பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 13 septembre 2011

dimanche 11 septembre 2011

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

தமிழ் அழிந்துவிடக் கூடாது, அதன் மூலம் நமது
பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை
அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல
வேண்டியது நமது கடமை என்றெல்லாம் வேண்டிய-
வரைப் பேசியாகிவிட்டது. ஆனால் இது ஒரு கசப்பு
மருந்தைப் போல இளைய சமுதாயத்திக்கும், இளம்
பெற்றோருக்கும் இருக்குமோ என்ற ஐயத்திற்கு 
இடமிருக்கிறது.

ஒரு பொருளின் மதிப்புத் தெரியாவிட்டாலும், அதனால்
பெறக்கூடிய இன்பத்தை அறியும் போது அதை அடைய
வேண்டுமென்ற ஆவல், தன்னோடு அதை இருத்திக்கொள்ள
வேண்டுமென்ற ஆசை ஏற்படுவது இயல்பு. தமிழ் மீது
பற்று உண்டாக்க, அதன் சிறப்பைப் புரிய வைப்பது
இனிப்பு வழங்கி கவர்வது போன்ற சுலபமான வழி
எனத் தோன்றுகிறது.

அதனால்தான் தமிழ் கூறும் நீதி,நடுநிலை,ஒழுக்கம்,
சமரசம்,பக்தி, மனிதம் என்று  வார்த்தைகளிலேயே
எல்லோரையும் பயமுறுத்தி, தள்ளி நிறுத்தி வைப்பதைப்-
பார்க்கிலும்,

  "மான் என அவளைச் சொன்னால், மருளுதல்
                                                                அவளுக்கில்லை
   மீன்விழி உடையாள் என்றால் மீனிலே கருமையில்லை
   தென்மொழிக் குவமை சொன்னால் தெவிட்டுதல்
                                                                 தேனுக்குண்டு
   கூன்பிறை நெற்றி எனில் குறை முகம் இருண்டு போகும்"

என்று   எல்லோராலும் சுவைக்கக் கூடிய விதத்தில்
தமிழால் உண்டாகும் இன்பத்தைப் புரியவைக்க
முயன்று இருக்கிறோம்.

-திருமதி சிமோன்




இன்றைய அறிமுகம் - திரு.வி.க.

தமிழ்த் தென்றல் திரு.வி.க.
(26 .08 .1883  -  17 .09 .1953 )

வணிகக் கணக்காளர்,தலைமைத் தமிழ்ஆசிரியர்,
இதழாசிரியர், எழுத்தாளர், தேசத்தொண்டர், கவிஞர்,
பேச்சாளர்,தொழிற்சங்கத் தலைவர், சமூக சீர்திருத்த 
வாதி,சமரச சன்மார்க்கவாதி,இயற்கை உபாசகர்,
பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னின்றவர் என
பன்முகக் கலைஞர் திரு.வி.க.

சென்னையை அடுத்த 'துள்ளம்' என்னும் சிற்றூரில்
'விருத்தாச்சலம்'-'சின்னம்மாள்' தம்பதிக்குப் பிறந்த
'கல்யாணசுந்தரம்', முன்னோர்களின் ஊரான 'திருவாரூர்'
இணைந்து, "திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண
சுந்தரம்" (திரு.வி.க.) என்று அழைக்கப்பட்டார்.

ஆங்கில 'ஸ்பென்சர்' நிறுவனத்தில் பணி புரிந்தபோது
தன ஓய்வு நேரங்களைப் படிக்கவும்,எழுதவும் பயன்-
படுத்திக்கொண்டார். 'விபின் சந்திரபாலர்' சொற்பொழிவு
மூலம் விடுதலை இயக்கத்தில் ஆர்வம் பிறந்து,அரவிந்தரின்
'வந்தே மாதரம்' இதழ்ச் செய்திகளை தன்னுடன் பணியாற்று
பவர்களுக்கு விளக்கி வந்தார். நிர்வாகம் எச்சரித்ததால்
பணியைத் துறந்து வெளியேறினார்!

தன் அண்ணனுடன் சேர்ந்து தொடங்கிய அச்சுக்கூடத்தில்
"திருமந்திரம்"பதிப்பிக்கப்பட்டது. அவருடைய சிறப்புக்
குறிப்புரைகளுடன் "பெரிய புராணம்"வெளியிடப்பட்டது.
பின்னர் பொருள் இழப்பால் அச்சுக்கூடம் மூடப்பட்டது.

பிறகு தான் படித்த 'வெஸ்லியன்' பள்ளியில் பணிபுரிந்தார்.
தலைமை ஆசிரியர் 'ஜான் ரத்தினம்' தொழிற்பயிற்சிப்
நிலையம் ஒன்றைத் தொடங்கி அதில் திரு.வி.க.வை
வணிகக் கணக்கியல் கற்பிக்க பகுதி நேர ஆசிரிய
ராக்கினார். அவர் மூலம் திரு.வி.க. கிறித்துவ மதக்
கோட்பாடுகளைக் கேட்டறிந்தார். பள்ளியின் தலைமை
தமிழாசிரியராக உயர்வு பெற்ற திரு.வி.க. தமிழ்ச்
சங்கம் ஒன்றை நிறுவினார்.

1912 - 'கமலாம்பிகை' என்ற அம்மையாரை மணந்து இரு
குழந்தைகளுக்கு தந்தை ஆகியும், ஒருவர் பின் ஒருவராக
எல்லோரையும் இழந்தார். தம் மனைவி நினைவாக 
 'பெண்ணின்பெருமை'யை உலகோர் அறியப் பாடுபடுவது
என உறுதி பூண்டார்.

அப்போது திலகரும், அன்னிபெசென்ட் அம்மையாரும்
ஒன்றுபட்டு நடத்தி வந்த 'தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர்'
அவரை ஈர்த்தது. 'நியூ இந்தியா' நாளிதழ்த் துணையாசிரியர்
சுப்பராயகாமத்தின் முயற்சியால் தொடங்கப்பட்ட 'தேச
பக்தன்' நாளிதழின் ஆசிரியராக திருவிக பொறுப்பேற்றார்.
தமிழ் இதழியல் துறையில் தெளிவான உரைநடை வழக்குப்
பிறந்தது. தேச பக்தியைத் தூண்டும் வகையில் பணியாற்றியவர், இதழின் உரிமையாளர் மாறியதும், பொறுப்பைத் துறந்தார்.

1920 இல் வ.வே.சு. ஐயரின் அச்சுக்கூடத்தை வாங்கி 'நவசக்தி' வார இதழ் வெளியிட்டார். பின்னர் 1923 இல் அது மாதம் மும்முறைப் பதிப்பாக வெளி வந்தது.கல்கி துணை ஆசிரியராக இருந்தார். 1939 இல் அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டங்களால் நவசக்தி முடங்க, சமரச சன்மார்க்கத் தொண்டிலும்,
அரசியலிலும் திருவிக ஈடுபட்டார். காந்தியடிகள், திலகர்,வ.உ.சி., ஈ.வே.ரா,இராஜாஜி, பாரதியார்  ஆகியோரின்  நண்பராய் இருந்திருக்கிறார். காந்தியின் ஆங்கில உரைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
காங்கிரெஸ் கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருக்கிறார்.
அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.

வாழ்க்கை வரலாறு, உரைநூல்கள், அரசியல்,சமய நூல்கள், சமயப் பாடல்கள் என 56  நூல்களைப் படைத்துள்ளார். "சாதி,சமயம், நிறம், மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன்; பொது மக்களின் சுகவாழ்வு மட்டுமே என் குறிக்கோள் "   என்று வாழ்ந்த திரு.வி.க. சென்ற நூற்றாண்டில்
தமிழ் வளர உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

திரு வே. தேவராசு



தமிழினிமை

காதல் என்னும் உணர்வே களிப்பில் ஆழ்த்துவது. அதை 
அணுஅணுவாகச் சுவைக்க வைக்கிறது தமிழ். அந்த அன்பு
ஊற்றை எப்படி எல்லாம்  வகைப் படுத்தி  இரசித்து
உள்ளனர் என அறிந்து மகிழுங்கள்:

