பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 31 mars 2015

காசநோய் விழிப்புணர்வு தினம்


இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது  TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். முற்காலத்தில் இந்த நோயானது  சயரோகம், ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல், எலும்புக் கூடு போன்ற உடல் தோற்றம் போன்ற அறிகுறிகளால்   இப்பெயரிட்டு அழைத்தனர்.
மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. 7000 ஆண்டு) வாழ்ந்த உயிரினங்களின் என்பு எச்சங்களில் TB இருந்தது கண்டறியப்பட்டுள்ளது]. அத்துடன் கி.மு. 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில்  இன்னுண்ணுயிர்களின்  அழிவுகள் காணப்பட்டன. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மை உடையவை என்பது தெரிகிறது.

டாக்டர்  ரொபட் கொவ் காசநோய் கிருமியை(Mycobacterium tuberculosis) 1884 -ஆம் ஆண்டு மார்ச் 24 -ஆம் தேதி கண்டறிந்தார். இதை நினைவு கூரும் வண்ணம் மார்ச் மாதம்  24 -ஆம் நாள் உலக காசநோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது பாக்டீரியாவால் பரவக்கூடிய மிகப்பெரிய உயிர்கொல்லி நோய்.இந்நோய்க்கெதிராக உலகம் பல நூற்றாண்டுக் காலமாகப் போராடிக்கொண்டே வருகின்றது. வயது வரம்பின்றி ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவரையும் இந்நோய் பாதிக்கும். இரண்டு வாரத்திற்கு மேல் சளி இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், இருமும் போது சளியுடன் ரத்தம் கலந்து வருதல் - காசநோயின்  அறிகுறியாகும். அளவுக்கு அதிகமான சோர்வை நீங்கள் உணர்ந்தால், அதுவும் காசநோயின் அறிகுறியாகும்.
இவர்கள்  மருத்துவமனையை அணுகிப் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோய் உண்டாகும்  சந்தர்ப்பம் யாருக்கும் வாழ்க்கைக் காலத்தின் எந்நிலையிலும் ஏற்படலாம். இந்நோய் இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை உடையது. காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்திருப்பதால், காசநோய் வரும் வாய்ப்பு அதிகம்.காசநோயானது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய தொற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோய் பொதுவாக மூச்சு தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோய் உண்டாக்கினாலும், இவை நரம்பு, நிணநீர், இரைப்பை குடல் தொகுதிகள், எலும்புகள், மூட்டுகள், குருதி சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்கக்கூடியது.முடி,நகம் தவிர இந்நோய் உடலின் எந்த உறுப்பையும் தாக்கும்.

இந்தியா,  போன்ற சத்துக்குறைவால் வாடும் நாடுகளிலும் ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளிலும் இந்நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம். மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள், இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

தடுப்பூசி:

1921 ஆம் ஆண்டில் பாஸ்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த பாசில்லசு கால்மெட், அவரது உதவியாளர் குவெரின் ஆகிய இருவரும் தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்களின் பெயரிலேயே - Bacillus Calmette-Guerin (BCG) என அழைக்கப்படுகிறது.. இது குழந்தைகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்து.

குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி.குழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி. அளவில் இடது புஜத்தில் தோலுக்குள்  போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5 வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம்.தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பிசிஜி போடப்பட்ட புஜத்தில் ஆறு  வாரங்கள் கழித்து, சிறு கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில் சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள் அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக் கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத் தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி. இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.

ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசி  இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் பயன்பாட்டுக்கு வந்தது.

எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்னும் மருத்துவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஓய்வு  எடுத்துக்கொள்ள இமாலயம் சென்றிருந்தார். இங்கிருந்த தூய காற்று,நல்ல தட்பநிலை இவற்றால் இவர் விரைவில் குணம் பெற்றார்.எனவே 1854 -ஆம் ஆண்டு சிறு சிறு குழுக்களாக தங்கும் வசதிக்கொண்ட குடில்களை மலை பிரதேசமான சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில் உருவாக்கினார்.இதுதான் இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் ஆகும். இத்தகைய இடங்கள் sanatorium என்று அழைக்கப்பட்டன. சென்னைக்கு அருகில் தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் உள்ள் சனட்டொரியம் இன்றும் காச நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்து வருகிறது.

