பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 juillet 2013

சிதையும் வாழ்வு

                                                       

மன பேதங்கள் உள்ள மகிழ்ச்சியை மட்டும் போக்குவதில்லை. சில வேளைகளில் முழு  வாழ்க்கையையும் போக்கி விடுகிறது. அது அழிந்து போவதில் யாருக்கும் சம்மதமில்லை. யாருக்கும் லாபமில்லை.

சென்ற வருடம் இந்தியாவில் 1,35,585 தற்கொலைகளை தேசிய குற்றப் பதிவேடு வெளியிட்டுள்ளது. தமிழகம் இதில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுத் தற்கொலை எண்ணிக்கை: 15,963.

இத்தனைப் பேரும் உண்மையிலேயே வாழ இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்களா அல்லது சடுதியில் கண்ட அவசர முடிவா?

இதில் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 24.3% பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு எது கொண்டு போயிருக்கும்?

மனம் வெறுமையுற்று, வாழ்க்கைப் பொருளற்றுப் போகும்போது தற்கொலை எண்ணம் எழலாம். தயவு செய்து நீங்கள் மிகவும் நேசிப்பவரிடமோ அல்லது உங்கள் மீது அன்பு கொண்டவரிடமோ , குறைந்தபட்சம் யாரோ ஒருவரிடமோ  அந்த எண்ணத்தைப்  பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர்கள் மூலம் ஒரு புதுப் பாதையும், அதில் செல்வதற்கான வெளிச்சமும், பற்றுக்கோலும் கிடைக்கக் கூடும். இயற்கை அற்புதமானது. மனிதம் இனிமையானது. அதில் ஒரு சிலரால் அல்லது சிலச் சூழ்நிலைகளால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக, அதையே இழப்பது பேதைமை. அந்த நேரத்தில் மட்டும் மன உறுதியோடு அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விட்டால், வேறோர் வடிவில் ஓர் இன்ப உலகம் உங்களுக்காகக் காத்திருக்கக் கூடும்!

வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு  வேறு வகையில்உயிரின் இருப்பை  அர்த்தமுள்ளதாக்கலாம் என்று எடுத்துணர்த்த வேண்டியக் கடமை அப்படிப் பட்டவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இருக்கிறது. ஒருவருக்குள் இருக்கும் எண்ணம் மற்றவருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் ஒருவரின் நடத்தையில் இருக்கும்  மாற்றம், விரக்தி, பற்றற்றத் தன்மை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. உடன் செயலாற்ற வேண்டியப் பொறுப்புடன் நட்பும், சுற்றமும் நடந்து கொண்டால், தற்கொலைகளை நிச்சயம் குறைக்க முடியும்! தள்ளி நிற்காமல் குறைந்த பட்சம் உன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நானிருக்கிறேன் என்ற புரிதலையும், நம்பிக்கையையும் கொடுப்போம். எந்த உயிரும் வாழ்வை வெறுத்ததல்ல.

அடுத்தபடி குடும்பத்தை ஆட்டம் காண வைப்பது விவாகரத்து. கணவனுக்கும், மனைவிக்கும் இடையே மற்றவர்களைக் காட்டிலும், முரண்படவும், கோபம் கொள்ளவும், சண்டையிடவும் இங்கே போதுமான ரகசியக் காரணங்கள் வேறு இருக்கும்.

2010இல் திருத்தப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில், 'சேர்ந்து வாழ முடியாதத் திருமணம்', 'சேரவே முடியாதத் திருமணம்' என்று வகைப் படுத்தி இருக்கிறார்களாம்! தகவல் தொழிற் நுட்பத்துறையில்தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுகின்றனவாம். படித்து, தன்  அறிவை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போவது எங்ஙனம்?

அவர்கள் அத்தனைப் பேருமே சந்தர்ப்ப வசத்தால் பொருந்தா இடத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்று எண்ண முடியவில்லை. அல்லது அத்தனை பேருமே துணையைப் பொறுக்க முடியாத அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்றும் நினைக்கத் தோன்றவில்லை. அந்த எல்லைக்கா மனிதத் தன்மை தொலைந்து விட்டது? பின் ஏன் இந்த நிலை?

இத்தனைக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணங்கள் மிகவும் குறைந்து விட்டன. அதிலாவது, தன் செயலுக்கானக் காரணத்தை அவர்கள் தலையில் போட்டு விட வசதி இருந்தது. பல நாட்கள் பழகி, தன் உயிரே அவள் அல்லது அவன் தான் என்பது போல தன்னை இழந்து,  இணைந்து வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவு நாளடைவில் தேய்ந்து போக என்ன காரணம்?

வாழ்க்கை மலர்கள் மட்டுமே நிறைந்த சோலை அல்ல. அங்கே முட்களும் உண்டு. தனக்குள்ள சோர்வும், பலவீனமும், கோப தாபங்களும், ஏமாற்றங்களும்  தன்  துணைக்கும் உண்டு என்பதை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?

எந்நிலை வரினும் சேர்ந்தே பயணம் செய்ய வேண்டும் என்ற மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். நாமே தேர்ந்தெடுத்த வாழ்வு, இதில் தோற்றால் எனக்கே அதில் பெருமை இல்லை என்ற உணர்வு வேண்டும். சோதனை நேரத்தை மனதிலிருந்து ஒதுக்கி, இதே உறவு தந்த இன்பத்தையும், இதைப் பெற ஏங்கியதையும், போராடியதையும் நினைவில் கொண்டால், எப்பாடு பட்டேனும் இந்த உறவைக் காப்பாற்றியே தீருவேன் என்ற வெறி வரும். அதற்கான முனைப்பு வரும். குழந்தைகள் இருந்தால், அவர்கள் பொருட்டு செய்யும் எத்தனையோ தியாகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே! பிரிந்து போய் விடுவதால் மட்டும் உள்ளத்திலிருந்து அவ்வுறவு துடைக்கப்பட்டு விடுமா? முதலில் கொண்டக் காதல் உண்மையானதாக இருந்தால் நிச்சயம் அது இந்தச் சலசலப்புகளை வென்று வாழும், வாழ வைக்கும்! காதல் உண்மையானதல்ல என்றே வைத்துக் கொண்டாலும், கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? எல்லோருக்கும் காதல் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாழ்நாள் முழுதும் யாரிடமும் அந்த உணர்வு வராவிட்டால் அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா என்ன!

கானலைத் தேடி அலைந்த வண்ணம் கிடைத்த வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதை விடுத்து, இருப்பதை செம்மையாக்கினால் என்ன! அதுவே இப்பிறவியின் சாதனையாக இருக்கட்டுமே! ஒரு இனியக் குடும்பத்தை விட இந்த உலகில் மகிழ்ச்சி  தருவதாக எது இருக்கிறது? பிரிபவர்களும் அது இனிமையாக இல்லை என்று தானே பிரிகிறார்கள்? இருவர் முனைந்து அதை இனிமையாக மாற்ற முடியவில்லை என்றால், அந்த இருவரும் வாழ்க்கையில் வேறு எதைத்தான் சாதிக்கப் போகிறார்கள்? 

தன்னைக் கண்டவுடன் இயல்பு நிலை மாறி மனைவியும், குழந்தைகளும் ஒதுங்கித் தங்களுக்குள் அமிழ்ந்து போக வைப்பது ஆணுக்கு வெற்றியும் அல்ல; கணவன் வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள தானே குடும்பத்தலைவி என்று இறுமாந்து போவது பெண்ணுக்கு வெற்றியும் அல்ல!

திருமதி சிமோன்


Aucun commentaire:

Enregistrer un commentaire