பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 15 août 2010

இன்றைய அறிமுகம் - அருள்மிகு இராமகிருட்டிண பரமஅம்சர்

18-2-1836 முதல் 16-8-1886 வரை வாழ்ந்த 19 ஆம் நுாற்றாண்டின் சிறந்த ஆன்மீகவாதி. இயற்பெயர் கதாதர் சாட்டர்ஜி. மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் சிறுவயதில் படம் வரைவதிலும், களிமண் சிலை செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலும் அக்கறை காட்டினார். பள்ளிப் படிப்பு வெறும் பொருள் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது எனப் பள்ளி செல்ல மறுத்தார்.

17 வயதில் குடும்பம் வறுமையுற, கல்கத்தா தட்சணேசுவர் காளி கோயிலில் புரோகிதராக இருந்த அண்ணன் இராம்குமாருடன் தங்கிப் பணி செய்தவர், அண்ணன் இறந்ததும் பூசாரியானார். கல்லுக்குப்  பூசை செய்கிறோமா அல்லது உண்மையிலேயே தெய்வத்தை வணங்குகிறோமா என்று குழம்பி, காளியிடமே காட்சியளித்துத் தன் குழப்பத்தைப் போக்க வேண்டினார். கோயிலருகே பஞ்சவடியில் தியானம் செய்தார். பின்னர் பொறுமையிழந்து காளி கையிலிருந்த வாளினால் தன்னையே கொலை செய்து கொள்ள முயன்றபோது சுயநினைவு இழந்து விழ, ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகப் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் அவர் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருக்க, பித்தம் பிடித்து விட்டது-திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று தாயார் நினைத்தபோது, அவரே கமார்புகூரின் அருகிலுள்ள செயராம்பாடி ஊரில் இருக்கும் சாரதாமணி என்னும் பெண்ணே தான் மணம் புரிய தகுந்தவள் என்று கூறினாராம்! ஆனால் மணந்த பிறகு, எல்லாப் பெண்களையும் காளி அவதாரமாகவே நினைத்த அவர் அவளையும் அவ்விதமே அலங்கரித்து அவள் காலில் விழுந்து வணங்கினார்.

பைரவி பிராம்மணி என்ற பெண்மணியிடம் தாந்தரிக சாதனைகள் கற்றார். தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்று 6 மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்ததாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில் சீதை, இராதை போன்றோரைக் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. இயேசு, நபிகள் ஆகியோரைக் கண்டதாக அவரே கூறியுள்ளார். இச்சாதனைகளைக் கேள்வியுற்று பலர் அவரைக் காண விழைந்து சென்றனர். அவர்களுள் விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். இராமகிருட்டிணரைத் தன் குருவாகவே அவர்  ஏற்றுக்கொண்டார்.  இராமகிருட்டிணரின் கூற்றுகளை மகேந்திரநாத் குப்தா என்பவர் குறிப்பெடுத்து, அந்த வேதாந்த கருத்துகள் “இராமகிருட்டிணரின் அமுத மொழிகள்” என மொழிபெயர்க்கப்பட்டன. கடைசிக் காலத்தில்  தொண்டைப் புற்று வந்து அவதியுற்ற இராமகிருட்டிணருக்குக் காசிப்பூரில் அவருடைய சீடர்கள் சிகிச்கையளித்தனர்.

அவா் பொன்மொழிகள்--

  1. எல்லா மதமும் ஒரே இறைவனை அடையும் பல வழிகள்.
  2. பூரண இறையருள் பெற்ற பின் போதனை செய்.
  3. உள்ளத்தைத் துாய்மையாக்கு. சத்தியம் பேசுதலே சிறந்த தவம்.
  4. எளிமையும், சத்தியமும் ஈசன் அருளைப் பெற வைக்கும்.
  5. பெண்ணாசை, பொன்னாசை வற்றினால் ஆன்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
இராசி சிமோன்