பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 13 janvier 2012

இன்றைய அறிமுகம்


Jean de La Fontaine: (July 8, 1621, Château-Thierry – April 13, 1695, Paris)
ழான் தெ லா போந்தேன்:  
இவர் 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த சிறந்த கவிஞர். நன்னெறிக்  கதைகளை (fables) க்  கவிதை வடிவில் கொடுத்தவர். பிற்காலத்தில் ஐரோப்பாவிலும் பிரான்சின் பல பகுதிகளிலும் குழந்தைகளுக்கான நன்னெறிக்  கதைகள் தோன்ற முன்னோடியாகத்  திகழ்ந்தவர்.
இவருடைய    இளமைக்  காலம் பற்றிய செய்திகள்   நிறைய  தெரியவில்லை. இவர் தம் ஊரிலேயே தொடக்க காலக்   கல்வியைப் பயின்றார். லத்தின் மொழியை விரும்பிக்  கற்றார். கிரேக்கம் கற்க ஆர்வம் காட்டவில்லை. இது குறித்துத்  தன் பிந்தைய நாளில் மிகவும் வருத்தப்பட்டார். அமைதியையும் தனிமையும் விரும்பியவர். இதனால் புத்தகங்கள் படிப்பதில் தன் பெரும்பொழுதைக்  கழித்தார். பிறகு வக்கீல் தொழிலுக்குப்  படித்துப்  பட்டம் பெற்றார்.
நம்  நாட்டின் பஞ்சதந்திரக்  கதைகளும் அராபு நாட்டின் ஈசாப்புக்  கதைகளுமே இவர் கதை எழுத வித்திட்டன என்றால் மிகையாகாது .     முன் குறிப்பிட்ட கதைகள் உரைநடையில் இருக்க இவர் குழந்தைகளுக்காக  எளிமையான பாடல்களாகத்  (nursery rhumes) தன் பாணியில் எழுதி இன்றளவும் தன் பெயரை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் படைப்புகளில்  243 நன்னெறிக்  கதைகள் தலை சிறந்தவையாகக்  கருதப்படுகின்றன. நன்னெறிக்காக  மட்டுமே 12000  கவிதை வரிகள்! அதுவும் சோம்பலுக்குப் பேர் போன இவரிடம் இருந்து! வியப்புதான். இவர் படைப்பில் பஞ்சதந்திரக் கதைகள் 12 இடம்  பெற்றுள்ளன .
ஹ்யுகோ (Hugo ) வின் காலத்துக்கு  முன்பு வாழ்ந்த  பிரஞ்சுக் கவிஞர்களுள்,    அம்மொழியின்     இயல்புகளை அறிந்த ஒரே  வல்லுநர்     ழான் தெ லா போந்தேன் என்று மேற்கத்திய  நாவலாசிரியர் பிளாபர்ட் குறிப்பிடுகிறார்.
இலக்கிய  இன்பம் மட்டுமல்லாமல், புத்தம் புதிய ஊட்டமிகு ஒழுக்க உணர்வுகள் இவர் கதைகளில் ஊடுருவிச்  செல்வதை மறுப்பவர் இலர் ; முரண்பாட்டின் மொத்த உருவமான  ரூசோ , உணர்ச்சிப் பிழம்பான லாமார்த்தின் போன்றோர் மட்டுமே இதனை ஒப்புக்கொள்ளாதவர்கள். எனவே, பிரான்சிலும் வெளி நாடுகளிலும் அனைவரும் ஆர்வமுடன் படிக்கும் நூல்களாக  இவர் படைப்புகள்  விளங்குகின்றன .பிரான்சில் இலக்கிய வட்டத்தில் இவருக்குப்  பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால்   வெளிநாட்டுப்  பழங்கதைகளும்  அவை தரும் நல்லொழுக்கங்களும் ஐரோப்பாக்  கண்டத்தில் பரவ இவர் காரணமானவர் என்பதை மறுக்க இயலாது.
   
இவருடைய கதைத் தொகுப்புகள்:
1668 இல் 1 முதல் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டன .
நன்னெறிக் கதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில், நாகரிக முதிர்ச்சி அடைந்த மக்களுக்காகவே எழுத வேண்டும் என எண்ணி  இருந்தார். இருப்பினும், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க நன்னெறிக் கதைகளே சிறந்த வழி எனக் கருதப்பட்ட  காலம் அது. ஆகவே அந்த வழியையே இவரும் பின் பற்றினார். தம் முதல் தொகுதியை  ஆறே வயதான
 ( Dauphin) தொபென் என்ற குழந்தைக்கு  அர்ப்பணம் செய்தார்.
1678 இல்  7 முதல் 11 புத்தகங்கள்   அரசரின்    அந்தரங்கக் காதலியான     Madame de Montespan என்பவருக்குக்  காணிக்கை ஆக்கப்பட்டது.    
 1693/ 1694- 12 ஆவது புத்தகம்.  அரசரின் பேரனான புர்கோஞ் கோமகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.       

 கதைப்  பாத்திரங்கள்:
"விலங்குகள் வாயிலாக மனிதர்களுக்கு நீதிநெறிகளைக்  கற்பித்தேன்  ".  அடிக்கடி  இவர் கூறும் வசனம்.
இவர் பயன்படுத்திய கதைப் பாத்திரங்கள் பல வகைப் பட்டவை :
சிங்கம், கரடி, ஓநாய், பூனை, பருந்து, பிணம் தின்னிக் கழுகு, பாம்பு, யானை,  -  இவை ஆளுமை, அதிகாரம்  போன்ற குணங்களை உடைய கொடிய உயிரினங்கள்
ஆடு, மான், கழுதை , வெள்ளாட்டுக் குட்டி, எலி, மீன், தவளை  - போன்ற பயந்த சுபாவம் கொண்ட எளிதில் இரையாகக்கூடிய உயிரினங்கள்
நிலா, சூரியன், காற்று, பானை, தாவரங்கள், நீர்,கடல், சூறாவெளி, தோட்டம், பூசணிக்காய் போன்றவற்றையும் இவர் பயன்படுத்தத் தவறவில்லை.         
மனித கதைப் பாத்திரங்களும் வருகின்றனர் :
அரசர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள்,மருத்துவர், பணக்காரர், ஏழைகள் ,நகரவாசி, கிராமத்தான்,குருக்கள், வணிகர்கள்  - சமுதாயத்தில் பல்வேறு நிலைகளிலும் உள்ள பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்கள், ஒரு சில பெண்மணிகள் ,
புராணக்  கதைகளில் வரும் அறிஞர்கள் , சரித்திரம், இலக்கியம்  - கூறும்  கதா பாத்திரங்கள், தத்துவ ஞானி ஆகியோரும் இடம் பெறுகின்றனர். இறப்பு பற்றியும் கூறியுள்ளார்.

 சில்வெஸ்டர் தெ சாசி (Silvestre de Sacy) என்னும் பிரான்ஸ் நாட்டு மொழி இயலாளர் லா போந்தேன் கதைகள் மூன்று பருவங்களில் இருப்பவர்களை ஈர்ப்பதாகக் கூறுகிறார். அவர்கள்:    
- கதைப்போக்கில் மகிழும் குழந்தை கள்
- கதைச் சொல்லப்பட்ட கவிதையின் கலைத்திறனைக் கண்டு ரசிக்கும் இலக்கிய மாணக்கர்கள்.
- கதைப்  பாத்திரங்கள் ஊடாக   காட்டப்படும் வாழ்வியல் பாடங்களை அறிந்துகொள்ளும் அனுபவசாலிகள்.

இவர்  இறப்பின்    300 -ஆம்  ஆண்டு விழா 1995 -ஆம்  ஆண்டு வந்தது. அப்போது இவர் நினைவாகப பிரஞ்சு அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இவரைக் கவுரவித்தது.

தொகுப்பு: லூசியா லெபோ

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்





முல்லா நஸ்ருதீன் :


மத்திய கிழக்கு நாடுகளில் பரம்பரையாக வழங்கப்படும் முல்லாவின் கதைகள் சர்வதேசக் கவர்ச்சி உடையவை. இந்திய இலக்கிய ஏட்டிலும், அமெரிக்க விஞ்ஞானப் பத்திரிக்கையிலும், சாரணர் படை இதழிலும் இவை வெளியிடப்படுகின்றன. சமயத் தத்துவங்களை ஆராயும் பத்திரிகை இவற்றைப் பரிசீலிக்கின்றது.  சோவியத் ரஷ்யா முல்லா பற்றி திரைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவிலும் இக்கதைகள் உலவுகின்றன.துருக்கியைத் தாயகமாகக் கொண்ட நஸ்ருதீனின் பிறந்த இடமான எஸ்கிஷேர் என்னும் ஊரில் 'நஸ்ருதீன் விழா'வின் போது, மக்கள் பெருந்திரளாகக் கூடி அவர் கதைகளை கூறியும், நடித்தும் மகிழ்கின்றனர்.

சமய ஞானியை 'முல்லா' என்பர்.  நஸ்ருதீன் "சுபி" என்னும் தத்துவ முறையைச் சார்ந்தவர்.  சுபிக்கள் உள்ளுணர்வையே பேரறிவுக்கு அடிப்படையாகக் கருதுபவர்கள். துருக்கியில் நஸ்ருதீனின் சமாதி உள்ளது. குழந்தைக் கதை போல, வேடிக்கைத் தொகுப்புப் போலத் தோன்றினாலும் தத்துவக் குவியல்களே இவை!

நிதானம் தேவை: கப்பல் முழுகிவிடும் போல் இருந்தது. பிரயாணிகள் பயத்தோடு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்கள். 'உயிர் பிழைத்தால் காணிக்கையாக இதைக் கொடுக்கிறோம், அதைக் கொடுக்கிறோம்' என்று வேண்டுதல் பண்ண ஆரம்பித்தார்கள்.

திடீரென்று முல்லா 'நிதானம், நிதானம்' என்று கூவினார். 'அதோ நிலம் தெரிகிறது!'


"சென்" (gen) :

ஜப்பானிய 'சென்' என்பது வாழ்க்கை முறை பற்றிக் கூறப்படும் அறிவுரைகள். புரியாத தத்துவங்கள், வெற்றுச் சித்தாந்தங்கள் போலின்றி எளிமையானவை. இதன் முக்கியக் குறிக்கோள் நரகத்தைத் தடுத்து, சொர்க்கம் செல்வது அல்ல. வாழும் வாழ்க்கையை, நல்ல முறையில் முழுமையாக வாழ்வதே!

டீக் கோப்பை:ஒரு பேராசிரியர் 'சென்' துறவியிடம் பாடம் கற்கப் போனார். சிறிது பேசியப் பிறகு, குரு கோப்பையில்  தேநீர் ஊற்றினார்.    கோப்பை நிறைந்து வழிந்தும், அவர் ஊற்றுவதை நிறுத்தவில்லை! பேராசிரியர் பதைத்து ஊற்றுவதை நிறுத்தச் சொன்னார். குரு நிதானமாக, "நீயும் இப்படித்தான் உன் மனம் முழுவதும் உன் சொந்தக் கருத்துக்களால் நிரப்பி வைத்திருக்கிறாய். அவற்றைக் காலி செய்யாவிடில் 'சென்'னை நிரப்ப இடம் இருக்காது" என்றார்.


தெனாலிராமன் :

சுமார் 480  ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் தெனாலி ராமன். விகடமாகப் பேசுவதில் சிறு வயதிலேயே பேர் பெற்றவன். காளி மாதேவியின் அருள் பெற்றவன் என்கிறார்கள். விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசரான கிருஷ்ண  தேவராயரின் அரண்மனை "விகடகவி" ஆகப் பணியாற்றினான்.

ஒரு முறை ராஜ குரு "இவ்வுலகமே மாயை. நாம் பார்ப்பதும், கேட்பதும், சுவைப்பதும் கூடப் பொய். நாம் உண்மையில் அப்படிச் செய்வதாக நினைக்கிறோமே தவிர எல்லாம் பொய் என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தார். "உலகம் மாயை என்றால் நிகழ்வதெல்லாம் பொய் ஆவது எப்படி?"  என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தாலும் வாய்திறந்து யாரும் பேசவில்லை.

