பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 janvier 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். மனிதனுக்குத் தனிமையும், தன் குடும்பம், தன் சுற்றம் என்ற உணர்வும், அதன்பாற்பட்ட சுயநலமும் எந்த அளவு உண்டோ அந்த அளவு அவனுக்கு கூட்டமும், ஆரவாரமும், அதில் கலந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. முகமறியா மனிதரானாலும், மணிக்கணக்கில் அளவளாவி பகிர்ந்து, செய்திகளைக் கொடுத்தும்  வாங்கியும் இணைந்து விடும் இயல்பு உண்டு. தன் எல்லை இழக்காமல்,இனிமை பெறும் நேரமது. அவன் அழுத்தத்திற்கு ஓர் வடிகாலாய், மனதை இலேசாக்கும் சூழல் அது.

இதன் பொருட்டே பண்டிகைகளும், திருவிழாக்களும் தோன்றியிருக்க வேண்டும். குடும்ப விழாக்கள் என்றால் கையைக் கடிக்கும் சமாச்சாரம் அது.  வரும் கூட்டத்தினரிடையே பேசத் தெரியாத ஒருவர் இருந்தால் போதும். அவ்விழா நினைக்கவே அமைதி இழக்கச் செய்யும் ஓர் நிகழ்வாகப் பதிந்து விடும். இந்த அபாயம் ஏதுமின்றி உரையாடி மகிழ திருவிழாக்கள் உதவுகின்றன.

மேலை நாடுகளில் 'பால்' என்ற பாடலுக்கு ஆடுவதும், உண்பதும் அருந்துவதுமாக  உள்ள ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் நம்மவர்கள் புத்திசாலிகள். அரிசி விளைந்தால் ஒரு விழா. மாதம் பிறந்தால் ஒரு கொண்டாட்டம். மாட்டைப் பிடிப்பதற்கு ஒரு திருவிழா. கோலத் திறமையைக் காட்ட ஒரு மாதம், அசுரன் ஒழிந்தால் அதற்கோர் பண்டிகை என்று  வாழ்வின் போக்கோடுப் பிணைத்து அவற்றை சுவைக்கச் செய்திருக்கிறார்கள்.

பக்தி மனித மனங்களில் தானே படிந்துள்ள ஒன்று. ஆனால் நம் விழாக்கள் அதைத் தூண்டும் விதமாக எப்படி எப்படியெல்லாம் மலர்ந்திருக்கின்றன! தெய்வத்தையே தேரில் அமர வைத்து, நம்மைப் போல் அதற்கொரு வாழ்க்கைக் கதையைப் புனைந்து,ஒவ்வொரு நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெய்வங்கள் செய்ததாக வர்ணித்து அதோடு ஒன்றிப் போகச்செய்து விடுகிறார்கள்!

உலகில் எத்தனையோ பேர் உண்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கும் போது விழாக்கள் தேவைதானா என்று கேட்போர் உண்டு. எப்போதும், எதிலும் ஓர் காரணம் இருக்கும். ஆனால் நாளடைவில் காரணம் மறந்து அல்லது மறைந்து, காரியம் மட்டுமே சம்பிரதாயமாக நடந்து கொண்டிருக்கும். பணத்தை வெளிக்காட்டும் அம்சமாக இதைக் கொள்ளாமல் விசாலமான மனதோடு அனைவரும் இணைந்து மகிழ வேண்டும் என்ற ஒரே நோக்கோடு பார்த்தால் பண்டிகைகளும் திருவிழாக்களும் மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சுமையிலிருந்து மூச்சு விடவைக்க உதவும் நிவாரணியே அன்றி வேறல்ல!

திருமதி சிமோன்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்



பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும்  பொதுமை இசைத்து!
பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து! 
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் வாய்மறையை!
தங்கும் அறங்கள் தழைத்து
பொங்கல் திருநாள் புசிக்கட்டும் சீா்கம்பன்
செங்கனித் தோப்பில் திரிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்

தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

தமிழர் புத்தாண்டு

 புத்தாண்டில் புத்துலகைப் படைக்கப் புறப்படும் தமிழினமே,  நில்! உன் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு எங்கே தொடங்குகிறது என அறிவாயா நீ, சொல்! சித்திரை மாதத்தில் புத்தாண்டு என்றிருந்த நிலை மாற்றிய தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராவது தெரியுமா உனக்கு? அறியாமை தவறில்லை, அறிந்துகொள்ள விரும்பாமையே பெருந்தவறு! உண்ணல் உறங்கல் பெண்டிரை நண்ணல் என்ற உருப்படா வட்டத்துள் உலா வரும் தமிழினமே, கன்னல் மொழி தமிழுக்கெனத் தனிப் புத்தாண்டைத்  தம் ஆராய்ச்சித் திறத்தாலே உருவாக்கித் தந்தவர் மறைமலை அடிகளார்! தனித் தமிழின் தந்தை இவர்! அன்றிருந்த தமிழகத்தில், வடமொழி கலவாமல் நடை போட முடியாது தமிழ் என்று தவறாகக் கருதி இருந்த நிலையை உறுதியாக நின்று மாற்றியவர். தனித்தமிழ்க் கொடியை ஏற்றியவர். வட மொழியோ பிற மொழியோ ஏதும் கலவாமலேயே வடிவாகத் தனித்தமிழ் எழுதிட முடியும் என எண்பித்தவர். 'வேதாச்சலம்' என்ற தன் வடமொழிப் பெயரை, 'மறைமலை' என மாற்றிக்கொண்டவர். இல்லறத்திலிருந்து ஒதுங்கித் துறவறம் பூண்டதால் 'அடிகள்' என்ற பின்னடை சேர 'மறைமலை அடிகள்' ஆனவர். வடமொழி படித்தவர், ஆங்கிலப் புலமை மிக்கவர், தமிழ் அறிஞர்! 'மணிவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்', 'முல்லைப் பாட்டு - மூலம், ஆராய்ச்சி உரை' போன்ற ஆய்வு நூல்களின் ஆசிரியர். ஆராய்ச்சிப் பேரறிஞர். திருவள்ளுவர் காலம் பற்றிப் பெருமளவு ஆராய்ச்சி மேற்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வு செய்த பின், கிறித்துவுக்கு 30 ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவர் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இவர் வந்தார்.

சென்னையில் திருவள்ளுவர் கழகம் 18 01 1935 -இல் வள்ளுவருக்கு விழா எடுத்தது. இவ்விழாவில் தமிழ்த் தென்றல் திருவாரூர் வி; கலியாண சுந்தரனார் (திரு. திரு வி; ), முத்தமிழ்க் காவலர் திரு கி..பெ. விசுவநாதன் (திரு கி..பெ)... போன்ற தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய மறைமலை அடிகளார், ”கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்ப திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்என அறிவித்துத் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். கிறித்து     ஆண்டுடன் 31 அண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட வேண்டும் என்பது அடிகள் குறிப்பு. இதனை அறிஞர்கள் அவை ஏற்றக்கொண்டது. அன்று தொட்டு அவ்வாண்டு நடைமுறைப் படலாயிற்று. (காண்க : 'திருக்குறள் வாழ்வியல் உரை' - மதுரை இளங்குமரனார். வர்த்தமானன் பதிப்பகம்.)

 '1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின், பொங்கலுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் 01 01 1970 முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் ஆணை  இட்டார். திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ் நாடு அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட் குறிப்பிலும், 1972 முதல்  குறிப்பாக அரசிதழிலும், 1981 முதல் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைத் திங்கள்  2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாள் என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகிறது.' (காண்க : திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் 117). இதுதான் திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பு, வளர்ப்பு, வரலாறு.
திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை அறிந்துகொண்டதோடு நிற்காமல் தமிழர்களாகிய நாம், தமிழ் உணர்வோடு; அந்த ஆண்டு முறையைப் பின்பற்ற வேண்டாவா? கிறித்து ஆண்டோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக்கொள்ளுங்கள் - திருவள்ளுவர்  ஆண்டு கிடைத்துவிடும். எடுத்துக் காட்டாக, இந்த ஆண்டைக் கிறித்து ஆண்டு முறைப்படி 2005 என எழுதுகிறோம். இத்தோடு   31 -ஐக் கூடடினால் 2036 வருகிறது அல்லவா! அவ்வளவுதான். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு.

 மறைமலை அடிகள் காட்டிய தனித்தமிழ் உணர்வு நம்மிடையே மலர வேண்டும், அடிகளார் ஊட்டிய  அந்த உணர்வு இன்னும் வளரவேண்டும். ”தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப் பயில வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமை. தமிழர், தம் தாய் மொழியை ஆங்கிலம்  முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருத வேண்டும்!”  சொல்பவர் யார் தெரியுமா? காந்தி அடிகளேதான்! (காண்க : 'காந்தி அடிகள் வலியுறுத்திய தமிழ் உணர்வு' லேனா தமிழ்வாணன், குமுதம் 24.05.2004). அன்று அண்ணல் காந்தி சொன்ன அறிவுரை இன்றும் நமக்குப் பொருந்துகிறதே! பல நிலைகளில் தமிழைக் கோட்டை விட்டிருக்கிறோம். பாருங்களேன், 60 ஆண்டுச் சுழற்சியில் நாம் புழங்கி வந்த, பிரபவ என்று தொடங்கி அட்சய என நிறைவு பெறும்  ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள். ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லையே! அத்தனையும் வடமொழிப் பெயர்களின் தமிழ் வடிவங்கள். ஆங்கிலேயனை விரட்டிய பிறகும் ஆங்கிலத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். வடமொழிக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகும்  புரியாத  இந்த வடமொழிப் பெயர்கள் நமக்கு எதற்கு? இனிய தமிழ்க் கனிகள் இருக்க கனியாத காய்கள் மேல் இன்னும் ஏன் உவப்பு? திருவள்ளுவர்  ஆண்டைப் பயன் படுத்தினால் இந்த வடமொழிச் சிக்கல் எழாது, தமிழனின் தனிப் பெரும் தன்மானமும் விழாது! ஆகவே, திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பயன்படுத்துவோம், எங்கும் எதிலும் எப்போதும்!

 சரி சரி, வடமொழிப் பெயர்களைத் தாங்கிய 60 ஆண்டுச் சுழற்சியை ஓரங்கட்டி விட்டோம். இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா? தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (உயடநனெசநைச உயடநனெயச) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன. இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope,  horodateur, hour, here, year .' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த horosஎன்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border  ' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை) இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'hழசழள'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி ' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம் நெடுக வழங்கும்) குறியீடுகளையும்  எதிர் வரும் பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.
வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர். கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று.

ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.
எனவே, இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் :
திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு!
சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் நாள்.
சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்கள்களின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாமினி பயன்படுத்துவோம்.
கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே எழுதுவோம் ...”
என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்!
வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்!
நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்!
வாழ்க திருவள்ளுவர் ஆண்டு, வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று!
 
