பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 décembre 2010

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

இப்போதுதான் வருடம் பிறந்தது போல இருந்தது. அதற்குள் வருடக் கடைசிக்கு வந்துவிட்டோம். இதனால்தான் காலத்தைச் சுழலும் சக்கரம் என்கிறார்கள். யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடத்தின் இறுதியில் இருப்பவர்கள் எப்போதும் அந்த ஆண்டின் வரவு செலவு, நல்லது கெட்டது இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது வழக்கம். நாமும் வாழ்க்கையின் இந்த ஓராண்டுக் கணக்கை, நிகழ்வுகளை, வெற்றிகளை, தோல்விகளை, துன்பங்களை, ஏக்கங்களை அலசிப் பார்ப்போம். அது   லாபமாகவும் இருக்கலாம், நட்டமாகவும் இருக்கலாம். சுக துக்கம் சுழல் சக்கரம் என்பார்கள். மேடு பள்ளங்களைச் சரி செய்துகொண்டு அடுத்த ஆண்டு ஓட்டத்துக்கு நம்மைத் தயார் செய்து கொள்வோம். இறைச் சித்தம் அல்லது பலரும் சொல்லும் விதி என்ற ஒன்று இருந்தாலும் வாழும் நாட்களில் நம் செயல்பாடுகளைத் திறம்படச் செயல்படுத்த நமக்குத் தேவை உடல், உள்ள நலன்கள். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.  இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படுமாயின் நாம் முடங்கிப் போய்விடுகிறோம். நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் மருத்துவத் தொடர்புடைய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லூசியா லெபோ

இன்றைய அறிமுகம்

  
கியூரி  அம்மையார் :

மேரி ஷிலேடோவ்ஸ்கா கியூரி  அம்மையார் உலகப் புகழ் பெற்ற சிறந்த விஞ்ஞானி. இவர் பௌதிகயியல் (Physics), வேதியியல் (Chemistry) - இரண்டு நோபல் பரி சுகளை வாங்கிய முதல் பெண்மணி ஆவார். பாரி ஸ்  பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரி யரும் இவரே. மேரி கியூரி  1867 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் பள்ளி ஆசிரி யர்களாகப் பணியாற்றியவர்கள். இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாரி ஸ்  நகரத்துக்கு வந்து அறிவியல் துறையில் பல பட்டங்கள் சோர்போன் (Sorbonne) பல்கலைக் கழகத்தில் பெற்றார். அத்தருணத்தில் பியர் கியூரி  (Pierre Curie) யுடன் ஒரே சோதனைச் சாலையில் வேலை செய்தார். இவர்களுக்கு 1895 -இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பௌதிகயியலில் தன் கணவர், மகள் இரேன் ஜோலியோ கியூரி , மருமகன் பிரெடிரி க் ஜோலியோ கியூரி  இவர்களுடன் நோபல் பரிசைப்   பகிர்ந்து கொண்டார். ஒரே குடும்பத்தில் அனைவரும் நோபல் பரிசு  பெற்ற பெருமையும் இவர்களையே சாரும். ஆனால் வேதியியலில் தனியாக 1911 -ஆம் ஆண்டு முதல் பெண்மணியாக நோபல் பரிசைப்  பெற்றார்.

மேரி கியூரி யின் ஆய்வு :

1896 -ஆம் ஆண்டு என்றி பெக்கரல் என்பவர் யுரேனியத்திற்கு வெளிசக்தி எதுவுமின்றி தன்னந்தனியாக கதிர் அலைகளைப் பரப்பும் சக்தி உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் மேரி கியூரி , பிட்ச்பிலண்ட் (pitchblende) , சாக்கோலிட் (chacolite) என்ற யுரெனியக் கனிமங்கள் இரண்டில் ஆராய்ச்சி நடத்தியதில், யுரேனியம் தவிர பொலோனியம் (Polonium) , ரேடியம் (Radium) என்ற பொருட்கள்  யுரேனியத்தைக் காட்டிலும் கதிர் அலைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும் என்று கண்டறிந்தார். 

மேரி கியூரி யின் புதிய கண்டுபிடிப்பான கதிர் இயக்கத்தன்மை (radiography)  விஞ்ஞான உலகில் திருப்பத்தை அளித்தது. இதன் மூலம் அணு என்பது ஒரு பொருளின் மிகச்சிறிய பாகம் என்பது அல்ல என்றும் ஒரு அணுவின் கதிர் அலைகள் புதிய பொருட்களையும் உண்டாக்கும் என்றும் நிருபிக்கப்பட்டன. மேலும் அணுவில் அதிக அளவு சக்தி அடங்கியிருக்கிறது என்பதும் மருத்துவத் துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் காண்கிறோம்.
கதிர் அலைகள் சம்பந்தப்பட்ட தம்முடைய ஆராய்ச்சியின்போது பாதுகாப்புச் சாதனம் எதனையும்; உபயோகப்படுத்தாததால் அவர் உடல் பாதிக்கப்பட்டு 1934 -ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

கியூரி  அம்மையாருக்குக் கிடைத்த பெருமைகள்:
இரண்டு நோபல் பரி சுகளைத் தவிர டேவி பதக்கம் (Davy medal), மெட்டச்சி பதக்கம் (Matteucci medal), இலியட் கிரஸ்ஸன் பதக்கம் (Elliott Cresson medal) போன்றவற்றையும் பெற்றார்.
பிரஞ்சு லெழியோன் தொன்னர் (French Legion of Honor) பெற்றார்.
பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கி இவரைக் கௌரவித்தன.
புகழ் பெற்ற பாந்தேயோனில் (Paris Panthéon) அடக்கம் செய்யப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார்.
போலந்து நாடு இவருடைய படத்தை நாணய நோட்டில் அச்சிட்டுக் கௌரவித்தது. பிரான்சில் 500 யுரோ நோட்டில் இவர் படம் அச்சடிக்கப்பட்டது.
இவருடைய பெயரைத் தாங்கிய  பல்கலைக்கழகங்களும்  நிறுவனங்களும் ஐரோப்பிய நாடுகளிலும்  அமெரிக்காவி லும் உள்ளன.

சுகுணா சமரசம்

பழமொழிகளும் மருத்துவமும்

கடம்பு:

கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப் புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும். ஆகவே  'உடம்பை முறித்துக் கடம்பில் போடு” என்னும் பழமொழி உருவாயிற்று.

வெங்காயம்:

'வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை” என்றொரு பழமொழியுண்டு
இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை நீக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. இதனால்தான்  வெங்காயத்தை,  அனைத்து உணவு வகைகளைச் செய்கின்றபோதும்  அதிகம் பயன்படுத்துகிறோம். வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. 

வல்லாரை:

வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பர். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும்.  'வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்” என்னும் பழமொழி இதன் மருத்துவச் சிறப்பைக் குறிக்கிறது.

ஆவாரை:
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும். மேலும் நீரழிவு நோயை ஆவாரையின் பு+ கட்டுபடுத்தும். இதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் 'ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?” என்று கூறியிருக்கிறார்கள்.

சுக்கு:

நமது பெரியோர்கள் 'சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை” எனப் பழமொழியில் இதன் சிறப்பை  எடுத்துரைத்துள்ளனர்.பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. நோய்கள் உடலைத் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு. 

மிளகு:

'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்”-
மிளகு உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்குவதில் சிறந்தது.  பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவை அளித்தாலும்; உணவிலுள்ள நச்சுகளைப் போக்கும் என்பதே இப்பழமொழியின் பொருள். பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

புற்று நோய் (Cancer) - சிறு விளக்கம்

உலகில் பல உயிரி னங்களையும் படைத்த இறைவன், அவற்றின் கூடவே நோய்களையும் தந்து,  தன்னுடைய இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கின்றார். மனித இனத்தைப் பொருத்தவரை, சாதாரண 'தலைவலி” முதல் 'எய்ட்ஸ்” போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரை எண்ணில் அடங்கா எத்தனையோ நோய்கள். இதில் 'புற்று நோய்” என்பது இன்று மனித இனத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும்  கொடிய நோய் ஆகும்.

புற்று நோய் என்பது கிருமிகளால் பரவும் தொற்று நோயன்று. நம் உடலிலுள்ள உயிரணுக்களின் தான்தோன்றித்தனமான செல்கள்தான் இதற்குக் காரணம். புற்றுநோய் என்பது ஒரே தன்மையுள்ள நோயுமன்று. உயிர் அணுக்கள் கட்டுக்கடங்காமல் எந்த வடிவில் பெருகினாலும் அது புற்றுநோய் எனப்படுகிறது. இந்நோய்க்கெனத் தனியான அடையாளங்கள் கிடையாது.
பாலினச் செல்களாகிய 'விந்து அண்டம்” என்ற இணைவிகள் மரபுப் பண்புகளைப் பெற்றோர்களிடமிருந்து வழித் தோன்றல்களுக்கு எடுத்துச் செல்கின்றன. இவ்விணைவிகளில் காணப்படும் ஒரு பொதுவான பொருள் 'குரோமசோம்கள்” எனப்படும். இதில் நியுக்ளிக் அமிலம் மற்றும் புரதம் என்று இரு வேதிப் பொருட்கள் உள்ளன. உயிரி யல் ஆய்வின்படி இந்த நியுக்ளிக் அமிலம்தான் மரபுப் பண்புகளை எடுத்துச் செல்கிறது. இந்த நியுக்ளிக் அமிலம்,  டி. என். ஏ (டிஆக்ஸி  ரி போ நியுக்ளிக் அமிலம்), ஆர். என். ஏ (ரி போ நியுக்ளிக் அமிலம் ஆகும்).
குரோமோசோம்களில் நிறைய துகள்கள் அடங்கியிருக்கும். இவை 'ஜீன்கள்” எனப்படும். இந்த ஜீன்கள் தாறுமாறாகச் சிதறி கிடக்காமல் ஒரு நூல் இழையில் சீராகக் கோர்க்கப்பட்ட மாலை போல் இருக்கும். ஜீன்கள் ஒன்றைப்போலவே ஒன்று இருக்காது. ஒவ்வொன்றும் ஒரு உடலமைப்பை உருவாக்குவதிலேயோ, ஒரு சாயலை ஏற்படுத்துவதிலேயோ முனைப்புடன் இருக்கும். எல்லாம் ஒன்றிணைந்து உடலினை உருவாக்கும்.

டிஆக்சி ரிபோ நியுக்ளிக் அமில (டி.என். ஏ) மூலக் கூற்றில்தான் ஒவ்வொரு உயிரணுவின் செயல்முறை பற்றிய குறிப்பு உள்ளது. இந்தக் குறிப்பில் ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும், அது உயிரணுவின் செயல் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவுதான் உயிரணுப் பெருக்கம். ஒரு ஜீனிலுள்ள புரோட்டீன் உருவாக்கக் குறிப்பிலுள்ள ஒரு அமினோ அமிலத்தில் ஏற்படும் ஒரே ஒரு சிறு மாறுதல், பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இம்மாதிரி  மாறுதலைடைந்த ஜீனினால் மற்ற ஜீன்களும் கடும் மாறுதலை அடைகின்றன. இந்த ஜீன்களால் உருவாக்கப்படும் உயிரணுதான் புற்றுநோய் உயிரணுக்களை உற்பத்திசெய்து பெருக்கமடையச் செய்கின்றது.

புற்று உயிர் அணுவில் உள்ள குரோமசோம்களில் புற்றுநோய் ஜீன்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண உயிரணுவைப் புற்று உயிர் அணுவாக மாற்றுகின்றன. இவை கோடிக்கணக்காகப் பெருகிப் புற்று(நோய்)க் கட்டியை உருவாக்குகின்றன. வரம்பும், ஒழுங்கான உருவ அமைப்பும் இல்லாத புற்று உயிர் அணுவின் வளர்சிதைவு மாற்றத்துக்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) தேவையில்லை. சாதாரண உயிர் அணுக்களின் வளர்சிதை மாற்றம் பிராணவாயு இன்றி நடைபெறாது. மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை உடலில் உள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.
புற்று உயிர் அணுவை மூடியுள்ள மெல்லிய திரை போன்ற உறை, சாதாரண உயிரணுக்களை மூடியுள்ள மெல்லிய திரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். அயல் பொருட்களினால் பாதிப்படையாமல் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு மூலப் பொருள் அடங்கிய மென்திரையே, புற்று உயிரணுவை மூடியிருக்கும்;. இம்மூலப் பொருள் அடங்கிய உறை புற்று உயிரணுக்களின் தற்காப்பாகச் செயல்படுகின்றது. 

புற்றுநோய் பரவும் விதங்கள்:

-    இரத்த நாளங்களின் சுவர்களில் தோன்றி இரத்த ஓட்டம் மூலமாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுதல்
-    ஊனீர் ஓட்டத்தில் கலந்து, ஊனீர்ச் சுரப்பிகளுக்கும் பரவுதல்
-    ஒரு திசுவில் தோன்றி மற்ற திசுக்களுக்கு நேரடியாக ஊடுருவிச் சென்று பரவுதல்

