பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 août 2012

இன்றைய அறிமுகம் - பம்மல் சம்பந்த முதலியார்


வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமையாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவானவர்தான் பம்மல் சம்பந்த முதலியார்.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார்.விசயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிகளின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந்தார். அவரது தாயார் உணவு ஊட்டும்போது ராமாயணம், மகா பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாசங்களிலிருந்து பல  கதைகளைச் சொல்லி வந்தார். தான் நாடாக ஆசிரியன் ஆனதற்கு  இவையே காரணங்கள் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது
நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.

மாநிலக்கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து  பி.ஏ.,பி.எல். பட்டங்கள் பெற்று வழக்கறிஞராகவும் நீதியரசராகவும் பணியாற்றினார். ஆந்திர மாநிலம் பல்லாரியைச்  சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி    என்பவர் சென்னைக்கு வந்து விக்டோரியா மெமோரியல் மண்டபத்தில் தெலுங்கில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன .இதை போலவே நாடக சபை ஒன்றை நிறுவிச் சென்னையில் தமிழ் நாடகங்களை நடத்த வேண்டும் என்ற சம்பந்தனாரின் ஆவலுக்கு தூண்டுதலாக   அவர் நண்பர்கள் இருந்தனர்.விளைவு  1897 -இல் சுகுண விலாச சபை  உருவானது. இதுவே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகச் சபையாகும்.


நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான நிலையை  இவர்  மாற்றினார்.

நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர் இவர்.
அக்காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் எல்லாம் மங்கலமாகவே முடியும். இந்தப் போக்கை மாற்றி இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் எழுதினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தார்.
உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார். நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியை அமைத்துப்  பேசும் மொழி நடையைக் கையாண்டார்.
வடமொழி, ஆங்கிலம்(As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுற வணிகன் என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்துள்ளார்),   பிரெஞ்சு ( தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தை காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவலாக எழுதியுள்ளார்), செர்மன்  நாடகங்கள் அவரால் தமிழ் வடிவம் பெற்றன. 


நாடகக் கலையை மிகக் கவனத்தோடு வளர்த்தார்.  கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, காட்சிகள் அமைப்பது என நாடகத்தின்  ஒவ்வொரு நிலையிலும் மிகவும் நுணுக்கத்துடன் ஈடுபட்டார். இவைதான் இவர் நாடகங்களை வெற்றி பெறச் செய்து மக்களின் கரவொலியையும்  பாராட்டுதலையும் பெற்றுத்தந்தன.
அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும் மிகவும் புகழ்பெற்ற நாடகம் 'மனோகரா'. இந்த நாடகத்தின் முதல் காட்சியை  எழுதி முடிப்பதற்குள் அவரது தந்தை காலமானார்.மறுநாளே நாடகத்தின் இரண்டாம் பகுதியை எழுதினாராம். அவருடைய தாயும் மனைவியும் இறந்தபோதும் ' என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து" எனக் கூறித் தன் வேலையைத் தொடர்வாராம்.   நாடகம் அவருடைய இலட்சியமாக, உயிராக விளங்கியது.


சுகுணவிலாச சபையின் நாடகங்களில் (1895 - 1923 வரை) சம்பந்தம் ஹீரோ - ரங்கவடிவேலு ஹீரோயின் வேடம் ஏற்று நடித்தனர். சம்பந்தம் 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் ஏற்று 500-க்கும் மேற்பட்ட முறை நாடக மேடையில் நடித்திருக்கிறார்.  இவருடைய நாடகங்கள் மற்ற சபைகளாலும் மேடையேற்றப் பட்டுள்ளன. சில நாடகங்கள் வெள்ளித் திரையிலும் வெளிவந்துள்ளன.
சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் 94. புஷ்பவல்லி(இவருடைய முதல் நாடகம்), மனோகரா(பல சபைகளிலும் 859 முறை நடத்தப்  பட்டது), லீலாவதி,  சதி சுலோச்சனா, சபாபதி, சாரங்கதாரா(198 முறை நடிக்கப் பட்டது) , உத்தம பத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் எழுதிய நாடகங்கள் பெரும்பான்மையானவை அச்சு வடிவம் பெற்றுவிட்டன.


நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன நாடகம் தொடர்பாக இவர் எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார். பல இணையற்ற நாடக நடிகர்களையும்  நாடக ஆசிரியர்களையும் (எம்.கந்தசாமி முதலியார், வி.சி.கோபாலரத்தினம்) ஆகியோரைக் கலை உலகிற்குத் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரையே சாரும்.
இவர் பெற்ற விருதுகள்:
1916 ஆம் ஆண்டு ராவ்  பகதூர் பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.
1959- இல் பாரத அரசு பத்மபூஷன்  விருதை வழங்கிச் சிறப்பித்தது.  
91-வது வயதில், 1964 -ஆம் ஆண்டு செப்டெம்பர் 24-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கு சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய 'நாடகத் தந்தை", 'நாடகப் பிதாமகன்" என்ற பம்மல் சம்பந்த முதலியார் நினைவு என்றும் நிலைத்து நிற்கும்.

லூசியா  லெபோ


Aucun commentaire:

Enregistrer un commentaire