பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 octobre 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆனால் நம் மனம் கூறுகிறபடி வாழ்வதை, பிறர் எப்படி நோக்குகிறார்கள் என்பதே நமது வாழ்க்கையாக நமக்குக் கூறப்படுகிறது. பொதுவாக ஒருவன் இறந்த பிறகு அவனைச் சுற்றியுள்ள கூட்டத்தையும், அவர்களது அவனைப் பற்றிய விமர்சனத்தையும் பொறுத்ததே அவன் புகழ் என்பார்கள். இது மிக மோசமான கணிப்பு என்று ஒவ்வொரு முறை இதைக் கேள்வியுறும்போதும் எனக்குத் தோன்றும். இல்லையேல் இன்று மகாகவியாகவும், சீர்திருத்த, முன்னேற்றக் கருத்துகள் கொண்டவராகவும் போற்றப்படுகிற பாரதியார் அன்று உயிரோடு இருந்தபோது ஏழ்மையிலும், இறந்தபிறகு எண்ணக்கூடிய அளவிலான மக்கள்தொகையையும் கொண்டிருப்பாரா?

சமூகம் என்கிற நாலு பேரில், ஒருவர் தன் கருத்துகளை நியாயமான நேர்மையான முறையில் வெளிப்படுத்தி, அது தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்புக் கோருபவராக இருப்பதே அரிது. பெரும்பாலோர் மௌனம் சாதிக்கவும், வலுவான பக்கத்தைச் சார்ந்து நிற்பதையுமே வழக்கமாகக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மை என்பதற்காக அது சரியானதாகவும் இருக்கும் என்று எப்படிக் கூறமுடியும்?

நுாற்றாண்டுகள் பல கழிந்தும், மனிதன் எத்தனையோ விதங்களில்
முன்னேறியும், “வாழும் வகை” என்ற ஒன்றை மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மனிதனுக்கு மனிதன் அது மாறுபடுகிறது. எந்த சீவராசிக்கும் இல்லாத சிக்கல். அறிவிருக்கும் ஒரு காரணத்தினாலேயே பலவிதமாக வாழ்வைப் பின்னிச் சிக்கலாக்கி விடுகிறான். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எண்ணுகையில் தோன்றியவற்றையே கீழே தந்திருக்கிறேன்.

இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் - வடலுார் அருட்பிரகாச வள்ளலார்

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணையான இவா், 1823 ஆம் ஆண்டு அக்டோபா்த் திங்கள் ஐந்தாம் நாள், தென்னார்க்காடு மாவட்டம், கடலுாருக்கு அருகே “மருதுார்” என்னும் சிற்றுாரில், திரு இராமையா-திருமதி சின்னம்மா இணையருக்கு ஐந்தாவது கடைசி மகவாகப் பிறந்து, இராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டார்.

பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. அண்ணன் சபாபதி, புராணச் சொற்பொழிவுகள் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். சிறுவயதில், இராமலிங்க அடிகளார் கல்வியில் நாட்டமின்றிக் கந்த கோட்ட முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு, பாடல்களும் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் சுற்றி வந்த தம்பிக்குச் சாப்பாடு போடக் கூடாதெனத் தன் மனைவிக்குச் சபாபதி உத்தரவிட்டார். இதன் பின்னர், வீட்டிலேயே தங்கிப் படிக்கச் சம்மதித்த அடிகளார், சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஒரு நாள், முகம் பார்க்கும் கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தததைக் கண்டு பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

ஒரு முறை அண்ணன் சபாபதிக்கு உடல்நலக்குறைவு காரணமாகச் சொற்பொழிவு ஆற்ற இயலாமையால், தம்பி இராமலிங்கரிடம் தனக்குப் பதிலாகச் சென்று, ஏதாவது பாடல்களைப் பாடிவிட்டுத் தன்னால் வர இயலாத நிலையையும் விளக்கிவிட்டு வருமாறு கூறினார். அதன்படியே இராமலிங்கர் சென்று மனமுருகச் சில பாடல்களைப் பாடினார். அங்கிருந்தோர் அவரிடம் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுமாறு வேண்ட, மிகுந்த தயக்கத்துடன் தனது பேச்சைத் தொடங்கினார். ஆனால், அது இரவு நெடுநேரம் வரை நீடித்து, மக்களின் மனத்தை ஆனந்தப் பரவசப்படுத்தியது. ஒன்பது வயது சிறுவனாக அவர் ஆற்றிய இந்த முதல் ஆன்மீகச் சொற்பொழிவே மிகவும் அற்புதமாக அமைந்தது.

பலரின் வற்புறுத்தலுக்காகத் தனது சகோதரியின் மகள் “தனக்கோட்டி”யை மணந்த அடிகளார், இல்லறத்தில் நாட்டமின்றி அமைதியையும், கடவுளையும் நாடி, உள்ளத்தில் தேடலோடு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே “கருங்குழி” என்னும் சிற்றுாரில் தங்கிய போதுதான், எண்ணெய் என நினைத்துத் தண்ணீரை ஊற்றி விளக்கெரியச் செய்த அதிசயம் நடந்தது.

1865 இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, மக்களுக்கு நல்ல கொள்கைகளை வழி வகுத்துக் காட்டினார். 1867 ஆம் ஆண்டு வடலுாரில் “சமரச சுத்த சன்மார்க்க தருமசாலை” என்னும் அமைப்பை நிறுவி, மக்கள் அளித்த பொருளுதவியால், எவ்விதப் பாகுபாடுமின்றிப் பசித்து வருபவர்களுக்கு மூன்று வேளை உணவளிக்க ஏற்பாடு செய்தார்.

தனது சக்தியினால், மக்களுக்கு நன்மை தரும் பல அற்புதங்களையும் செய்து காட்டிய இராமலிங்க அடிகளை மக்கள் “வள்ளலார்” என அழைக்கலாயினர். வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவ, அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் பெருகியது. தனிமையை நாடிய வள்ளலார் “மேட்டுக்குப்பம்” என்னும் ஊரில், “சித்தி வளாகத் திரு மாளிகை” என்னும் இடத்தில் தங்கினார். இதன் முன்பு இவர் ஆற்றிய உரையே “பேருபதேசம்” எனப்படுகின்றது.

ஒளி வடிவாக இறைவனைக் கண்ட வள்ளலார், சத்திய தருமசாலைக் கருகிலேயே, “சமரச சுத்த சன்மார்க்க சபை”யை அமைத்தார். 1827 சனவரித் திங்கள் 25 ஆம் நாள் தைப்பூசத்தன்று, “முதல் ஒளி வழிபாட்டு விழா” தொடங்கியது. சத்திய தருமசாலையில் “அன்னதானமும்”. சத்திய ஞான சபையில் “தைப்பூச விழா”வும் வள்ளலார் நினைத்தது போல், அவரருளால் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தனது அறையில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கைச் சித்த வளாகத் திருமாளிகை முன்பு வைத்து “அனைவரும் இனி ஒளி வடிவாக இறைவனை வழிபடவேண்டும்” என உபதேசம் செய்தார்.

1874 ஆம் ஆண்டு தைத்திங்கள் 19 ஆம் நாள், அனைவருக்கும் அருளாசி வழங்கிய வள்ளலார், இரவு 12 மணிக்குச் சத்த வளாகத் திருமாளிகை அறைக்குள் சென்று, தனது சீடர்களை வெளிப்புறமாகப் பூட்டிவிடச் சொன்னார். பின்னர் அறையைத் திறந்து பார்க்கையில் அறை வெறுமையாக இருந்தது. அன்று முதல் வள்ளலார் நம் கண்களுக்குத் தோன்றாமல் அருட்பெருஞ்சோதியாகி, அருவமாக அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

வள்ளலாரின் கொள்கைகள்
  • கடவுள் ஒருவரே! எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசித்தல் வேண்டும்.  மூட நம்பிக்கைகளை வளர்க்கும் சாதிச் சமயச் சடங்குகள் யாவும் பொய்யே. துன்பப்படும் உயிர்களுக்கு உதவுவதே இறை வழிபாடு. பசித்தவர்களின் பசியைப் போக்கும் ஜீவகாருண்யப் பண்பே இறைவனை அடையும் வழி.
  • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. சுய நலத்திற்காக அல்லாமல் பொது நலத்திற்காகவே இறைவனை வேண்டுதல் வேண்டும்.
  • பசித்திரு! தனித்திரு! விழித்திரு! ... என்பது போன்று மனிதச் சமுதாயத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்தும் கொள்கைகளையே அவர் வலியுறுத்தினார்.
  • சிறந்த பகுத்தறிவாளரும், ஆன்ம நேயம் உடையவரும், சமுதாயச் சீர்திருத்தவாதியுமான வள்ளலார் 19 ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தமிழ்ப் பற்றாளர், தமிழ்ப் புலமை பெற்றவா்.
வள்ளலார் இயற்றிய நுால்கள்
  • திருவருட்பா (1 முதல் 6 திருமுறைகள்)
  • பேருபதேசம்
  • அகவல்
  • வடிவுடைமாலை
  • தனிப் பாடல்கள்.
வள்ளலாரின் எழுத்துக்கள் யாவும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துவதோடு, புரட்சிகரமான சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை இனிய தமிழில், எளிய நடையில் அமையப் பெற்றதாகவும் உள்ளது.

-- சரோசா தேவராசு

தேவையற்ற துறவு

(இறைவனே இல்லையென்று வாதிடவோ, முற்றும் துறந்த ஞானிகளை விமர்சிக்கவோ, உலகிலுள்ள இலட்சக்கணக்கான துறவியரைக் குறைகூறவோ, அவர்கள் மேல் மதிப்பும் அன்பும் கொண்டவர்களை அவமதிக்கவோ எழுதப்பட்டது அல்ல. இது குறித்து மனதுள் எழுந்த எண்ணங்களைப் பரிமாறும் தனிப்பட்ட ஒரு உரத்த சிந்தனையே!)

   இயற்கையோடு இயைந்தும், முரண்டும் கால்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் தன்னால் புரிந்து கொள்ளவும், அடக்கவும் இயலாத அதன் மறுமுகத்தைக் கண்டு ஆரம்பத்தில் மிரண்டிருப்பான். அமைதியாக, சலசலத்துக் கொண்டிருக்கும் ஆற்று நீர் திடுமென வெள்ளமாகி புரண்டு வரும்போது எங்கே ஓடுவது? எரிமலைக் குழம்பாக, நெருப்புக் கோளங்களாகத் தகிக்கும்  பூமியில் எங்கே வாழ்வது? ஸ்திரமானதாகத் தான் நம்பியிருக்கும் இந்த நிலம் திடீரென்று பாளம் பாளமாக வெடித்து, பிளந்து எல்லாவற்றையும் விழுங்குகிறதே! இதை எப்படித் தடுப்பது? எவ்விதம் கட்டுப்படுத்துவது என்று குழம்பியிருப்பான். தன்னால் எதுவும் செய்வதற்கில்லை என்று நிதர்சனமானபோது பயம் ஆட்கொண்டிருக்கும். யார் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியும்? பாய்ந்து வரும்வெள்ளத்தின் வேகமும், நெருப்பு மழையின் சீற்றமும் தணிகையில், அது எதற்கோ அல்லது யாருக்கோ பயந்து அடங்குவது போலில்லை? ஏதோ ஒன்று அதை செயலிழக்க வைக்கிறதோ! அது எதுவாக இருக்கும்? எதுவாகத்தான் இருக்கட்டுமே! தன்னைவிடச் சக்தி வாய்ந்த அதன் கருணைக் கடாட்சம் தனக்கு வேண்டும். அது தன் மீது கோபப்படாமல், தன்னை அழிக்காமல் பாதுகாக்கவும், சுகமளிக்கவும், இன்பம் நல்கவும் மட்டுமே வேண்டும். அதற்காக அதை அடிபணிய, ஆராதிக்க, அவசியமானால் அன்பளிப்பு வழங்க நேர்ந்தாலும் அதில் தவறேயில்லை! இப்படித்தான் மனிதக் கூட்டத்தில் “கடவுள்” படைக்கப்பட்டிருப்பார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவன் “நாகரிகம்” அடைய அடைய, இவனது பிரச்னைகளும், கவலைகளும், துன்பங்களும் பலவிதங்களில் உருவாகி பூதாகரமாக இவனைச் சூழ, ஒரு உண்மையை இவன் உணர்ந்து கொண்டான். இயற்கை மட்டுமல்ல - வாழ்வே சில வேளைகளில் தன்னைக் கைவிட்டுத் தான் அநாதையாக, குடும்பமோ, உறவினரோ, நண்பரோ நெருங்க முடியாத வெற்றிடம் ஒன்றில் தனித்து, ஆதரவு வேண்டித் தவிப்பதை!  முக்கியமாக மரணம். மீண்டும் அம்மாபெரும் அமானுஷ்ய சக்தியிடம் தஞ்சமடைவது மனஆறுதலை அளிப்பதறிந்து, அவன் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், அதைச்சார்ந்த தன் செயல்களை விரிவுபடுத்தவும் முனைந்ததன் பலன் பிறந்தது “மதம்”.

எந்த நேரத்தில் மதம் தோன்றியதோ, இவனுக்குப் பிடித்தது மதம். ஒன்றல்ல, பல மதங்கள். அவற்றில் பல பிரிவுகள்... விதவிதமான உருவங்கள்... அதற்கானச் சின்னங்கள். பின்பற்ற வழிமுறைகள். அவைகளில் பாகுபாடுகள். இவற்றில் நேர்ந்த குழப்பங்கள். ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பேதங்களில் வளர்ந்து, சமுதாயத்தின் மென்னியை நெருக்கிக் கொண்டிருக்கின்றன இம்மதங்கள்.

கடவுள் பெயரால் பண்படவும், அமைதியாக வாழவும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் அன்பில் உறவை வளர்க்கவும் வேண்டியவன், தன்னியல்புக்கு ஏற்றவாறு மதத்தை வளைத்தான். இவனுக்கு எதிலும் சுயநலமும், தன்னிறைவும் வேண்டும். விளம்பரம் வேண்டும். ஆதாயமின்றி அடி கூட எடுத்துவைக்க மாட்டான். உயிர் பிரியும் ஒருவனுக்கு நீர் வார்க்கக்கூட “புண்ணியம்” என்ற “வரவு” வேண்டும். (இதற்காகவே கடவுள் கையிலும் ஒரு பேரேட்டைக் கொடுத்து விட்டான்)   மற்ற எதற்காகவும் கிடைப்பதைவிட, கோவிலுக்கு அதிக நன்கொடை கிடைப்பதன் காரணமும் இதுவே! எந்த நற்செயலும் “கணக்கு” போடப்பட்டு “வட்டி”யோடு திரும்பக் கிடைக்காது என்று கூறிப் பாருங்கள். பெரும்பாலான உதவிக்கரங்கள் முடங்கிப் போகும்.

இவனைப் புரிந்துகொண்டு, தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து ஆன்ம உயர்வை இவன் அடைய உபதேசித்த எந்தப் போதகரின் அறிவுரையும் இவன் காதுகளில் ஏறவில்லை! தன்னைப் போலவே தன் மதமும் உயர்ந்தது என்ற இறுமாப்பும், அதைப் பின்பற்றாதவர் அறிவிலிகள் என்ற இகழ்ச்சியும், விமர்சிப்பவர் எதிரிகள் என்ற வன்மமும் வளர்ந்தன. ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளவும் சளைக்காத வெறி.

மோயீசன் தன் மக்களுக்குக் கடவுள் பெயரால் வெளியிட்ட பத்து கட்டளைகளும் நல்வழிப்படுத்தியிருந்தால், உலகம் என்றோ ஒளிமயமான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கும். கண்ணனின் கீதோபதேசம் மன ஆழத்தைத் தொட்டிருந்தால், அவனவன் தன் கடமையைச்  சீர்படச் செய்து பலன் எதிர்பாராத பக்குவப்பட்டிருப்பான். புத்தனின் பற்றற்ற வாழ்வினைப் பின்பற்றியிருந்தால், ஆசைகள் அழிந்து, பிறர் நலம் பேணத் தோன்றியிருக்கும். முகம்மது நபிகளின் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவியிருந்தால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றாகியிருக்கும். கிறிஸ்துவின் “பகைவனுக்கும் அன்பு செய்யுங்கள்” என்ற அருள்மொழி உள்ளத்தில் ஊடுருவியிருந்தால் காணுமிடமெங்கும் களி நடம் புரிந்திருக்கும்.

நாமோ இந்த உன்னதர்களின் பெயரால் வேறுபடவும், தனித்தனிக் குழுக்களாகப் பிளவுபடவும், துவேஷத்தை வளர்த்திடவும் துணிந்துவிட்டோம். சற்றே யோசித்துப் பார்த்தால், நாம் யாரை மதித்துப் போற்றுகிறோமோ, இறைபீடத்தில் அமர்த்தி வணங்குகிறோமோ, அவர்களுக்கே நாம் செய்யும் அவமரியாதை இது என்பது விளங்கும். அவர்கள் போதனையைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டு, அவற்றைப் பரப்புவதற்காக உழைக்கிறேன் என்ற பெயரில் சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்?

கடவுளும் மதமும், அதைக் கட்டிக் காக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்ட பிறகு, சாமானியனுக்கும் இந்த உயர்ந்த கோட்பாடுகளுக்கும் நடுவே உள்ள இடைவெளியை இட்டு நிரப்ப அல்லது பாலமாகச் செயல்படத் துறவிகள் என்ற இடைத்தரகர்கள் இன்றியமையாதவர்களானார்கள்.

இவர்களில் முதன்மையானோர், உண்மையிலேயே ஞானத்திலும், அறிவிலும், பண்பிலும் சிறந்தவர்கள். இந்த மனித மந்தையின் முறையற்ற வாழ்வினின்று, இருள்சூழ் அறியாமையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்கள். பாமரனுக்கும் புரியும் வண்ணம் சீரியக் கொள்கைகளை எடுத்தியம்பியவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது சாத்வீக முறை இங்கே அடிதடியில் உழன்று கொண்டிருக்கும் சுயநலக் கும்பலுக்கு, செவிக்கு இன்பம் தந்தபோதிலும் உரிய பலன் தரவில்லை.

தவமியற்றி, சித்தத்தை ஒருங்கிணைத்து வெற்றி கண்டும், மறுபுறம் தன்னையே உணர்வுகளின் வட்டத்துக்குள் அடக்கி ஆளும் திறன் பெறா வகையினர் உண்டு. நம் இதிகாசங்கள் கூறுவதுபோல் தங்கள் செப,தவத்தால் செயற்கரிய செயல் செய்யும் இவர்கள், ஒரு மேனகையின் எழிலுக்கோ அல்லது துாண்டப்படும் கோபத்திற்கோ இரையாகிப் போவார்கள். துறவறம் என்ற பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் பசுத்தோல் போர்த்திய புலிகளும் இங்கு ஏராளமாக உண்டு.

கடவுள் என்ற மாபெரும் சக்தியை நம்புகிற மனிதனுக்கு அதன்பால் அன்பைவிட, பக்தியை விட, பயமே மேலோங்கி நிற்கிறது. தன் நடத்தையில் உள்ள கோளாறுகளை இவன் அறிவான். அதிலிருந்து விடுபட வேண்டுமென்பது அறிவுக்குப் புரிந்தாலும், செயல்பட முடியா தன் இயலாமையும் இவனுக்குத் தெரியும். தன்னைச் சுற்றிலும் மண்ணாகவும், பொன்னாகவும், பெண்ணாகவும், இன்னபிற செல்வங்களாகவும் நின்று தன்னைக் கவர்ந்து, அதை அடைய வேண்டி இவன் செய்யும் வரையறை மீறிய செயல்கள் தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் சதா இவனைத் துளைக்கிறது. ஏதாவதொரு பரிகாரம் செய்து அதிலிருந்து தப்பிக்க எண்ணுகிறான். எனவே இறைவனுக்குத் துாது விடுவதுபோல துறவிகளை நாடித் தஞ்சமடைகிறான். தன் மனப் போராட்டத்திற்கு அப்போதைய மருந்தாக யாருடைய பேச்சோ, செயலோ உள்ளதோ, அவர்களைத் தன் பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறான்.

மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியபின் தங்களுக்கொருத் தலைவனை, தங்களை வழி நடத்தக் கூடியவனை, குணத்திலும் பண்பிலும் சிறந்தவனைத் தேர்ந்தெடுத்து, அவன் கட்டளைப்படி வாழ்ந்தது தவிர்க்க இயலாதது. பலதரப்பட்ட குணநலன்களால் வேறுபட்டு, வக்கிரத்தால் வலுவுள்ளோரின் ஆளுகைக்கு எளியோர் பலியாகாதிருக்க அது அவசியமுமாயிற்று. நாளடைவில் அந்த அமைப்பே தனி மனித வழிபாட்டையும், சர்வாதிகாரப் போக்கையும் உருவாக்கியிருப்பது புரிந்துகொள்ளக் கூடி யது.

இதே நிலை இங்கும் உருவாயிற்று. துறவியர் சிறப்பும், புகழும், பலமும் பெற்றதோடு அவர்கள் சொல்லை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும், செயலை விமர்சனம் செய்யாத, செய்யக் கூடாத சூழ்நிலையும் உண்டாகிவிட்டது.

இந்த இடத்தில் “துறவு” என்றால் என்ன என்றறிய முற்படுவது சாலப் பொருந்தும். அகராதிப்படி “உலகைத் துறப்பது”. விளக்ககொண்ணா பரம்பொருளை, எல்லாவற்றையும் இயக்குகிற சக்தியை அறிய முற்படும் முயற்சியில் தடைகளாக விளங்குபவைகளைத் துறப்பது. உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவித்தாலும் இறுதியில் மிஞ்சுவது தனிமையும், தன்னிரக்கமும், வெறுமையும்தான் என்பதை உணரும்போது இந்தத் தேடல் மனித குலத்தின் முடிவுறாத இலக்காகிவிடுகிறது.

தன்னைப்போலல்லாது, இதையறிய ஒரு துறவியால் முடியும் என்ற எண்ணத்தில் அதை ஓர் அடிப்படைத் தகுதியாக மனிதன் ஆக்கிவிட்டான். இவனால் இயலாத ஒன்றைச் செயலில் செய்பவர்கள் என்பதற்காகவே அவர்கள் மீது ஒரு பரவச உணர்வும் இவனுக்கு உண்டு. இன்று அதனாலேயே பல கோளாறுகள் துறவறத்தில் ஏற்படுகின்றன! ஞானத்தால் முற்றும் கனிந்து அல்லது அனுபவத்தால் அறிந்து துறவறம் மேற்கொள்வது வேறு. பெற்றோர் விரும்பி அல்லது மற்றோர் கணித்து, சிறு வயதிலேயே இத்தகு மடங்களில் சிறார்களை விட்டு, ஞானத்தை ஒரு அறிவாக, பாடமாக ஊட்டுவது வேறு. அங்கு மனதில் ஒட்டுவதுதான் ஒட்டும். இப்படித்தான் வாழவேண்டுமென்று கடிவாளமிட்டதாலேயே உணர்வுகள் கட்டுப்படுவதில்லை!

“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்அதனின் அதனின் இலன்”  -  துறவு பற்றிய வள்ளுவர் விளக்கம் இது.எந்தெந்தப் பொருளின் பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை! ஆசையைத் துறக்கச் சொல்லும் புத்தனின் தத்துவமே இதுவும்! துன்பமற்று வாழ, எதையும் “நீ, உனது” என்ற பார்வையில் நோக்காதே. உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணினால், அதை இழக்கச் சம்மதிக்க மாட்டாய். இழந்தால் சோகம் வரும், இழக்கக் கூடாதென்ற வேகமும், அதனால் கோபமும் வரும். மனம் பேதலித்து தவறுசெய்வாய். அதன் பலனாக துன்பம் நேரும் அல்லது உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணிய ஒன்று, உன்னைத் தனக்குச் சொந்தமாக எண்ணாவிட்டாலும் துன்பம் நேரும். ஆக துன்பத்தைத் தவிர்க்கப் பற்றற்று இருந்துவிடு. அதாவது தாமரையிலைத் தண்ணீராக வாழக் கற்றுக்கொள்.

மிக அற்புதமான அறிவுரை. ஆனால் சராசரி மனிதனுக்குக் கடைப்பிடிக்க
மிகக் கடினமான அறிவுரை. இதன்படி வாழ்ந்தால் துன்பப்படமாட்டோம் சரி. ஆனால் வாழ்க்கையில் சுவையோ, இனிமையோ இருக்குமா? இந்தச் சின்ன, குறுகிய வாழ்வில், மனித உணர்வுகளோடு மனிதனாக வாழாமல் இந்த வாழ்வுக்கே உரிய அனுபவங்களைத் துறந்துவிட்டு, எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறதல்லவா? பற்றொன்று இல்லாவிடில் தாய் தன் மகவையோ அன்றி ஓர் ஆண் தன் குடும்பத்தையோ காப்பதற்காகச் செய்யும் தியாகங்களை எதிர்பார்க்க முடியுமா?  மனப்பற்றுகளை அறுத்தபின் ஞானியர் அனைவரும் வலியுறுத்தும் “அன்பு” எங்கிருந்து ஊறும்? வரண்ட நிலத்தில் களையோடு பயிருமல்லவா விளையாது போகும்?

இதற்கு வேறு சில மாபெரும் மனிதர்கள் மாற்றுவழி ஒன்றைக் கடைப்பிடித்துள்ளனர். மனதை விசாலப்படுத்தி, “தான், தனது” என்பதற்கு அப்பால் உயிர்களை நேசிக்கும் பக்குவம் அது.  அன்பால் உள்ளார்ந்த பற்றும், துயர் கண்டு துடிக்கும் தவிப்பும், அதை நீக்கிப் பெறும் நிம்மதியும், துன்பம் நீங்கிய முகம் கண்டு கொள்ளும் மகிழ்வும் கொண்ட வழி அது.  “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறி ரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன்
 நீடிய பிணியால் வருந்து கின்றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
 ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” என்ற வள்ளலார் காட்டிய வழி. அண்ணல் காந்தியும், அன்னை தெரசாவும் வாழ்ந்து பார்த்த வழி.

வீட்டில் தொல்லை தரும் உறவுகளை, சண்டையிடும் அண்டை வீட்டுக் காரனை, செல்லுமிடங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் எதிர்ப்புக் காட்டும் அயலானைத் தவிர்க்க இயலா அன்றாட வாழ்வில், சகிப்புத் தன்மை தேவைப்படும் சமுதாயச் சூழலைத் துறக்க முடியாத சாமான்யன்  சற்றே முயன்றால் இந்த வழியினைப் பின்பற்றுவது கைகூடும். பூப்பறிக்கும் நேரத்தில் முள் குத்துகிறதென்று மலரையே புறக்கணிப்பதற்கொப்பானது, துன்பப்படாமலிருப்பதற்காக பற்றைத் துறப்பதும். “வாழ்க்கை” சேற்றில் செந்தாமரையாக மலர்ந்திருக்கிறது. இரண்டையும் ஒரு சேர நோக்கக் கற்பதே அனுபவம். இந்த முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வதே அறிவின் பயன்.

உணவின் பல்சுவைகள் ஏற்று ருசிப்பதுபோல, பலதரப்பட்ட குணமுள்ளோரின் தன்மைகளைப் புரிந்து கொண்டு விட்டால், வாழ்வு ஒரு ரசமான புதினமாகும். அதில் வரும் பாத்திரங்கள் உங்கள் யூகத்திற்கேற்ப நடந்து மகிழ்வூட்டலாம் அல்லது திடீர் திருப்பமாக, மாறாக நடந்து வெறுப்பூட்டலாம், எதிர்பாராத நேரத்தில் இணைந்தாற்போல் வியப்பளிக்கலாம். எனினும் சுவைக்கோ பஞ்சமிருக்காது.

சுற்றங்களைத் தள்ளி, உலகை வெறுத்து, துறவின் பெயரால் தனித்து சின்னஞ்சிறு தீவாக ஒடுங்குவதைக் காட்டிலும், உறவுகளை ஒட்டி, அவர்கள் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்து, சுமை வலி தந்த போதும், அதில் சுகம் காணப் பழகினால், எங்கோ தேடிக் கொண்டிருந்த  சொர்க்கத்தில் பாதங்கள் பதிந்துவிட்ட உணர்வைப் பெறலாம்!

இராசேசுவரி சிமோன்

உருப்படியாய் நாமென்ன செய்தோம்?

பார்புகழும் பௌத்தமதச் செம்மல்! நல்ல
  பண்புடைய உலகமகான் புத்தர், இங்கே
சோர்ந்தவுளந் தனைக்கண்டு நொந்தார்!
   சூழ்ந்துழலும் கொடுமைமிகு நிலையைக் கண்டு
நீர் வழியும் கண்களுடன் மனையை விட்டு
  நிம்மதியை நாடிமனம் துறவு பூண்டார்!
சீர்பெறவே நன்னெறியைக் கண்டார்! சான்ற
  சித்தார்த்தன் நல்லறத்தின் தந்தை யன்றோ!

கன்னிமரி பெற்றெடுத்த செல்வம்! நல்ல
  கற்பகமாய் வந்துதித்த தங்கம்! நாளும்
தன்னுயிர்போல் மன்னுயிரைக் காத்து நின்று
  தரணியிலே நற்கருமம் செய்தார்! ஆனால்
தன்னறிவு சிறிதுமிலாப் புல்லர் கூட்டம்
  தந்தகொடும் துயருக்கே எல்லா உண்டோ?
எண்ணரிய நம்பாவம் அனைத்தும் தாங்கி
  ஏசுபிரான் சிலுவையிலே மாய்ந்தார் அய்யோ!

மக்களிடை நிலவிவரும் தீய கொள்கை
  மாண்டிடவே நபிநாதன் மண்ணில் தோன்றித்
தக்கதொரு ஞானவருள் குர்ஆன் ஒன்று
  தந்துபுவி காத்துநலந் தந்தார்! மாந்தர்
எக்குடிய ராயிருப்பின் அல்லா வன்றி
  எப்போதும் நன்மையிலை அறிவீர் என்ற
பக்தியுடன் இச்லாத்தார் போற்று கின்ற
  பரம்பொருளாம் நாயகனார் சொல்லிப் போந்தார்!

நாட்டிற்கே சுதந்திரமே வேண்டு மென்றால்
  நயமாக நாமதையே பெறுவோம்! மேலும்
காட்டிடுவோம் நம்பலத்தை மாற்றா னுக்கே
  கண்ணியஞ்சேர் அகிம்சைவழி பாதை யென்றே!
பாட்டினிலே பாரதியார் பாடிப் போந்த
  பண்புமிகு காந்திமகான் நீதி சொன்னார்!
ஏட்டினிலே அவர்பெருமை கூறப் போகின்
  எழுத்தெல்லாம் அன்பென்ற வடிவங் காட்டும்!

கருணையுள்ள புத்தர்,ஏசு, நபி,நல் காந்தி
  கடமையுடன் நற்தொண்டு செய்தார் மண்ணில்!
உருப்படியாய் நாமென்ன செய்தோம் நாட்டில்?
  உண்மையிலே செயலில்லை! பேச்சே கண்டோம்!
ஒருவனுக்கும் ஒருநன்மை செய்தோம் இல்லை!
  ஒற்றுமையும் நம்மிடத்தில் துளியும் இல்லை!
வறுமை,பிணி நமைவிட்டே நீங்கிப் போக
  வழியுண்டோ? உலகோரே, உணர்வீர் இன்றே!

--கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை.

இணையமெனும் இனிய வலை

 அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை.
திண்ணை :
வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும்  இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப்  பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று.

தட்ஸ் தமிழ்:
இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம்.

வார்ப்பு:
தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம்.

பதிவுகள்:
2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம்.  கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.

மரத்தடி:
கதை, கட்டுரை, கவிதை வெளியிடுகிறது. இது ஒரு இலவச மின்னிதழ். ஆனால் மரத்தடி குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். விரும்பும் எவரும் இதில் உறுப்பினர் ஆகலாம்.

தமிழகம் நெட்:
மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை இதில் காணலாம். ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற பணியையும் இவ்விதழ் செய்துவருகிறது.

தமிழ்கூடல்:
தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன கட்டுரை, இலக்கியம், அரசியல். .  இடம் பெற்றுள்ளன.கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, கைக்கூ கவிதை என்று வகைப்படுத்தி வெளியிடுகிறது.

நிலாச்சாரல்:
கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு என்னும் சிறுவர்பகுதி, பலசுவை பகுதி, இலக்கியச் செய்திகள் முதலியன இவ்விதழில் வெளிவருகின்றன. இது ஒரு வார இதழ்.

தமிழோவியம்:
கட்டுரை, கவிதை, சிறுகதை, திரை விமர்சனம். . .ஆகியவற்றை எடுத்தியம்பும்  வார இதழ் இது. தமிழ் ஈ புக் என்ற இணைப்பின் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களை காண முடியும்.  விசை, தலித் முரசு, கூட்டாஞ்சோறு, புதுவிசை, தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை. . . போன்ற பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யுனிகோடில் வெளியிடுகிறது கீற்று என்னும் இணையதளம்.

சிப்பி : ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் இவ்விணையதளத்தில தமிழ் பகுதியில்  காலச்சுவடு, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித், பெண்ணே நீ. . .போன்ற சிற்றிதழ்களைப்   படித்து மகிழலாம்.

விகடன் குழுமம் - ஆனந்த விகடன், அவள்விகடன், சுட்டிவிகடன், ஜீனியர்விகடன், நாணயம்விகடன், மோட்டார்விகடன், சக்திவிகடன் ஆகிய இதழ்களைக் கொண்டது.இவற்றைப் படிக்கச் சந்தா கட்டவேண்டும்.

குமுதம் குழுமம் - தீராநதி, குமுதம், சிநேகிதி.மங்கையர் மலர், கல்கி, தமிழன் எக்ஸ்பிரஸ் ,  இவை அனைத்தையும் பணம் செலுத்திப் படிக்க இயலும்.

விகடன், குமுதம்  - அச்சிதழாகவும் இணைய இதழாகவும் ஒரே நேரத்தில் வெளிவருபவை.

இலங்கைத் தமிழா் குறித்த செய்திகளை  ஈழ நாதம்  ஈழ முரசு மற்றும் யாழ் இணையம் வழியாகவும் அறியலாம். தமிழ் முரசு சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் மின்னிதழ். மலேசியா இன்று - மலேசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது.

புதுச்சேரி  - புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்.

இதைத்தவிர தமிழ் சினி டைரக்டரி சௌத் இந்தியன் சினிமா வழியாக  தமிழ்த் திரைப்படச் செய்திகளை அறியலாம்.

இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும்  இணைய இதழ்களாக வந்தால் பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும்.

இணைய இதழ்களுக்குப் போட்டியாக இணையத்தில் உலா வருபவை வலைபூக்களாகும் இதுபற்றி அடுத்த சந்திப்பில் பார்ப்போமா தோழிகளே!

லூசியா லெபோ

குடிமைப் பயிற்சி

சந்திப்புகள் நடத்த மற்றும் சங்கம் அமைக்கச் சுதந்திரம்-

எல்லோரும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மற்றவர்களைத் தொந்தரவு செய்யாவண்ணம் மற்றும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இருப்பின், சந்தித்துக் கொள்ள, சங்கம் அமைக்க உரிமையுள்ளது. சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சங்கத்திலும் வணிக மன்ற கூட்டணியிலும் அல்லது கட்சியில் எவ்வித பயமும் இன்றி உறுப்பினராகச் சேர எல்லோருக்கும் அனுமதி உள்ளது.

அபிப்பிராய சுதந்திரம்-கருத்தை வெளிப்படுத்துவதில் சுதந்திரம்-

பத்திரிக்கைத் துறைகள், ஊடகங்கள் மற்றும் தனிமனிதன் பேச, எழுத மற்றும் பிரசுரிக்க எந்தத்தடையும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த எந்தத் தடையும் இல்லை. எல்லோரும் தங்களுடைய அரசியல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமைகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்தலாம்.

ஆனால் இந்தச் சுதந்திர உரிமையின் பயன்பாடுகள் மற்றவர்களை மதிக்கும்படியாகவும், சமயம் மற்றும் கொள்கைகள் இல்லாமலும் மற்றும் அவதுாறு பரப்பும் வகையில் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.  இனவெறி, சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய மிகப்பெரியக் குற்றச் செயல் ஆகும்.

வெளியில்   நடமாடச் சுதந்திரம்-

பிரஞ்சு நாட்டு குடிமகன்களுக்கு பிரான்சு நாட்டு எல்லைக்குள்ளும் மற்றும் ஐரோப்பியாவிற்குள்ளும் எந்தவிதத் தடையுமின்றிச் சுதந்திரமாக வெளியில் நடமாட உரிமை உள்ளது. ஐரோப்பியப் பிரஜைகள் அனைவரும் ஐரோப்பிய அங்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடமாட மற்றும் ஸ்தாபனம் நிறுவ சுதந்திரம் உள்ளது. சட்டப்படி முறையாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரும் சுதந்தரமாக நடமாடலாம். இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட உள்நாட்டு பாஸ்போர்ட் கிடையாது.

--தொடரும்--