பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 août 2012

நாடக வரலாறு

                                                      

கிட்டத்தட்ட 2000 வருடங்களாக "நாடகம் "  என்றவோர்  கலை மக்களை மகிழ்வித்து வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழில் இது "கூத்து " எனப்பட்டது . ரசிகர் முன் நேருக்குநேர், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட    கதை , பாத்திரங்கள்-அவர்கள் உரையாடல் இவற்றோடு பாடல் , நடனம் ஆகியவற்றின் கலவையே நாடகம். அன்றைய "தெருக்கூத்து" வீதியில் நடத்தப்  பட்டே அப்பெயர் பெற்றது. (இன்றும் கிராமங்களில் இது நடைபெறுகிறது )பின்னர் மேடைகளில் நடிக்கப்பட்டது . அன்று முதல் இன்று வரை பொழுது போக்கு என்றாலும் புத்துணர்ச்சி தருவதாக, நடிப்பவர் - ரசிகர் இருவருக்கும் இடையில் உயிரோட்டம் தருவதாக நாடகங்கள் விளங்குகின்றன .  கலாச்சாரம் , அரசியல் , சோகம் , துக்கம் என கதைக்களன்      எதுவாக இருந்தாலும் உடனடி பலனைக் கண்கூடாக அறிந்து விடலாம் என்பதே இதன் சிறப்பு .

இந்தியாவில் கி .மு . 300 களிலேயே நாடகம் இருந்ததாகக் கூறப்படுகிறது . ரிக் வேத காலத்தில் ஊர்வசி , இந்திரன் -ராணி நாடகக் கலைஞர்களாக  காட்டப்பட்டனர்  முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து , பின்னர் ஹிந்தி ,மராத்தி பெங்காலி மொழிகளிலும் நாடகம் நடத்தப்பட்டது . ராமாயணம் , மகாபாரதம் , அர்த்த சாஸ்த்திரங்கள் நாடக உத்தியைக் கொண்டவை என்கிறார்கள் .பரத முனி இந்திய நாடகத் தந்தை என்றழைக்கப்படுகிறார் . இவரே பேச்சு , பாடல் , இசை , நாட்டியம் இவற்றை நாடகத்தின் அடிப்படையாக உருவாக்கினாராம் ! கி .பி . 15 வரை இந்தியாவில் தமிழ் கேரளம் ,கன்னடம், ஆந்திர -உத்திரப் பிரதேசங்கள் , குஜராத் என  நாடகங்கள் இதே பாணியில் நடத்தப்பட்டன .

அன்னியர் வரவினால் மாற்றங்கள் ஏற்பட , ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தனர் .  1765 இல் இரண்டு ஆங்கில 'காமெடி' நாடகங்கள் மேடையேறின . 1789 இல் காளிதாசரின் "சகுந்தலா " மொழி  பெயர்க்கப்பட்டது . பிறகு போர்ச்சுக்கல் நாட்டினர் பல ஆங்கில நாடகங்கள் மேடையேற வழி வகுத்தனர். விடுதலைக்குப் பின் இன்றைய நாடகங்கள் உருவாயின . திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார்.  முக்கியமாக நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தார். இவருக்கு  1972 இலேயே நாடகத்திற்காக பத்மஸ்ரீ விருது அளித்தது மத்திய அரசு.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிபி 1246 முதல் '72 வரை 3 ஆம் இராசேந்திர சோழன்  நாடகக் கலையைப் பெரிதும் வளர்த்தான் . 17 ஆம் நூற்றாண்டில் அரண்மனை, கோவில்களில் மட்டுமே நடந்துவந்த நாடகங்கள் மக்கள் மன்றத்துக்கு வந்தன . 19ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து கோவிந்தசாமிராவ் இக்கால நாடக முறைக்கு மாற்றினார் .

நாடகத்திற்கு உயிரூட்டியவர்கள் :

பம்மல் சம்பந்த முதலியார் : 1891 இலேயே தமிழ் உரைநடை நாடகங்கள் 100 க்கு மேல் நடத்தியதுமன்றி, நாடக ஆராய்ச்சி நூலும் வெளியிட்டார் .

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் : நடிகர் , இயக்குனர் ஆன இவர் தெருக்கூத்துகளைப் புதுப்பித்து 50க்கு மேற்பட்ட நாடகங்களை நடத்தினார் . நாடகத்தில் திருக்குறள்களைப் புகுத்தினார் . இவரது வள்ளித் திருமணம், பவளக்கொடி , சத்தியவான்சாவித்திரி , நல்லதங்காள் போன்றவை தமிழகத்தில் இன்றும் நடைபெறுகின்றன .

சிசின்னையா : கிருஷ்ண வினோத சபா மூலம் மின் விளக்கொளி, காட்சி அமைப்பு ,வண்ணத்திரை போன்றவற்றை அறிமுகப்படுத்தியதோடு, மேடையில்  மான், பசு ஆகியவற்றையும் நடிக்க வைத்தார் .

உர மளித்தவர்கள் : 

நவாப் இராசமாணிக்கம் :    இவரது நாடகமொன்று 8000 முறை மேடை ஏறியதாம் .

20ஆம் நூற்றாண்டில் 50 ஆண்டுகள் சீரான வளர்ச்சியினை நாடகம் கொண்டது.

சிவ சண்முகம் பிள்ளை 'சம்பூர்ண ராமாயணம் , அரிச்சந்திரா ', போன்றவற்றையும் ,
திக சண்முகம் திக பகவதி போன்றோர் புராணம் ,வரலாறு ,சமூகம் ,விடுதலை  போன்றக் கருத்துகளில் கிட்டத்தட்ட 75 நாடகங்கள்,   'ராஜ ராஜ சோழன் உட்பட அளித்தனர் .

1922இல் கிருஷ்ணசாமி பாவலர் தி .கே .எஸ் . சகோதரர்களுடன் இணைந்து பல தேசியப் படைப்புகள், கதர் வெற்றி உள்ளிட்டு அளித்தனர் .

மனோகர் 'இலங்கேஸ்வரன் ' முதலான நாடகங்களைத் தந்தார் . என்  எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையும் சமூகசீர்திருத்தமும் கலந்தளித்தார் .

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி மூலம் எம் ஜி ஆர்,  பி யு சின்னப்பா  போன்றவர்களும், மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபா மூலம் எம் ஆர் ராதா , சிதம்பரம் ஜெயராமன் போன்றோரும் பிரபலமடைந்தனர் .

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் நாடகங்களில் பங்கு கொள்ள ஆரம்பித்தனர் . எனினும் அப்போதிருந்த 69 சபைகளில் 6 சபைகளை பெண்களே நடத்தினர் !

பிறகு விடுதலை இயக்க நாடகங்கள் , நாவல்களை நடித்தல், திராவிட இயக்கங்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்புதல் என  போக்கு மாறியது .

பாவேந்தர் 50 நாடகங்கள் போல் எழுதினார் .அண்ணா, கருணாநிதி , பாலச்சந்தர் , சோ,மவுலி, விசு எனப் பலர் நாடகத்திலிருந்து திரைக்கு மாறினார்கள் .

சிவாஜி கணேசனைப் பற்றித்தனியே  தான் கூற வேண்டும் .ஏனெனில் அவர்  எங்கிருந்தாலும் , நடிப்புத்தான்  அவரைத் தேடி வரும் ! சிறு வயதிலிருந்தே  நடிக்க ஆரம்பித்த இவர் அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜியம் ' நாடகத்தின் போது 'சத்ரபதி சிவாஜி' ஆகவே மாறிவிட்டதைக் கண்ட ஈவே ராமசாமி புகழ்ந்தது முதல் , அவர் பெயரே சிவாஜி ஆகி விட்டது. தற்காலம் போலன்றி, வாசகர் ஒருவர் கொடுத்தப் பட்டப்பெயரே "நடிகர் திலகம்". இவர் பெற்ற கவுரவப் பட்டங்கள்: பத்ம பூஷன் , தாதா சாஹேப் , என்டிஆர் நேஷனல் அவார்ட் ,செவாலியே (ordre de merit-art & lettres), இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் சிறந்த நடிகர் , ஆப்ரோ-ஆசியன் பிலிம் பெஸ்டிவல் (Cairo, Egypt) சிறந்த நடிகர், பிரசிடென்ட் அவார்ட் 12 (மொத்தம் நடித்தத் திரைப்படங்கள்:300)

வானொலியும் நாடகங்களைப் பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்டது . தேசிய நாடகப்பள்ளி    நாடகப்போட்டி , கலை இரவுகள் , பிரச்சாரங்கள் நடத்துகிறது. நாடகக் கல்வியும் தரப்படுகிறது .நாடக இலக்கண நூல்களும் உருவாக்கப்படுகின்றன . ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன

தொலைக் காட்சி, திரைப் படங்களால் இனி வருங்காலம் நாடகத்திற்கு எப்படி அமையுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !.

திருமதி சிமோன்




இன்றைய அறிமுகம் - பம்மல் சம்பந்த முதலியார்


வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமையாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவானவர்தான் பம்மல் சம்பந்த முதலியார்.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார்.விசயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிகளின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந்தார். அவரது தாயார் உணவு ஊட்டும்போது ராமாயணம், மகா பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாசங்களிலிருந்து பல  கதைகளைச் சொல்லி வந்தார். தான் நாடாக ஆசிரியன் ஆனதற்கு  இவையே காரணங்கள் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது
நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.

மாநிலக்கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து  பி.ஏ.,பி.எல். பட்டங்கள் பெற்று வழக்கறிஞராகவும் நீதியரசராகவும் பணியாற்றினார். ஆந்திர மாநிலம் பல்லாரியைச்  சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி    என்பவர் சென்னைக்கு வந்து விக்டோரியா மெமோரியல் மண்டபத்தில் தெலுங்கில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன .இதை போலவே நாடக சபை ஒன்றை நிறுவிச் சென்னையில் தமிழ் நாடகங்களை நடத்த வேண்டும் என்ற சம்பந்தனாரின் ஆவலுக்கு தூண்டுதலாக   அவர் நண்பர்கள் இருந்தனர்.விளைவு  1897 -இல் சுகுண விலாச சபை  உருவானது. இதுவே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகச் சபையாகும்.


நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான நிலையை  இவர்  மாற்றினார்.

நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர் இவர்.
அக்காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் எல்லாம் மங்கலமாகவே முடியும். இந்தப் போக்கை மாற்றி இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் எழுதினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தார்.
உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார். நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியை அமைத்துப்  பேசும் மொழி நடையைக் கையாண்டார்.
வடமொழி, ஆங்கிலம்(As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுற வணிகன் என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்துள்ளார்),   பிரெஞ்சு ( தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தை காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவலாக எழுதியுள்ளார்), செர்மன்  நாடகங்கள் அவரால் தமிழ் வடிவம் பெற்றன. 


நாடகக் கலையை மிகக் கவனத்தோடு வளர்த்தார்.  கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, காட்சிகள் அமைப்பது என நாடகத்தின்  ஒவ்வொரு நிலையிலும் மிகவும் நுணுக்கத்துடன் ஈடுபட்டார். இவைதான் இவர் நாடகங்களை வெற்றி பெறச் செய்து மக்களின் கரவொலியையும்  பாராட்டுதலையும் பெற்றுத்தந்தன.
அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும் மிகவும் புகழ்பெற்ற நாடகம் 'மனோகரா'. இந்த நாடகத்தின் முதல் காட்சியை  எழுதி முடிப்பதற்குள் அவரது தந்தை காலமானார்.மறுநாளே நாடகத்தின் இரண்டாம் பகுதியை எழுதினாராம். அவருடைய தாயும் மனைவியும் இறந்தபோதும் ' என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து" எனக் கூறித் தன் வேலையைத் தொடர்வாராம்.   நாடகம் அவருடைய இலட்சியமாக, உயிராக விளங்கியது.


சுகுணவிலாச சபையின் நாடகங்களில் (1895 - 1923 வரை) சம்பந்தம் ஹீரோ - ரங்கவடிவேலு ஹீரோயின் வேடம் ஏற்று நடித்தனர். சம்பந்தம் 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் ஏற்று 500-க்கும் மேற்பட்ட முறை நாடக மேடையில் நடித்திருக்கிறார்.  இவருடைய நாடகங்கள் மற்ற சபைகளாலும் மேடையேற்றப் பட்டுள்ளன. சில நாடகங்கள் வெள்ளித் திரையிலும் வெளிவந்துள்ளன.
சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் 94. புஷ்பவல்லி(இவருடைய முதல் நாடகம்), மனோகரா(பல சபைகளிலும் 859 முறை நடத்தப்  பட்டது), லீலாவதி,  சதி சுலோச்சனா, சபாபதி, சாரங்கதாரா(198 முறை நடிக்கப் பட்டது) , உத்தம பத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் எழுதிய நாடகங்கள் பெரும்பான்மையானவை அச்சு வடிவம் பெற்றுவிட்டன.


நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன நாடகம் தொடர்பாக இவர் எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார். பல இணையற்ற நாடக நடிகர்களையும்  நாடக ஆசிரியர்களையும் (எம்.கந்தசாமி முதலியார், வி.சி.கோபாலரத்தினம்) ஆகியோரைக் கலை உலகிற்குத் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரையே சாரும்.
இவர் பெற்ற விருதுகள்:
1916 ஆம் ஆண்டு ராவ்  பகதூர் பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.
1959- இல் பாரத அரசு பத்மபூஷன்  விருதை வழங்கிச் சிறப்பித்தது.  
91-வது வயதில், 1964 -ஆம் ஆண்டு செப்டெம்பர் 24-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கு சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய 'நாடகத் தந்தை", 'நாடகப் பிதாமகன்" என்ற பம்மல் சம்பந்த முதலியார் நினைவு என்றும் நிலைத்து நிற்கும்.

லூசியா  லெபோ


சமூக நாடகங்கள்


1950லிருந்து 1980 வரை தமிழ் நாடகம் ஒளி மயமாகத் திகழ்ந்தது எனலாம். தொழில் முறை நாடகச்  சபாக்கள், நாடகக் கம்பெனிகள் ஓய்ந்த பிறகு அமெச்சூர் நாடகக் கம்பெனிகள் பல  தோன்றின. நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச்  சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது.சமூகப் பிரச்சனைகளான   வரதட்சணைக் கொடுமை, பொருந்தா மணக்கொடுமை , பெண்களின் நிலை, அலுவலகங்களின் சீர்க்கேடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், கிராமப்புறப்  பிரச்சனைகள் , சாதி எதிர்ப்பு, போன்ற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடை  கூறவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தவும்    சமூக நாடகங்கள் பாலச்சந்தர்,  விசு,மௌலி ஆகியோரால் படைக்கப்பட்டன. மன்றம், அகாதமி ,  சபா, கிளப்  போன்ற பல பெயர்களில் செயல்படும் நாடகக்குழுக்கள் இந்நாடகங்களை மேடையேற்றின. 'சோ' வின் விவேகா பைன் ஆர்ட்ஸ் , கே.பாலச்சந்தரின் ராகினி ரிக்ரியேசன்ஸ் போன்ற குழுக்கள் குறிப்பிடத் தக்கவை.


கே.பாலச்சந்தர்: (கே.பி)
பள்ளிப் பருவத்திலேயே தெரு நண்பர்களைக் கூட்டி நாடகங்கள் போடுவார். கல்லூரியில் படிக்கும் பொழுதும் ஆசிரியராக இருந்த பொழுதும் சிறு சிறு நாடகங்கள், எழுதி அரங்கேற்றி இருக்கிறார்.1950 -இல் ஏ.ஜி.எஸ். ஆபீசில் பணிபுரியும் பொழுது 'சினிமா விசிறி' என்ற நாடகத்தை எழுதி எல்லாக் கேரக்டர்களையும்(mono acting) தான் ஒருவனே நடித்துக் காட்டினார். அதுமுதல் அவர் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.தனக்கென்று சொந்தமாக 'ராகினி ரேக்ரியேசன்ஸ்" என்ற நாடகக் குழுவை  ஏற்படுத்தினார்.  கவுரி கல்யாணம், நாணல், மேஜர் சந்திரகாந்த் போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.   பின்னதில் பல மேடைப் புதுமைகளை புகுத்தினார். இந்த நாடகம் வேறு பல சபாக்களிலும் நடத்தப்பட்டது.      நடிகர் நாகேஷுக்காகவே சர்வர் சுந்தரம் எழுதப்பட்டு 25 முறை மேடையேறியது.  இவர் நாடகங்கள் பல பிற்காலத்தில் வெள்ளித்திரைப் படங்கள் ஆயின. கே. பி. யின் மெழுகுவர்த்தி என்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம். ஜி. ஆர். தெய்வத்தாய் படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.     நீர்க்குமிழி, பாமா விஜயம், அனுபவி ராஜ அனுபவி, எதிர் நீச்சல், இரு கோடுகள்,அரங்கேற்றம் ,  சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு  போன்ற எண்ணற்ற வெற்றி படங்களை அளித்து திரையுலகிலும் மக்கள் நெஞ்சங்களிலும்  மிக உன்னத இடத்தை பிடித்துக்  கொண்டார். பல பிரபல நடிகர் நடிகைகள் இவரின்  அறிமுகங்கள்தான்.கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் முத்திரைகள் ஏராளம். தேசிய, மாநில, தனியார் விருதுகள் பல பெற்றாலும் மிகவும் தன்னடக்கம் கொண்டவர். பல திரைப்பட இயக்குனர்களையும் உருவாக்கியுள்ளார். சின்னத்திரையிலும் கால் பதித்தவர். நூறு படங்களுக்கும்  மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும் எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை.



விசு:
இவர் டி.வி.எஸ். பணியாளர்.30 மேடை நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கிறார்.இவை 3000 மேடை கண்டவை.இவரின் நாடகப் பணி குறிப்பிடத் தக்கதாகும். பட்டணப்பிரவேசம்,  ஆண்டாள் அவள் ஆண்டாள், மணல் கயிறு இவர் தந்த சிறந்த நாடகங்கள்.  பி.ஆர். கோவிந்தராஜ் மூலமாக டைரக்டர் கே.பாலச்சந்தரை சந்தித்த பிறகே தனக்கு சினிமா வெளிச்சம் கிடைத்தது என்கிறார். மணல் கயிறு, சம்சாரம் மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி -  வெற்றிப் படங்களை தந்தவர்.இவர் நடிகரும்கூட.விசு, எஸ்.வி.சேகர்,மௌலி, காத்தாடி ராமமூர்த்தி இணைந்த அருமையான கூட்டமைப்பு 'ப்ளைட் நெம்பர் 420' என்ற  நீண்ட நகைச் சுவை நாடகத்தை அளித்தது.    சன் டிவியில்    அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நடுவில் புகழ் பெற்றது.

மௌலி    :
சென்னைத் தொலைகாட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் நேற்று இன்று நாளை. இதன் ஆசிரியர் மௌலி. தற்கால எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளை இந்நாடகம் சித்தரிக்கிறது.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அம்மி மிதிக்கப் போலிஸ் வந்தது, மற்றவை நேரில், மத்தாப்பு வாங்க காசு வந்தாச்சு இவர் எழுதிய நாடகங்கள். மௌலி பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார்.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது திரைப்படமாக எடுக்கப்பட்டது.தமிழைக் காட்டிலும் தெலுங்கு மொழியில் பல நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றவர் இவர்.
                                
லூசியா லெபோ

நாடகத்தில் நகைச்சுவை

                                                      

பொழுது போக்கிற்கென உள்ளக் கலைகளில் நகைச்சுவை இன்றியமையாதது. அதுவும் நேர்காணல் முறையில் அதற்குள்ள வரவேற்பும் பாராட்டும் அளவிட முடியாதது . வாழ்க்கையில்தான் பலத் துயர்களை அனுபவிக்கிறோம், பொழுதுபோக்கிலாவது சிரித்துவிட்டு வருவோம் என்று  எண்ணுபவர்களுக்கு அது ஒரு பெரிய வரம் . அவர்கள் மனதை இலேசாக்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்ப வைக்கும் கலைஞர்கள் ஒரு வகையில் சமூக சேவையே செய்கிறார்கள் ! அவர்களுள் ஒரு சில குறிப்பிடத்தக்கவர்கள் :

                                                        

எஸ் .வி . சேகர் : 1974 இல் முதல் மேடை ஏறினார் . மைலாப்பூர் பாயிஸ் நாடகக் குழு மூலம் இவரது திறமை பளிச்சிட்டது . 50 (play)நாடகங்கள், 100 நாடகத் தொகுப்புகள்  (skript), 96 தமிழ்ப்படங்கள்  ,டிவி நிகழ்ச்சிகள் இவற்றோடு  நல்லப் புகைப்படக் கலைஞர்  என்ற பெயரும் இவரைச் சேரும் . 'நாடகப்ப்ரியா' என்ற அமைப்பை  1973 இல் ஆரம்பித்து 24 நாடகங்களை 4000 முறை வெளிநாடுகள் உட்பட நடத்தியுள்ளார் . 8 முழு நீள நாடகங்களைத்தொடர்ந்து ஒரே நாளில் நடத்தி  "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" இல் 1985இல் இடம் பெற்றார்.

'பெஸ்ட் ஆல் இந்திய அவார்ட்'  நான்கு முறை இவரை அடைந்தது .'மைலாப்பூர் அகாடமி' 3 வருடம் இவரை 'சிறந்த சிரிப்பு நடிகர் ' ஆகத் தேர்ந்தேடுத்தது. 'விஸ்டம்' என்ற இதழ் 1990 இன் சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை அளித்தது .  இன்னும் 'கலை மாமணி', 'கலைவாணர் அவார்ட் ', 'பெஸ்ட் டிராமா  ட்ரூப் அவார்ட்' பெற்ற இவர் 2006  அதிமுகவில்  இணைந்தார் .

ஒரு முறை நாடகத்தின்போது கரண்ட் நின்று விட்டதாம். கதைப்படி பெண்பார்க்கச் சென்றிருந்த சேகர், கரண்ட் வந்ததும் 'இந்தப்பெண் ராசியில்லை-எனக்கு வேண்டாம்'  என்று பொருத்தமாகச் சொல்லி எல்லோர் டெண்சனையும்  குறைத்து சிரிக்க வைத்தாராம் !

                                                      
                                                           

ஒய்.ஜி . மகேந்திரன்: நடிகர் ,பாடகர் ,கதைவசன  நாடக கர்த்தா, காமெடி ஆர்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் .200 படங்கள் போல் நடித்தவர் . 1982 இல்      industrial ceramics  தொழில் ஆரம்பித்து 2001 இல் விற்று விட்டார் .

தந்தை ஒய் .ஜி.பார்த்தசாரதி "தமிழ் நாடகத்தூண்" என அழைக்கப்பட்டவர் . அவர் ' united amateur artists' என்ற நாடகக் கம்பெனியை  1952 இல் ஆரம்பித்ததால்  சிறு வயதிலேயே மகேந்திரனுக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது . அம்மா ராஜலட்சுமி 'பத்மா சேஷாத்திரி பாலபவன்' நிறுவனர் . வைஜயந்தி மாலா, லதா ரஜினி, சாவித்திரி போன்றத் திரையுலக உறவினர்களைக் கொண்டவர் . கமல் ,ரஜினி போன்றோரின் நண்பர் .


                                                               

கிரேசி மோகன் : 'தமிழ் மன்றம்' தலைவரான நண்பன் மூலம் நாடக உலகிற்கு வந்தவர் . 1973 ஆம் வருடம்  சொந்தப்  பெயரிலேயே கம்பெனி ஆரம்பித்தார். பல பெயர்களில் 1994 வரை பலரோடு நடைபெற்ற அது கலைக்கப்பட்டாலும்  இன்னும் நாடகங்கள் நடைபெறுகின்றன . 200 நகைச்சுவை நாடகங்கள், தொலைக்காட்சி , சினிமா என்று சுற்றி வந்தவர் . இவரது சகோதரர் 'மாது பாலாஜி' இவர் நாடகங்களின் கதா நாயகர் .

திருமதி சிமோன்

     

lundi 30 juillet 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                         


உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றான பிரான்சு தனக்கே உரித்தான பல உயர்வுகளைத் தன்னகத்தேக் கொண்டது.ஜனநாயக மூச்சான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை தன் அடையாளமாகக் கொண்டது. ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண ஆர்வத்தை விட, நாம் வசிக்கும் நாட்டின் சிறப்பை உணர்வது ஒரு சிறந்த குடிமகன்-மகளின் அடையாளம் என்பதாலேயே பிரான்சின் சிறப்புகளை நினைவு கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் செயலாக்கமே இந்த வலைப்பூவில் மலர்ந்துள்ளது.

இதமான காலச் சூழல். மலைகளும், காடுகளும், பச்சைப் புல்வெளிகளும், இயற்கையின் சிரிப்பைப் போன்ற மலர்க்கூட்டங்களும்  பாடித் திரியும் பறவைகளும், சிரித்த முகத்தோடு வணங்கும் பண்புள்ள மனிதர்களும் மனத்தைக் கவரும் நாடு. கூட்டத்தில் தெரியாது பிறர் மேல் தொட்டு விட நேர்ந்தாலும் தங்களை அறியாது உடன் மன்னிப்புக் கோரும் உயர் குணம். வாழ்வை ஒரு ரசனையோடு வாழ்ந்து பார்க்கும் மனநிலை! 

இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்டச் சரிவுகளைத் தாண்டி சரித்திரம் படைத்த சாதனை. கலைகள் முதற்கொண்டு, அறிவியல் வரை உச்சத்தில் நிற்கும் பாங்கு. சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து, அவர்களைத் தங்கள் அன்பாலும், நடத்தையாலும் வெற்றி கொள்ளும் பக்குவம் இவை பிரெஞ்சு மக்களுக்கே உரியவை. கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்ட நாடாயினும், பிற மதத்தினர் தங்கள் விருப்பம் போல் இறையுணர்வில் வாழ வழிவகுக்கும் பரந்த மனப்பான்மையும் இவர்களுக்கு உண்டு.

ஒரு நாட்டின் பெருமையை ஒரு ஏட்டின் சில வரிகளில் அடக்கி விட முடியாது. ஒரு கோடி மட்டுமே காட்டியுள்ளோம். பிரான்சின் மன்னராட்சி அனுபவங்களும், உலகுக்கே வழி காட்டிய அவர்களது புரட்சியும், அதன்மூலம் துளிர்த்த ஜனநாயக உணர்வும், திறந்த புத்தகம் போலான இன்றைய நடைமுறை வாழ்வும் ஆழ்ந்தறிய வேண்டிய ஒன்று. நுனிப் புல்லாவது மேய்வோமே!

திருமதி சிமோன் 

பிரான்ஸ் பற்றி...........



பிரான்ஸ் மேற்கு ஐரோப்பாவில் தனது பெரும் நிலப்பரப்பையும் வடக்கு அமெரிக்கா,கரிபியா,தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசிபிக் சமுத்திரம், அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும்  கொண்ட நாடாகும்.இதன் நிலப்பரப்பானது தெற்கே  மத்தியதரைக் கடல் தொடங்கி வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து உள்ளது.பெல்ஜியம், ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,லுக்சாம்பூர், இத்தாலி, மொனாக்கோ, ஆண்டோர், ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகளாகும்    .  
பிரஞ்சுக்  குடியரசு  மக்களாட்சி முறையைக் கொண்ட, சமூக நலனை கருத்தில் கொண்ட  மதச்  சார்பற்ற குடியரசு ஆகும். பாரிஸ் இதன் தலைநகரம். தேசிய மொழி பிரெஞ்சு. நீலம், வெள்ளை, சிகப்பு - மூவர்ணக் கொடியே நாட்டின் கொடியாகும்.. தேசிய கீதம்  மர்ஸேயஸ்.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -  பிரஞ்சுக் குடியரசின் பொன்மொழியாகும்.  மதச் சார்பின்மை தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.   

மே 6, 2012 இல் நடந்த தேர்தலில் பிரான்சு குடியரசின்  அதிபராகப்   பிரான்சுவா ஜெரார் ஜியார்ஜ் ஒலாந்து (François Gérard Georges Nicolas Hollande)  தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசக்   கட்சியை சேர்ந்தவர் இவர்.  




நிர்வாகக் காரணங்களுக்காக 27 பகுதிகளாகப் பிரான்ஸ் பிரிக்கப்பட்டுள்ளது.  இவற்றுள் 21 பகுதிகள் பிரான்ஸ் நாட்டுக்கு உள்ளே இருக்கின்றன ;  ஒரு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டை ஒட்டி அமைந்துள்ள கடல் புரத்தின் கோர்சிகா நிலப்பரப்பில் உள்ளது. ஏனைய ஐந்தும் உலகின்  பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன(பிரஞ்சு கயானா, குவடலூப், மர்த்தினிக், மயோத்,ரெயுனியன் ). இந்தப் பகுதிகள் யாவும் 101 மாவட்டங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. அகர வரிசைப்படி இவற்றுக்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த எண்கள் அஞ்சல்க் குறிப்பு எண்களில் பயன்படுகின்றன. வாகனங்களின்  பதிவு  எண்களிலும் இந்த மாவட்ட எண்கள் இருக்கும்.  
 பரப்பளவு:
674,843 சதுர கிலோ மீட்டர்கள்மக்கள் தொகை:
65,350,000 (2012 மதிப்பீடு) 
நாணயம்:
யூரோ 

இணையத் தளக் குறியீடு:  .fr

இந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவில் 2 -ஆவது இடத்திலும் உலகின்  பொருளாதரத்தில் 5 -ஆவது இடத்திலும் உள்ளது.
பிரான்சில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது. மருத்துவ வசதிகளும் சிறப்பாக உள்ளன.
உலகின் 13 -ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு பிரான்ஸ். அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகும்.
பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கும் வல்லமை கொண்ட ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும்.    பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. ஒவ்வோர்  ஆண்டும் பல்லாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இங்குக்  கல்வி பயிலுகிறார்கள். கல்விக்குப் பிரான்சில் நிதியுதவிகள் பிரெஞ்சு அரசால் தரப்படுகின்றன.
பிரான்சுதான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 
 

காலனி ஆதிக்கத்தின் விளைவாகப் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களும், மொரிஷியஸ் தமிழர்களும் பிரான்சில் குடியேறியவர்கள்.  இதுதவிர இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரும் இங்கு உள்ளனர்.
வெள்ளையர், கறுப்பர்(பிரான்சின் பல காலனிகளை சேர்ந்தவர்கள்) , யூதர், இந்தியர்,வியட்நாமியர், பாகிஸ்தானியர், அல்ஜெரி  நாட்டை சேர்ந்தவர் என பல இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று சேர்த்து வாழ்கிறார்கள். முதன் முதலாக பிரான்சுக்கு  வருபவர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
பிரான்ஸ் பற்றிச் சொல்ல  பல செய்திகள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது உங்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.

லூசியா லெபோ 

dimanche 29 juillet 2012

கலை நயமும், கலாச்சாரமும்

                                                      


பிரான்சு அல்லது பாரிஸ் என்றாலே அதன் சின்னமாகப் பொறிக்கப்படுவது ஐபில் கோபுரம்தான்! இந்நாட்டின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகள் குமிழும் இடம். 312 மீட்டர் உயரம். 125 மீட்டர் அகலம். 10,100 எடை கொண்டு பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இதில் 18,038 இரும்பு பட்டைகளும், 2,500,000 ஆணிகளும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இரண்டாவது தளம் வரை 1665 படிகள் உள்ளன. 276 மீட்டர் உயரத்தில் உள்ள மூன்றாம் தளத்தில் கண்காட்சி (musée de cire)  உள்ளது. இதை நிர்மாணிக்க 41 வருட உழைப்புத் தேவைப்பட்டது. 1887-1889 இல் கட்டப்பட்டு, 31-3-89 இல் திறப்பு விழா நடந்தது.

7.1 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இதைக் கண்டு களிக்கிறார்கள் எனினும் கட்டுவதற்கு முன் பல கலைஞர்கள் எதிர்ப்பை இது சந்தித்தது. வெறும் இரும்புப் பட்டைகளால், கலை உணர்வுக்கு இடமில்லாது நகரின் நடுவே பிரதானமாக கட்டப்படுவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை! ஆனால் இதன் வேலை முடிவதற்குள்ளாகவே பலர் ஓவியம், நவீனம், புகைப்படம் போன்றவற்றில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஐபில் கோபுரம் இல்லையேல் பிரான்ஸ் இல்லை!

வருடந்தோறும்  14 ஆம் தேதி ஜூலை மாத இரவில் வாணவேடிக்கை இங்கு நடைபெறும். இதனருகே நடக்கும் concert, exposition போன்றவற்றுக்கு மதிப்பும் கூட்டமும் அதிகம்.