தெனாலி எழுந்து "அப்படியானால் நாம் சாப்பிடுவதாக நினைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் வித்தியாசமே கிடையாதா?" என்றான்.  அவர் அதை ஆமோதித்ததும், "அப்படியானால் இப்பொழுதே அதைப் பார்த்துவிடுவோம். அரசே, ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.  நாம் அதைச் சுவைக்கும்போது ராஜகுரு உண்பதாக எண்ணி வயிற்றை நிரப்பிக் கொள்ளட்டும்" என்றான்!


பீர்பால் :


மத்தியப் பிரதேசத்தில் பிறந்து 1528 -1586  வரை வாழ்ந்த பீர்பாலின் இயற்பெயர்  மகேஷ் தாஸ். அக்பரின் "நவரத்னா" என்ற ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருந்தவர். ராணுவம், நிர்வாகம் இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். அக்பரின் நண்பராகவும் விளங்கினார். அவருடைய நகைச்சுவைக்காகவும், அறிவுக் கூர்மைக்காகவும் அக்பர் அவரை மிகவும் மதித்தார்.


ஒரு நாள் அக்பர் அமைச்சர்களைச் சோதிக்க எண்ணி, யாரும் எதிர்பாராதக் கேள்வி ஒன்றை வினவினார். "என் அமைச்சர்கள் இப்போது மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?"
முக்கியமான கூட்ட நேரமானதால், ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு விதமான சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.  அதை அப்படியே மன்னரிடம்  சொல்ல எல்லோரும் தயங்கினார்கள்.

பீர்பால் எழுந்து, "சக்கரவர்த்தி அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும், அவர் நாடு இன்னும் செழிப்பாக வளர வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் - சந்தேகம் இருந்தால் எல்லாரையும் கேட்டுப்
பாருங்கள்" என்றார். மனதில் அவ்வாறு எண்ணவில்லை என்றாலும் அவர் கூறியதை மறுக்க அங்கே யாருக்கும் துணிவில்லை!


பஞ்ச தந்திரம்:

இந்தியாவின் தெற்குப் பிரதேசத்தில் மகிலா ரூப்பியம் என்னும் நகரம் ஒன்று இருந்தது. அதை ஆண்ட அமரசக்தி என்ற மன்னன் எந்தக் குறையுமில்லா, மிகச் சிறந்த ஆட்சி புரிந்து வந்தான். ஆனால் அவனது புதல்வர் மூவரும் எதிலும் ஆர்வமில்லாதவர்கள். அவர்களை உலக அறிவில் இணையற்றவர்களாக உருவாக்க விஷ்ணுசர்மன் என்ற குருவிடம் ஒப்படைத்தான். அவர் அவர்களுக்கு ஏற்றபடி சிறு கதைகள் மூலம் எல்லாவற்றையும் கற்பித்தார்.

வர்த்தமானன் என்னும் வணிகன் தூக்கம் வராத ஒரு இரவில் யோசனையில் ஆழ்ந்தான். நிறைய பணம் இருந்தாலும், செலவழித்துக் கொண்டே போனால் கரைந்து விடுகிறது. இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும். அதை வளர்க்கவும் வேண்டும். அப்போது நஷ்டம் வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கவலைகளே அவனை மேலும் தூங்க முடியாமல் செய்து விட்டது.காலையில் வேட்டைக்காக அவன் காட்டிற்குச் சென்றான்.

காட்டில் ஒரு சிங்கம் அரசனாக உலவி வந்தது. பயமின்மை, இச்சகம் பேசுவதை வெறுப்பது, கெஞ்சுவதை இகழ்வது, கலங்காமல் இருப்பது அதன் குணங்கள். அற்பத்தனம் அதனிடம் இல்லை. ஆபத்து வருவதை எதிர்பார்த்து அறியும் சக்தி அதற்குண்டு. தான் விரும்பிய உணவு கிடைக்கவில்லை என்றால் அதற்காக அது புல்லைத் தின்னாது. எப்போதும் அது உற்சாகமாக வாழ்ந்து வந்தது.



நன்னெறி:


அறநெறிகளை அழகிய உவமைகளோடு பொருத்திக் கூறும் நூல் நன்னெறி.
இதை இயற்றிய சிவப் பிரகாச சுவாமிகள் பொம்மபுரத்தை அடுத்த கடற்கரை மணலில் பாடல்களை எழுத, அவரது தம்பி கருணைப் பிரகாசர் அவற்றை நகல் எடுத்தாராம்! அவர் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் இப்படி எழுதியுள்ளார்.

ஒரு முறை திருநெல்வேலி சிந்துபூந்துறை வெள்ளியம்பலவானத் தம்பிரான் என்றவரிடம் பாடம் கேட்கச் சென்றார். குருதட்சணையாக பணம் வாங்க மறுத்த அவர், 'திருச் செந்தூரின் புலவன் ஒருவன் என்னை தூஷித்து வருகிறான். அவனை வாதில் வென்று வா. இதுவே என் காணிக்கை' என்றார். சான்றோர் முன் "திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி" என்ற நூலை இயற்றி  போட்டியில் வென்றார் சிவப்பிரகாசர். 'கர்வம் கல்விக்கு எதிரி. வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு. என் குரு கற்றுத் தந்த முதல் பாடம் . இதுவே நான் படித்த நன்னெறி' என்றார் அவர். இது பற்றி மணலில் எழுதியக் கவிதை:

          "கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
            அடலே ரனைய செருக் காழ்த்தி - விடலே
            முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
             பனிக்கடலும் உண்ணப் படும்."

திருமதி சிமோன்  

பொங்கல் வாழ்த்துகள்


  
தைமகள் வருகவே! 
தமிழ் நலம் தருகவே!

தமிழினம் தழைக்க வந்தாள்
தைமகளே வருக என்று
நிமிர்நடை பெண்டிர் இங்கே
 நித்தமும் ஏற்ற வந்தோம்! 
உமியென உதிர்ந்து வாழும்  
உத்தமர் வாடா வண்ணம் 
நிமிரவே உலகில் என்றும்  
நிறையுமே பொங்கல் இன்றே!

விழியென காத்து நின்றே
 வழிவழி வளர்த்து எம்மை
எழிலுறு மங்கை காத்தாள்
 ஏந்தியே போற்ற வந்தோம்!
பழிசுமந் திடும்மாந் தர்க்கே
  பரிந்தளிப் பாளே அன்னம்
மொழியினை உயிராய்ப் பேண
 முகிவிலா நாளும் இன்றே!

தனக்கென உறவே இல்லா
 தமக்கென உணர்வே இல்லா
இனக்கொடு மைதாளா ஏழை
 இனமென தனியே உண்டு!
வனத்திலே வாழ்ந்த போதும்
 மனத்திலே பிரிவு கொண்டு
கனவிலும் ஒன்று சேரா
 கள்ளமும் வளர்வ துண்டே!

 ஆயிரம் சாதிச் சண்டை
 அதனினும் பிரிவும் கொண்டே
வாயினிக் கும்பேச் சுக்கோர்
 வகையிலே குறையொன் றில்லை!
ஆயினும் மனித மாண்பு
 அற்றிடா தொன்று சேர்த்துத்
தாயினும் பரிந்து காத்து
 தைமகள் தருவாள் பண்பே!

பொங்கிடும் இனிமை பாலில்
 பங்கிடும் உறவில் தண்மை
எங்கணும் பரவும் தென்றல்
 எழுப்புமே இனிய ராகம்!
தங்கிடும் வளமே வாழ்வில்
 தைமகள் வந்த பின்னே
தங்கமாய்த் தமிழன் மின்ன
 தரணியில் தடைதான் ஏது?

கதிரவன் காலம் பார்த்துக்
 கதிர்க்கரம் அணைத்து நிற்க
நதிவழி விரைந்தே நீரும்
 நமதரு உயிரே காக்க
விதிதனை மாற்றி பாரில்

 மதியினால் வெல்வோம் பூமி
பதிவிலே சாற்றி வைப்போம்
 பனுவலில் தமிழர் சீரே!




திருமதி சிமோன்