பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 janvier 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். மனிதன் வளர்ச்சியுற்ற பின் தன் வாழ்வியலைப் பதிந்து வைத்ததே "இலக்கியம்" எனப்படுகிறது. அது அந்தந்தக் காலக் கட்டத்தின் கண்ணாடியாகப் பிரதிபலித்து மாற்றங்களின் சான்றாக உலவுகிறது. வாழ்வே புதுமையாக இருந்த நேரத்தில், காதலும், அதன் நுண்ணிய உணர்வுகளும், அது கை கூடுவதற்கான முயற்சியுமே சுவையான களமாக ருசித்தது. அன்றாட வாழ்க்கைப் போராட்டம் வீரத்தின் வாயிலாக வெளிப்பட்டது.

பின்னர் நீதி, பக்தி போன்ற மனிதனை மேம்படுத்தும் இலட்சியங்கள் புராணங்கள், காப்பியங்கள் வழியே பரப்பப்பட்டன. மொழித் திறனும், கவிதை நுட்பமும் அவற்றுக்கு மெருகூட்டின. அவற்றோடு இசையும் சேர, உணர்வுகளின் வெளிப்பாடு மனதை மயக்கும் போதையாயிற்று.

விஞ்ஞானத் தாக்கத்தால் ஆராய்ச்சிகளும், அறிவியலும் வளர்ந்து இந்த இனியக் கனவுலகைக் கலைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். கணினி யுகம் ஓர் புது இயந்திரத்தனத்தை மனிதனுக்குள் நுழைத்து விட்டது. அவனது சிந்தனைகள் இயற்கையை வாழ்வோடு இணைத்து ரசிப்பதிலிருந்து மாறுபட்டு, வறண்டு போய்விட்டன. அவை சூழலுக்கேற்ப பொருந்தினாலும் மனதோடு உறவாடாமல் எட்டியே நிற்கின்றன. எப்படி பொருளாதார மேம்பாடு மேலோட்டமாக உறவுகளைக் கொள்ள வைத்ததோ அதே போல உணர்வுகளை இவைத் தனிமைப்படுத்தி விட்டன.

இன்றைய இலக்கியம் செழிப்புற்று மக்களைச் சென்றடைகிறதோ இல்லையோ 'திரை உலகம்' முன்னணியில் நின்று கவனம் ஈர்க்கிறது. அதில் எழுதுபவர்கள் சமூக அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள். பெரும்பாலான இளைய சமுதாயம் அதன் வழியேதான் தமிழையே காண்கிறது. அதனால் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்குத் திரை உலக எழுத்தாளர்களும், கவிஞர்களும் பொறுப்பாகிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் கற்பனை, சொல்லாற்றல் தமிழினத்துக்கு எந்த வகையில் உதவுகிறது என்று பார்ப்பதில் தவறேதும் இல்லை.

'யாரேனும் மணிகேட்டால் அதைச் சொல்லக்கூடத் தெரியாதே 
 காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே' - என்றொரு பாடல்.

காதலில் மூழ்கி விட்டால் நேரம், காலம் என்பதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை என்பதே சொல்ல வரும் கருத்து. இதையே முன்பொரு காதலி,

"தூக்கமில்லை, வெறும் ஏக்கமில்லை - பிறர் 
 பார்க்கும் வரை எங்கள் பிரிவுமில்லை" என்றாள்!

'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
 யூற்றான், எலெக்ட்ரான் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை?' - உயிரூட்டும் காதலை ரசாயன மாற்றமாக மலிவாக்கும் வரிகள்.

இவ்வேளையில் "அமுதூற்றினை ஒத்த இதழ்களும், நிலவூறித் ததும்பும் விழிகளும்" என்ற சொற்றொடர் நினைவில் வந்து மோதுவதைத் தடுக்க இயலவில்லை!

சிதறடிக்கும் இசைக்கருவிகளின் நடுவே, வந்து விழும் அரிதான மெல்லிசையும், வளர்ந்து வரும் புகைப்படத் திறமையும், குரலின் மென்மையும்  இப்பாடல்களை வெற்றியின்பால் கொணர்கின்றன. 

இன்னும் 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது', 'லவ்வுல மாட்டுனா டாருதான்டா', 'ஒரு பொண்ணு என்ன சுத்தி வந்து டாவடிச்சாடா' என்னும் 'பிரபல' பாடல்கள் நிறைய உண்டு.

இசையோடு இயைந்து, பாடலில் மயங்கி, மனதோடு கொஞ்சும் தமிழ் கேட்க மனம் ஏங்குகிறது. தமிழின் இனிமையையும்,  பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையின் நயம் தரும் மாயத்தையும் மீண்டும் பெற இறைவனை வேண்ட வேண்டுமோ!?  

திருமதி சிமோன்

பொங்கல் திருநாளே பொங்கு!



   எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
   சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
   சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
   பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
   திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
   இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
   தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
   ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
   மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
   உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
   வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
   பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
   செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
   பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
   மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
   ஒன்றென்றே ஓதி  உணர்வுறுக ! - நன்றாடித்
   தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
   உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
   தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
   வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
   எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   
 கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

ஆத்திசூடியின் அருமையும் பெருமையும்



A for apple; B for bat; C for cat
A - arbre; B - ballon; C - chien; D - domino
- அணில் ; - ஆடு; - இலை ; - ஈட்டி
உயிர் எழுத்துக்களின் அகர வரிசையை இப்படித்தான் கற்றுவந்துள்ளனதற்காலத் தலைமுறைகள். மிகப் பழைய காலத்தில் அதாவது குருகுலம்திண்ணைப்பள்ளிகளில் உயிர்  எழுத்துக்களின் எழுத்து வடிவத்தைக் கற்பிக்கும் முன்பாகவே அவற்றின் அகர வரிசையைப் பிள்ளைகளின் மனத்தில் பதியுமாறு செய்ய அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல். . . .  சொற்றொடர்களை மனனம்  செய்ய வைத்தார்கள் ஆசிரியர்கள். அறிவுரைகளை அல்லது நீதிகளைப் பிஞ்சு மனத்தில் பசுமரத்தாணி போல முத்திரை குத்துவதையே இலக்காகக் கொண்ட இந்த நீதி நூல்தான் குழந்தைகள்  முதல் முதலாகப் பயின்ற தமிழ் இலக்கியம் ஆகும்.
இதை இதைச் செய், இதை இதைச் செய்யாதே என்று தாய் தன்  குழந்தைக்கு ஆணையிட்டு வழிநடத்துகிறாள். அதுபோல  நம் தமிழ் மக்களைத், தமிழ்ச் சமுதாயத்தை நல்வழிப்படுத்த எளிய, சிறிய சொற்களால் கட்டளை இடும் பாணியில் 12 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியதுதான் மேற்குறிப்பிட்ட இலக்கியம் .
'ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே'
என்ற  கடவுள் வாழ்த்துடன் இந்நூல் தொடங்குவதால் 'ஆத்திசூடி' என்பதே இந்நூலின் பெயராயிற்று.
மொழிக்கு முதலில் வரக்கூடிய எழுத்துக்களைக் கொண்டும் வராத சில எழுத்துக்களுக்கு உயிரெழுத்தைச் சேர்த்தும் முறையாக அறநெறிகளை 109 பாக்களில்  கூறுகிறார் ஔவை

இதன் மற்ற சிறப்புகள்:
  •   மதம், கடவுள், வழிபாடு பற்றிப் பேசுவது கிடையாது.
  •  எல்லாக் காலம், மொழி, நாடு, மதங்களுக்கும்  இந்த அறிவுரைகள் பொருந்தும்.
  •   ஆண்-பெண்; சிறியவர்-பெரியவர்; ஏழை-பணக்காரர், கற்றவர்-கல்லாதவர் . . . நல்ல நிலையில் இருப்பவர் இல்லாதவர் என அனைவருக்கும் இவை  அவசியம் தேவை.
  •  அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.
எவை பற்றி எல்லாம் பேசுகிறது இந்நூல்?
தனி மனித ஒழுக்கம்:

அறம் செய விரும்பு  - விரும்பித் தர்மம் செய்ய வேண்டும். எந்தச் செயலையும் விருப்பத்துடன் செய்தால்தான் அதை அடிக்கடி ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.
அறம் என்ற சொல் ஒழுக்க நெறியையும் குறிக்கும் ஆதலால் அறநெறியில் நிற்க ஒருவன் விரும்பவேண்டும் என்றும் பொருள் உண்டு.
ஆறுவது சினம்:
தணியவேண்டியது கோபம்.
இயல்வது கரவேல்:
உன்னால் முடிந்ததை மறைக்காதே- சொல், செயல், பொருள், திறமை,நேரம்.......உன் பங்களிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.
 ஈகை:
ஈவது விலக்கேல்
தானமது விரும்பு
ஐயமிட்டு உண்
 உழைப்பு:
சோம்பித் திரியேல்
மண்பறித் துண்ணேல்
கைவினை கரவேல்
என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் கூறுகிறது
கல்வி:
எண் எழுத்து இகழேல் - கணக்கையும் மொழியையும் (இலக்கணத்தையும்) கற்க வேண்டும்.
இதையே கொன்றை வேந்தனில் அவ்வை ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்என்பார். திருவள்ளுவரோ சற்று நீட்டி முழக்கி '
"எண்  என்ப ஏனைய எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்குஎன்பார்.
இளமையில் கல்
ஓதுவது ஒழியேல்
நூல் பல கல்
கேள்வி முயல் - படிக்க முடியாவிட்டாலும் கற்ற பெரியவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேள் என்பதாம்.
 தன்னம்பிக்கை:
ஊக்கமது கைவிடேல்
 விவசாயத்தின் அவசியம்:
  பூமி திருத்தி உண்
 
நெற் பயிர் விளை
 நீதி:
ஓரஞ் சொல்லேல் - ஒரு பக்கம் சாயாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும்
 வியாபாரம்:
அஃகஞ் சுருக்கேல்- விற்கும் தானியத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்காதே என்பதாம்.
வீணான ஆடம்பரம் தவிர்:
இடம் பட வீடிடேல்
 சமுதாய ஒழுக்கம்:
ஊருடன் கூடி வாழ்
ஒப்புரவு  ஒழுகு
தேசத்தோடு ஒத்து வாழ்
மற்றவருடன் பேசும் முறை:
வெட்டெனப் பேசேல்
ஔவியம் பேசேல்
பிழைபடச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
நொய்ய வுரையேல்
வல்லமை பேசேல்
சித்திரம் பேசேல்
சுளிக்கச் சொல்லேல்
நாம் சொல்ல விரும்புவதைத் தடுமாற்றமின்றித் தெளிவாக பிறர்க்குப் புரியும்படிப் பேச வேண்டும் என்பதை ஔவையார்
மொழிவதற மொழி என்கிறார்.
அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார், ‘போர்த் தொழில் புரியேல்‘  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஔவையார் சொல்கிறார் – ‘கெடுப்பது ஒழி'
பிறருக்குத் தீமை செய்யும் வழக்கத்தை அடியோடு விட்டுவிடு.
இதன்படி நடந்தால் அன்றாடம் நாம் கேள்விப்படும் வழிப்பறியும் கொள்ளையும்  கொலையும் வன்முறைகளும் நடக்குமா?
உடல் சார்ந் செய்திகளும் இதில் உள்ளன. காட்டாக:
சனி நீராடு
இலவம் பஞ்சில் உறங்கு
வைகறை துயில் எழு
அனந்த லாடேல் ( மிகுதியாகத் தூங்காதே)
மீதூண்  விரும்பேல் - மிகுந்த உணவை விரும்பி உண்ணாதே
நுண்மை நுகரேல் - நொறுக்குத் தீனி உண்ணாதே
கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால்தான் அந்தக் காலத்தில் நிரிழிவு நோய் இல்லை போலும்.
மேலும் நட்பு,,. .  பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளன.
ஆத்திசூடியில் வரும் சில சொற்றொடர்களை நாம் இன்றும் பழமொழிகளாகக் கூறிவருகிறோம்
பருவத்தே பயிர் செய்
உத்தமனாய் இரு
செய்வன திருந்தச் செய்
பிற்காலத்தில் பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதினார். அவரை அடுத்துப் பாரதிதாசனார் இளையோர் ஆத்திசூடி எழுதினார். இவை இண்டும் அந்தந்தக் காலச் சூழ் நிலைக்கேற்ப அவ்வையின்  பாடு பொருளில் இருந்து வேறுபட்டவை.
-London bridge is falling down, falling down
-Ringa ringa roses
போன்ற பொருளற்ற, பாடல்களை நம் மழலைச் செல்வங்கள் சொல்வதைக் கேட்டுப் பூரிக்காத பெற்றோர் இல்லை எனலாம். உண்மைதான். கூடவே நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் 'ஆத்திசூடிஎளிய பாடல்களை சிறு வயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் கடமையாகும். அவர்கள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். வருங்காலத்  தலைவர்களாகும் அவர்களின் மனம் பிஞ்சிலேயே  பண்படுத்தப்படவேண்டுமே தவிர பிஞ்சிலேயே பழுக்க விட்டுவிடக்கூடாது.முதலில் பெற்றோர்  இத்தகைய நூல்களைக் கற்போம்.நம்பிள்ளைகள்  அவற்றைப் படிக்க ஊக்குவிப்போம்.

மிகவும் புகழ் பெற்ற தமிழ் அறிஞரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறி முடிக்கிறேன்
"ஆங்கிலம் படித்தால் இங்கே நன்றாக வாழலாம். வட மொழி(சமஸ்க்ரிதம்)படித்தால் அங்கே (மோட்சத்தில் ) நன்றாக வாழலாம் . எது படிக்கிறாய்?" என்று தந்தை மகனிடம் கேட்டாராம். மகனின் பதில் என்ன தெரியுமா?
"எங்கும் நன்றாக வாழத் தாய்மொழி தமிழையே படிக்கிறேன்" என்றாராம்.
நம் தாய்மொழியாம் தமிழ் என்னும் கடலில் மூழ்கி நல் முத்துகளாம் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவு பெறுவோம்

திருமதி.லூசியா லெபோ