பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 28 septembre 2012

எண்ணப் பரிமாற்றம்



                                         


அன்புடையீர்,

வணக்கம். தொன்று தொட்டு மனித இனத்தையும் கால்நடைகளையும் உணவளித்துக் காத்து வரும் பூமித்தாயின் கருணை சொல்லில் அடங்காதது.பயிர்களும், கனிகளும் இல்லையேல் நிச்சயம் இத்தனை உயிர்களும் வாழ்வும், வளமும் இன்றி மடிந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் அந்த நினைவும், நன்றி உணர்வும் நமக்கு இருக்கிறதா என்பதில் கண்டிப்பாக சந்தேகம் உண்டு..

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்' பரந்த மனம் இல்லாவிடில் போகட்டும் . தேவையின்றி அழிக்கும் அரக்கக் குணம் மறைந்தால் போதும் .அதிர்ஷ்டவசமாக இப்போது சிறுபான்மைக் கூட்டம் ஒன்று அவ்வப்போது  'சுற்றுச் சூழல் மாசு', 'செடி வளர்த்தல்' என்று ஆங்காங்கே குரல் கொடுத்து வருகிறது . தன்னலம் மறந்து இதற்கானப்  பணியினை மேற்கொள்கிறது.

ஆனால் சில செய்திகளை நாம் அடிக்கடி கேட்பதாலேயே அதற்கான  முக்கியத்துவத்தை அதற்கு அளிக்க மாட்டோம்.நமக்கும் அது பற்றித் தெரியும் என்ற அளவில் திருப்தி கொண்டு, 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்கிற கைவசம் உள்ள பதிலோடு,வாழ்வைத் தொடர்வோம். நம்மால் இயற்கைக்கு ஊறு  நேர்ந்தாலும், 'இச் சிறு செயல் உலகத்தையே அழித்துவிடப் போகிறதா, என்ன ?' என்னும் சமாதானம் இருக்கவே இருக்கிறது !

ஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும்  மென்மை . அவ்வளவே ! ஒரு சிறு தளிரின்  தோற்றம், அதன் பசுமை,  குளிர்ச்சி இவற்றைக்  கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால்  அதைக் கிள்ளி  எறியத் தோன்றுமா ? அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா?

 காலங்காலமாய் இருந்து வரும் வேளாண்மையின் முக்கியத்தைச்  சற்றே மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது இயற்கையின்பால் கனிவு கொள்ள ஏதுவாகும் என்னும் நினைவே செயலாயிற்று. இதிலும் நம் சந்ததிகளுக்கான நல வாழ்வின் சுயநலம் மறைந்திருக்கிறது என்பதை மறக்கவோ, மறைக்கவோ இயலாது !

திருமதி சிமோன் 

1 commentaire:

  1. ஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும் மென்மை . அவ்வளவே ! ஒரு சிறு தளிரின் தோற்றம், அதன் பசுமை, குளிர்ச்சி இவற்றைக் கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால் அதைக் கிள்ளி எறியத் தோன்றுமா ? அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா?

    என்ன ஒரு வரிகள் இதயத்தை தொடும் வார்த்தைகள், இதயத்தை தொடுமா இந்த வரிகள்? அது சரி இதயம் இருந்தால் காடுகளை அழிப்போமா??? அப்துல் தையுப்,La courneuve.

    RépondreSupprimer