பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 décembre 2010

இணையமெனும் இனியவலை

புத்தகங்களில் காணக் கிடைக்கின்ற பல அரிய செய்திகளைக் கணிணித் தொழில்நுட்பம், இணையத்தின் வழியாகக் குழந்தைகளுக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஊடகமாகவும் இது விளங்குகின்றது.
இணையத்தைப் பிள்ளைகளுக்கு அறிமு
கப்படுத்துவது தொடர்பாகப் பெற்றோருக்கு அச்சம் இருந்துவருகிறது. ஆபாசக் காட்சிகளை அல்லது ஆபாச விடயங்களைப் படித்துத்  தம் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதே அந்த அச்சம்.  இதனால் தம் பிள்ளைகளுக்கு இணைய வசதி வழங்கத் தயங்குகின்றனர். இதிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளப் பல வழிகள் உள்ளன. அவ்வாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இணையம் என்னும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே இந்த ஆபாச இணைய தளங்கள். அவற்றைப் புறக்கணிப்போம். இதைக் கடந்து எத்தனையோ இணைய தளங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும் உற்சாகபடுத்தவும் உள்ளன.

இணைய தளங்களில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே நூறு விழுக்காடு  உண்மையானது என்றோ சரி யானது என்றோ சொல்ல முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட செய்தியைப்பற்றிப் பல இணைய தளங்களைப் பார்த்து மாணவர்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.

தற்பொழுது இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லையெனச் சொல்லலாம். எல்லா வயதினருக்கும் ஏற்ற தளங்கள் பல உண்டு. பள்ளி மாணவர்கள் இணையத்தைச் சரி யாகப் பயன்படுத்தினால் உலகையே அறியலாம். இதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரையும் 
ஆசிரியர்களையும் சார்ந்தது.  இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்தால் பிள்ளைகளின் வளாச்சி தடைபடும். அவர்களின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் அவர்கள் உற்சாகத்துடன் தமது அறிவை நல்ல முறையில் எளிதாகவும் விரைவாகவும் வளர்த்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து வித்தியாசமானது.  எனவே பெற்றோர் தமது குழந்தையின் தனிபட்ட உணர்வையும் ஆற்றலையும் புhpந்துகொள்ளும் தன்மையையும்; கருத்தில் கொண்டு அதற்கேற்பக் கணினியின் நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.  உங்கள் அனுபவங்கள் வாயிலாக சரியான ஒழுங்கு முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். கணினியைப் பயன்படுத்துவதற்கான நேரத்தை வரையறை செயவது மிகவும் அவசியம்.  இல்லாவிட்டால் பிள்ளைகள் அதிலேயே மூழ்கிபோய் வெளியுலக தொடர்பு, குடும்ப  சமூக செயல்பாடுகளிலிருந்து  விலகி கணினிக்கு அடிமையாகும் அபாயம் உண்டாகும்.

பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தும்போது, தொடக்கத்தில் உங்களால் முடிந்தவரை உடனிருப்பது நல்லது. அப்படி அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடமாடக் கூடிய பொதுஅறையில் கணினியை வைக்க வேண்டும். அவர்களுடைய சின்னச் சின்ன ஆர்வங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும்.

குழந்தைகள் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கும் வயதில்
இணையத்தைப் பாடசாலைத் தேவைகளுக்காகப்  பயன்படுத்தலாம். உதாரணமாக  கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்குப் பழக்கலாம் . வயது உயர உயரப்  பிள்ளைகள்  பல்வேறு  பத்திரிகைகள், கட்டுரைகள் வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டர்நெட்  chat  எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை விரும்புகின்றனர். தங்கள் வயதில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின்  விருப்பு வெறுப்புகளை அறிய இந்த உரையாடல் வழி வகுக்கிறது.  இவர்களுக்குரிய நல்ல chat  சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்தச் சொல்லிக் கொடுக்கலாம்.

 பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணினி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்களின்,  கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாகப் பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம்.
இணையத்திலிருந்தே சில கணினி விளையாட்டுக்களைப் இறக்கமும் (download) செய்து  கொள்ளும் வசதியும் உண்டு. பல விளையாட்டுக்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொண்டவை. இவை குழந்தைகளைப் பாதிக்கும். எனவே விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்.
   
15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஆராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. ஆசிரி யர் பள்ளியில் சொல்லி கொடுத்ததற்கு மேற்கொண்டு பல விடயங்களை  அவர்கள் தெரி ந்து கொள்ளலாம். ஆர்வ மிகுதி காரணமாகக் குருவை மிஞ்சிய சீடனாகவும் வழியுண்டு.

மேலும், தங்களுடைய மேற்படிப்புக்குக்கு எவ்வகையான துறையைத் தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற  விடயங்களைத் தீர்மானிப்பதற்கும் இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இன்றைய உலகின் வேலை வாய்ப்பானது பெரும்பாலும் கணினியைச் சார்ந்தே உள்ளது. குறிப்பாக  வெளி நாட்டில் வேலை செய்ய விரும்பும் பிள்ளைகள்  சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்றில் தேவையான பயிற்சி இருக்குமானால்  ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்து வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புண்டு. 
பல்வேறு உலக மொழிகளைக் கற்றுக்கொள்வது மாணவப் பருவத்தில் மிகவும் எளிது. அந்தந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரி யர்களிடம் கற்றுக் கொள்வதுதான் மிகுந்த பயன்தரும். அதற்கு உதவும் தளம்  
http://www.myhappyplanet.com/

   விடுமுறைக்குச் சுற்றுலா  செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல், ஒரு பொருளை வாங்கும் முன்பாக அதுபற்றிய செய்திகளை இணையம் வழியாகக் கண்டறிதல் போன்ற    பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படையுங்கள். பிறகு அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றிக்  குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து  முடிவெடுக்கலாம். ஆரோக்கியமான குடும்பச் சூ ழலையும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் இது வளர்க்கும். மேலும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் நன்கு புரி ந்து கொள்ள  இது   சிறந்த வழி.
   
உங்கள் பிள்ளைகளுக்குக்  கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவர்களை இணைய தளத்தின் வழியாக  வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தலாம். பிற்காலத்தில் தங்களுக்கென்று  தனியாக வலைப்பதிவு ஒன்றை உருவாக்க அவர்களை உற்சாகபடுத்தலாம்.

கணினி தொழில் நுட்பமானது கல்விக்கும்,  வாழ்க்கைக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிறந்த குடும்பம், முறையான கல்வி நல்ல நண்பர்கள், போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான  உளவளர்ச்சியினைத் தீர்மானிக்கின்றன. எனவே  கணினிக்கு அடிமையாகும் ஆபத்திலிருந்து நம் பிள்ளைகளைக் காத்துக் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த குடிமக்களாக அவர்கள் உருவாகத் துணை செய்வோமே!

லூசியா லெபோ