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரிசு


கோலம்

பண்டிகைகள்,  கோயில் திருவிழா, பண்பாட்டு நிகழ்வுகள், திருமணம் போன்ற எந்த நல்ல காரியமானாலும் அவற்றில் வாழை மரம், மாவிலை, கோலம் ஆகிய மூன்றும் நிச்சயம் இருக்கும்.
கோலம் என்றதும் என் இளமைக்கால  நினைவுகளை  மனம் அசை போடுகிறது  தாம்பரம்  ரயில்வே காலனியில்  .நான் குடியிருந்த காலம் அது.
காலனியில் வசித்தவர்கள்  பெரும்பாலும் இந்துக்கள்.அங்கொன்றும்  இங்கொன்றுமாகக்  கிறித்துவர்கள் குறிப்பாக ஆங்கிலோ இந்தியர்கள் வசித்து வந்தோம்.இரண்டு வீடுகளுக்கு இடையே  சந்து கொண்ட வரிசை எங்களது. காலையில் எல்லா வீடுகளிலும் வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக்  கோலமிட நானும் என்  தமக்கையும் அவற்றைப்  பார்த்தபடியே  பெற்றோருடன் காலை திருப்பலிக்குச்  செல்லுவோம். எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஆயாவோ   அம்மாவோ  சின்ன கோலம் எங்கள் வாசலில் போடுவார்கள்.மார்கழி மாதம் வந்துவிட்டால் எங்கள் பக்கத்து வீட்டார் (நாயுடு) எங்கள் வாசலையும் ஆக்கிரமித்துக்கொண்டு வீட்டில் இருக்கும் மகளிர் (அம்மா, இரண்டு மகள்கள்) பெரிய பெரிய கோலம் போட்டு அசத்தி விடுவார்கள்.அவர்கள்  வீட்டுக் கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்திருப்பார்கள்.எதிர் வீட்டில் உள்ள நண்பர் (அவரும் நாயுடுதான்) கிண்டலாகச்  சொல்வார். 'ஆண்டி உங்கள் வீட்டுக்  கோலத்தில் கேக் வைத்து ரோஜா பூ வைக்கலாமே" என்று.
நானறிந்த சின்ன  சின்ன புள்ளிக் கோலங்கள்  விரல் விட்டு எண்ணக்கூடியவை. அதனால்அழகாகக்  கோலம் போடுபவர்களைப்  பாராட்ட நான் தவறியதே இல்லை. இந்த இலட்சணத்தில் கோலப்  போட்டி ஒன்றுக்கு என்னை நடுவராகப்  போட்டார்கள். எப்படிச்  சமாளித்தேன் என்று அறிய ஆவலா? கண்ணைப்  பறிக்கும் வகையில் பல கோலங்கள் இருந்தாலும் முதல் பரிசுக்கான என்  தேர்வு சிக்கலான புள்ளிக் கோலம்தான். அடுத்து புள்ளிக் கோலத்தை அடிப்படையாகக் கொண்ட கம்பிக்  கோலம். மூன்றாவது இடத்தைப்  பெற்றது பல வண்ணங்களில் வரையப்பட்ட ரங்கோலி. என்ன உங்களுக்கும் உடன்பாடுதானே? கோலம் போடுவதை இரசிக்கவாவது தெரிந்ததே.என் முதுகில் நானே தட்டிக்கொண்டேன்.கோலம் பற்றி எனக்குத்  தெரிந்த செய்திகளைப்  பகிர்ந்து    கொள்கிறேன்.
காலையில், வாசலில் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் போடுவது தமிழர் மரபு.கோலமிடுவது வாசலுக்கு அழகு செய்வது மட்டுமல்ல, மங்கலகரமானதும் கூட. வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக்   கொண்டுவரும் அதாவது   மகாலட்சுமி வந்து தங்குவாள் என்பது ஐதீகம்.பனி பெய்யும் மார்கழி  மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

மார்கழியில் என்ன விசேஷம்?

இந்த  மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கு நகர்கிறான். சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும் சக்தி சூழ்நிலை உருவாகிறது.அந்த சக்தியை நமக்கு சாதகமாகப்  பயன்படுத்திக் கொள்ளவும் நம் இல்லத்தில் அந்த சக்த்தியைத்  தங்கவைத்துக் கொள்ளவும் பயன்படும் ஒரு யுக்திதான் கோலம் போடுதல்.மார்கழி மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளதாம்.
அரிசி மாவில் கோலம் போடுவது சம்பிராதயம்.சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவற்றுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் இதில் மறைந்து  இருக்கிறது.பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அந்த மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும்.ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு  இல்லையெனக் கூறலாம்.மாக்கரைசலினால் போடப்படும் கோலங்கள் காய்ந்த பின்னர் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட  அரிசிக்கு எங்கே போவான் . அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம் மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது.தற்பொழுது வெள்ளைக் கல்பொடியைப் பயன்படுத்துகின்றனர்.பொதுவாக தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. ஆனால் செம்மண் பூசும் வழக்கம் உண்டு. அதாவது போட்ட கோலத்தை சுற்றி செம்மண் கரைசலால் எல்லைகோடு இடுவர்.
கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டிப்  புள்ளிக் கோலம், கம்பிக் கோலம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
புள்ளிக் கோலம்:
புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன்,  புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். இது மிகவும் சிக்கலான ஒன்று. இதைப் போடுவதற்கு நுட்பமான அறிவு தேவை. புள்ளிகளிடுவதிலும்  இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலைகுத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:நேர்ப் புள்ளிகள், ஊடு புள்ளிகள் என்பர்.
Pulli sq.jpg
Pulli dia.jpg
Pulli oodu.jpg
சதுர வலைப்பின்னல்
வடிவில் புள்ளிகள்

