர் தம் பால பாடத்தை அரண்மனையில் வசிட்ட முனிவரிடம் பயின்று பிறகு  மேற்படிப்புக்காக விசுவாமித்திர மகரிஷி வசம் ஒப்படைக்கப்பட்டனர் என்று இதிகாசம் நமக்குத்  தெளிவு படுத்துகிறது.
நம் பாரத பூமியில் உலகிலேயே முதன் முறையாகதட்சசீலம் நாலந்தா  காஞ்சி,  நாகர்ஜுனா, உஜ்ஜயினி போன்ற பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.   

 திண்ணைப் பள்ளிக்கூடம்:


குருகுலம் சென்று பயிலும் முறைபோல திண்ணைப் பள்ளிக்கூட நடைமுறையும் நம் நாட்டில் இருந்து வந்தது. ஆசிரியரின் வீட்டுத்  திண்ணையில்தான் வகுப்பு நடைபெறும். மாணவர்கள் ஐந்து  வயது முதல் பள்ளிக்குச்  செல்லத் தொடங்குவர். மாணவர்கள் எழுத, படிக்க காகிதமோ, சிலேட் போன்றவை அப்போது புழக்கத்தில் வரவில்லை. மணலில்தான் எழுதக் கற்றுக் கொண்டார்கள். பிறகு  எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்க வேண்டும். காலை ஐந்து மணிக்கே பள்ளிக்கு ஓலைக்கட்டை எடுத்துச் சென்று முந்தய நாள் ஆசிரியர் சொல்லித் தந்ததை மனப்பாடமாக ஒப்புவிக்க ஆசிரியர் வீட்டினுள் அமர்ந்தபடி கேட்டு கொள்வார். பிறகு ஆறு மணி அளவில் மாணவர் அனைவரும் குளம், வாய்க்கால் போன்ற இடம் நோக்கிச் சென்று காலைக்கடன் முடித்துக் குளித்துப் பின் எழுதுவதற்காக மணலை  எடுத்து வந்து பள்ளியில் பரப்பி எழுதக் கற்பார்கள். மதியம் 12 மணி வரை பாடம் பயில்வர் ; உணவு இடைவேளையாக 12 மணிமுதல் 3 மணிவரை செல்வர் ;  மீண்டும்  3 மணிக்கு வந்து பாடம் பயில ஆரம்பித்து 7 மணிவரை கல்வி கற்பார்கள்.

இப்படித்  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தாய்மொழியில் படிப்பதை உணர்ந்து படித்து அறிவு, பண்பாடு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கிய நம்மவரைப் பார்த்து விதி லேசாக முகத்தைத் திருப்பியது. ஆம் வந்தார் , நம் பண்பாடு, தாய் மொழிக்கல்வியை அழித்து நம் உடம்பில் அந்நிய மொழியின் மோகத்தை ஊட்டி நம்மை அடிமையாக்க  ஒருவர் .  அவர் தான் தாமஸ்    பெபிங்க்டன்   மெக்காலே. 1800 -இல் பிறந்த இவர்  1834 சூன் மாதம் இந்தியா வந்து குறுகிய காலத்திலேயே  ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு அதை இங்கிலாந்துக்கு அனுப்பி ஒப்புதல்  பெற்று நிறைவேற்றினார் .அதுதான் ஆங்கில வழிக்கல்வி. குமாஸ்தாக்களை உருவாக்கும்  சொன்னதைச்  செய்யும் அடிமை முறைக்கல்வி. இதனால் தாய் மொழியில் கல்வி பயிலும் முறையானது அழியத்தொடங்கியது. நம்மவர்களும் இயற்கையிலேயே இருக்கும் வெளிநாட்டு மோகத்தில் தாய் மொழிக்கல்வியைப்  புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வியை ஆராதிக்கத் தொடங்கினர்.இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று மேல்படிப்புக்காக மேல்நாடு  நோக்கியும் போகத்  தலைப்பட்டனர். என்ன செய்வது பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே பல மேல் நாட்டு மாணவர்களுக்கும் நாலந்தா பல்கலைக்கழகத்தில்  கல்வியறிவு புகட்டியது நம் முன்னோர் என்கிற உண்மையை வெளிநாட்டு மோகம் மறைத்துவிட்டது.

