பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 30 avril 2015

அரிய தகவல்கள்


நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய விலங்கு  ஆமை.கடலில் வாழும் ஆமைகள் முட்டை இடுவதற்கு மட்டும் கடலை ஒட்டிய நிலப் பகுதிக்கு இரவு நேரத்தில் வருகின்றன.முட்டையிலிருந்து  வெளிவரும் குஞ்சுகளின் மனத்தில் நிலத்தின் அமைப்பு, அங்கு நிலவும் காந்தப்புலம், அங்கு வீசும் நறுமணம் ஆகியவை பதிந்து விடுவதால், இந்தக் குஞ்சுகள் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்போது, தாங்கள் பிறந்த கடற்கரைப் பகுதிக்கே மீண்டும் முட்டையிட வருகின்றன. இந்த வியக்கத்தக்க செயல்பாட்டை ‘Natal Homing' என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)



யானைகளுக்கு  அபார நினைவாற்றல் உண்டு. எந்த வழியாகச் செல்கிறதோ, அதை அப்படியே நினைவில் பதித்துக்கொள்ளும். காலம் காலமாக யானைகள் ஒரே வழியாகத்தான் செல்லும்.
கடந்த சில வருடங்களாக, யானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. காட்டுக்குள் தண்ணீர் இல்லை; அதனால், யானைகள் ஊருக்குள் புகுந்துவிட்டன! என்று காரணம் கூறப்பட்டது.ரிசார்ட், ஹோட்டல், வீடு, மின்வேலி என்று யானைகள் செல்லும் வழித் தடத்தில் இடையூறு ஏற்படும்போது, ஊருக்குள் புகுந்து எதிர்ப்படும் மனிதர்களைத் தாக்குகின்றன  என்பதே உண்மை.ஆகவே   யானை வழித் தடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மனுதாரர் கோரியபடி, யானை வழித் தடத்தில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, யானை சுதந்திரமாகச் செல்ல வழி செய்ய வேண்டும். யானை வழித் தடத்தில் மலைவாசிகள் இருந்தால், அவர்களையும் அகற்றலாம், அப்படிச் செய்யும்போது உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்!'' என்று தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.(நன்றி Thatstamil.com) 
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகுதான் பால் கொடுக்கும்.

பாலூட்டும் புறாக்கள் - பறவைப் பால் (crop milk,  bird milk)
விலங்குகளில் பாலூட்டிகள் மட்டும் தன் குட்டிகளுக்குப்  பாலைப் புகட்டி வளர்க்கின்றன.தாய் விலங்கினத்துக்கு மட்டுமே பால் சுரக்கிறது.புறா, ப்ளாமிங்கொ( Flamingos) போன்ற பறவைகளும் தங்கள் குஞ்சுகளுக்குப்  பாலூட்டி வளர்ப்பது இயற்கையின் விசித்திரம்.
தாய்ப்  புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரண்டு புறாக்களும் மாறி மாறி அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளிவருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையின் (crop) உட்புற சுவற்று திசுக்களில் பால் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி  பாலை உட்கொள்கின்றன. 2 -  3 வாரங்களுக்குக்  குஞ்சுப்  புறாக்களுக்கு இந்தப்  பால் மட்டும்தான் உணவு.இந்தப்  பால் திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சிறிது கெட்டியாக இருக்கும்.இதில் மனித  தாய்ப் பாலைவிடப்  புரத சத்தும் கொழுப்புச்  சத்தும் அதிகம். மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.

சாதாரண நாட்களில்,  பால் சுரக்கும் தொண்டைப் பையானது புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தை தற்காலிகமாக சேமித்து வைக்க உதவுகிறது.பால் கொடுக்கும் சமயத்தில் பெற்றோர் புறாக்கள் பட்டினி கிடந்து குஞ்சுகளுக்குப் பாலூட்டுகின்றன(தானியங்களை உண்டால் பாலில் இந்த தானியங்கள் சேர்ந்து குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால்)   3 வாரங்களுக்குப்  பிறகு ஈரப்படுத்திய மென்மையான தானியங்களை குஞ்சுகளுக்குக்  கொடுக்கின்றன.

ஹாட்சின் பறவை


தென் அமெரிக்க கண்டத்தில் மழைக்காடுகளில்  வசிக்கும் அழகிய பறவை. கயானா நாட்டின் தேசியப்பறவை இது.பல்வேறு நிறங்களை தன்  உடலில் கொண்டுள்ள கோழி அளவிலான பறவையாகும். இறக்கைகளைப்  படபட வென்று அடித்துக்கொண்டு மரம் விட்டு மரம் பாயுமே தவிர, நீண்ட தொலைவு அதனால் பறக்க இயலாது.ஹாட்சின் ஆற்றோரத்தில் தாழ்ந்த மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டைகளை இட்டுக்  குஞ்சுகள் வெளிவரும்வரை ஆண் பெண் பறவைகள் மாறி மாறி அடை காக்கும். ஆச்சரியமான உடலமைப்பை கொண்டவை இந்த குஞ்சுகள்.இவற்றின் ஒவ்வொரு இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு. ஆபத்தான சூழ்நிலையில் (கழுகு போன்ற பறவைகளைக் கண்டதும் ) தன்  கூட்டிலிருந்து தாவி ஆற்றில் விழுந்து நீருக்கடியில் நீந்திக்கொண்டு இருக்கும். ஆபத்து விலகியதும் தன் இறக்கைகளில் உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி கூட்டிற்கு வந்து சேர்ந்துவிடும்.

மற்ற பறவைகளுக்கு இல்லாத  தனித்தன்மை ஹாட்சின்களுக்கு உண்டு. அது, இவற்றின் செரிமான மண்டலம். பொதுவாக பறவைகளில், அவை உண்ணும் உணவு gizzard எனப்படும் இரைப்பையில் செரிமானம் நடக்கின்றது.ஹாட்சின்களிலோ crop என்னும் தொண்டைப்பையில் செரிமானம் நடக்கிறது.இந்தப் பை இரண்டு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டு ஒன்று செரிமானத்துக்கும் மற்றொன்று உணவைச்  சேமித்து வைக்கவும் பயன்படுகின்றது.திரவ உணவுகளை 18 மணி நேரமும், திட உணவுகளை 1 - 2 நாட்கள்வரையும்   சேமித்து வைக்கின்றன.

இதன் செரிமான மண்டலம் ஆடு, மாடு, யானை போன்ற பிராணிகளை ஒத்து இருப்பதாகப்  பரிணாமவியலாளர் கூறுகின்றனர்.எனவே இவற்றை வேறெந்த பறவை குடும்பத்தோடும் சேர்க்காமல் இவற்றுக்குத்  தனியான குடும்பத்தை உருவாக்கி உள்ளனர்.
தொகுப்பு:
திருமதி. லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire