பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 10 février 2011

எண்ணப் பரிமாற்றம்

     வணக்கம்.  கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டிருந்த போதிலும், அவை பொதுவான, எல்லோரும் பகிர்ந்து கொள்ளக்கூடியனவாக இருந்தனவேயன்றி, தனிப்பட்ட உணர்வுகளைப் பற்றியதாய் இருந்ததில்லை!

     இன்று, என் மேல் விழுந்த பேரிடியின் தாக்கம் என்னையறிந்த எல்லோரையுமே அதிர்ச்சியுறச் செய்ததன் விளைவு, பொதுவாழ்வில் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்த போதிலும், தனித்து - கொண்டிருந்த வாழ்க்கை வட்டத்தை விட்டு வெளிவந்து “நான்”, “எனது” நிலை பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்திற்காளாக்கி விட்டது.

     சிந்தித்துப் பார்த்தால், இதுகூட என் தனிப்பட்ட நிலை மட்டுமேயல்ல! உலகின் கோடானுகோடி துணை இழந்து துயருக்காளானவர்களின் நிலை! இன்னும் சொல்லப்போனால், இருவர் இணையும் நாளன்றே காலத்தாலோ, இயற்கையாலோ அன்றி இறைவனாலோ நிர்ணயிக்கப்பட்ட, உறவை வெட்டுகின்ற கொடுமை படைத்த நிலை! -  “டைம் பாம்”. “கண்ணி வெடி”. - என்று, எப்போது வெடிக்கும் என்று அறியாமலே, உணராமலே, ஒரு நாள் நிச்சயம் வெடிக்கும் என்ற பொது விதியை மீறிய நம்பிக்கையில், வாழ்வின் சுவையை அனுபவிக்கும் மனித பலவீனமே வாழ்வாகக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு அற்பக் காரணத்தை அடிப்படையாகக்
 கொண்டு அது வெடித்த பிறகோ .....

     எஞ்சியுள்ளவரின் வாழ்க்கை, சாரமற்றதாகி விடுகிறது. நிவர்த்திக்க இயலாத வகையில் ஊனமாகி விடுகிறது. விடுதலை ஒன்றே பாலைவனச் சோலையாகத் தோன்றினாலும் அதுவும் கானல் நீராக அலைக்கழிக்கிறது.

     ஆனால் மனிதப் பண்பின் உயர்வை உணர இது போன்ற தருணம் வழிவகுக்கிறது. பழக்கத்தாலும், நட்பாலும், உறவாலும், பாசத்தாலும் சிதறிப் போன உள்ளத்தை ஒட்டவைக்க பிறர் மேற்கொள்ளும் முயற்சிகள் நெகிழ வைக்கின்றன! அந்த வகையில் நான் கம்பன் கழகத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

     “பொதுச் செயலர்” எனினும் என் கணவருக்காக “நினைவேந்தல்” நிகழ்த்தி, கவிதாஞ்சலி படைத்து, மலர்களால் நிறைத்து, இதழும், வலைப்பதிவும் வெளியிட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, நெஞ்சை விட்டு நீங்கா நினைவை நிழலுருவாய் எனக்களித்துத் துணையிருக்க வைத்த திரு பாரதிதாசன் அவர்கள் அன்புக்கு, என் கண்களில் ஊறும் நீரே நன்றி நவிலத்தக்கது. என்னை வென்ற அந்த “கண நேரப் பார்வையை”  நிரந்தரமாக்கித் தந்த திரு சிவக்குமார் அவர்களுக்கு என்றும் என் நன்றி உரித்தானது.

     இனி...? என்னவென்று, எதையென்று நான் சொல்வது!  பனி மூட்டம் கவிந்திருக்கையில் பாதை புரியாததில் வியப்பில்லை! எனவே “நாளை” என்பதை விடுத்து இன்றைய என் நடப்பை, நாளைய என் கணிப்பைப்
புரிய வைக்க முயல்கிறேன் -

வான்வெளியை வெறிக்கின்றேன்!
   வண்ணமிலா பாழ்வெளியாய்
       வனப்பு குன்றி,
தேன்நிலவாய் தினமிருந்தத்
     தெவிட்டாத வாழ்வதனைத்
        துடைத்து விட்டே,
ஊன்உருக்கும் உயிர்மூச்சை
     உள்வாங்கி நடைப்பிணமாய்
         உலவச் செய்து,
ஏன்என்ற கேள்விதனை
     எதிர்கொள்ள இயலாது
          இறுக்கம் கொள்ளும்!

மலர்ச்சோலை மணம்பரப்பும்!
     மனங்கண்ட உறவினிலே
          மகிழ்வு பொங்கும்;
இலதாகி, நகையதனை
      இழந்தேகி, இல்லமது
           இனிதே காணா
உலவாத உன்னினைவை
       உள்ளமதில் உருப்பதித்து
            உணர்த்தும் ஊனம்!
வலம்வருமோ வடிவேந்தி
        வற்றாத நதியெனவே
             வாட்டம் போக்க!

மனதினிலே மாற்றமதை
   மலரவைக்கும், அழுத்துகின்ற
      மாறாத் துன்பம்
கனவெனவே மறைந்துவிடும்
   கருத்திலென வலியநின்று
       காணும் காட்சி,
இனமறியாத் துயரமதை
    இதயமதில் நிரப்பிவிட்டு
        எனையே ஏய்க்கும்!
கணத்தினிலே ஒலிக்கின்ற
    கண்மயக்கும் இசையாவும்
        கான லாகும்!

சித்தமதில் இதமளித்து
   சித்திரமாய் வட்டமிட்ட
     சிறப்பு யாவும்
மொத்தமாகத் தானிழந்த
  மொழியதனை நுாலேந்தி
     வாழ்வில் என்றும்
சொத்தாக விளங்கிநின்ற
  செல்வத்தைப் பறிகொடுத்து,
     சொல்லும் அன்பு
இத்தரையில் பொதிந்தவரி
   இனித்தொடரா சோகமதை
      இன்றும் கூறும்!

பொழுதைக்கொன் றுவிடநானும்
  போராடி நாளெல்லாம்
      போதும் தோற்றும்,
எழுவதாய் நடத்துகின்ற
  ஏக்கமிகு நாடகத்தை
     இனியும் இங்கே
பழுதிலாது நடித்திடவே
  பாழுலகு துணைசெய்யும்
     பரிவு காட்டி !
முழுமையுறா வாழ்வதான
  முயற்சியொன்றே இனித்தொடர,
      மிஞ்சும் வாழ்வு!

திருமதி சிமோன்