பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 14 juillet 2010

கவிதை

               ஏக்கம்

கொள்ளைப் புறத்து மரங்களிலே
  கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
  முத்துப் பல்லை ஒத்திருக்க
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
  காற்றில் ராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
  சொக்கிப் போனேன் இவைகண்டு!

காற்றில் வந்த நறுமணத்தில்
  காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
  சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
  இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டி என்மேலே
  சின்னக் கிளியே செங்கனியே!

வட்ட நிலவு வானத்திலே
  வந்த உடனே உன்நினைப்பே
சிட்டு போல பறப்பவளே
  சிந்தை முழுதும் உன்நினைப்பே!
சட்டம் போட்டுச் சண்டைக்கு
  சட்டென தாயின் வீட்டிற்கு
திட்டம் போட்டு போனவளே
  திட்ட மாட்டேன் வந்துவிடு!

முன்னே தெரியும் முகமெல்லாம்
  முத்துப் பெண்ணே உன்முகமாய்
என்னே அழகாய் தெரியுதடி
  ஏங்கிக் கிடக்கும் என்னைப்பார்
கண்ணே மணியே கற்கண்டே
  கட்டி அணைக்க வந்துவிடு
சொன்னேன் கவியில் இனிப்பாக
  சுவைக்க இதழைத் தந்துவிடு!

                    -- அருணா செல்வம்