பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 27 mars 2012

எளியோரின் வலிமை





உலகை மாற்ற, கல்வி கற்றவர்களால், உயர் பரம்பரையில் வந்தவர்களால், தெய்வீக சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே முடியும் என்பதான மயக்கம் நம் எல்லோருக்கும் உண்டு. அதனால் நாம் எளியோரின் வாழ்க்கையை, அவர்களது எண்ணங்களை , அவர்கள் செயல்களை கவனித்துப் பார்ப்பதில்லை.ஆனால் சமூக நலனில் நாட்டம் கொண்டு அவர்கள் எத்தனை மகத்தானக் காரியங்களை மிக அமைதியாக செய்துவிட்டு அதற்கான அங்கீகாரம் இன்றி இருந்தாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள் என்று அறிந்தால், அவர்களைப் பற்றிய பெருமிதமும், நம் மீது குற்ற உணர்வும் ஒருசேர எழுவதைத் தடுக்க முடியாது.

 இருபத்தியிரண்டு வயதில் கார் விபத்தால் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஷிவானி குப்தா, சக்கர நாற்காலியில் இருந்தவாறே "அக்சஸ் எபிலிட்டி" என்ற அமைப்பைத் தொடங்கி, ஊனமுற்றோர் சமூகத்தில் எளிதாக நடமாட உரிமைக்குரல் கொடுத்து வருகிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தானம், கோவில்-சமூகத் திருப்பணியில் நிறைவைக் காண்கிறார் எம்.டி. கண்ணா (பெண்)

பத்மா ஸ்ரீநிவாசன் 'பிட்சா ஹெவென்' நடத்தி,லாபத்தில் முதியோர் இல்லம் அமைக்கிறார்.

சுனாமியில் தன் மூன்று குழந்தைகளையும் பறிகொடுத்த சூடாமணி பரமேஸ்வரன், சுனாமியால் அனாதைகளான இருபது குழந்தைகளுக்கு 'நம்பிக்கை' எனும் அமைப்பை நிறுவி ஆதரவு தருகிறார்.

வனிதா மோகன், தொழிலதிபராக இருந்துகொண்டே 'சிறு துளி' எனும் அமைப்பின் மூலம் கோவையின் நீர் ஆதாரங்களை வளப்படுத்துகிறார்.

ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மா. கோவை மாவட்ட பதினொரு குக்கிராமங்களில் 6500  மக்களுக்காக ஒரு உயர்நிலைப் பள்ளி, மூன்று தொடக்கப் பள்ளிகள், பஞ்சாயத்து நிதியிலிருந்து கட்டடங்கள் உருவாக்கியுள்ளார். பதவிக்கு வந்தபோது  வரவு 20000  இருந்ததை ஐந்து லட்சமாக்கியுள்ளார். தமிழகத்து ஊராட்சித் தலைவர்கள் சென்று பார்வையிடும்படி அரசாணை பிறப்பிக்குமளவு ஆட்சி செய்கிறார். இதுவரை 600  தலைவர்கள் பார்வை இட்டுள்ளனர்.


சாலு மரத திம்மக்கா கர்னாடக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் கிராமம் வரை (20  கிலோ மீட்டர் ) ஆயிரம் ஆலமரங்களை கணவரின் உதவியுடன்  நட்டு சாதனைப் படைத்திருக்கிறார். சிறந்த தேசிய குடிமகள் விருது உட்பட எண்ணிலடங்காப் பரிசுகள் குவிந்த போதும், அரசு கொடுத்த வீட்டைக் கூட புறக்கணித்துவிட்டு தனியே வாழ்கிறார்.

கோயம்பேடு மாநகராட்சி மிடில் ஸ்கூலில் தீப்பிடித்தபோது 400  குழந்தைகளுக்கு மேல் தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் காப்பாற்றி உள்ளார் லூர்து ராணி . தன்னை மறந்து குழந்தைகள் நலனே பெரிதாக மதிக்கும் இந்த ஆசிரியைக்கு உதவும் அவரது கணவரும் பாராட்டுக்குரியவரே !


மேற்கு வங்க பெர்ஹாம்பூரில் வசிக்கும் பாபர் அலி என்ற 16  வயது இளைஞன் மாலையில் ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறான். எண்ணிக்கைக் குறைய வறுமையே காரணம் என உணர்ந்து, இலவச அரிசியும் வழங்க ஆரம்பித்தான். தற்போது சில அரசு அதிகாரிகள் அவனுக்கு உதவ முன் வந்திருக்கிறார்கள்.


தன் ஏழ்மை, திருமண தோல்விக்கிடையே சி.மகாலட்சுமி அயராது உழைத்து,"சிறந்த கிராம சுகாதார செவிலி", இந்திய அரசின் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்கும் "ப்ளோரன்ஸ் நைன்டிங்கேல் விருது" பெற்றிருக்கிறார்.

தொகுப்பு: திருமதி சிமோன்