புற்று நோயானது, உடலின் எல்லா பாகங்களையும் தாக்கக் கூடிய நோயாகும். சொpமான மண்டலத்தில், வாய் முதல் ஆசனவாய் வரையிலும், சுவாச மண்டலத்தில், மூக்கு, மூச்சுக்குழல், நுரையீரல் போன்ற பகுதிகளிலும், சிறுநீரகம் தொடர்பான உறுப்புக்களிலும், தோல், எலும்பு மஜ்ஜை, இரத்தம், மூளை, பெண்களுக்கு மார்பகம், கருப்பை போன்ற உறுப்புக்களிலும் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புற்ற நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நூறு விழுக்காடு குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப நிலையில் கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், நோய்முற்றி மரணம் ஏற்படும் நிலை உருவாகும். இந்நோய் உண்டான இடத்தை மட்டும் பாதிக்காமல்,  நாட்கள் செல்லச் செல்ல உடலின் மற்ற பாகங்களிலும் பற்றிப்படரும் தன்மை கொண்டதால், ஆரம்ப நிலையிலேயே கவனித்தல் மிகமிக அவசியம். நோயை அதிகம் வளரவிட்டுச் சிகிச்சையை மேற்கொண்டால், முழுவதும் குணமாக்குவது  கடினம். நண்டின் வளையை ஒரு பக்கம் அடைத்தால் அது மறுபக்கமாக வழி ஏற்படுத்திக் கொண்டு வெளியேறும். இந்நோயும் அத்தன்மை கொண்டதால் ஆங்கிலத்தில் Cancer (கேன்சர்) எனப்பட்டது. கரையான் புற்றினை வெட்டி அப்புறப்படுத்தினால் அது முன்பைவிட வேகமாக வளர்ந்துவிடும். அதனால் தமிழில் சித்தர்கள் இந்நோயைப் 'புற்று” என்றனர்.

புற்றநோய்க கட்டியானது தொட்டால் கடினமாகவும் கீழே உள்ள திசுக்களில் ஒட்டி ஊடுருவி இருப்பதால், அசைக்க முடியாமலும் இருக்கும். புற்றுநோயைப்பற்றிய விழிப்புணர்வும், தெளிவும்; ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக அவசியம். ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலும் இவ்விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படுகின்றது.
பிரான்சு அரசு 50 வயதைக்கடந்த பெண்களுக்கு மார்பகத்திற்கான பரி சோதனையையும், 50 வயதைக்கடந்த ஆண், பெண் இருபாலாருக்கும் குடல் புற்றுநோய்ப் பரி சோதனையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள, சமூகப் பாதுகாப்பு மையங்கள் மூலம் வலியுறுத்துகிறது. இப்பரி சோதனைகள் செய்துகொள்வதன் மூலம், எந்தவிதமான பாதிப்புகளும் கிடையாது. மாறாக, நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, உரி ய சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிசெய்கிறது. இதை அலட்சியப்படுத்துவதற்கோ இதில் வெட்கப்படுவதற்கோ எந்த அவசியமும் இல்லை.

இறைவன் நமக்குக் கொடையாகக் கொடுத்த இவ்வுடலைப் பேணிக்காப்பது நமது கடமை. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. எந்த வயதாக இருந்தாலும் சரி
ஊக்கம் பெறுவோம்! உடல் நலம் காப்போம்!
உலகுக்கு  உழைப்போம்! உயர்வினைக் காண்போம்!

சரோசா தேவராசு

காளான்

தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆரம்பக் காலத்தில் தோன்றிய பூ ஞ்சை உயிரி னம் காளான் ஆகும். இவை தமது இனப் பெருக்கத்திற்குத் தேவையான விதைகளைப் பூக்கள் போன்ற வடிவில் உற்பத்தி செய்து கொள்கின்றன. பல தரப்பட்ட சூ ழ்நிலைகளிலும் காளான் வளரக்கூடியது. பெரும்பாலும் மழைபெய்து முடித்ததும் வெயில் அதிகம் படாத இடங்களில் இது வளரும். இயற்கையாக வளரும் காளான்களைப் பிடுங்குவர். சில வகை காளான்களை  உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டு ம்.
கோடை காலத்தை அடுத்து வரும் மழைக்காலம் முடிந்ததும் அதாவது குளிர் ஆரம்பிப்பதற்கு முன்பாகப்  பிரான்சில் பல காடுகளில் சிலர் குடும்பங்களுடன் சென்று காளான்களைப் பிடுங்கிச் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆதி மனிதர்களால் உண்ணப்பட்ட இயற்கை உணவு காளான். பண்டைய காலங்களில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரச வம்சத்தினர் தமது அழகை மெருகூட்டுவதற்காகக் காளானைத் தினமும் உணவில் சேர்த்து வந்தனர்.
காளானின் மருத்துவ குணங்களை அறிந்த சாதாரண மக்களும் தற்போது தமது உணவில் இதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு சிறந்த சைவ உணவு.

காளானில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மிக குறைவாகவும் உள்ளது. அன்றாடம் நமக்குத் தேவைப்படும் புரதத்தைக் காளானால்மட்டும் பூ ர்த்தி செய்ய இயலாது. ஆனால் இறைச்சி, மீன், பால், வெண்ணெய்  போன்றவற்றில்  காணப்படும் புரதத்தைப் போன்று காளான் புரதமும் தரத்தில் சிறந்து விளங்குகின்றது. பல தாது உப்புகளும் விட்டமின் B ,D, K உம் உள்ளன.

நோய்க்கு மருந்தாகும் காளான் :
காளான்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணமும், ரத்த சோகை நோய் வராமல் தடுத்து வாழ்வு காலத்தை அதிகரிக்கும் குணமும் உண்டு.
காளான் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.
நீண்ட நாட்களாகக் குணமாகாத காயங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
பெண்களின்  மலட்டுத்தன்மையை நீக்குவதுடன் கருப்பை தொடர்பான நோய்களையும் குணமாக்குகின்றது. மேலும் பெண்களின் மார்புப் புற்றுநோயைக் கட்டுபடுத்தவும் செய்கின்றது.

உடல் எடையைக் குறைக்கும் காளான்
அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதைத் தவிர்க்க முடியும் என்று டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளான்கள் பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்ய படுகிறது.
எளிதாகக் கிடைக்கக்கூடிய மரத்தூள், தவிடு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நம் வீடுகளிலேயே இதைப் பயிர் செய்யலாம். நம் தேவையைப் பு+ர்த்தி செய்வதுடன் குறைந்த காலத்தில் வருமானம் பெறவும் முடியும்.

காளானிலிருந்து காளான் சூப், காளான் கட்லட், காளான் சம்பல், காளான் சான்ட்விச் மற்றும் பல சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

லெயா

இணையமெனும் இனியவலை

புத்தகங்களில் காணக் கிடைக்கின்ற பல அரிய செய்திகளைக் கணிணித் தொழில்நுட்பம், இணையத்தின் வழியாகக் குழந்தைகளுக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஊடகமாகவும் இது விளங்குகின்றது.
இணையத்தைப் பிள்ளைகளுக்கு அறிமு
கப்படுத்துவது தொடர்பாகப் பெற்றோருக்கு அச்சம் இருந்துவருகிறது. ஆபாசக் காட்சிகளை அல்லது ஆபாச விடயங்களைப் படித்துத்  தம் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதே அந்த அச்சம்.  இதனால் தம் பிள்ளைகளுக்கு இணைய வசதி வழங்கத் தயங்குகின்றனர். இதிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளப் பல வழிகள் உள்ளன. அவ்வாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இணையம் என்னும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே இந்த ஆபாச இணைய தளங்கள். அவற்றைப் புறக்கணிப்போம். இதைக் கடந்து எத்தனையோ இணைய தளங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும் உற்சாகபடுத்தவும் உள்ளன.

இணைய தளங்களில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே நூறு விழுக்காடு  உண்மையானது என்றோ சரி யானது என்றோ சொல்ல முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட செய்தியைப்பற்றிப் பல இணைய தளங்களைப் பார்த்து மாணவர்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.

தற்பொழுது இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லையெனச் சொல்லலாம். எல்லா வயதினருக்கும் ஏற்ற தளங்கள் பல உண்டு. பள்ளி மாணவர்கள் இணையத்தைச் சரி யாகப் பயன்படுத்தினால் உலகையே அறியலாம். இதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரையும் 
ஆசிரியர்களையும் சார்ந்தது.  இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்தால் பிள்ளைகளின் வளாச்சி தடைபடும். அவர்களின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் அவர்கள் உற்சாகத்துடன் தமது அறிவை நல்ல முறையில் எளிதாகவும் விரைவாகவும் வளர்த்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து வித்தியாசமானது.  எனவே பெற்றோர் தமது குழந்தையின் தனிபட்ட உணர்வையும் ஆற்றலையும் புhpந்துகொள்ளும் தன்மையையும்; கருத்தில் கொண்டு அதற்கேற்பக் கணினியின் நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.  உங்கள் அனுபவங்கள் வாயிலாக சரியான ஒழுங்கு முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். கணினியைப் பயன்படுத்துவதற்கான நேரத்தை வரையறை செயவது மிகவும் அவசியம்.  இல்லாவிட்டால் பிள்ளைகள் அதிலேயே மூழ்கிபோய் வெளியுலக தொடர்பு, குடும்ப  சமூக செயல்பாடுகளிலிருந்து  விலகி கணினிக்கு அடிமையாகும் அபாயம் உண்டாகும்.

பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தும்போது, தொடக்கத்தில் உங்களால் முடிந்தவரை உடனிருப்பது நல்லது. அப்படி அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடமாடக் கூடிய பொதுஅறையில் கணினியை வைக்க வேண்டும். அவர்களுடைய சின்னச் சின்ன ஆர்வங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும்.

குழந்தைகள் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கும் வயதில்
இணையத்தைப் பாடசாலைத் தேவைகளுக்காகப்  பயன்படுத்தலாம். உதாரணமாக  கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்குப் பழக்கலாம் . வயது உயர உயரப்  பிள்ளைகள்  பல்வேறு  பத்திரிகைகள், கட்டுரைகள் வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டர்நெட்  chat  எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை விரும்புகின்றனர். தங்கள் வயதில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின்  விருப்பு வெறுப்புகளை அறிய இந்த உரையாடல் வழி வகுக்கிறது.  இவர்களுக்குரிய நல்ல chat  சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்தச் சொல்லிக் கொடுக்கலாம்.

 பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணினி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்களின்,  கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாகப் பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம்.
இணையத்திலிருந்தே சில கணினி விளையாட்டுக்களைப் இறக்கமும் (download) செய்து  கொள்ளும் வசதியும் உண்டு. பல விளையாட்டுக்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொண்டவை. இவை குழந்தைகளைப் பாதிக்கும். எனவே விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்.
   
15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஆராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. ஆசிரி யர் பள்ளியில் சொல்லி கொடுத்ததற்கு மேற்கொண்டு பல விடயங்களை  அவர்கள் தெரி ந்து கொள்ளலாம். ஆர்வ மிகுதி காரணமாகக் குருவை மிஞ்சிய சீடனாகவும் வழியுண்டு.

மேலும், தங்களுடைய மேற்படிப்புக்குக்கு எவ்வகையான துறையைத் தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற  விடயங்களைத் தீர்மானிப்பதற்கும் இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இன்றைய உலகின் வேலை வாய்ப்பானது பெரும்பாலும் கணினியைச் சார்ந்தே உள்ளது. குறிப்பாக  வெளி நாட்டில் வேலை செய்ய விரும்பும் பிள்ளைகள்  சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்றில் தேவையான பயிற்சி இருக்குமானால்  ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்து வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புண்டு. 
பல்வேறு உலக மொழிகளைக் கற்றுக்கொள்வது மாணவப் பருவத்தில் மிகவும் எளிது. அந்தந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரி யர்களிடம் கற்றுக் கொள்வதுதான் மிகுந்த பயன்தரும். அதற்கு உதவும் தளம்  
http://www.myhappyplanet.com/

   விடுமுறைக்குச் சுற்றுலா  செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல், ஒரு பொருளை வாங்கும் முன்பாக அதுபற்றிய செய்திகளை இணையம் வழியாகக் கண்டறிதல் போன்ற    பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படையுங்கள். பிறகு அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றிக்  குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து  முடிவெடுக்கலாம். ஆரோக்கியமான குடும்பச் சூ ழலையும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் இது வளர்க்கும். மேலும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் நன்கு புரி ந்து கொள்ள  இது   சிறந்த வழி.
   
உங்கள் பிள்ளைகளுக்குக்  கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவர்களை இணைய தளத்தின் வழியாக  வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தலாம். பிற்காலத்தில் தங்களுக்கென்று  தனியாக வலைப்பதிவு ஒன்றை உருவாக்க அவர்களை உற்சாகபடுத்தலாம்.

கணினி தொழில் நுட்பமானது கல்விக்கும்,  வாழ்க்கைக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிறந்த குடும்பம், முறையான கல்வி நல்ல நண்பர்கள், போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான  உளவளர்ச்சியினைத் தீர்மானிக்கின்றன. எனவே  கணினிக்கு அடிமையாகும் ஆபத்திலிருந்து நம் பிள்ளைகளைக் காத்துக் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த குடிமக்களாக அவர்கள் உருவாகத் துணை செய்வோமே!

லூசியா லெபோ