வங்கணம் - காதல்                 வெள்குதல் - வெட்கப்படுதல்
சந்தேசம் - தூது                       மயல் - மயக்கம் 
ஊடல் - பொய்க்கோபம்          கைக்கிளை - ஒருதலைக்காதல் 
சித்தசன் - மன்மதன்                கற்பு - கன்னித்தன்மை
மெய்மறத்தல்-தன்னை          மெல்லியள் - நளினமானவள்
                       மறத்தல்             துடியிடை - உடுக்கைப்போல இடை
அலர்தல் - மலர்தல்                 நிறை அழிதல் - கற்பிழத்தல்
கூடல் - இணைதல்                  தழுவல் - அணைத்தல்
முத்தாடல்-முத்தமிடல்          களவொழுக்கம்-பிறரறியாமல்
மருவுதல்-கட்டிப்பிடித்தல்                                      உறவு கொள்தல்
மருள்தல்- கவர்தல்                  கிழவன் - கணவன்
இல்லாள்-வீட்டுக்குரியவள்    மொய்த்தல்-நெருக்குதல்.
பசலை - பிரிவால் நிறம் குன்றல்
தடங்கண்ணாள் - பெருங்கண்ணுடையவள்
மடல் -  கடிதம்                           மடலேறல் - காதல் மீதூர
                                                            ஊராருக்கு அறிவித்தல்
காமம் - உடலிச்சை

                                                 
வார்த்தைகளில் விளையாடுவது தமிழனுக்கே உரிய கலை.
மு. கருணாநிதியின் கற்பனை இதோ:

கவிதையில் 'க' போனால் எஞ்சுவது 'விதை' (எண்ணங்கள்
   கவிதையால் 'விதைக்கப் படுகின்றன)
கவிதையில் 'வி' போனால் எஞ்சுவது 'கதை' (கதைகள்
    கவிதையில் உருவாக்கப்படுகின்றன)
கவிதையில் 'தை' போனால் எஞ்சுவது 'கவி' (கவிதான்
     கவிதையை எழுத முடியும்)

'பரதம்' என்ற சொல்லில் 'ர' எனும் எழுத்தில் கீழே உள்ள
நீட்டலை நீக்கினால் 'பாதம்' ஆகிறது. (நடனத்திற்கு உயிர்
பாதமே!)
'ப' வை நீக்கி விட்டால் 'ரதம்' ஆகிறது. (ரதம் போன்ற
அலங்காரம் நடனத்திற்குத் தேவை)
முதல் இரண்டு எழுத்துகளையும் நீக்கி விட்டால் 'தம்' ஆகிறது .
('தம்' இல்லாமல் நடனமாட முடியாது)


இதே போன்ற வேறு வார்த்தை விளையாட்டுக்கள்:
(திருப்பிப் படித்தாலும் அதே வார்த்தைகள் வரும்)

விகடகவி                                   தேரு வருதே!
மோரு போருமோ!                  மேள தாளமே!
தேயுதே!                                     மாறுமா!
வினவி                                        கற்க


விரைந்து சொல்லச் சிரமமான வாக்கியங்கள்:

யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை!
பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!
ஓடுற நரியிலே ஒரு நரி கிழ நரி கிழ நரி முதுகிலே
                                                                    ஒரு பிடி நரை முடி!
கொக்கு நெட்டை கொக்கு நெட்டை கொக்கு இட்ட முட்டை
                                                                    கட்ட முட்டை!
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த
           முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை
                                                                    இறங்கவில்லை!
வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்!
கடலோரத்திலே உரல் உருளுது பெரளுது தத்தளிக்குது
                                                                    தாளம் போடுது!

கவிதை இன்பம்

செந்தமிழின் இனிமையை கவிதையில் இரசிக்க
ஆயுள் போதாது. தமிழ்க் கவிதைத் தொடாத இவ்வுலக
அனுபவங்கள் ஏதுமில்லை! இம்மை முதல் மறுமை
வரை இட்டுச் செல்லும் கவிதை போதையில் மயங்க:


வாழாப் பத்து - முத்தி உபாயம்

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
  பற்றுநான் மற்றுஇலேன்  கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே
  திருப்பெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
  ஆண்ட நீ அருள் இலையானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன்  கண்டாய்
  வருக என்று அருள்புரியாயே!

                                                    மாணிக்க வாசகர்


நானுண்டு நான்கற்ற தமிழுண்டு; போதும்
நல்லோர்கள் வல்லோர்கள் நற்றமிழை யாத்தோர்
தேனுண்டு நான்வாழ்வேன்; சீர்சிறப்பு வேண்டேன்!

                                                    வாணிதாசன்


இற்றது நெஞ்சம்; எழுந்தது இருங் காதல்;
அற்றது மானம்; அழிந்தது நாண் - மற்று இனி உன்
வாய் உடையது என்னுடைய வாழ்வு! என்றான்  வெங்காமத்
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து!

