பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 octobre 2010

உருப்படியாய் நாமென்ன செய்தோம்?

பார்புகழும் பௌத்தமதச் செம்மல்! நல்ல
  பண்புடைய உலகமகான் புத்தர், இங்கே
சோர்ந்தவுளந் தனைக்கண்டு நொந்தார்!
   சூழ்ந்துழலும் கொடுமைமிகு நிலையைக் கண்டு
நீர் வழியும் கண்களுடன் மனையை விட்டு
  நிம்மதியை நாடிமனம் துறவு பூண்டார்!
சீர்பெறவே நன்னெறியைக் கண்டார்! சான்ற
  சித்தார்த்தன் நல்லறத்தின் தந்தை யன்றோ!

கன்னிமரி பெற்றெடுத்த செல்வம்! நல்ல
  கற்பகமாய் வந்துதித்த தங்கம்! நாளும்
தன்னுயிர்போல் மன்னுயிரைக் காத்து நின்று
  தரணியிலே நற்கருமம் செய்தார்! ஆனால்
தன்னறிவு சிறிதுமிலாப் புல்லர் கூட்டம்
  தந்தகொடும் துயருக்கே எல்லா உண்டோ?
எண்ணரிய நம்பாவம் அனைத்தும் தாங்கி
  ஏசுபிரான் சிலுவையிலே மாய்ந்தார் அய்யோ!

மக்களிடை நிலவிவரும் தீய கொள்கை
  மாண்டிடவே நபிநாதன் மண்ணில் தோன்றித்
தக்கதொரு ஞானவருள் குர்ஆன் ஒன்று
  தந்துபுவி காத்துநலந் தந்தார்! மாந்தர்
எக்குடிய ராயிருப்பின் அல்லா வன்றி
  எப்போதும் நன்மையிலை அறிவீர் என்ற
பக்தியுடன் இச்லாத்தார் போற்று கின்ற
  பரம்பொருளாம் நாயகனார் சொல்லிப் போந்தார்!

நாட்டிற்கே சுதந்திரமே வேண்டு மென்றால்
  நயமாக நாமதையே பெறுவோம்! மேலும்
காட்டிடுவோம் நம்பலத்தை மாற்றா னுக்கே
  கண்ணியஞ்சேர் அகிம்சைவழி பாதை யென்றே!
பாட்டினிலே பாரதியார் பாடிப் போந்த
  பண்புமிகு காந்திமகான் நீதி சொன்னார்!
ஏட்டினிலே அவர்பெருமை கூறப் போகின்
  எழுத்தெல்லாம் அன்பென்ற வடிவங் காட்டும்!

கருணையுள்ள புத்தர்,ஏசு, நபி,நல் காந்தி
  கடமையுடன் நற்தொண்டு செய்தார் மண்ணில்!
உருப்படியாய் நாமென்ன செய்தோம் நாட்டில்?
  உண்மையிலே செயலில்லை! பேச்சே கண்டோம்!
ஒருவனுக்கும் ஒருநன்மை செய்தோம் இல்லை!
  ஒற்றுமையும் நம்மிடத்தில் துளியும் இல்லை!
வறுமை,பிணி நமைவிட்டே நீங்கிப் போக
  வழியுண்டோ? உலகோரே, உணர்வீர் இன்றே!

--கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை.