பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 octobre 2010

தேவையற்ற துறவு

(இறைவனே இல்லையென்று வாதிடவோ, முற்றும் துறந்த ஞானிகளை விமர்சிக்கவோ, உலகிலுள்ள இலட்சக்கணக்கான துறவியரைக் குறைகூறவோ, அவர்கள் மேல் மதிப்பும் அன்பும் கொண்டவர்களை அவமதிக்கவோ எழுதப்பட்டது அல்ல. இது குறித்து மனதுள் எழுந்த எண்ணங்களைப் பரிமாறும் தனிப்பட்ட ஒரு உரத்த சிந்தனையே!)

   இயற்கையோடு இயைந்தும், முரண்டும் கால்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் தன்னால் புரிந்து கொள்ளவும், அடக்கவும் இயலாத அதன் மறுமுகத்தைக் கண்டு ஆரம்பத்தில் மிரண்டிருப்பான். அமைதியாக, சலசலத்துக் கொண்டிருக்கும் ஆற்று நீர் திடுமென வெள்ளமாகி புரண்டு வரும்போது எங்கே ஓடுவது? எரிமலைக் குழம்பாக, நெருப்புக் கோளங்களாகத் தகிக்கும்  பூமியில் எங்கே வாழ்வது? ஸ்திரமானதாகத் தான் நம்பியிருக்கும் இந்த நிலம் திடீரென்று பாளம் பாளமாக வெடித்து, பிளந்து எல்லாவற்றையும் விழுங்குகிறதே! இதை எப்படித் தடுப்பது? எவ்விதம் கட்டுப்படுத்துவது என்று குழம்பியிருப்பான். தன்னால் எதுவும் செய்வதற்கில்லை என்று நிதர்சனமானபோது பயம் ஆட்கொண்டிருக்கும். யார் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியும்? பாய்ந்து வரும்வெள்ளத்தின் வேகமும், நெருப்பு மழையின் சீற்றமும் தணிகையில், அது எதற்கோ அல்லது யாருக்கோ பயந்து அடங்குவது போலில்லை? ஏதோ ஒன்று அதை செயலிழக்க வைக்கிறதோ! அது எதுவாக இருக்கும்? எதுவாகத்தான் இருக்கட்டுமே! தன்னைவிடச் சக்தி வாய்ந்த அதன் கருணைக் கடாட்சம் தனக்கு வேண்டும். அது தன் மீது கோபப்படாமல், தன்னை அழிக்காமல் பாதுகாக்கவும், சுகமளிக்கவும், இன்பம் நல்கவும் மட்டுமே வேண்டும். அதற்காக அதை அடிபணிய, ஆராதிக்க, அவசியமானால் அன்பளிப்பு வழங்க நேர்ந்தாலும் அதில் தவறேயில்லை! இப்படித்தான் மனிதக் கூட்டத்தில் “கடவுள்” படைக்கப்பட்டிருப்பார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவன் “நாகரிகம்” அடைய அடைய, இவனது பிரச்னைகளும், கவலைகளும், துன்பங்களும் பலவிதங்களில் உருவாகி பூதாகரமாக இவனைச் சூழ, ஒரு உண்மையை இவன் உணர்ந்து கொண்டான். இயற்கை மட்டுமல்ல - வாழ்வே சில வேளைகளில் தன்னைக் கைவிட்டுத் தான் அநாதையாக, குடும்பமோ, உறவினரோ, நண்பரோ நெருங்க முடியாத வெற்றிடம் ஒன்றில் தனித்து, ஆதரவு வேண்டித் தவிப்பதை!  முக்கியமாக மரணம். மீண்டும் அம்மாபெரும் அமானுஷ்ய சக்தியிடம் தஞ்சமடைவது மனஆறுதலை அளிப்பதறிந்து, அவன் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், அதைச்சார்ந்த தன் செயல்களை விரிவுபடுத்தவும் முனைந்ததன் பலன் பிறந்தது “மதம்”.

எந்த நேரத்தில் மதம் தோன்றியதோ, இவனுக்குப் பிடித்தது மதம். ஒன்றல்ல, பல மதங்கள். அவற்றில் பல பிரிவுகள்... விதவிதமான உருவங்கள்... அதற்கானச் சின்னங்கள். பின்பற்ற வழிமுறைகள். அவைகளில் பாகுபாடுகள். இவற்றில் நேர்ந்த குழப்பங்கள். ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பேதங்களில் வளர்ந்து, சமுதாயத்தின் மென்னியை நெருக்கிக் கொண்டிருக்கின்றன இம்மதங்கள்.

கடவுள் பெயரால் பண்படவும், அமைதியாக வாழவும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் அன்பில் உறவை வளர்க்கவும் வேண்டியவன், தன்னியல்புக்கு ஏற்றவாறு மதத்தை வளைத்தான். இவனுக்கு எதிலும் சுயநலமும், தன்னிறைவும் வேண்டும். விளம்பரம் வேண்டும். ஆதாயமின்றி அடி கூட எடுத்துவைக்க மாட்டான். உயிர் பிரியும் ஒருவனுக்கு நீர் வார்க்கக்கூட “புண்ணியம்” என்ற “வரவு” வேண்டும். (இதற்காகவே கடவுள் கையிலும் ஒரு பேரேட்டைக் கொடுத்து விட்டான்)   மற்ற எதற்காகவும் கிடைப்பதைவிட, கோவிலுக்கு அதிக நன்கொடை கிடைப்பதன் காரணமும் இதுவே! எந்த நற்செயலும் “கணக்கு” போடப்பட்டு “வட்டி”யோடு திரும்பக் கிடைக்காது என்று கூறிப் பாருங்கள். பெரும்பாலான உதவிக்கரங்கள் முடங்கிப் போகும்.

இவனைப் புரிந்துகொண்டு, தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து ஆன்ம உயர்வை இவன் அடைய உபதேசித்த எந்தப் போதகரின் அறிவுரையும் இவன் காதுகளில் ஏறவில்லை! தன்னைப் போலவே தன் மதமும் உயர்ந்தது என்ற இறுமாப்பும், அதைப் பின்பற்றாதவர் அறிவிலிகள் என்ற இகழ்ச்சியும், விமர்சிப்பவர் எதிரிகள் என்ற வன்மமும் வளர்ந்தன. ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளவும் சளைக்காத வெறி.

மோயீசன் தன் மக்களுக்குக் கடவுள் பெயரால் வெளியிட்ட பத்து கட்டளைகளும் நல்வழிப்படுத்தியிருந்தால், உலகம் என்றோ ஒளிமயமான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கும். கண்ணனின் கீதோபதேசம் மன ஆழத்தைத் தொட்டிருந்தால், அவனவன் தன் கடமையைச்  சீர்படச் செய்து பலன் எதிர்பாராத பக்குவப்பட்டிருப்பான். புத்தனின் பற்றற்ற வாழ்வினைப் பின்பற்றியிருந்தால், ஆசைகள் அழிந்து, பிறர் நலம் பேணத் தோன்றியிருக்கும். முகம்மது நபிகளின் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவியிருந்தால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றாகியிருக்கும். கிறிஸ்துவின் “பகைவனுக்கும் அன்பு செய்யுங்கள்” என்ற அருள்மொழி உள்ளத்தில் ஊடுருவியிருந்தால் காணுமிடமெங்கும் களி நடம் புரிந்திருக்கும்.

நாமோ இந்த உன்னதர்களின் பெயரால் வேறுபடவும், தனித்தனிக் குழுக்களாகப் பிளவுபடவும், துவேஷத்தை வளர்த்திடவும் துணிந்துவிட்டோம். சற்றே யோசித்துப் பார்த்தால், நாம் யாரை மதித்துப் போற்றுகிறோமோ, இறைபீடத்தில் அமர்த்தி வணங்குகிறோமோ, அவர்களுக்கே நாம் செய்யும் அவமரியாதை இது என்பது விளங்கும். அவர்கள் போதனையைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டு, அவற்றைப் பரப்புவதற்காக உழைக்கிறேன் என்ற பெயரில் சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்?

கடவுளும் மதமும், அதைக் கட்டிக் காக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்ட பிறகு, சாமானியனுக்கும் இந்த உயர்ந்த கோட்பாடுகளுக்கும் நடுவே உள்ள இடைவெளியை இட்டு நிரப்ப அல்லது பாலமாகச் செயல்படத் துறவிகள் என்ற இடைத்தரகர்கள் இன்றியமையாதவர்களானார்கள்.

இவர்களில் முதன்மையானோர், உண்மையிலேயே ஞானத்திலும், அறிவிலும், பண்பிலும் சிறந்தவர்கள். இந்த மனித மந்தையின் முறையற்ற வாழ்வினின்று, இருள்சூழ் அறியாமையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்கள். பாமரனுக்கும் புரியும் வண்ணம் சீரியக் கொள்கைகளை எடுத்தியம்பியவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது சாத்வீக முறை இங்கே அடிதடியில் உழன்று கொண்டிருக்கும் சுயநலக் கும்பலுக்கு, செவிக்கு இன்பம் தந்தபோதிலும் உரிய பலன் தரவில்லை.

தவமியற்றி, சித்தத்தை ஒருங்கிணைத்து வெற்றி கண்டும், மறுபுறம் தன்னையே உணர்வுகளின் வட்டத்துக்குள் அடக்கி ஆளும் திறன் பெறா வகையினர் உண்டு. நம் இதிகாசங்கள் கூறுவதுபோல் தங்கள் செப,தவத்தால் செயற்கரிய செயல் செய்யும் இவர்கள், ஒரு மேனகையின் எழிலுக்கோ அல்லது துாண்டப்படும் கோபத்திற்கோ இரையாகிப் போவார்கள். துறவறம் என்ற பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் பசுத்தோல் போர்த்திய புலிகளும் இங்கு ஏராளமாக உண்டு.

கடவுள் என்ற மாபெரும் சக்தியை நம்புகிற மனிதனுக்கு அதன்பால் அன்பைவிட, பக்தியை விட, பயமே மேலோங்கி நிற்கிறது. தன் நடத்தையில் உள்ள கோளாறுகளை இவன் அறிவான். அதிலிருந்து விடுபட வேண்டுமென்பது அறிவுக்குப் புரிந்தாலும், செயல்பட முடியா தன் இயலாமையும் இவனுக்குத் தெரியும். தன்னைச் சுற்றிலும் மண்ணாகவும், பொன்னாகவும், பெண்ணாகவும், இன்னபிற செல்வங்களாகவும் நின்று தன்னைக் கவர்ந்து, அதை அடைய வேண்டி இவன் செய்யும் வரையறை மீறிய செயல்கள் தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் சதா இவனைத் துளைக்கிறது. ஏதாவதொரு பரிகாரம் செய்து அதிலிருந்து தப்பிக்க எண்ணுகிறான். எனவே இறைவனுக்குத் துாது விடுவதுபோல துறவிகளை நாடித் தஞ்சமடைகிறான். தன் மனப் போராட்டத்திற்கு அப்போதைய மருந்தாக யாருடைய பேச்சோ, செயலோ உள்ளதோ, அவர்களைத் தன் பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறான்.

மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியபின் தங்களுக்கொருத் தலைவனை, தங்களை வழி நடத்தக் கூடியவனை, குணத்திலும் பண்பிலும் சிறந்தவனைத் தேர்ந்தெடுத்து, அவன் கட்டளைப்படி வாழ்ந்தது தவிர்க்க இயலாதது. பலதரப்பட்ட குணநலன்களால் வேறுபட்டு, வக்கிரத்தால் வலுவுள்ளோரின் ஆளுகைக்கு எளியோர் பலியாகாதிருக்க அது அவசியமுமாயிற்று. நாளடைவில் அந்த அமைப்பே தனி மனித வழிபாட்டையும், சர்வாதிகாரப் போக்கையும் உருவாக்கியிருப்பது புரிந்துகொள்ளக் கூடி யது.

இதே நிலை இங்கும் உருவாயிற்று. துறவியர் சிறப்பும், புகழும், பலமும் பெற்றதோடு அவர்கள் சொல்லை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும், செயலை விமர்சனம் செய்யாத, செய்யக் கூடாத சூழ்நிலையும் உண்டாகிவிட்டது.

இந்த இடத்தில் “துறவு” என்றால் என்ன என்றறிய முற்படுவது சாலப் பொருந்தும். அகராதிப்படி “உலகைத் துறப்பது”. விளக்ககொண்ணா பரம்பொருளை, எல்லாவற்றையும் இயக்குகிற சக்தியை அறிய முற்படும் முயற்சியில் தடைகளாக விளங்குபவைகளைத் துறப்பது. உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவித்தாலும் இறுதியில் மிஞ்சுவது தனிமையும், தன்னிரக்கமும், வெறுமையும்தான் என்பதை உணரும்போது இந்தத் தேடல் மனித குலத்தின் முடிவுறாத இலக்காகிவிடுகிறது.

தன்னைப்போலல்லாது, இதையறிய ஒரு துறவியால் முடியும் என்ற எண்ணத்தில் அதை ஓர் அடிப்படைத் தகுதியாக மனிதன் ஆக்கிவிட்டான். இவனால் இயலாத ஒன்றைச் செயலில் செய்பவர்கள் என்பதற்காகவே அவர்கள் மீது ஒரு பரவச உணர்வும் இவனுக்கு உண்டு. இன்று அதனாலேயே பல கோளாறுகள் துறவறத்தில் ஏற்படுகின்றன! ஞானத்தால் முற்றும் கனிந்து அல்லது அனுபவத்தால் அறிந்து துறவறம் மேற்கொள்வது வேறு. பெற்றோர் விரும்பி அல்லது மற்றோர் கணித்து, சிறு வயதிலேயே இத்தகு மடங்களில் சிறார்களை விட்டு, ஞானத்தை ஒரு அறிவாக, பாடமாக ஊட்டுவது வேறு. அங்கு மனதில் ஒட்டுவதுதான் ஒட்டும். இப்படித்தான் வாழவேண்டுமென்று கடிவாளமிட்டதாலேயே உணர்வுகள் கட்டுப்படுவதில்லை!

“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்அதனின் அதனின் இலன்”  -  துறவு பற்றிய வள்ளுவர் விளக்கம் இது.எந்தெந்தப் பொருளின் பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை! ஆசையைத் துறக்கச் சொல்லும் புத்தனின் தத்துவமே இதுவும்! துன்பமற்று வாழ, எதையும் “நீ, உனது” என்ற பார்வையில் நோக்காதே. உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணினால், அதை இழக்கச் சம்மதிக்க மாட்டாய். இழந்தால் சோகம் வரும், இழக்கக் கூடாதென்ற வேகமும், அதனால் கோபமும் வரும். மனம் பேதலித்து தவறுசெய்வாய். அதன் பலனாக துன்பம் நேரும் அல்லது உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணிய ஒன்று, உன்னைத் தனக்குச் சொந்தமாக எண்ணாவிட்டாலும் துன்பம் நேரும். ஆக துன்பத்தைத் தவிர்க்கப் பற்றற்று இருந்துவிடு. அதாவது தாமரையிலைத் தண்ணீராக வாழக் கற்றுக்கொள்.

