பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 15 août 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

கலிகாலத்தில் உலகம் அழியுமென்பார்கள். கடந்த சில வருடங்களாக உலகில் ஏற்பட்டு வரும் அழிவுகளும், நோய்களும் அதற்கு முன்னோடியோ எனத் தோன்றுகிறது. செய்தித்தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் தினம் காணும் செய்திகள் அந்நாட்களில் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள். மனிதனும் தன்னால் இயன்ற அளவு தனிமனித வாழ்க்கையையும், குடும்பச் சூழலையும், சமூகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான்!

ஆனாலும் கடைசி மனிதன் வாழும்வரை, வாழ்வு மீது பற்றும், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும், அதற்கான செயல்பாடுகளும் தொடரத்தான் செய்யும். இது கடவுளுக்கும் அல்லது இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டம். தோல்வி மனிதகுலத்திற்கே என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலும்கூட அவனது முயற்சி முடங்காது.

தமிழுக்குச் சமீபகாலமாக ஏற்படும் சரிவினைப் போக்க, அதன் பழம்பெருமை குன்றாது நிலைக்க வைக்க தமிழ் ஆர்வலர் நடத்துகிற போராட்டமும் இத்தகையதே! குடும்ப அமைதிக்காகச் சில விட்டுக் கொடுத்தல்களும், சமூக நலனுக்காகச் சில தியாகங்களும் எத்துணை அவசியமோ அந்த அளவுக்கு இங்கே பொறுமையும், இடைவிடா உழைப்பும் தேவை. மொழி, இனம் பற்றிய எண்ணமே ஏற்படாத அளவு பணம் பண்ணும் கலை வளர்ந்துவிட்ட நாளில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலரே செய்தாக வேண்டிய சூழல்.

கம்பன் கழகம் அந்த ஒரு சிலரில் ஒன்றாகத் தன் தமிழ்ப் பணியை இன்னொரு கோணத்தில் அணுக ஆரம்பித்துள்ளது. “ வளரும் தலைமுறைக்குத் தமிழை அறிமுகப்படுத்துங்கள், தமிழில் பேசுங்கள், தமிழ் கற்றுக் கொடுங்கள், நமது பாரம்பரியக் கலாச்சாரத்தைச்  சொல்லிக் கொடுங்கள்” என்று மேடைக்கு மேடை கூறியாயிற்று. ஏற்கனவே ஒரு தலைமுறை இந்த வட்டத்திலிருந்து சற்றே விலகிவிட்ட காரணத்தால், அவர்களுக்கு விருப்பம் இருந்தபோதும் செயலாற்ற இயலவில்லை. எனவே அந்தப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு மாதக் கடைசி சனிக்கிழமையன்றும் இளையோருக்குத் திருக்குறளைப் பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் விளக்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் உலகப் பொதுமறையான வாழ்வியல், தமிழர் பண்பாடு, தமிழ் மூன்றும் வளர வாய்ப்பு உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி, இளைஞர் மனதில் தமிழெனும் ஒளியேற்ற வேண்டுகிறோம். நன்றி

இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் - அருள்மிகு இராமகிருட்டிண பரமஅம்சர்

18-2-1836 முதல் 16-8-1886 வரை வாழ்ந்த 19 ஆம் நுாற்றாண்டின் சிறந்த ஆன்மீகவாதி. இயற்பெயர் கதாதர் சாட்டர்ஜி. மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் சிறுவயதில் படம் வரைவதிலும், களிமண் சிலை செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலும் அக்கறை காட்டினார். பள்ளிப் படிப்பு வெறும் பொருள் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது எனப் பள்ளி செல்ல மறுத்தார்.

17 வயதில் குடும்பம் வறுமையுற, கல்கத்தா தட்சணேசுவர் காளி கோயிலில் புரோகிதராக இருந்த அண்ணன் இராம்குமாருடன் தங்கிப் பணி செய்தவர், அண்ணன் இறந்ததும் பூசாரியானார். கல்லுக்குப்  பூசை செய்கிறோமா அல்லது உண்மையிலேயே தெய்வத்தை வணங்குகிறோமா என்று குழம்பி, காளியிடமே காட்சியளித்துத் தன் குழப்பத்தைப் போக்க வேண்டினார். கோயிலருகே பஞ்சவடியில் தியானம் செய்தார். பின்னர் பொறுமையிழந்து காளி கையிலிருந்த வாளினால் தன்னையே கொலை செய்து கொள்ள முயன்றபோது சுயநினைவு இழந்து விழ, ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகப் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் அவர் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருக்க, பித்தம் பிடித்து விட்டது-திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று தாயார் நினைத்தபோது, அவரே கமார்புகூரின் அருகிலுள்ள செயராம்பாடி ஊரில் இருக்கும் சாரதாமணி என்னும் பெண்ணே தான் மணம் புரிய தகுந்தவள் என்று கூறினாராம்! ஆனால் மணந்த பிறகு, எல்லாப் பெண்களையும் காளி அவதாரமாகவே நினைத்த அவர் அவளையும் அவ்விதமே அலங்கரித்து அவள் காலில் விழுந்து வணங்கினார்.

பைரவி பிராம்மணி என்ற பெண்மணியிடம் தாந்தரிக சாதனைகள் கற்றார். தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்று 6 மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்ததாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில் சீதை, இராதை போன்றோரைக் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. இயேசு, நபிகள் ஆகியோரைக் கண்டதாக அவரே கூறியுள்ளார். இச்சாதனைகளைக் கேள்வியுற்று பலர் அவரைக் காண விழைந்து சென்றனர். அவர்களுள் விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். இராமகிருட்டிணரைத் தன் குருவாகவே அவர்  ஏற்றுக்கொண்டார்.  இராமகிருட்டிணரின் கூற்றுகளை மகேந்திரநாத் குப்தா என்பவர் குறிப்பெடுத்து, அந்த வேதாந்த கருத்துகள் “இராமகிருட்டிணரின் அமுத மொழிகள்” என மொழிபெயர்க்கப்பட்டன. கடைசிக் காலத்தில்  தொண்டைப் புற்று வந்து அவதியுற்ற இராமகிருட்டிணருக்குக் காசிப்பூரில் அவருடைய சீடர்கள் சிகிச்கையளித்தனர்.

அவா் பொன்மொழிகள்--

  1. எல்லா மதமும் ஒரே இறைவனை அடையும் பல வழிகள்.
  2. பூரண இறையருள் பெற்ற பின் போதனை செய்.
  3. உள்ளத்தைத் துாய்மையாக்கு. சத்தியம் பேசுதலே சிறந்த தவம்.
  4. எளிமையும், சத்தியமும் ஈசன் அருளைப் பெற வைக்கும்.
  5. பெண்ணாசை, பொன்னாசை வற்றினால் ஆன்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
இராசி சிமோன்

அச்சுறுத்தும் அண்மைக்காலம்

  1. இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையே இருக்காது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
  2.  2015 முதல் மழை பெய்வது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து பூமி மணல் நிறைந்த பாலைவனமாகி விடுமாம்.  கடல் நீர் ஆவியாகி மழை பெய்தாலும் உஷ்ணத்தால் அத்துளிகள் மண்ணைத் தொடுவதற்குள் மீண்டும் ஆவியாகி விடுமாம்!
  3.  ஒவ்வொரு வருடமும் வினாயகர் சதுர்த்திக்குப் பிறகு 65 டன்னுக்குக் குறையாமல் கழிவுகள் மெரினா கடற்கரையில் மட்டும் அகற்றப்பட வேண்டி உள்ளது. இந்தியா முழுதுக்குமான நீர் நிலைகளின் கதி பற்றி நாமே கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
  4. 2030 ஆம் ஆண்டில் உலகில் பாதிப் பேருக்குத் தண்ணீர் கிடைக்காது. நீரை மையமாக்கிப் போர்கள் எழக்கூடும்.
  5. இன்னும் 50 ஆண்டுகளில் தென்னிந்தியக் கடலோரப் பகுதிகள் சில வரைபடத்தில் இல்லாது போக வாய்ப்புள்ளது.
  6. பூச்சிக் கொல்லிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனங்கள், சில மருந்துகள் தயாரிக்க ஈஸ்ட்ரோஜன் (பெண்தன்மை தரக்கூடியது) போன்ற வேதிப் பொருட்கள் தேவை. ஆனால் அவை ஆண்கள் உடலில் சேரும்பொழுது ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. பெண் குழந்தைகள்  உடலில் சேரும்போது அவர்கள் சிறு வயதிலேயே பூப்பெய்துகின்றனர்.
  7. உலக நீரிழிவு நோயாளியரில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்.
  8. தமிழக இளைஞரில் மது, புகை பிடிப்போர் 30 சதவிகிதத்தினர்.

இணையமெனும் இனிய வலை

அன்புச் சகோதரிகளே, இந்த முறை  தாயகம் சென்றபோது தமிழக முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டிலும் அதனுடன் இணைத்து உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய மாநாட்டிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியது. இணைய மாநாட்டில்  ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்த சிலரையும்   வலைப்பூக்கள் , இணையதள அமைப்பாளர்கள் சிலரையும் சந்தித்துப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

கணிணியின் பயன்பாடுகளில் முக்கியமானது   இணையவலை, இணையதளமாகும்..
கல்வி, உலக நடப்புகள், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, வரலாறு, ஆன்மீகம், மருத்துவம், சமையல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வங்கிக் கணக்குகளைக் கையாள்வது, கடிதப் போக்குவரத்து, கருத்துப் பரிமாற்றம், பொருட்களை வாங்குவது... என்று இதில் பேசப்படாத செய்திகளே இல்லையெனலாம். எனவே, உலகமே குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது.
இந்த இணையத்தின் பயன்பாடுகளில் சிலவற்றை உங்களுக்குத் தொகுத்துத் தொடராகத் தரலாம் என நினைக்கிறேன்.

முதலில் என் நினைவிற்கு வந்தது இணைய இதழ்கள் - மின்னிதழ்கள்.

காரணம், என் மனத்திரையில் ஓடிய பசுமையான காட்சி :

என் இளவயதில், தமக்கையின் நச்சரிப்பும் கெஞ்சலும் கொஞ்சலும் பொறுக்காமல் எதிர் வீட்டு மாமியிடமிருந்து ஆனந்தவிகடன், குமுதம், பேசும்படம் (இவ்விதழ்களுக்குத் தடா எங்கள் வீட்டில்) இவற்றைக் கடனாக வாங்கி  என் தந்தையின் கண்ணில் படாதவாறு அவர்களுக்குத் தருவது.  இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ நான் அந்த இதழ்களைப்பெற எவர் தயவையும் நாடுவதில்லை. அதிகப் பைசாவும் செலவு செய்வதில்லை. மாறாக இணையத்தில் வெளிவரும்  இணைய இதழ்கள் - மின்னிதழ்களைப் படிக்கிறேன்.

இணைய இதழ்கள் மின்னிதழ்கள் என்றால் என்ன?

இந்த அவசர உலகில் ,அதுவும் கணவன் மனைவி இருவரும் பணிக்கு ஓடும் காலை வேளையில் பொழுது ஏது பத்திரிகை, புத்தகங்களைப் பார்க்க,  படிக்க. உள்ளுர்த் தொலைக்காட்சிகள், தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அடுத்து இணையத்தின்  மூலமாகவே செய்திகளை அறிவதாக  அமெரிக்கர்கள் கூறுகிறார்கள். எனவே, அங்கு செய்தித் தளங்கள் வரிசையில் இணையம் 3 ஆம் இடத்திலுள்ளது.

வளர்ந்துவரும் கணிணி, தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தால் இன்று தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி, தமிழ் முரசு, மாலைமலர்;. . . மின்தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே(ஒரு சில பத்திரிகைகள்) அந்தந்தப் பக்கங்களின் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளிவருகின்றன. இதனால் காகித இதழ் போலவே உணர்வு ஏற்படுகிறது.  இணைய இதழ்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.  ஒன்று  நாளேடுகள் (செய்தித் தாள்கள்), மற்றது, வார, மாதத் தமிழ் இதழ்கள். (உ.ம்)  திண்ணை, கீற்று, விகடன், குமுதம், பதிவுகள் . . .  . 

முதலில் இணைய இதழ்கள்  ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font)     ஒன்றைப் பயன்படுத்தின. தற்பொழுது பெரும்பாலும் இதழ்கள் யுனிகோட்(  ஒருங்குறி) எழுத்துருவிலேயே வருகின்றன.

யுனிகோட் என்றால் என்ன?

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டுமுறை. மொழி என்னும் தடையைத் தொழில்நுட்பம் தகர்த்தெறிந்து கண்டறிந்த முறை. தனித்தனி மென்பொருள் தேவையில்லை. கணிணியில் தற்காலிகமாகச் சில மாற்றங்கள் செய்தால்போதும்.

கணிணியைப் பயன்படுத்தத் தெரிந்த எவரும்  இந்த இணைய இதழ்களைப் படிக்க இயலும். பணி, வேலைகளுக்கிடையே சலிப்பு, சோர்வு ஏற்படும்போது ஒரு மாற்றத்துக்கு இணைய இதழ்களைப் புரட்டுபவர்களும்  உள்ளனா்.

இந்தத் தமிழ் இணைய இதழ்கள் பல சுவையான செய்திகளைப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் மலேசியா, சிங்கபூர் , கனடா, அமெரிக்கா , இங்கிலாந்து, ஆத்திரேலியா, சீனா, சப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்தந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்களே திரட்டி அனுப்புகிறார்கள்.

தன்மை:

பெரும்பாலும் தமிழ் இணைய இதழ்கள் பொழுதுபோக்கு நோக்கத்துக்காகவே உள்ளன.
ஆழமான பொருள் நிறைந்த உள்ளடக்கங்கள் கொண்ட உயர்தர இதழ்களும் உண்டு. இத்தகைய இதழ்கள் எண்ணிக்கையில் குறைவு.

படிப்பவர்களின் மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் படம், கதை, கட்டுரை, செய்திகளைக் கொண்ட இதழ்களும் உண்டு. சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்  இணைய இதழ்களைத் தவிர்க்க வேண்டும். அதற்காக ஆவண செய்ய வேண்டும்  குறிப்பாக நம் இளைய தலைமுறை  இணையத்தில் உலவும் போது  விழிப்பாக இருக்க வேண்டும்.

இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமா தோழிகளே.

- லூசியா லெபோ

பெண்களே பெண்களுக்கு

பெண் விடுதலை வேண்டும் என்று என்றோ பாரதி கண்ட கனவு  இன்று நனவாகி உள்ளதை நாம் அறிவோம்.  நம் முன்னோர்களில் பலர் எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்காகப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.  இதன் விளைவாகப் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதும், படிப்பிலும் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாக முன்னேறி இருப்பதும் அறிந்ததே! வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள் நாட்டை ஆள்வதும் பெரிய பொறுப்புள்ள பதவிகளை வகிப்பதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஏன் விண்கலத்தில் ஏறி வானவெளியை வலம் வருவதும் அவர்களுக்குச் சாத்தியமாகிவிட்டது. இருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேற்றுமைகள் மறைந்து அவர்களுக்கு வேண்டிய உரிமைகளும், மரியாதைகளும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும், சுயகௌரவத்திற்காகவும் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் தங்கள் குலப்பெருமையைத் தாங்களே அழித்துக்கொள்ளவும், தங்கள் இனத்தைத் தாங்களே அடிமைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை! வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும்  ஆண்களால் பெண்களுக்குத் தொல்லை வரலாம். ஆனால் வீட்டிற்குள் பெண்கள் சிறுமையடையவும், துன்புறுத்தப்படவும் காரணம் பெரும்பாலும் பெண்களாகவே இருந்துவிடுகிறார்கள்!

கருவில் உள்ள குழந்தை ஆண் என்று தெரிந்தவுடன் கிடைக்கக் கூடாத புதையல் கிடைத்ததைப்போல மகிழ்வதும், அதுவே பெண் என்று தெரிந்தால் வானமே இடிந்து தலையில் விழுந்ததுபோலத் துயரப்படுவதும்  பெண்கள்தான். இந்தியக் கிராமங்களில் பெண்குழந்தை பிறந்தால் அதற்குக் கள்ளிப்பாலைப் புகட்டியும், நெல்மணிகளை மூக்கில் திணித்தும், ஈவு இரக்கமின்றிக் கொலை செய்வது பெண்கள்தான். வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ், காஸ் சிலிண்டர் வெடித்துப் பெண்கள் தீக்கிரையாவதற்குக் காரணம் மாமியார், நாத்தி என்ற பட்டம் பெற்ற பெண்கள்தான். இவைகளைச் செய்திகளாக அறியும்போது மனம் துடித்தாலும், நமக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

எங்கு வாழ்ந்தாலும், தவறு என்று தெரிந்தாலும் சில பெண்கள் தங்களை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. கிராமங்களில், படிக்காத பெண்கள் நாகரிகமின்றிச் செய்வதை, நகரங்களில் வாழும் படித்த பெண்கள் நாகரிகமான முறையில் நளினமாகச் செய்கிறார்கள். கருவிலுள்ளது பெண் குழந்தை என்பதை நவீன கருவிகள் மூலம் தெரிந்துகொண்டு, கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்யும் பெண்கள் நம்மிடையே இல்லையா?  உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ குழந்தை பிறந்த செய்தி கேட்டு, போய் பார்த்துவிட்டு,“என்ன! இந்தத் தடவையும் பெண்தானா! இப்படி அடுக்கடுக்காய்ப் பெண்ணாய்ப் பெற்று விட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேள்வியில் நஞ்சைக் கலந்து கேட்டு உடல்வேதனையுடன் இருக்கும் பெண்ணின் உள்ளத்தையும் நோகடிப்பது பெண்கள்தான்.  தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கிடையில் ஆண்-பெண் பேதம் பார்த்து வேற்றுமைகளோடு வளர்ப்பதும் “தாய்” என்ற பெண்தான்.

திருமணத்திற்காகத் தன் மகனுக்குப் பெண் தேடும்போது, தன் மகனின் நிறம், தகுதி எதையுமே நினைக்காமல், பெண் மட்டும் அழகாக, ஒல்லியாக, உயரமாக, வெள்ளையாக நிறைய பணத்தோடு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் பெண்கள்தான். பெண் வெள்ளையாக இருந்தால்தான் பிறக்கும் குழந்தை வெள்ளையாக இருக்கும் என்று அவர்கள் போடும் தப்புக்கணக்கு இது. பார்க்கும் பெண்களிடத்தில் எதிர்பார்க்கும் தகுதி இல்லையென்றால் அதைச் சிறிதும் தயக்கமின்றி நேரிடையாகச் சொல்லி பெண்ணைப் பெற்றவர்களின் மனதை நோகச்செய்வதும் பெண்கள்தான். திருமண நேரத்தில் கறாராகப் பேசி பணம், நகை, வீடு என்று கேட்டுத் துன்புறுத்துவதும், வாழ வந்த பெண்ணிடமும், அவள் கொண்டு வந்த சீதனங்களிலும் குறை கண்டு ஏசுவதும் பெண்கள் தான். தன் மகளை வீட்டுவேலை எதுவும் சரியாகச் செய்யத் தெரியாமல் வளர்த்துவிட்டு, மருமகளைக் குறை கூறுவதுமன்றி, “இதைக் கூடக் கற்றுத்தராமல் உன் அம்மா எப்படித்தான் வளர்த்தாளோ” என்று தாயையும் சேர்த்துப் பழிப்பதும் பெண்கள்தான். சிறு பிரச்னைகளைப் பெரிதாக்கி, குடும்பத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதும் பெண்களே!    (தொடரும் ...)

-- விமலா துருவோ

குடிமைப் பயிற்சி

பிரஞ்சுக் குடியரசின் கொள்கைகள்

பொது நலனையும் பொது சொத்தையும் பாதுகாப்பதே குடியரசு ஆட்சியின் கொள்கையாகும். சட்டப்படியே ஆணைகள் பிரகடனப்படுத்தப்படும். அதிகாரத்தினாலோ அல்லது சர்வாதிபத்திய ஆட்சி முறையினாலோ ஆணைகளைப் பிரகடனப்படுத்த முடியாது. குடியரசு ஆட்சி பொது அமைதியையும் மற்றும் மக்கள் உரிமைகளையும் கட்டிக்காக்கும் என உறுதியளிக்கிறது.

சனநாயகக் குடியரசு

மக்களுக்காக மக்களே நடத்தும் மக்களின் அரசே சனநாயகம். மக்களே அரசர். அவர்களே ஓட்டளிப்பதன் மூலம் பொதுவான சட்டங்களை முடிவு செய்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டதிட்டத்தில் கூறப்பட்டதுபோல் தேர்தல் மக்களின் நேரடி வாக்கெடுப்பின் மூலமாகவோ அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மூலமாகவோ நடைபெறும். வாக்குரிமை பொதுவானது. சமத்துவமானது மற்றும் இரகசியமானதுமாகும்.

சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வாக்காளர் என்பவர் 18 வயது நிறைந்த, தங்களுடைய குடியுரிமை மற்றும் அரசியல் உரிமையை இழக்காத எல்லா ஆண் அல்லது பெண் பிரஞ்சு பிரஜைகள் ஆவார்.

வேட்பாளராக நிற்க மற்றும் அரசியல் பதவி வகிக்க ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமையைச் சட்டம் அளிக்கிறது. பிரஞ்சு மக்களாட்சி என்பது எல்லோருடைய சம்மதத்துடனும் பங்கேற்பின் மூலமும் உருவான ஒப்பந்தத்தையே குறிக்கின்றது. பிரஞ்சு மக்களின் பெயராலேயே நீதி வழங்கப்படும். பண-ஆள் பலத்தைவிடச் சட்டமே மேலோங்கி நிற்கும்.

-தொடரும்-

இரண்டாம் குறுக்கெழுத்துப் போட்டி விடை