                                                    புகழேந்திப் புலவர்


கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா!
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா!
எந்த மனதில் பாசமுண்டோ
அந்த மனமே அம்மா!

                                                    கண்ணதாசன்


மெல்லென அதிர்ந்த மின்னல் அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! ......
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த  மதலையின் சிரிப்பு!
குளிர் வாழைப் பூக்கொப்பூழ் போன்ற
ஒளி இமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
செம்பவழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது-பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

                                                   பாரதிதாசன்


நல்லெண்ணையும் சோறும் 40 நாள் சாப்பிட்டேன்.
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
முட்டையும் சோறும் 30 நாள் சாப்பிட்டேன்
      அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
பச்சரிசிச் சோறு 10 நாள் சாப்பிட்டேன்
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
சிரட்டையிலே தண்ணிவச்சு சிலநாளு
                                  பாய்ஞ்சு பார்த்தேன்
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
பஞ்சு மெத்தை தான் விரிச்சு 10  நாள் முட்டினேன்
     அப்படியும்  போகலே அரும்பாவி உசிரு
முகட்டிலே கயிறு போட்டு முற்றத்திலே
                                   நின்று பார்த்தேன்
அப்படியும் போகலே அரும்பாவி உசிரு!

                                     வேடிக்கையான நாட்டுப்பாடல்
(சொன்னவர் அமரர் திரு டி.என்.சுகி சுப்பிரமணியன்)


வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால்
                                                                            செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன்.
வந்ததால் வரவில்லை, வராவிட்டால் வந்திருப்பேன்!

                                                                           விடுகதை
(சொன்னவர் புலவர் இரே. சண்முகவடிவேல்)

பொருள்: காதலனைக் காண மழை இரவில் புறப்பட்ட
காதலி, மின்னல் வெட்டிய ஒளியில் தரையோடு தரை-
யாக இருந்த கிணற்றில் விழாது தப்பினாளாம். அதே
ஒளியில்  செத்த பாம்பின் மேல் கால் வைத்ததையும்
கண்டாளாம். அந்த ஒளியே தன் தந்தை வருவதையும் 
காட்ட, அதனால் அவள் வரவில்லையாம்! 

தொகுப்பு: திருமதி சிமோன்

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்


தமிழ் என்ற சொல்லை விரைவாகச் சொல்லிப்பாருங்கள், நம் வாயில் ஊறுவது அமிழ்து தான். உச்சரிக்கும் பொழுதே இன்பத்தைத் தரவல்லது நம் தாய் மொழியாம் தமிழ். இம்மொழிக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அதில் காணக்கிடக்கும் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் எனும் தொகுப்பில் உள்ள நூல்களைப்பற்றித் தெரிந்துக்கொள்ள என் தோழிகள் சிலர் விருப்பப்பட்டதால் அவை பற்றிய பருந்துப் பார்வை இதோ.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்வது சங்ககாலமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் நாகரிக முறையினையும் அரசியல் அமைப்பினையும் உலகிற்கு உணர்த்துபவை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள். இவற்றில் பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இயலாது. உள்ளதை உள்ளவாறு இயற்கையின் பின்னணியில் கூறுபவை. இந்நூல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரையில் என்று கூறுவர். சங்க நூல்களை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்திருந்தனர். இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். அகத்தில் காதலையும் புறத்தில் வீரத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.சங்கப் புலவர்களில் பெரும்பாலோர் அகத்தையே சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சங்க இலக்கிய நூல்களை மேற்கணக்கு கீழக்கணக்கு என்று இருவகைப் படுத்திக் கூறுவர். எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூல்களும் பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களும் மேற்கணக்கு நூல்களாகும்.

எட்டுத்தொகை:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத்தொகை

என்ற பழம் பாடலால் எட்டுத்தொகை நூல்கள் இவையிவை என அறியலாம்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் ஐந்தும் அகம்பற்றி இயம்புவனவாகும். பதிற்றுப்பத்து, புறநானூறு புறம்பற்றிக் கூறுவனவாகும். பரிபாடல் மட்டும் அகம்புறம் இரண்டையும் கூறும் வகையில் உள்ளது.

நற்றிணை: 9 அடிமுதல் 12 வரையுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. பன்னாடு தந்த மாறன் வழுதியால் தொகுப்பிக்கப் பெற்றது.

குறுந்தொகை: நான்கடி முதல் எட்டடி வரையுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவார். தமிழ் மக்களின் அன்புவாழ்வு, அரசியல், ஊர்கள், நகரங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்நூல் நமக்கு உணர்த்துகின்றது.

'செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே'

நாம் அனைவரும் அறிந்த இவ்வரிகள் தலைவன், தலைவியின் ஒத்த உள்ளத்தைக் காட்டும் குறுந்தொகைப் பாடலாகும்.

ஐங்குறுநூறு: குறிஞ்சி, முல்லை ,மருதம்,நெய்தல், பாலை, என்னும் ஐந்து திணைகள் பற்றியும் திணைக்கு நூறு பாடல்களாக ஐந்நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல். இது மூன்று அடி முதல் ஆறு அடி வரையுள்ள பாடல்களைக் கொண்டது. ஐந்து திணைக்குரிய பாடல்களை ஐந்து வேறுபட்ட புலவர்கள் பாடியுள்ளனர்.

தமிழ் மக்களின் இல்லற வாழ்வின் சிறப்பு, ஊர்கள், நகரங்கள், விழாக்கள், போன்றவை இதன்கண் குறிக்கப்பட்டுள்ளன .

பதிற்றுப் பத்து: சங்ககாலச் சேர அரசர்கள் பதின்மரையும் அவர்களுடன் தொடர்பு கொண்ட பேரரசர், சிற்றரசர் பற்றியும் கூறுவது. முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்செரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியதாகும். எஞ்சிய ஏழு பத்துக்களும் ஒவ்வொரு சேரமன்னரைப் பற்றி வெவ்வேறு புலவர்களால் பாடப் பெற்றதாகும். தமிழ் நாட்டு நகரங்கள், போர்முறை, சமூக வாழ்வியல் ஆகியன பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது விளங்குகின்றது.

பரிபாடல்: பரிபாடல் என்னும் பாடல் வகையால் தொகுக்கப்பெற்றமையால் இப்பெயர் பெற்றது. பழங்காலத்தில் 70 பாடல்களைக் கொண்டு திகழ்ந்த இந்நூல் இன்று 22 பாடல்களையேக் கொண்டுள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை மலை, வையை இவற்றின் சிறப்பு நிலையும் மலைவிளையாட்டு, புனல்விளையாட்டு போன்ற இன்ப ஆடல்கள், அக்கால மக்களின் ஆடையணி, இறை வழிபாடு போன்றவையும் இதற்கண் விளக்கப்பட்டுள்ளன.

கலித்தொகை: கலிப்பாவினால் ஐந்திணைகளைப் பற்றி ஒரே புலவராலோ அல்லது ஐவராலோ பாடப்பட்டது என்பர். இது 150 பாடல்களைக் கொண்டது.

அகநானூறு: இது நெடுந்தொகை எனவும் வழங்கப்பெறும். இது 13 முதல் 31 அடிவரை உள்ள பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மர். தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. பாலைத் திணையைப் பற்றி 200 பாடல்களும் பிற நான்கு திணைகளைப் பற்றி 200 பாடல்களும் உள்ளன.

புறநானூறு: புறத்திணைப் பற்றி 400 பாடல்களைக் கொண்டது. இவை 160 புலவர்களால் பாடப்பெற்றவை.தமிழ் மக்கள்தம் மொழி, ஒழுக்கம், கலை, பண்பாடு, அரசாட்சி, நாகரிகம் இவற்றை விளக்கும் கருவுலமாக இது விளங்குகிறது. நட்பிற்கு இலக்கணமாய் விளங்கிய அவ்வை- அதிகமான், கபிலர்- பாரி, கோப்பெரும் சோழன்- பிசிராந்தையார் போன்றோரது நட்பின் பெருமையை இந்நூலின் வாயிலாக அறிகிறோம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
'அறநெறி முதற்றே அரசின் கொற்றம் '
'செல்வத்துப் பயனே ஈதல்'
'அல்லது செய்தல் ஓம்புமின்'

என்ற புறநானூற்று பாடல் வரிகளால் அக்கால தமிழ் மக்களின் பரந்த நோக்கினையும்  அவர்களது தூய வாழ்வினையும் அறிய முடிகிறது.

பத்துப்பாட்டு: இதிலுள்ள ஐந்து நூல்கள் ஆற்றுப்படை எனும் இலக்கிய வகையினைச் சேர்ந்தனவாகும். 'யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ' என்பதே ஆற்றுப்படையின் இலக்கணமாகும் .

திருமுருகாற்றுப்படை:முருகன் அருள்பெற்ற ஒருவன் அவ்வருளைப் பெறவிரும்பும் ஒருவனுக்கு முருகப் பெருமானின் அருள் உள்ளத்தை எடுத்தியம்பி அவனை அப்பெருமானிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது இந்நூல். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் அவன் எழுந்தருளி அருள் வழங்கும் வகையினை அழகாகப் புனைந்துரைக்கிறார் நக்கீரர் .

பொருநராற்றுப்படை: கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற ஒருவன் அம்மன்னனின் அரிய கொடைப் பண்புகளையும் இரவலரைப் போற்றும் பான்மையினையும் எடுத்துரைத்து அவனிடம் சென்றால் பெரும் பொருள் பெறுவாய் என்று தன் எதிர்ப்பட்ட ஒருவனை ஆற்றுப்படுத்தும் முறையில் இது அமைந்துள்ளது. முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பெற்றது இந்நூல்.

சிறுபாணாற்றுப்படை: ஓய்மா நாட்டு நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூலின் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் ஆவார். இந்நூலில் விரலி பற்றிய வருணனை, மூவேந்தர் தலைநகரங்கள், வள்ளல் எழுவர்தம் கொடைச் சிறப்பு, ஐவகை நில மக்களின் வாழ்வியல்முறை ஆகியவை திறம்பட விளக்கப்பட்டுள்ளன.

பெரும்பாணாற்றுப்படை:இது கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பெற்றது.இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் என்பவனாவான்.இவனின் கொடைத் தன்மையை எடுத்துக்கூறி எதிர்வரும் பாணனிடம் "நீயும் அவனிடம் சென்றால் உன் வறுமை உடனே நீங்கப்பெறுவை"   என்று ஆற்றுப்படுத்துவதே இந்நூல்.

மலைபடுகடாம்: இது கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும். நன்னன்சேய் நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதனை இயற்றியவர் பெருங்குன்றுர்ப் பெருங்கவுசிகனார் என்பவராவார்.

முல்லைப் பாட்டு: இதில் 103 அடிகளே உள்ளன. இதை இயற்றியவர் நப்பூதனார் என்னும் புலவராவார். கார்காலத்தின் தொடக்கத்தில் வருவதாகச் சொல்லிப் பிரிந்த தலைவன் வரும் வரைக்கும் ஆற்றியிருக்கும் தலைவியின் இயல்பு இதில் கூறப்பட்டுள்ளது.

மதுரைக் காஞ்சி: பத்துப் பாட்டில் பெரியது இந்நூல். காஞ்சி என்பது நிலையாமையைப் பற்றிக் கூறுவதாகும். மதுரையிலுள்ள அரசனுக்கு நிலையாமையைக் கூறும் முறையில் அமைந்தமையால் இப்பெயரினைப் பெற்றது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பலவகைப் பட்ட நிலையாமைக் கருத்துக்களை இதன்கண் கூறியுள்ளார் மாங்குடி மருதனார்.

நெடுநல்வாடை: தலைவனைப் பிரிந்துவாடும் தலைவியின் நிலை, அவளது கற்பு நிலை, தலைவனின் கடமை உணர்வு பற்றி இது கூறுகிறது.

குறிஞ்சிப்பாட்டு: ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தும் பொருட்டுக் கபிலரால் பாடப்பெற்றது இந்நூல்.

பட்டினப்பாலை: கரிகால் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

இவைத் தோன்றிய காலம் சங்க மருவிய காலம் எனப்படும். இந்நூல்கள் நீதியை அறிவுறுத்தும் முறையில் உள்ளன. இந்நூல்கள் பெரும்பாலும் சுருங்கிய அடிகளைக் கொண்டவை. திருக்குறள் தவிர மற்றவை காலத்தால் பிற்பட்டவை. 11 நூல்கள் நீதி நூல்களாக உள்ளன. அகம் பற்றிக் கூறுவன ஆறு. களவழி நாற்பது மட்டும் போர் நிகழ்ச்சி பற்றிக் கூறுகிறது.

நாலடியார்:  நான்கு அடிகள் கொண்ட வெண்பாவால் ஆனது.இந்நூல் சமண முனிவர்களால் எழுதப்பட்டது.

நான்மணிக்கடிகை: விளம்பி நாகனார் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் 100 பாடல்கள் கொண்ட நீதிநூல் .

இன்னா நாற்பது : இவையிவை துன்பம் தருவன என்பதை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. இதை இயற்றியவர் கபிலதேவ நாயனார்.

இனியவை நாற்பது: இனிய கருத்துக்கள் அடங்கிய நாற்பது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார் என்பவராவார்.

திருக்குறள்: 133 அதிகரங்களையும் 1330 குறள் பாக்களையும் கொண்ட இந்நூல் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் மக்கள் வாழ்க்கையில் அறிந்துகொள்ளத் தக்க அனைத்து உண்மைகளையும் உரைப்பதாக உள்ளது. இந்நூல் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

திரிகடிகம்: சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துகளும் மக்கள் நோயைப் போக்கி உடலுக்கு நலம் விளைப்பது போல இந்நூற் கருத்துக்கள் அறியாமையைப் போக்கி இம்மை, மறுமை, இன்பம் பயக்க வல்லனவாகும். இதன் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.

ஆசாரக் கோவை: இதன் ஆசிரியர் கயத்தூர் பெருவாயில் முள்ளியார். இந்நூலின் பாடல்கள் இன்னவை செயற்பாலவை என்றும் இன்னவை விலக்கற்பாலவை என்றும் கூறுகின்றன.

பழமொழி நானூறு: நானூறு வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் முன்றுறையரையனார். ஒவ்வொரு செய்யுள்ளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கேற்பப் பழமொழி ஒன்று உள்ளது.

சிறுபஞ்ச மூலம் : காரியாசான் என்பவர் இதன் ஆசிரியர். சிறுபஞ்சம் -கண்டங் கத்திரி, சிறுவழுதுணை , சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி - இவை நோயை போக்குவது போல இந்த அறநூல் மக்களை நன்னெறிபடுத்துகிறது.

முதுமொழிக் காஞ்சி: 100 பாக்கள் உள்ளன. நிலையாமையை உணர்த்தும் அனுபவங்களைக்கூறும் இது பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இதனை இயற்றியவர் கூடலூர் கிழார்.

ஏலாதி: ஒவ்வொரு பாடலும் ஆறு பொருள் பற்றிக் கூறுகிறது. இக்கருத்துக்கள் உயிருக்கு உறுதி பயப்பனவாகும். இதன் ஆசிரியர் கணிமேதாவியார்.

கார் நாற்பது: கார்காலத்தின் சிறப்புகளைக் குறிப்பிடும் 40 பாடல்களைக் கொண்டது. இதை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.

ஐந்திணை ஐம்பது: மாறன் பொறையன் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் ஐந்திணைகளைப் பற்றியது. திணைக்கு பத்துப் பாடல்களைக் கொண்டது.

ஐந்திணை எழுபது: திணைக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்களைக் கொண்டது.மூவாதியார் இதன் ஆசிரியர்.

திணைமொழி ஐம்பது: இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார்.ஐந்திணைகளைப் பற்றி, திணைக்கு பத்துப் பாடல்களாக ஐம்பது வெண்பாக்களைக் கொண்டது.

திணைமாலை நூற்றைம்பது : திணைக்கு முப்பது பாடல்களாக 150பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் கணிமேதாவியார்.

கைந்நிலை: ஐந்திணை ஒழுக்கம் பற்றிய அறுபது வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். இதன் ஆசிரியர் புல்லங்காடனார்.

களவழி நாற்பது: போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நடைபெற்ற போரில் சிறைப்பட்ட சேரமன்னனை விடுவிக்கக் கருதிப் பொய்கையார் பாடியது. கழுமலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரினை அழகிய உவமைகளால் விளக்கியுள்ளார் புலவர்.

ஐம்பெருங் காப்பியங்கள் :

பழநதமிழில் பல காவியங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் நமக்குக் கிடைத்தவை ஐந்து மட்டுமே. அவை :சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. இவை சங்க காலத்தை ஒட்டியும் அதன் பின்னரும் தோன்றி இருக்கலாம் என்பது தமிழ் அறிஞர் கருத்து.


தொகுப்பு:  திருமதி லூசியா லெபோ.

samedi 10 septembre 2011

தமிழின் பெருமை


 எல்லா மொழிகளும் காலப்போக்கில் சமூக மாற்றங்களை தங்களுள் ஏற்று மாறுபடுவதை யாராலும்  தடுக்க முடியாது. தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல! அப்படி மாறாத ஒன்று மறைந்தொழியும். இன்றுவரை தமிழ், கணணி ஏறியும்
சாதனைப் படைக்கிற தென்றால் அது நாணல் போல வளைந்தும், நிமிர்ந்தும் தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். சிலவேளைகளில் திரிபு உடையதாயினும் சொற்கள் மரபு நிலைக் குன்றாது, பொருள் மாறாது
வழங்குகின்றன. சில பொருள் மாறினும் பண்பாட்டுக்குள் அடங்கி கலாச்சாரத்தைக் காப்பனவாகவே இருக்கின்றன. இதுவே தமிழின் சிறப்பு!


பொருள் மாறாது திரிந்த பழமொழிகள்:

1 . மேய்த்த - மேய்ச்ச  (தகரம் சகரமாவது)
        'ஊர் மேய்ச்சக் கழுதை உருப்படாது'.

2 . ஐந்திலே - அஞ்சிலே (மெல்லெழுத்து அடுத்த
                      இனமான வல்லெழுத்து பொருந்தல்)
       'அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையாது'

3 . விளக்கு - வெளக்கு (இகரம் ஏகாரமாதல்)
      'வெளக்க மாத்துக்குப் பட்டுக் குஞ்சமா?'

4 . உலகம் - ஒலகம் (உகரம் ஒகாரமாதல்)
      'உயிர் வாழ ஒழக்கரிசிச் சோறு போதும்'

5 .  ஒற்றுமை - ஒத்துமை (றகரம் தகரமாதல்)
      'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம்  கல்லு'

தொகுப்பு: திருமதி சிமோன்


பொருளில்  மாறுபட்டுத் திரிந்த பழமொழிகள்:

அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், பொருள் பொதிந்த
சுருக்கமான அறிவுரைகளைக் கூறும் சொல்வழக்குகளே
'பழமொழிகள்' எனப்படும்.  உண்மைகளையும், படிப்பினை
களையும் உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டவை அவை.


"களவும் கற்று மற" : தற்போது களவையும் கற்றுக்கொண்டு
பிறகு அதை மறந்து விட வேண்டும் எனும் பொருளில்
கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையான வடிவம்
"களவும்கத்தும் மற" என்பதாகும். 'கத்து' என்றால் 'சூது'
 என்று பொருள் .

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே": மண் குதிரை யில் ஆற்றில்  இறங்கினால் அது கரைந்து விடும் என்றாலும்உண்மையான பொருள் 'மண் குதிரை' நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பதே. நீரோட்டத்தின் சுழற்சியில் ஆற்றில் மணர்-குவியல் உண்டாகி மேடு போலத் தோன்றும். ஆனால் காலை
வைத்தவுடன் உள்ளே போய்விடும்.

"கப்பல் கவிழ்ந்தாலும்  கன்னத்தில் கைவைக்காதே": கப்பல் கவிழ்வது போன்ற பெருந்துன்பம் வந்தாலும் கன்னத்தில் கை வைக்ககூடாது என்ற பொருளில் பார்க்கப்படுகிறது. உண்மையான பொருளோ, 'கப்பல் கவிழ்ந்து செல்வமெல்லாம் இழந்தாலும் 'கன்னம்' வைக்கும் திருட்டுத்
தொழிலைச் செய்யாதே என்று  அறிவுறுத்துவதாகும்.

"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்":
மேலோட்டமாக அடித்தால் எல்லாம் நடக்கும் என்பது போல்
தோன்றுகிறது. ஆனால் இரு வேறு பொருள் இதற்கு
சொல்லப்படுகிறது:

     "அடி" என்பது இறைவனின் திருவடி. என்றும்
       அந்தத் திருவடியே உதவும்.

     "அடி உதவுற" என்பது "அடி புதை உறை". அதாவது
        காலடி புதைகிற உறை (செருப்பு)

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?":
கையிலுள்ள புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் தோன்றினாலும், இப்பழமொழி கூறும் பொருள் வேறு:

"கைப் பூண்" என்பது கையில் அணியக்கூடிய ஒரு நகை.கையில் அணிந்து கொள்ளும் நகையை அணியக் கண்ணாடி பார்க்கத் தேவையில்லை என்பதையே இது சொல்கிறது.


தொகுப்பு: திருமதி சரோஜா தேவராஜு