நேர்ப் புள்ளிகள்
ஊடுபுள்ளிகள்
இப் புள்ளிக் கோலங்களும்,  கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம்.
  • புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
Nerkodui-1.jpg
Joint valaikoodu.jpg
நேர்க் கோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

வளைகோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்
  • புள்ளிகளில் தொடாது, அவற்றுக்கு இடையில் வரையப்படும்  வளை கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
Valikodui-3.jpg
Valikodu-2.jpg
புள்ளிகளூடு
வளைகோடுகள்-1

புள்ளிகளூடு
வளைகோடுகள்-2







எல்லைக் கோடுகள், படிக்கட்டுகளில்   போடவும் தொடர் கோலங்கள் உண்டு. பல டிசைன்களில் ஓட்டை இடப்பட்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட  தகர டப்பாக்களில் கோலப் பொடியை நிரப்பியும் இந்த கோலங்களைப்  போடலாம்.

கம்பிக் கோலம்
 கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.
நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம்:
இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பர். இது ரங், ஆவலி என்னும் இரு சமசுக்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது.  ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருவன. இந்த நிறக்கோலத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். இராஜஸ்தானில்          இதை மதானே என்பர். வட இந்தியாவின் சில பகுதிகளில் சவுக்பூர்ணா என்றும்,வங்காளத்தில் அல்பனா என்றும்,பீகாரில்     அரிப்பனா என்றும், உத்தரப் பிரதேசத்தில் சவுக் பூஜன் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

புள்ளிகள் இல்லாது கோலம் போட்டால் கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக வடிவங்களை உருவாக்கலாம் என்பதால் பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அளவும் வசதிக்கு ஏற்ப மாறுபடும். நிறக்கோலங்களுக்கான வடிவங்களின் எண்ணிக்கைக்கு எல்லை கிடையாது. திறமை உள்ளவர்கள் சில அடிப்படைகளை முன்வைத்துப் புதிது புதிதாக வடிவங்களை உருவாக்கிக் கொள்வர்.ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம்.முற்காலத்தில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து பெறப்படும் நிறப்பொடிகள் நிறக்கோலம் இடுவதற்குப் பயன்பட்டன.எடுத்துக் காட்டாக மஞ்சள் தூள், பல நிறங்களிலான மண், செங்கல் பொடி.பல்வேறு நிறங்களில் உள்ள பயறு,மைசூர்ப் பருப்பு, உளுந்து, அரிசி போன்றவையும் பயன்படுகின்றன.ரவை, மரத்தூள்,  பயன்படுத்திய  தேங்காய்த் துருவல் போன்றவற்றுக்கு விரும்பிய நிறம் ஏற்றியும் பயன்படுத்துவர். தற்காலத்தில் செயற்கைச் சாயங்களைக்கொண்டு நிறமூட்டிய பொடிகள் பயன்படுகின்றன. சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம்.கலர் பொடியை கல் உப்பில் கலந்து, கலர் கொடுத்தால் அவை லேசாக மின்னும். கோலத்திற்கு அழகை அதிகரிக்கும்.மேலும் சிலர் கோலத்துக்கு அழகூட்ட சிறு விளக்குகளை வைக்கின்றனர். பல்வேறு நிறங்களிலான பூக்களின் இதழ்களையும், இலைகளையும் பயன்படுத்தியும் அழகிய நிறக்கோலங்களை இடுவதுண்டு.  கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது.  பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து கோலங்கள் இட்டுத்  தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய  பூக்களினால் கோலத்தை அலங்கரித்து.ஆடிப்பாடி மகிழ்வர்.

கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது  அழகியல் சார்ந்த கலை. அந்தக்  கலை உணர்வு இருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும்.
மனத்தை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாக முன்னோர்கள் உருவாக்கிய இந்த  கோலக் கலையை மறந்துவிடாமல் நம் இளைய தலைமுறைக்கு  கொண்டு செல்ல வேண்டும் ஏன் தெரியுமா?
  • கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான்.
  • .கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனத்தை ஒருமைப்படுத்துவது.
  • அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி,  ஊக்கமுடைமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன.
  • கற்பனைத்  திறனும், படைப்புத்  திறனும் (creativity)  கைவந்த கலையாகிவிடுகின்றன, கோலம் இடும் பெண்ணுக்கு.
  • குனிந்து, நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆகிறது.இது மட்டுமா, கோலம் இடுவது சீரண  உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும்.மேலும்  தெய்வம், கலை, உடல்நலம், சுத்தம் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
சென்னை, பெங்களுரு  போன்ற பெருநகரங்களில் கோலம் போடுவது என்பதே அரிதாகிவிட்டது. கோலம் போடுவதற்கு என்று ஒரு ஆள்வைத்துக் கொள்கிறார்கள். அடுக்கு மாடிகளில் வசிப்பவர்கள் எந்த வாசலுக்கு யாரென்று கோலம் போடவா  முடியும்! இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தீர்வுதான் ஸ்டிக்கர் கோலங்கள்.லிப்ட் -ஐ அடுத்த சிறிய வாசல் உடைய அப்பார்ட்மெண்ட்டாக  இருந்தாலும் அங்கே இந்த ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி வைத்துத்  திருப்தி அடைகின்றனர்.
கோலப் புத்தகம்
கோலம் தொடர்பாக 1884 -ஆம் ஆண்டில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்டமங்கலத்துள் ஒன்றாகிய கோலப்புத்தகம், முதற்பாகம். இது நமது நாட்டு மாதர்களுக்கும் பாலிகா பாடசாலைகளுக்கும் உபயோகமாகும் பொருட்டு வேலூரில் இருக்கும் அமெரிக்கன் மிஷன் உயர்குலத்துப் பாலிகா பாடசாலையின் உபாத்தியாயர் திருவேங்கடம் பிள்ளையவர்களால் தமது தமக்கையார் சுப்பம்மாள் வேண்டுகோளின்படி இயற்றிச்  சென்னை கவர்ன்மென்ட் பிரஸிடென்சி காலேஜ்  ஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் பார்வையிடப்பட்டு இராயவேலூர் ஸ்காட்லாண்டு மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் வே. இரத்தினவேலு ஐயர் அவர்களால் சென்னை ஆதிகலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது
கோலம் போடக்கூடாத பொழுதுகள்?
மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்குத்  தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். இதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை.(தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதைத்  தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்).

இந்தப்  புள்ளிக் கோலங்கள், நவீன டிசைனர்களை விஞ்சுகின்றன. கோலங்களாக உள்ள இவற்றை வீட்டு அலங்காரத்தில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.
இதைபோல் வேறு கலாச்சாரத்தில் உண்டா ? விசாரித்து சொல்லுங்கள் தோழிகளே!

லூசியா லெபோ

விழாக்கள்

 தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள் திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன.  பண்டைக் காலத்திலிருந்தே விழாக்கள் நடை பெற்றதை 'மடியா விழாவின் யாணர் நன்னாடு'  என்று புறநானூறு கூறுகின்றது. மடியா என்பது ஆண்டுதோறும் என்று பொருள்படும்.மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும் புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே விழாக்களின் நோக்கமாகும்.

பண்டைய மக்களின் திருவிழாக்கள் மன்னனைச் சார்ந்து அமைவது வழக்கம்.  கிள்ளி வளவனின் பிறந்த விழாவாகிய இரேவதித் திருநாளில் எல்லாரும் பரிசில் பெற்ற நிலையை (முத்தொள்ளாயிரம் - 82) பாடலும்; தென்னன் பிறந்த திரு உத்திராடத் திருநாள்  திருவிழாக்களாகக் கொண்டாடப்பட்ட நிலையினை (முத்தொள்ளாயிரம் - 7) பாடலும் உணர்த்துகின்றன.
 இவை தவிரப்  போரில் மன்னரின்  வெற்றியும் விழாவாகக்  கொண்டாடப்பட்டதை
 ‘அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த ஒள் வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடும் பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடும் பக்கமும் உண்டு’.(முத்தொள்ளாயிரம் - 109) என்னும் பாடலால் அறியலாம்.
போரில் மாற்றாரை வேலால் வீசி அழித்த சேரன், பின்பு, அந்த வேலுக்குப் பாராட்டும் விழா நடத்துகின்ற நிலையையே இப்பாடல் விளக்குகிறது. சங்க காலத் தமிழர்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில,  சமயம் சார்ந்தவை வேறு சில சமூகம் தொடர்புடையவை.
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத் தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது.
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓண விழாவாகும் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.
இவ்வோணம் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவாக  இன்று மாறிவிட்டது
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது பற்றிய குறிப்புகள்  (கலித்தொகை, பா.எ., 13) (ஐங்குறுநூறு, பா.எ., 84.) நற்றிணை, பா.எ., 80)
காணப்படுகின்றதன . பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம்
இளவேனில் விழா:
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும்.காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவர்.சிலப்பதிகாரம் இதனை இந்திரா விழா எனக்  குறிப்பிடுகிறது.
திருப்பரங்குன்றத்து விழா:
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர். (பரி., 19-வது பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது எனக்  குறள் குறிப்பிடுகிறது. 

கடவுளருக்கு மற்றுமன்றிக்  காவல் தெய்வம் போன்ற சிறு  தெய்வங்களுக்கும்  விழாக்கள் எடுக்கப்பட்டன. அன்னக்கொடி விழா, பொங்கல் விழா, சித்திரைத் திருவிழா, அந்தந்த ஊர்களில் கொண்டாடப்படும் தேர்த் திருவிழா என்று கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை எனலாம்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் பெரும்பாலும்  விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.கோவில் திருவிழாக்களில் கண்டிப்பாகத்  தேரோட்டம் நடைபெறும்.கடவுள்களை வாகனங்களில் ஏற்றி வீதியுலா வருவர்.
வாண  வேடிக்கையும் உண்டு. தேர்த் திருவிழாவின்போது, பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றாகக் கூடித் தேரை இழுக்கிறார்கள். இறைவனின் திருவருளைப்  பெறவும் ஊர் மக்களின் ஒற்றுமைக்கும் இத்தகைய விழாக்கள் வழிகோலுகின்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் தூத்துக்குடி பனிமயமாதா கோவிலிலும் தேர்த் திருவிழா மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது  அனைவரும் அறிந்ததே.
முருகனின் வழிபாட்டு விழாக்களில் காவடி எடுத்தல், அலகு  குத்துதல் போன்ற சிறப்புகள் உண்டு.
சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,சல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இவ்விழாக்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.இன்றும் பொங்கல் விழாவில் இவை இடம் பெறுகின்றன.
 வளையல் கடை, ரிப்பன் கடை, பொரிகடலைக் கடை, நீர் மோர்க்கடை,  கரும்புச்சாறுக் கடை, மிட்டாய்க் கடை மற்றும்  இராட்டினம் போன்றவற்றைக் கிராம திருவிழாக்களில் காணலாம்.
ஏழைகளும் குடும்பமாக வந்து மகிழ்ந்து கொண்டாடும் விழாக்கள் தொடர்ந்து என்றென்றும் நடந்து கொண்டேதான் இருக்கும். விழாக்களுக்கு முடிவே இல்லை எனலாம்.