இந்தியக்  கல்வி முறையானது தற்போதும் உலகளவில்  அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் நம் முன்னோர்கள் போட்ட பாதை அப்படி. உலகில் எங்கும் இல்லாத வகையில்   காலை எழுந்தவுடன் படிப்பு என்று கூறி பிரம்மமுகூர்த்தம் என்னும் அதிகாலை வேளை தான் ஆழ்ந்த அமைதியான படிப்புக்கு ஏற்ற வேளை என்று படிக்கவும் ஒரு நேரத்தை குறித்தனர். மேலும் மனக்கணக்கு என்னும் முறையில் எப்படிப்பட்ட கணிதப்  புதிரையும் பேனா பேப்பர் துணையின்றி மனத்தினுள் போட்டு உடனே பதிலைச்  சொல்லும் முறையும் நம் கல்வியில் மட்டுமே உண்டு. இதனால் சாதாரண கணக்கு போடுவதற்கும் மேலை நாட்டு மாணவர்கள் calculator தேவை என்றிருக்க, நம் மாணவர் எவ்விதத்  துணையின்றி உடனடியாகப்  பதிலைக்  கூற முடியும். அதற்கும் காரணம் மனக்கணக்கு முறைதான். அதேபோல எவ்வளவு பெரிய கடினமான பாடமாக இருந்தாலும் வாய்விட்டுச்  சப்தமாக படிப்பதால் நாம் படிக்கும் வார்த்தைகள் தெளிவாக நாமே கேட்டு, மனத்தில் இருத்தி, பின்னர் மனப்பாடமாக ஒப்புவித்தல், பிறகு அதையே எழுதிப் பார்த்தல் என்ற முறையில் நம் கல்வி அமைந்திருப்பதால் எவ்வளவு பெரிய விடயத்தையும் தெளிவாக மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலை நம் நாட்டு மாணவர்கள் பெறுகின்றனர். உலகில் எங்கு வாழ்ந்தாலும் அந்த நாட்டு மொழியைத் தெளிவாகக் கற்று அந்த நாட்டு ப் பண்பாட்டுடன்  ஒன்றிவிட முடிகிறது  நம் இளைஞர்களால் . காரணம் மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றலே!
ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்று அவர்களுக்கு மதிய உணவைப் பள்ளியில்  அரசே வழங்கும் முறையைக் கொண்டு வந்தது நம் நாட்டில்தான். உலகில் உள்ள அனைத்து முன்ணணி நிறுவனங்களும் தமக்குத் தேவையான திறமையான  விஞ்ஞானிகள்,மருத்துவர்கள், தொழில் நுட்ப வல்லுநர் என்று தேடித் தேடி அவர்கள் பயிலும் கல்லூரியிலேயே வந்து அவர்களைக்  கம்பளம் விரித்து அழைத்துப் போவது நமது நாட்டு மாணவர்களைத்தான். இது நமது கல்வி முறைக்கு உலக நாடுகள் தரும் அங்கீகாரம் அன்றி வேறென்ன?கல்வியுடன் சேர்ந்த கண்டிப்பு  ஆசிரியர்கள் காண்பிப்பதால் நம் நாட்டு மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியறிவு பெறுகின்றனர்.இது போன்ற கல்வி போதிக்கும் நிலையை மேலை நாடுகளில் காணமுடியாது. ஆசிரியர் மீது  மதிப்பு, மரியாதை, பயம் என சரிவிகிதத்தில் கலந்து கல்வி புகட்டுவதால் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயில நம் நாட்டுக் கல்விமுறை வழி வகுக்கிறது.

ஒரு சமூகம் சிறந்த நிலை அடைந்தால் அதற்குப் பின்னால் கண்டிப்பாக அருமையான ஆசிரியர்கள் இருப்பதை அறியலாம் . அர்ஜுனனுக்கு துரோணாச்சாரியார் போலவும், திருடனாக திரிந்த வால்மீகிக்கு  நாரதர் போலவும் விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஅம்சரைப் போலவும் ஒவ்வொரு மாணவனுக்கும்  ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். இதனால்தான் நம் நாட்டில் மாதா, பிதா, குரு , தெய்வம் என்று தெய்வத்துக்கும் மேலாக குருவை வைத்துள்ளனர். தற்போது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினம் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர் அமைத்துக்கொடுத்த  பாதையில் செல்வதால் நமது கல்விமுறையானது உலகில் 3 -ஆவது இடத்தில் உள்ளது. சிறப்பு பெற்று விளங்கும் நமது கல்வித்துறை அண்மைக் காலமாகப்  புற்றீசல் போலப் பெருகிவரும் தரமற்ற சில தனியார் கல்வி நிறுவனங்களாலும் ஒழுங்கீனமான சில ஆசிரியர்களாலும்   பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு அரசாங்கம்  கடுமையான சட்ட திட்டங்கள் தீட்டி செயல் படுத்தினால்  இளைய சமுதாயத்தின் கல்வி நிலை மேம்படும். காரணம்  இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் உள்ள இளைஞர்களில் 50% இளைஞர்கள் இந்தியாவில் இருப்பர் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர் சமுதாயத்தை நேரான பாதையில் நடத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த நமது பாரம்பரிய இந்தியக் கல்வி முறையால் மட்டுமே முடியும்.

அப்துல் தயுப்



ஒரு நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னேறவும்ஆரோக்கியமான ஒரு சமூகம் சிறந்த முறையில் உருவாகவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தரமான கல்வி. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வியின் இன்றைய நிலை  நம் நாட்டில்,குறிப்பாகத் தமிழ் நாட்டில் எப்படி இருக்கின்றது என்று  சிறிது ஆராய்ந்ததின் விளைவே இந்தக் கட்டுரை.

தம் பிள்ளை தொட்டிலில் இருந்து இறங்கிய உடனேயே ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற  வேட்கையில் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் இந்த மனப்போக்கைத் தனியார் கல்வி நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.குழந்தை பிறக்கும் நாளை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் நாளில் இருந்தே நர்சரி பள்ளியில் இடம் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.முதல் நிலைக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் அது மட்டுமல்ல பெற்றோர் ஏதேனும் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வும் அவர்கள் எழுத வேண்டி உள்ளது. என்று நம் கல்வித்துறையில் தனியார் நுழைந்தார்களோ அப்போது  ஆரம்பித்தது தான் நமது கல்வித்தரத்தின் வீழ்ச்சி. சில தனியார் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களே இதற்குச் சாட்சி.   வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த பெண்களை எல்லாம் 500, 600,ருபாய்க்கு நர்சரி பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு அமர்த்தி விடுவதிலேயே வீழ்ச்சி  துவங்கி விடுகிறது. பொறியியல் கல்லூரிகளில் அரசாங்கம் நிர்ணயித்த கல்வித் தகுதிகொண்ட பேராசிரியர்களை நியமித்தால் அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த ஊதியம் வழங்கவேண்டி வரும் என்பதற்காகத் தங்கள் கல்லூரியில் படித்து முடித்த மாணவ மாணவிகளை மிகமிகக் குறைந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தி விடுகின்றனர். தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தால் தாங்களே வேலை வாய்ப்பும் பெற்றுத் தருவதாகவும்  சிறிதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் விளம்பரம் மூலம் சுய தம்பட்டம் அடித்து கொள்கின்றன இந்தக் கல்விநிறுவனங்கள். இவர்களால் பிள்ளைகளுக்கு எப்படித் தரமான கல்வியைத் தர முடியும்? இப்படி இவர்களைக் குறைந்த சம்பளத்தில் நியமித்து விட்டுக் கல்விக் கட்டணத்தை மட்டும் அதிக அளவில் வசூலிக்கின்றனர்.மாதக் கட்டணம் மட்டும் இல்லாமல் தேர்வுக் கட்டணம் தனி. ஒவ்வொரு  வருடமும் பள்ளிச் சீருடை,நோட்டு, புத்தகமும் அவர்களிடம் தான் வாங்க வேண்டும். சீருடை நல்ல நிலையில் இருந்தாலும் இது கட்டாயம். பள்ளியில் நல்ல குடிநீர் கிடைத்தாலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருகிறோம் என்ற வகையில் அதற்குத் தனியாகப் பணம் வசூலிக்கின்றனர். இதனால் நடுத்தர மக்களும் அதற்குப் கீழ் வருமானம் உள்ளவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

முன்பு எல்லாம் பள்ளி ஆண்டு விழாவில் கண்டிப்பாகத் தேசத்தலைவர்கள்  வேடமிடுதல்,தேசபக்திப் பாடல்கள் பாடுவது என்று இடம் பெறும். ஆனால் தற்போது  ஆண்டு விழா என்றாலே சினிமா பாடல்கள் மட்டுமே என்று ஆகி விட்டது.இந்த நிலையில் பிள்ளைகளின் மனத்தில் தேசிய உணர்வோதேசத்தலைவர்களைப் பற்றிய செய்திகளோ எப்படிப் பதியும்?போகிற போக்கில் படிப்பதோடு சரி.சில பொறியியல் கல்லூரிகளிலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களை தலைமை தாங்க அழைப்பதால்  இளைய தலைமுறையினரிடம் சினிமா பற்றிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது. இப்படிக் கொட்டமடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒடுக்கத்தான் சமச்சீர்க் கல்வி முறையும் வரையறுக்கப்பட்ட கல்விக் கட்டணமும் கொண்டு வரப்பட்டன.ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.ஏன் என்றால் அரசாங்கப் பள்ளியை விடத் தங்கள் கல்வித் தரம் உயர்ந்தது என்கிற மாயையை மக்கள் மனத்தில் பதித்து இருந்தனர்.அது இனி இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை வந்து விட்டால் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்றே பயந்து இந்தத் திட்டங்களை ஏற்க மறுத்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தே காலம் கடத்துகிறார்கள்

கண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக  நடத்தப்படும் கல்வி முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும்,அதாவது அவர்களின் பாடங்கள் Braille முறையிலும்,சாதாரண முறையிலும் இருந்தால்  பாடங்களைக் கற்றுத் தருவதில் அவர்களின் தாயாலும் உதவமுடியும்.கொரியா நாட்டில் இந்த முறை உள்ளது.

அரசும் இன்னும் தன் பள்ளி நிர்வாகத்தையும் பள்ளிப் பாது காப்பையும்  மேம்படுத்த வேண்டும்.இனி ஒரு கும்பகோணக் கோர விபத்தோ,பள்ளி வாகன விபத்தோ ஏற்படாமல் காக்க வேண்டும். எந்த நிலையிலும் தனியார் பள்ளிகளுக்குக் குறைந்தது இல்லை அரசு பள்ளிகள் என்ற நிலை கொண்டு வர வேண்டும். முறைகேடான ஆசிரியர்களைக்  கண்டறிந்து அவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வோர் அரசாங்க ஊழியரும்,அரசியல் வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிறந்த திறமையும்அறிவும் நிறைந்தவர்கள் நம் நாட்டு மாணவர்கள்.நம் வருங்காலச் சமுதாயத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள்.   அதிகபடியான கட்டணங்களை அவர்கள் மீது சுமத்தி அவர்களை நசுக்கி விடாதீர்கள். 

திருமதி  அப்துல் தயுப்.