                                         


1623 - அரசன் லுய் XIII வேட்டையின்போது கூடுவதற்காக பலதரப்பட்ட மனிதர்களிடம் 350 ஹெக்டார் நிலத்தை வாங்கினார். இன்றைய 'வெர்சேய்' யின் அன்றைய ஆரம்பம் இதுதான்! பிறகு லூயி XIV 1682-1789 களில் கட்டியதே இம்மாபெரும் கோட்டை. அப்போது மன்னர்களின் இரும்புக் கதவு "Grille du Roi" என்றழைக்கப்பட்டது. சுற்றிலும் 180 மீட்டர் வரைக் காடுகளும், பசுமையும் நிறைந்திருக்க, அரச ஆடம்பரத்துக்காக 'உருவாக்கப்பட்ட ஓர் நகரம்'. 150 மீட்டர் உயரத்தில்  பிரமிக்க வைக்கும்  கோட்டையும், பரந்து விரிந்த தோட்டமும், கண்ணைக் கவரும் சிலைகளும் இன்றளவும் எல்லோரையும் கவர்கின்றன. வருடத்திற்கு 695.5mm மழை பெய்வதால் செழிப்புக்குப் பஞ்சமில்லை. (climat océanique) குளிர் காலத்தில் 6.1°c, கோடையில் 23.9°c என மிதமான, இதமான தட்ப வெப்ப நிலை. (2009  இலேயே 86,477 குடிமக்களைக் கொண்டது)

லூயி பிலிப் 1837 இல் 'பிரான்சின் வரலாற்று அருங்காட்சியகம்' ஒன்றை இதில் ஆரம்பித்தார். 1805 இல் ( Pie VII ) போப் நெப்போலியனுக்கு முடி சூட்ட வந்தபோது, இங்கு அழைக்கப்பட்டார். அரச குலத்தவர் கொண்டாட்ட இடமான இக்கோட்டை   "புரட்சியின் தொட்டில்" எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில்  புரட்சித்தலைவர்கள் 'தேசிய அசெம்பெலி' என்ற பெயருடன் 1789 இல் இதைக் கைப்பற்றினர். பின்னர் ஒரு கூட்டம் கோட்டையின் உள்ளே புகுந்து அரச குடும்பத்தை பாரீசுக்கு வர வைத்தது. அங்கே அவர்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியும் இடப்பட்டது.

1999 இல் பிரான்சைப் புரட்டிப் போட்ட புயல் இங்குள்ள மரங்களை வேரோடு சாய்த்தபோதும், மீண்டும் இதன் அழகு நிர்மாணிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் 250 க்குக் குறையாத நாடகம்,சர்கஸ்,கான்செர்ட் போன்றவை நடைபெறுகின்றன. இப்போது பெரும் இரும்பு வண்டிகள், கார்கள் போன்றவையும், 218 டன் எடையுள்ள, பாலம் கட்ட உதவும் இரும்பு இயந்திரம் ஒன்றும் ஒரு பக்கத்தில் தஞ்சமடைந்துள்ளன.

UNESCO வேர்சாய் ஒரு பரம்பரைச் சொத்து என்ற ( claasé Patrimonie mondial de unesco) தகுதியை வழங்கியுள்ளது. 


                                                  


 1,35,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த லூவ்ர்அருங்காட்சியகமும் அரசர்களின் அரண்மனையாக இருந்ததுதான். தற்போது ரோமன் பார்லிமென்ட்டுக்குப் பின் இரண்டாம் பெரிய கட்டடமாகவும், உலகத்திலேயே சிறந்த கருவூலங்களைக் கொண்ட அகமாகவும் காட்சி அளிக்கிறது. 2011 இல் 8.9 மில்லியன் பார்வையாளர்களைக் கண்ட இது சார்லஸ் V  தான் வசிப்பதற்காக கட்டியது. லூயி XIV வரை 800 வருட அரச உடைமையாக விளங்கியது. பிலிப் ஒகுஸ்த் தன் பாதுகாப்புக்காக சுற்றிலும் 31 மீட்டர் உயரமும், 19 மீட்டர் அகலமும் கொண்டதாக 1202 இல் கட்டிக்கொண்டார். பின்  வந்தவர்களின் விருப்பத்திற்கிணங்க பலவகைகளில் விரிவுபடுத்தப்பட்டது. புரட்சி வரை மன்னர்கள் ஆதிக்கத்தில் இருந்த பின்னர் கைவிடப்பட்டது.

போர் அழிவுக்குப்பின் 1692 இல் அகாடெமி ஓவியம், சிற்பங்கள் இவற்றை அதிகப்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே ஹென்றி IV 'Grand Dessin' என்ற பெயரில் அரண்மனையின் ஒரு பாகத்தை அழகுபட அமைத்திருந்தார். 1790 இல் தேசிய அச்செம்ப்லி இந்த அரண்மனையைக் காப்பாற்ற நாட்டுடைமை ஆகியது. 1871 இல் நெருப்பில் தீக்கிரையானப் பகுதியை 1880 வரை சீர்படுத்தினார்கள். பின்னர் சரித்திரச் சின்னமாகிய இவ்வரண்மனையில் 1981-1999 பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் 1989 இல் பிரான்சுவா மிதேரானால் திறக்கப்பட்ட கண்ணாடி பிரமிடும் ஒன்று. ஆனால் இது அந்தப் பழைய கம்பீரத்தைக் குறைப்பதாகவும் தோன்றுகிறது.

திருமதி சிமோன்