மிக அற்புதமான அறிவுரை. ஆனால் சராசரி மனிதனுக்குக் கடைப்பிடிக்க
மிகக் கடினமான அறிவுரை. இதன்படி வாழ்ந்தால் துன்பப்படமாட்டோம் சரி. ஆனால் வாழ்க்கையில் சுவையோ, இனிமையோ இருக்குமா? இந்தச் சின்ன, குறுகிய வாழ்வில், மனித உணர்வுகளோடு மனிதனாக வாழாமல் இந்த வாழ்வுக்கே உரிய அனுபவங்களைத் துறந்துவிட்டு, எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறதல்லவா? பற்றொன்று இல்லாவிடில் தாய் தன் மகவையோ அன்றி ஓர் ஆண் தன் குடும்பத்தையோ காப்பதற்காகச் செய்யும் தியாகங்களை எதிர்பார்க்க முடியுமா?  மனப்பற்றுகளை அறுத்தபின் ஞானியர் அனைவரும் வலியுறுத்தும் “அன்பு” எங்கிருந்து ஊறும்? வரண்ட நிலத்தில் களையோடு பயிருமல்லவா விளையாது போகும்?

இதற்கு வேறு சில மாபெரும் மனிதர்கள் மாற்றுவழி ஒன்றைக் கடைப்பிடித்துள்ளனர். மனதை விசாலப்படுத்தி, “தான், தனது” என்பதற்கு அப்பால் உயிர்களை நேசிக்கும் பக்குவம் அது.  அன்பால் உள்ளார்ந்த பற்றும், துயர் கண்டு துடிக்கும் தவிப்பும், அதை நீக்கிப் பெறும் நிம்மதியும், துன்பம் நீங்கிய முகம் கண்டு கொள்ளும் மகிழ்வும் கொண்ட வழி அது.  “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறி ரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன்
 நீடிய பிணியால் வருந்து கின்றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
 ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” என்ற வள்ளலார் காட்டிய வழி. அண்ணல் காந்தியும், அன்னை தெரசாவும் வாழ்ந்து பார்த்த வழி.

வீட்டில் தொல்லை தரும் உறவுகளை, சண்டையிடும் அண்டை வீட்டுக் காரனை, செல்லுமிடங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் எதிர்ப்புக் காட்டும் அயலானைத் தவிர்க்க இயலா அன்றாட வாழ்வில், சகிப்புத் தன்மை தேவைப்படும் சமுதாயச் சூழலைத் துறக்க முடியாத சாமான்யன்  சற்றே முயன்றால் இந்த வழியினைப் பின்பற்றுவது கைகூடும். பூப்பறிக்கும் நேரத்தில் முள் குத்துகிறதென்று மலரையே புறக்கணிப்பதற்கொப்பானது, துன்பப்படாமலிருப்பதற்காக பற்றைத் துறப்பதும். “வாழ்க்கை” சேற்றில் செந்தாமரையாக மலர்ந்திருக்கிறது. இரண்டையும் ஒரு சேர நோக்கக் கற்பதே அனுபவம். இந்த முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வதே அறிவின் பயன்.

உணவின் பல்சுவைகள் ஏற்று ருசிப்பதுபோல, பலதரப்பட்ட குணமுள்ளோரின் தன்மைகளைப் புரிந்து கொண்டு விட்டால், வாழ்வு ஒரு ரசமான புதினமாகும். அதில் வரும் பாத்திரங்கள் உங்கள் யூகத்திற்கேற்ப நடந்து மகிழ்வூட்டலாம் அல்லது திடீர் திருப்பமாக, மாறாக நடந்து வெறுப்பூட்டலாம், எதிர்பாராத நேரத்தில் இணைந்தாற்போல் வியப்பளிக்கலாம். எனினும் சுவைக்கோ பஞ்சமிருக்காது.

சுற்றங்களைத் தள்ளி, உலகை வெறுத்து, துறவின் பெயரால் தனித்து சின்னஞ்சிறு தீவாக ஒடுங்குவதைக் காட்டிலும், உறவுகளை ஒட்டி, அவர்கள் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்து, சுமை வலி தந்த போதும், அதில் சுகம் காணப் பழகினால், எங்கோ தேடிக் கொண்டிருந்த  சொர்க்கத்தில் பாதங்கள் பதிந்துவிட்ட உணர்வைப் பெறலாம்!

இராசேசுவரி சிமோன்