பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 juin 2013

கவிதைப் புதிர்

                                                         

இந்த மாதம் 08/06/2013அன்று நடந்த "மகளிர் விழா" அனைவரின் ஒத்துழைப்புடன்  வெற்றிகரமாக நடந்தேறியது. பலரின் பாராட்டினைப் பெற்ற விழாவில், மக்களையும் பதில் தேடத் தூண்டிய 'கவிதைக் கேள்வி-பதில்' கீழே.கம்பன் கழக மகளிரணித் துணைத் தலைவி (திருமதி சரோசா தேவராசு) வினாத் தொடுக்க, கழகப் பொருளாளர் (திரு தணிகா சமரசம்) விடை பகர் கிறார்.


கேள்வி 1 :


இருபாலின் கூட்டுறவில் இன்னுயிர்கள் தோன்றி
உருவான பூவுலகில் உள்ளதிணையி ரண்டாம்!
இருபாலின் கூறுகளும் எண்ணரிய பண்பும்
இருதிணைக்கு மொத்தாலும் எந்தமுரண் பாட்டில்
அருமையென அல்திணையில் ஆணினமும், ஓங்கிப்
பெருகும் உயர்திணையில் பெண்ணினமும் காணும்
ஒருபெரும் உண்மையாம் ஒற்றுமையை ஆய்ந்தே
விருந்தாகத் தந்திடுக வெல்லுதமிழ்ப் பாட்டால்!


பதில் :


முன்னித் தமிழை முறையாய்ப் பயிலாமல்,
எண்ணம் மழுங்கி, எழுத்துத் தடம்மாறச்
சின்னக் கவியும் செதுக்க இயலாமல்,
என்னை யறிந்தோர் எதிரில் நிலைமாறக்
கண்ணும் கலங்கக் கவலை கறைமீற,
என்னுள் துளிர்த்த எளிமை நடைகொண்டு
என்னைக் குழப்பும் இவர்பா பதிலென்று
மண்ணின் மனிதர் மயங்கும் அழகென்பேன்!


கேள்வி 2.


உள்ளத்தைத் தெளிவாக்கும்! உலகைக் காட்டும்!
உயர்வான சிந்தனையை உரக்கத் தூண்டும்!
அள்ளித்தான் பருகிடவே ஆற்றல் கூட்டும்!
ஆன்றோரின் மொழிபேசும்! அறிவைக் காக்கும்!
பள்ளத்தில் பாய்ந்துவரும் வெள்ளம் போலே,
பல்சுவையின் விருந்தாகிப் பரிம ளிக்கும்!
இல்லத்தில் ஒளியூட்டும் விளக்காய் மின்னும்!
இணையதளம் வரும்வரையில் இருந்தார் யாரோ?


பதில் :


எழுத்தினால் சித்திரங்கள் செதுக்கி வைத்து,
ஏடுகளில் வரிவரியாய் அடுக்கி வைப்பர்;
விழித்தவுடன் மாணவர்கள் பள்ளி செல்ல
வீதியெங்கும் சுமந்துகொண்டு விரைந்து செல்வர்;
பகுத்தறிவு பெற்றவரும் தேடிச் சென்றுப்
பயனுடைய செய்திகளைப் படிப்பர்; காலம்
அழித்தவைகள் இவ்வுலகில் கோடி! என்றும்
அறிவுபெற வழிகாட்டும்! வாழும் நூல்கள்!


கேள்வி 3.


காலத்தால் முந்தியதும், கலைபலவும்
போற்றியதும், கல்வி கேள்வி
சீலத்தால் உயர்ந்ததுவும், செம்மொழியால்
சிறந்ததுவும், செல்வம் ஓங்கி,
ஞாலத்தில் புகழ்கொண்ட நந்தமிழர்
குலப்பெருமை, நாளும் மெல்ல
மூலத்தை மறப்பதுவும், முன்னேறத்
தவிப்பதுவும் முறையோ? சொல்வீர்


பதில் :


ஞாலம் முழுதும் ஆய்ந்தாலும்
நடக்கும் உலக வாழ்வினிலே
சீலம் தேடி அலைந்தோமால்
சிரிப்பார் மக்கள் வெகுளியென!
மூலம் காணத் துடிக்காமல்,
முடிந்த வாழ்வை நினைக்காமல்
காலம் செல்லும் வழிதனிலே
கருத்தைக் கேட்டால் பதில்சொல்வேன்!


"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்றார் பாரதியார். அதனைச் சிரமேற்கொண்டு மகளிரணியின் உறுப்பினர் (திருமதி குமுதா சௌரிராசன்) மொழி பெயர்த்தக் கவிதை:

Victor Hugo (1802-1885)

Demain dès l'aube.

Demain, dès l'aube, à l'heure où blanchit la campagne,
Je partirai. Vois-tu, je sais que tu m'attends.
J'irai par la forêt, j'irai par la montagne.
Je ne puis demeurer loin de toi plus longtemps.

Je marcherai les yeux fixés sur mes pensées,
Sans rien voir au dehors, sans entendre aucun bruit,
Seul, inconnu, le dos courbé, les mains croisées,
Triste, et le jour pour moi sera comme la nuit.

Je ne regarderai ni l'or du soir qui tombe,
Ni les voiles au loin descendant vers Harfleur,
Et quand j'arriverai, je mettrai sur ta tombe
Un bouquet de houx vert et de bruyère en fleur.


   நாளை விடியலில்

நாளைக்  காலை விடியலிலே
   நன்றே ஒளிரும் வயல்வழியே
சாலை தனிலே தொடங்குகின்றேன்
   சற்றும் நில்லா என்பயணம்!
வேளை முழுதும் எனக்கெனவே
   வேண்டிக் காத்து நின்றிருப்பாய்
சோலை, மலையும் தாண்டியுன்னைச்
   சேர வேண்டி வருகின்றேன்!

என்னால் தாளாக் காலமெல்லாம்,
   இனியும் இருக்கும் தொலைதூரம்!
என்னில் மூழ்கி நான்நடப்பேன்!
   எந்தன் கண்ணில் பதியாமல்
ஒன்றும் ஒலியும் சூழாமல்
    உறவும் இன்றித் தனிமையிலே
நன்றாம் ஒருநாள் வருமென்றே
   நடப்பேன் சோர்ந்தே சோகமதில்!

மெல்ல மறையும் மாலையதை
   மேலே அசையும் பாய்மரத்தால்
வல்ல ஹார்ப்ளர் கப்பலதை
   மீண்டும் காண மனமில்லை!
கல்லால் ஆன அறைதனையே
   கடுகி நானும் அடைகையிலே
நல்கும் மணத்தை இதழ்பரப்பும்


   நற்பூக் கொண்டே உனைநிறைப்பேன்!

Aucun commentaire:

Enregistrer un commentaire