பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 27 février 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,
 வணக்கம். வளர்ச்சியும்  கால மாற்றமும் மனித வாழ்வில் இன்றியமையாதன. மிருகங்களுக்கொப்ப வாழ்ந்தவன் தன் அறிவால் இன்றைய நிலையை அடைந்திருக்கிறான். தன் உணவுக்காகவும், உடை-இருப்பிடத்திற்காகவும் அவன் கண்ட பரிணாமம் அளவிடற்பாலது.

அன்று அவன் நெருப்பைத் தன் வசமாக்கி உணவை வேக வைத்தது இன்றுள்ள எந்தச் சாதனைக்கும் இளைத்ததல்ல. சக்கரத்தை உருவாக்கி இடம் விட்டு இடம் செல்லப் பயணித்ததே இன்று நாம் விண்வெளியில் பயணிப்பதன் மூலம். எழுத்து, நூல்  என விரிந்த அவனது அறிவே இன்றைய கணினி.

பல தொழில்களின் ஆதாரமாக, கருவிகள் அதன் நுட்பம் எனப் பெருகியக் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் அவையன்றி வாழ்வில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டன. உலகம் சுருங்கி விட்டது. கடிதமெழுதிவிட்டு வாரக்கணக்கில் பதிலுக்காக ஏங்கும் காத்திருப்பில்லை. ஐயம் தீர்க்க , அலைந்து திரிந்து விளக்கம் தேடும் தொல்லையில்லை. பொழுதைப் போக்க வெளியே சென்று பணத்தை விரயமாக்கும் வேலையில்லை. ஒரே அறையில் இருந்து கொண்டு, இன்னும் சொல்லப் போனால் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு  தொலைபேசி வழியே மணிக்கணக்கில் அளவளாவலாம். தேவையான, வேண்டிய எல்லாச் செய்திகளையும் அறியலாம். நடனம், நாடகம் முதல் எல்லாவற்றையும் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

இந்த ஆக்கங்கள் மட்டுமே வளர்ந்திருந்தால்  மகிழ்வு கோலோச்சி இருக்கும். அமைதி நிலவி இருக்கும். ஆனால் ஆக்கலுக்கு பயன்படுத்திய தொழில் நுட்பத்தை அழிவுக்கும் பயனாக்கும் மனித இழி குணம் பொருளாதார வளர்ச்சியின்  பக்க விளைவாக இயற்கைச் சுரண்டலையும், மாசு நிலவும் சூழலையும், வறண்ட மனதையும், வன்முறை கலாச்சாரத்தையும் கூடவே உருவாக்கி விட்டது. எந்த வசதியும் இல்லாதக் காலத்தில் கொண்ட நிம்மதி இன்று பறி போய் விட்டது.

வளரும் விஞ்ஞானம் கத்தி போன்று கூர்மை  படைத்தது. அது அழுகிய ஒன்றை வெட்டி எறிந்து சமுதாயத்தைத் தூ ய்மையாக்கலாம். விரும்பும் வகையில் ஒன்றை உருவாக்க உதவலாம். ஆனால் அதே வேளையில் ஆளைக் கொல்லவும் செய்யலாம். அதை உபயோகிக்கும் விதத்தில் தான் உண்மையான வளர்ச்சி  அடங்கியுள்ளது. அந்த உண்மை வளர்ச்சியை அடைய மனம் உயர வேண்டும். மனிதாபிமானம் வளர வேண்டும். பகைமை மறைய வேண்டும். பண்பு செழிக்க வேண்டும்.

திருமதி சிமோன்

இந்திய தொழில் நுட்ப சிகரங்கள்



அறிவைப் பயன்படுத்துவோரும்,  ஆக்க முறையில் அதை வெளிப்படுத்துவோரும், சமூக நலனுக்காக அதை உபயோகிப்போரும் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். அதில் அவர்களுடைய சுய நிறைவும் இருக்கலாம்.பணமும், பதவியும் அவர்களை நாடி வரலாம். அதற்காக காய்ப்பு அடைவதில் அர்த்தமில்லை. அவர்களால் மக்கள் அடைந்த நன்மை என்ன, உலகம் பெற்ற பலன் என்ன எனக் காண்பதே நல்லது. இந்தக் காலக் கட்டத்திலும், தாய் நாட்டில் இராமல் தங்கள் செயல் திறனை வெளிநாட்டுக்கு அளித்து விட்டார்கள் என்று புலம்புவதில் பயனில்லை. மனித குலம் அவர்களால் எவ்வாறு மேம்பாடடைகிறது என்றே பார்க்க வேண்டும். அவ்வகையில் இந்தியர் பெருமை கொள்ளத்தக்க முறையில் வெற்றி அடைந்தோர் பலர். அவர்களில் ஒரு சிலரது செயல்பாடுகள்:

1. எல்.என்.மிட்டலின் நிறுவனம் 1976இல் 65,000 டன்  எஃகு தயாரித்தது. 2003இல் ஒரு நாளைக்கு 95,980 டன். ஆண்டுக்கு 3 கோடி 50 லட்சம் டன். உலகின் 2வது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.

2. 1980களில் தொழில் நுட்பத் திறமை, வல்லமை காரணமாக உயர்ந்த ஸ்வராஜ் பால் லண்டன் மிருகக் காட்சி சாலை நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலையில் இருந்தபோது 10 லட்சம் பவுண்ட் நன்கொடை அளித்து அதைக்  குழந்தைகளுக்கான  மிருகக்காட்சி சாலையாக மாற்றினார். 

3. விவியன் ரெட்டி: தென்னாப்பிரிக்காவில் எலெக்ட்ரிக்கல் தொழிலில் வெள்ளையர் கண்ட வெற்றியை முறியடித்தார்.

4. தேஷ் பாண்டே: சைக்காமோர் நெட்வொர்க்கின் சேர்மன், சக நிறுவனர். தன் கோரல் நெட்வொர்க்சை விற்றது 15 மில்லியன் டாலருக்கு!

5.சபீர் பாட்டியா: பில்கேட்சிடம் தன் ஹாட் மெய்லை 390 மில்லியன் டாலருக்கு விற்றார். 1999இல் இந்திய ஹாக்கி அணியிலிருந்து 6 வீரர்களை விலக்கிய நேரத்தில் 16 ஹாக்கி வீரர்களுக்கும், கோச் மேலாளருக்கும் தலா 1 லட்ச ரூபாய் அளித்தார்.

6. கன்வல் ரேக்கி: நிதி உதவியால் ஹொட்மெயில் எக்சோடஸ் கார்பொரேஷன், ஜாஸ்லீ தோன்றக் காரணமாய் இருந்தவர்களுள் ஒருவர்.

7. கிருஷ்ணா பரத்:  கூகுள் ந்யூஸ் இணைய தள எண்ணம் தோன்றியவர்.

8. அமர் போஸ்: ஸ்பீக்கர்கள் தயாரிப்பின் மன்னர்.

9.ராஜீவ் தேசாய்: நாசா நிர்ணயித்த 400 கோடி டாலர் 'பாத் பைண்டர்' விண்கலத்துக்குப் பதில், 40இல் ஒரு பங்கு செலவு செய்து தயாரித்து செவ்வாய் கிரகத்தில் இறக்கிக் காட்டினார்.

10. சுபாஷ் சந்திரா: ஸீ டிவி மூலம் மீடியா கிங் ஆனவர்.

11. குருராஜ் தேஷ் பாண்டே; இவரது தொடர்பு சாதன நிறுவனம் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ளது.

12.அருண் நெற்றாவாலி: பெல் லாப் என்ற ஆராய்ச்சி நிறுவனத் தலைவர். 30,000 கண்டு பிடிப்புகளும், பல நோபெல் பரிசுகளும் பெற்றது அது.

சிலிக்கன் வல்லே மட்டும் 100,000க்கும் மேற்பட்ட இந்திய மில்லியனர்களைக்  கொண்டுள்ளது.

வாஷிங்க்டனின் டிசி,  இந்திய  சியிவோ உயர் தொழில் நுட்ப கவுன்சில் 200 தலைமை பொறுப்பாளர்களைக் கொண்டுள்ளது.

இதல்லாது யுனைடெட் ஏர்லைன்ஸ், சிடி பாங்க், பிரிட்டன் ஸ்டான்டர்ட் சார்ட்டெட் பாங்க் இவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்தியர்களே!

வெற்றியின் முதற்படி


எந்த சாதனைக்கும் ஓர் ஆரம்பம், ஓர் முனைப்பு, ஓர்  இலட்சிய வேட்கை இருக்கும். அதில் ஏற்படும் சோதனைகளுக்கு அஞ்சாமல் வென்று வாகை சூடிய பின்னரே அது உலகை ஈர்க்கும். அதுவும் கால நேரம் கனிந்திருந்தால். எத்தனையோ கண்டுபிடிப்புகள் சற்றே முன்பாக வந்து மக்களால் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பிறகு அவையே போற்றப்பட்டு கொண்டாடப்பட்டன. ஆனால் உண்மையான தாகம் கொண்ட படைப்பாளி இந்த வரவேற்புக்கும், ஆரவாரத்துக்கும் எதிர்பார்த்து  உழைப்பதில்லை. அவன் ஈடுபாடு, அவனது கவனம் எல்லாம் தன் முயற்சியில் மட்டுமே! இதில் முழு வெற்றி கண்ட இருவரை, கிழக்கிலும், மேற்கிலும் தடம் பதித்த இருவரைக் காண்போம்:

ஆண்டோ பீட்டர் :

மென்பொருள் தமிழனின் கையில் தவழ, கணினியில் உபயோகிக்கின்ற தமிழ் எழுத்துருவை உருவாக்கிய அறிஞன். தூத்துக்குடி ஆறுமுகநேரியில், விவசாயக் குடும்பத்தில் வந்த முதல் தலைமுறைப் பட்டதாரி.
 
விலை அதிகமான, சிக்கலான, சொற்ப அளவில் கிடைத்த எழுத்துருக்கள் இணையத் தமிழ் பரவ விடாமல் தடுத்த நிலையில், ‘அமுதம்’ எழுத்துருவை இவர்  தலைமை ஏற்றக் குழு வடிவமைத்தது. ‘பொனடிக்’, ‘டிரான்ஸ்லிட்ரேசன்’, ‘தமிழ் 99’ எனப் பலவற்றுக்குப் பின் ஆங்கிலத்தில் ‘அம்மா’ எனத் தட்டினால், தமிழ் எழுத்துரு காண்பதில் இவர்  பங்கு கணிசமானது. தமிழ்த் தட்டச்சு முறை தெரியாதவர் கூட கணினி உபயோகிக்கும் வசதி கிடைத்தது. 20 ஆண்டுகளாகத் தொடரும் ‘தமிழ் சினிமா.காம்’ வலைதளம் இவர்  உருவாக்கியதே! இவருடைய ‘சாப்ட்வியூ’ நிறுவன அடிப்படை இலட்சியம், கிராமத்து மாணவர்களுக்கு  கணினி அறிவைப் புகட்ட வேண்டும் என்பது. ஆனால் தன் 40ஆவது வயதில் மாரடைப்பால் (2012) காலன் அவரது சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்! 

 வெர்னர் வான் பிரவுன் :

ஹிட்லர்  சீன ஏவுகணைகளைக் கண்டு, தன் உலகாளும் ஆசையை நிறைவேற்ற ‘ஜேர்மன் ஆர்மி ராக்கெட் சென்டர் ’ என்ற அமைப்பை உண்டாக்கினார் . அதன் தலைவரே வெர்னர் . ராக்கெட்டுகளின் திட எரிபொருளுக்குப் பதில் திரவ எரிபொருளை நிரப்பி இலகுவாக்கி வெர்னர் அவற்றை 300 கிலோ மீட்டருக்கும் அப்பால் செல்ல வைத்தார் . இந்திய அக்னி-5 போன்ற பாலஸ்டிக் வடிவமும் அவர்  அமைத்ததே. முதலில் 12,000 பேரை பலிவாங்கி, 10 ஆண்டுகள் ஆராய்ந்து 1,000 கிலோ வெடிபொருளை சுமந்து 3,000 கிலோமீட்டர்  வேகத்தில் 300 கி.மீ. சென்று தாக்கியது வி-2.

 இரண்டாம் உலகப் போரில் இதனால் ஏழாயிரத்து சொச்ச வீரர்கள் பலியானர். ஹிட்லரின் மரணத்துக்குப் பிறகு வெர்னர்  அமெரிக்காவிடம் சரணடைந்தார். நாசாவிற்காக செயற்கைக் கோள் தயாரிப்பில் இறங்கினார் . நிலவுக்கு மனிதனை இறக்கியதில் அவர்  பங்கு கணிசமானது. செல்போன், சாட்டிலைட் டிவி, தொலை தொடர்பு அத்தனையிலும் அவர்  பணி அடங்கியுள்ளது. 1977இல் அவர்  மறைந்தார்.

  

புதிய கண்டுபிடிப்புகள்


Tobii REX:
வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Tobii REX எனப்படும் புதிய எலக்ட்ரானிக் சாதனம் USB இணைப்பு மூலம் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக அண்மையில் வெளியிட்ட விண்டோஸ் 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன் ஸ்கேனர் கண்ணின் கருவிழியின் அசைவுகளை வைத்து கட்டளைகளை கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது.இது 2013ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமானது . இதன் விலை சுமார் 995 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
 இதன் வரவால் மவுசின்(mousse) மவுசு குறைந்துவிடுமாம்.மறைந்துவிடுமாம்

வாட்ஸ்ஆப்:

 வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இதன் மூலம்  மாநிலம் விட்டு மாநிலம்,  நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலைமுறையினரை
வெகுவாக கவர்ந்துள்ளது. ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக அதாவது  மாதத்திற்கு 450 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.
செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்.
 புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தரும் பேஸ்புக் அதனை வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான விலையாக 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம். இந்திய மதிப்பில் சுமார் 995,84 கோடி ரூபாய் ஆகும்.
450 மில்லியன் பேர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தினாலும் அதன் அலுவலக ஊழியர்களின் பலம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 55 பேர்தானாம்.

‘டிசைனர் பேபி’:

கருத்தரிப்பு என்பது இயற்கை வரம். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள இப்போது மருத்துவத்தில் வழிகள் உள்ளன.

செயற்கை கருவூட்டல் முறை, குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவத்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது வெளிநாடுகளில் செயற்கை கருவூட்டலில் ஏகப்பட்ட விரிவாக்கம் வந்துவிட்டது. அதன் லேட்டஸ்ட் தொழில் நுட்பம் தான் - ‘ப்ரி இம்ப்ளான் டேஷன் ஜெனடிக் டயாக்னோஸ்டிக்ஸ்’ (பி. ஜி. டி.) முறை. கருப்பையில் உருவாகி, முதிராத கருவாக உள்ள நிலையில் , முட்டைக்கருவுயிரில் சில மாற்றங்களை செய்ய இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.  நோயற்ற, எதிர்பார்த்த குணத்துடன் கூடிய கருவுயிராக மாற்றி அமைக்கலாம். இதுதான் ‘டிசைனர் பேபி’ என்று அழைக்கப்படுகிறது.

 பரம்பரையாக தொடரும் நோய்களை தடுக்க இந்த புதிய தொழில் நுட்பம் உதவும் என்பது நிபுணர்களின் வாதம். கருப்பையில் வளரும் போது, முதிராத கருவுயிரில் உள்ளசெல்லில் சில மாற்றங்கள் செய்தால் குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ‘டவுண் சிண்ட்ரோம்’ போன்றவை வராமல் தடுக்கப்படும். ஆணாக இருந்தால் பெண்ணாக மாற்ற முடியும். எந்த ஒரு மரபு நோயும் வராமல் தடுக்கப்படும். மேலும் வலுவான குறிப்பிட்ட நல்ல குணங்களுடன் கூடியதாகவும் அமைய வாய்ப்புண்டு உடற்கூறு ரீதியான எல்லா குறைபாடுகளும் நீக்கப்படும்.

 பிறக்கப்போகும் குழந்தை எப்படி அமைய வேண்டும் என்று விரும்பும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகின்றனர்.கருவை பாதுகாக்கும் வகையில் இப்போது செயல்பூர்வமான எந்த சட்டமும் நடைமுறையில் இல்லை என்பதால், இளைய தலைமுறையினரிடையே இந்த புது செயற்கை கருவூட்டல் பரவி விடும் ஆபத்து உண்டு.

மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்!

 மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் Garmin நிறுவனம் கைக்கடிகாரம் இரண்டை அறிமுகம் செய்துள்ளார். Forerunner 220 மற்றும் 620 என்ற அடையாளத்துடன் வெளியாகியுள்ள இவை இரண்டும், இதயத்துடிப்பு மற்றும் உடல் சூட்டை கருத்தில் கொண்டு, ஒருவர் பயணித்த தூரம், விரையமான கலோரி அளவு என்பவற்றை கணிப்பதுடன்; உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ளவேண்டிய பயிற்சி, சிகிச்சைகளையும் முன்மொழிகிறது.

புதிய தொழில் நுட்ப படிப்புகள்


ஏவியேஷன், ஸ்பேஸ், டெலிகம்யூனிகேஷன், ஜி.ஐ.எஸ் அன்ட் ரிமோட் சென்சிங் சட்டம் ஆகிய பிரிவுகளில் பல புத்தாக்க படிப்புகளை இந்த 2013ம் ஆண்டில், ஐதராபாத்தின் நல்சார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
இப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், சர்வதேச அளவில் டெலிகாம் மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக, நல்சார் பல்கலையின் பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, ஏவியேஷன், ஸ்பேஸ் மற்றும் டெலிகாம் சட்டங்கள் ஆகிய துறைகளில் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், ஏர்லைன் துறையில், ஏர்லைன் மேலாளர்கள், வணிக மேம்பாட்டு மேலாளர்கள், மார்க்கெடிங் மேலாளர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், ஆபரேஷன் மேலாளர்கள், இன்டர்நேஷனல் ரிலேஷன் மேலாளர்கள், ஏவியேஷன் சட்ட நிபுணர்கள், விமானப் போக்குவரத்து மேலாளர்கள், மனிதவளத் துறை மேலாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகிய பணி நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க முடியும்.

ஃபேஷன் டெக்னாலஜி:
இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக் கல்வி முறையில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை நடத்தி வருகிறது. டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் மெர்ச்சண்டைசிங் அண்ட் ப்ரோடக்க்ஷன் பிரிவுகளில் ஓராண்டு, 2 ஆண்டு பட்டப் படிப்பு, 4 ஆண்டு பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது.

தொடர்புடைய படிப்புகள்
ஃபேஷன் டிசைனிங் படிப்புடன் கடந்த சிலஆண்டுகளாக ஃபேஷன் ஸ்டைலிங், ஃபேஷன் மீடியா கம்யூனிகேஷன், ஃபேஷன் பிசினஸ் மேனேஜ்மெண்ட், ஃபேஷன் ரீடெய்ல் மேனேஜ் மெண்ட், ஃபேஷன் மார்க்கெட்டிங் போன்ற படிப்புகள் நிஃப்ட், பேர்ல் அகாதெமி, டபிள்யூ.எல்.சி. கல்லூரி போன்ற நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வித்தியாசமான சிந்தனையும், நுணுக்கமான விஷயங்களை கவனிக்கும் திறமையும் கொண்டவர்களுக்கு இந்தத் துறைகள்  பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்கள் பலவும் இந்திய சந்தையில் நுழைய ஆர்வம் காட்டி வருகின்றன. சிறந்த கற்பனை வளம், மார்கெட்டிங் யுக்தி போன்ற திறன்களை பெற்றிருந்தால் மேலும் சாதிக்கலாம்.வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு நிச்சயம்.

பயோ டெக்னாலஜி:

20-ம் நூற்றாண்டை ஆட்டிப்படைத்தவை மூலக்கூறு அறிவியலும், கணினி அறிவியலும் என்றால் 21-ம் நூற்றாண்டை ஆட்டிப் படைக்க இருப்பது உயிரி தொழில்நுட்பமும், நானோ தொழில் நுட்பமும்.

உயிரி தொழில் நுட்பம் மூலம் அறுவைச் சிகிச்சை இல்லாமல் பிளாஸ் டிக் சர்ஜரி, மூட்டுவலி, புற்றுநோய், பாரம்பரிய நோய்கள், மரபணு நோய்கள் என மருத்துவத்துறையில் பயன்படுத்தி தீராத நோய்களைத் தீர்க்கலாம்.
ஜெனிட்டிக்கல் முறையிலான புதிய வகை தாவரங்கள் கண்டுபிடிப்பதிலும், இருதய நோய்களை குணமாக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தயாரிப்பதிலும் உயிரி தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.
வருங்காலத்தில் உணவு பதப்படுத்துதல் துறைக்கு, உயிரி தொழில் நுட்பத் துறை பயனுள்ளதாக விளங்கும். இத்துறை வல்லுநர்களின் தேவை அதிகரிக்கும் என்பதால் இப்படிப்பை பலர் மேற்கொள்கின்றனர்.

பயோஇன்ஃபர்மேடிக்ஸ்:
  எனப்படும் உயிரியல் தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு அதிகவேகமாக உலகில் வளர்ந்துவரும் துறைகளில்ஒன்றாகும். உயிரியல் துறையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை புகுத்துவதுதான் பயோஇன்ஃபர்மேடிக்ஸ். 
நோய்களுக்கான புதியபுதியமருந்துகள், சிகிச்சைமுறைகள் முன்னேறிவரும் இந்த காலகட்டத்தில் உயிரியல் தொடர்பான பலஆராய்ச்சிகளை செய்ய இந்த பயோஇன்ஃபர்மடிக்ஸ் துறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.