 "காசநோயாளர்களை  அடையாளங் காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்” என்பது  2015 ஆம் ஆண்டு காச நோய் விழிப்புணர்வு நாளின் கரு பொருளாகும்.

இன்றைய அறிமுகம்



                  கோபால்சாமி துரைசாமி நாயுடு ( 23 03 1893 - 04 01 1974)  ஜி.டி. நாயுடு என்று அழைக்கப்பட்ட இவர் தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர்.  கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல்  கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில்  இவர் பிறந்தார்.எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கிப் படித்துத் தன் அறிவுத் திறனை வளர்த்துக்கொண்டார்.தன்  பேரறிவாலும் உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்ததால் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்டார்.

உயர்ந்த படிப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு, ஓயாத உழைப்பினாலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதை  ஜி.டி.நாயுடுவின்  வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது.ஏழைகளிடம் அன்பும்  இரக்கமும் கொண்ட இவர் அவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார்.

டெக்னாலஜி என்பது எளியவனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வெளி நாட்டுப் பொருள்கள்தான் தரமானவை, இந்தியத் தயாரிப்புகள் தரமற்றவை என்னும் எண்ணத்தை மாற்றியது மட்டுமல்லாமல் உலக விஞ்ஞானிகள் வரிசையில் இந்தியர்களும் இடம் பெற முடியும் என்பதை நிரூபித்தவர் ஜி.டி.நாயுடு.இவரைக் ககண்டு வெள்ளையர்கள்  வியந்தார்கள்! உலக அரங்கில் தமிழனைத் தலை நிமிர வைத்தார்.

பாராட்டுகள்:

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள்  அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி.வி.ராமன்.

இவர் தொடக்கத்தில்  சிறிது காலம் பருத்தி வணிகம் செய்துவந்தார். அதில்   இழப்பு ஏற்பட்டதால்  அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வெள்ளைக்காரான் ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்குச் சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி அறிந்திருந்ததால்   பேருந்து ஒன்றைக்  கடனாகக் கொடுத்துத் தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியைத் தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு, வேறு சிலரையும் சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் (UNS)  என்ற நிறுவனத்தைத் துவக்கினார். அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுநர்களுக்குத் தங்கும் இடம் போன்றற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.  அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துப் பேருந்து நிலையங்களில் வைத்துச் சாதனை படைத்தார். பயணச் சீட்டுத் தரும் தானியங்கி , ரேடியேட்டர் அதிர்வுக் கருவி, பேருந்து வழித்தடக் கருவி என வியத்தகு இயந்திரங்களைக் கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்தார்.

1938 -ஆம் ஆண்டு, பதினெட்டு லட்சம் உரூபாக்கள் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளைக் கோவை வட்டாரக் கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தொழில் துறையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன் ஜி.டி.நாயுடு 1932 -இல் முதன்முறையாகச்  செர்மனிக்குச் சென்றார். அங்கு ஹெயில்ப்ரோன் எனும் நகரில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். தொழிற்சாலை நிர்வாகியை அணுகி, தமது ஆராய்ச்சிக்கு வாய்ப்புத் தரும்படி கேட்டுக் கொண்டார். நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்கவே, பிளேடு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டார்.
இவரது கண்டுபிடிப்பான அந்த பிளேடு, 1/200 குறுக்களவே கொண்டது. அதை இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். 200 தடவை அதன் மூலம் சவரம் செய்து கொள்ளலாம். உலகில் நடந்த பல கண்காட்சிகளில், இவரது கண்டுபிடிப்பு முதல் பரிசைத் தட்டிச் சென்றது. 1936 -ஆம் ஆண்டு செர்மனியில் நடந்த பொருட்காட்சியில், ஜி.டி.நாயுடுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்கா, யப்பான் போன்ற மேலை நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை  ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வேயிலிருந்து    தருவிக்கப் பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

பல்துறை வல்லுநரான இவர், கோவை மாநகரின் இன்றைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் என்றால் மிகையாகாது.தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்குப் பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்குத் தன்னால் இயன்ற அளவுக்குப் பொருளுதவி செய்தது மட்டுமல்லாது தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை அவர்களுக்கு  அறிவுறுத்தினார்.தொழில்நுட்பக் கல்வி மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த நாயுடு, 1945 -இல் இந்தியாவில் முதல்முறையாக, முறைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் (பாலிடெக்னிக்) பயிலகத்தைத் தொடங்கி, அதன் முதல்வராகச் செயல்பட்டார்.அதே ஆண்டில் சர் ஆர்தேர் ஹோப் பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார்.அக்கல்லூரிதான்  இன்றைய அரசினர் பொறியியல் கல்லூரியாகும்.அவர் உருவாக்கிய பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கிக் காட்டினார்.நாயுடுவின் வெளிநாட்டுப்  பயணத்தின்போது பல நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய இவர் தன்   அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.1937 -இல்  தமது நண்பருடன் சேர்ந்து இந்தியாவின்முதல் மின்சார மோட்டாரை உருவாக்கினார். மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இந்தியாவில் கோவையிலேதான் முதலில் துவக்கப்பட்டது இப்  பெருமை அவரையே சாரும்.
ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக் காமிராக்களில் தூரங்களுக்கேற்ப சரி செய்து கொள்ளும் கருவி எனப்  பட்டியல் நீளும்.
இரண்டு இருக்கைகள் உள்ள சிறிய ரகக் கார் ஒன்றை 2,000 ரூபாய்க்குத் தயாரிக்க முடிவு செய்து 1952 -இல் அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு  மத்திய அரசு ஆதரவும் அனுமதியும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும்.


விவசாயத்தில்  எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல புதிய ஒட்டு இரகங்களை (hybrid) உருவாக்கினார்.வழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியைக் கண்டுப்பித்து அதன் விதைகளைப் பத்து  10 உரூபாக்களுக்கு விற்றார்.செர்மானியர்கள் இதனை வாங்கிக் கலப்பினம் தயார் செய்து அதற்கு "நாயுடு காட்டன்" எனப் பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக் காய்களைக் கொடுத்தன. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச் செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனைத் தந்தது.
விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சுப் பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு அவை வளர்ந்தன. சாதாரண சோளச் செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருக்கும். ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள் இருந்தன!

இவருக்குச் சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. நாயுடு தயாரித்த நீரிழிவு,ஆஸ்துமா,வெள்ளை படுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனமான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.

ஜி.டி.நாயுடு  ஒளிப்படக் (போட்டோ) கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார்.  1935  -இல் லண்டனில் நடைபெற்ற மன்னர் 5 -ஆம் ஜார்ஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுப் படம் பிடித்தார்.பெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, சவகர்லால் நேரு,சந்திர போஸசு இவர்களையும் படம்பிடித்து இருக்கிறார்.

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றைத் தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
இந்திய அரசாங்கம் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்குப் பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.மனம் உடைந்து போன நாயுடு அரசாங்கத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்குச் செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்து போன நாயுடு அமெரிக்க நிறுவனம் ஒன்று அவருடைய கண்டுபிடிப்பிற்குப் பத்து லட்சம் டாலர் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

கோவைத் தொழில் வர்த்தக சபைக் கட்டிடம் கட்டுவதற்கு 5000 சதுர அடி இடத்தை இலவசமாக அளித்துள்ளார்.மேலும் சிறு தொழில்கள் சங்கம் செயல்பட இலவசமாக இடம் கொடுத்தார்.அதனால்தான் தற்பொழுது கோவை மாவட்டச் சிறு தொழில்கள் சங்கம்(கொடிசியா -CODISIA) அவர் பெயர்தாங்கி நிற்கின்றது.

ஜி.டி.நாயுடுவுக்குச் செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்குக் கிட்டம்மாள், சரோசினி என்ற 2 மகள்களும்,  2 -ஆவது மனைவிக்குக் கோபால் என்ற   மகனும் உண்டு.தன் மகனைக் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார்.  தன் தந்தை உருவாக்கிய தொழில் நிறுவனங்களைத் தற்போது இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.

1973 -ஆம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.  வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார். அப்போதைய  ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது.  தீவிர சிகிச்சை அளித்தும்  சிகிச்சை பலன் இன்றி ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார்.அரசியல் தலைவர்கள்,

தொழில் அதிபர்கள், முக்கிய
பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


வாய்ப்புக் கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்குச் சென்று வாருங்கள். இது 1967 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள  இந்த நிரந்தர பொருட்காட்சி  அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது !

தாங்கள் கண்ட வெற்றியைப் பிற்காலச் சமூகமும் பெற வேண்டும் என்று எண்ணி அதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. ஜி.டி.நாயுடு அந்த வெகு சிலரில் ஒருவர்.

1985  -ஆம்ஆண்டு "அப்பா" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகியது. ஜி.டி.நாயுடுவோடு பழகியவர்கள்,  சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருட முனைப்பில் இந்நூலை  சிவசங்கரி எழுதியுள்ளார்.
தொகுப்பு:

திருமதி.லூசியா லெபோ.

samedi 28 février 2015

எண்ணப் பரிமாற்றம்

மனிதன் என்று "கடவுள்" என்ற மாபெரும் சக்தியை நம்பவும், அதனைப் புரிந்து கொள்ளவும், அதோடு இணைய வேண்டும் என்ற தாகம் கொள்ளவும் ஆரம்பித்தானோ அன்று முதல் இந்தத் தேடலும், எது அவசியம் என்ற கேள்வியும் பிறந்து விட்டன. எனவே சர்ச்சையும், கேள்வி-பதிலும், பல கோணங்களில் விவாதமும் கடவுளை ஒவ்வொரு ஆத்மாவும் கண்டடையும் வரைத் தொடரத்தான் செய்யும். அதில் இது ஓர் பார்வை. அவ்வளவே!

குறு வடிவில் பிரஞ்சு நாடு


லிலிபுட்  நாடு - கேள்விப்பட்டு இருகிறீர்களாகுட்டி குட்டி மலைகள் ; சின்ன சின்ன கடல்கள் ; ஆறு அங்குலக் குள்ள மனிதர்கள் ... உள்ள
சித்திரக் குள்ள நாடு அது! 'Jonathan Swift ' என்ற ஆங்கில ஆசிரியரின் கற்பனையில் உருவான நாடு. அவர் 1727 - ஆம் ஆண்டு கலீவர் பயணங்கள் (Gullive's Travels') என்ற நாவலைப் படைத்தார். அதில் தான் இந்தக்   குறு வடிவ நாட்டை வருணித்திருக்கிறார். இணையதளத்தில்  இலவயமாகக் கிடைக்கிறதுபடித்துப்பாருங்கள் ; சுவையாக இருக்கும். அந்த நாவலில் வரும் லிலிபுட் நாடு போல ஒரு நாடு இருந்தால்... எப்படி இருக்கும்? பார்க்க ஆவலா? வாருங்கள் - பரி நகரில் இருந்து 20 நிமிடத் தொலைவில் இருக்கும் எவ்லின் வட்டாரத்தில் (Yvelines) எலான்கூர் (Elangour) நகருக்கு வந்து  பாருங்கள்.
அங்கே -

காணாமல் பூப்பூக்கும்

இரண்டு  மணி நேரம் பயணம் செய்யக்கூடிய  இடத்திற்கு சிறிய குழுவாக வாகனத்தில் சென்றிருந்தோம். பலவிதமாக பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் நேரம் நகர்ந்தது. இடையில் விடுகதை சொல்ல ஆரம்பித்தார் நண்பர் ஒருவர். அதில் போடப்பட்ட இரண்டு புதிர்கள்தான் என்னுடைய இந்த கட்டுரையின் பின்புலம். அந்த விடுகதைகள் :
 காணாமல் பூப்பூக்கும் கண்டு காய்காய்க்கும் . அது என்ன?
கண்டு பூப்பூக்கும்; காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
விடையை ஊகித்துவிட்டீர்களா?

vendredi 30 janvier 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். மனிதன் வளர்ச்சியுற்ற பின் தன் வாழ்வியலைப் பதிந்து வைத்ததே "இலக்கியம்" எனப்படுகிறது. அது அந்தந்தக் காலக் கட்டத்தின் கண்ணாடியாகப் பிரதிபலித்து மாற்றங்களின் சான்றாக உலவுகிறது. வாழ்வே புதுமையாக இருந்த நேரத்தில், காதலும், அதன் நுண்ணிய உணர்வுகளும், அது கை கூடுவதற்கான முயற்சியுமே சுவையான களமாக ருசித்தது. அன்றாட வாழ்க்கைப் போராட்டம் வீரத்தின் வாயிலாக வெளிப்பட்டது.

பின்னர் நீதி, பக்தி போன்ற மனிதனை மேம்படுத்தும் இலட்சியங்கள் புராணங்கள், காப்பியங்கள் வழியே பரப்பப்பட்டன. மொழித் திறனும், கவிதை நுட்பமும் அவற்றுக்கு மெருகூட்டின. அவற்றோடு இசையும் சேர, உணர்வுகளின் வெளிப்பாடு மனதை மயக்கும் போதையாயிற்று.

விஞ்ஞானத் தாக்கத்தால் ஆராய்ச்சிகளும், அறிவியலும் வளர்ந்து இந்த இனியக் கனவுலகைக் கலைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். கணினி யுகம் ஓர் புது இயந்திரத்தனத்தை மனிதனுக்குள் நுழைத்து விட்டது. அவனது சிந்தனைகள் இயற்கையை வாழ்வோடு இணைத்து ரசிப்பதிலிருந்து மாறுபட்டு, வறண்டு போய்விட்டன. அவை சூழலுக்கேற்ப பொருந்தினாலும் மனதோடு உறவாடாமல் எட்டியே நிற்கின்றன. எப்படி பொருளாதார மேம்பாடு மேலோட்டமாக உறவுகளைக் கொள்ள வைத்ததோ அதே போல உணர்வுகளை இவைத் தனிமைப்படுத்தி விட்டன.

இன்றைய இலக்கியம் செழிப்புற்று மக்களைச் சென்றடைகிறதோ இல்லையோ 'திரை உலகம்' முன்னணியில் நின்று கவனம் ஈர்க்கிறது. அதில் எழுதுபவர்கள் சமூக அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள். பெரும்பாலான இளைய சமுதாயம் அதன் வழியேதான் தமிழையே காண்கிறது. அதனால் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்குத் திரை உலக எழுத்தாளர்களும், கவிஞர்களும் பொறுப்பாகிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் கற்பனை, சொல்லாற்றல் தமிழினத்துக்கு எந்த வகையில் உதவுகிறது என்று பார்ப்பதில் தவறேதும் இல்லை.

'யாரேனும் மணிகேட்டால் அதைச் சொல்லக்கூடத் தெரியாதே 
 காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே' - என்றொரு பாடல்.

காதலில் மூழ்கி விட்டால் நேரம், காலம் என்பதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை என்பதே சொல்ல வரும் கருத்து. இதையே முன்பொரு காதலி,

"தூக்கமில்லை, வெறும் ஏக்கமில்லை - பிறர் 
 பார்க்கும் வரை எங்கள் பிரிவுமில்லை" என்றாள்!

'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?
 யூற்றான், எலெக்ட்ரான் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை?' - உயிரூட்டும் காதலை ரசாயன மாற்றமாக மலிவாக்கும் வரிகள்.

இவ்வேளையில் "அமுதூற்றினை ஒத்த இதழ்களும், நிலவூறித் ததும்பும் விழிகளும்" என்ற சொற்றொடர் நினைவில் வந்து மோதுவதைத் தடுக்க இயலவில்லை!

சிதறடிக்கும் இசைக்கருவிகளின் நடுவே, வந்து விழும் அரிதான மெல்லிசையும், வளர்ந்து வரும் புகைப்படத் திறமையும், குரலின் மென்மையும்  இப்பாடல்களை வெற்றியின்பால் கொணர்கின்றன. 

இன்னும் 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது', 'லவ்வுல மாட்டுனா டாருதான்டா', 'ஒரு பொண்ணு என்ன சுத்தி வந்து டாவடிச்சாடா' என்னும் 'பிரபல' பாடல்கள் நிறைய உண்டு.

இசையோடு இயைந்து, பாடலில் மயங்கி, மனதோடு கொஞ்சும் தமிழ் கேட்க மனம் ஏங்குகிறது. தமிழின் இனிமையையும்,  பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையின் நயம் தரும் மாயத்தையும் மீண்டும் பெற இறைவனை வேண்ட வேண்டுமோ!?  

திருமதி சிமோன்

பொங்கல் திருநாளே பொங்கு!



   எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
   சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
   சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
   பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
   திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
   இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
   தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
   ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
   மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
   உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
   வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
   பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
   செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
   பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
   மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
   ஒன்றென்றே ஓதி  உணர்வுறுக ! - நன்றாடித்
   தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
   உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
   தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
   வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
   எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
   பொங்கல் திருநாளே பொங்கு!
   
 கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு