பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 janvier 2015

பொங்கல் திருநாளே பொங்கு!



   எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
   சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
   சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
   பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
   திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
   இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
   தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
   ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
   மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
   உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
   வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
   பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
   செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
   பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
   மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
   ஒன்றென்றே ஓதி  உணர்வுறுக ! - நன்றாடித்
   தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
   உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
   தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
   வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
   எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   
 கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

Aucun commentaire:

Enregistrer un commentaire