பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

தமிழ்த் தாயின் ஓவியப் புதல்வர்கள்


                                                       








                                                மாலி


ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள்.

 உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை    நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’  ஓவியர்  மாலி.
இவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.

“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’

 அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்படம்) நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் மிளிர்ந்தது . அவர்  புதிய இளம் சித் திரக்காரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பலர்   வரைந்து வந்தனர்.



                                                          
                                                                          சில்பி


இயற் பெயர் பி.எம்.சீனிவாசன்.  கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸிலிருந்து படிப்பை முடித்து வந்த இவரை ஆனந்த விகடனுக்கு அழைத்து வந்தவர் அப்போதைய புகழ் பெற்ற ஓவியர் மாலி. தேவன் அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு வரைந்ததின் மூலம் அந்த தொடருக்குத் தனி சிறப்பை ஏற்படுத்தியவர்.இவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்ட ஆசாரமான மனிதர்.குறிப்பாக கோவில்கள்,தெய்வத்திரு உருவங்களையும் வரைவதில் இவரை போன்றவர்களைப் பார்க்க முடியாத அளவு இவரின் ஓவியங்கள் தனிப்பட்ட அளவில் இருக்கும்.அதனாலேயே இவரின் ரசிகர்களால் ‘இறையருள் ஓவியர்’ என்று புகழப்பட்டார்.

                                                                           

                                                         
                                                                      கோபுலு


1924 இல் தஞ்சாவூரில் பிறந்த கோபாலன் என்கிற கோபுலு.இவர் 1930-1940 களில் பிரபலமாய் இருந்த கார்டூனிஸ்ட் மாலி யின் மூலமாக ஆனந்த விகடன் பத்திரிகையில் இணைந்தார்.

இவர் கார்டூனிஸ்ட் ஆக மட்டுமல்லாமல் கதாசிரியர்களின் பாத்திரங்களுக்கு இன்றும் உயிர் தரும் அளவுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார். உதாரணமாக ஜெயகாந்தனின் சாரங்கன், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள்,மற்றும் சாவியின் வாஷிங்டனில் திருமணம். எல்லாவற்றிலும் தலைமுறைகளை கடந்து இவரின் ஓவியங்கள் நம் கண் முன்னே நிற்கின்றன.அந்தகால ஆனந்த விகடனின் அட்டைப்பட நகைச்சுவை துணுக்குகளுக்கு இவர் ஓவியங்கள் பெரிதும் துணை நின்றன.கோபுலு ஒரு மேதை என்பதற்கு,சுமார் 60 வருஷத்திற்கு முன்பு கல்லாடம் என்ற புத்தகத்திற்கு முன் பக்க,பின்பக்க அட்டைகளில் அவர் வரைந்திருந்த ஓவியம் சான்று. கணினி,போடோஷாப் என்ற எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் சிலையின் முன்பக்கம்,பின்பக்கப் படங்களை இவர் வரைந்த விதமே சொல்லும் கோபுலு அவர்களின் சிறப்பை. இவர் கலைமாமணி விருது (26/11/1991) உட்பட பல விருதுகள் பெற்று உள்ளார்.



                                                       
                                                               ஆதிமூலம் 

                                                                          
ஆதிமூலம் (1938 - 2008) அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு சிறந்த நண்பர் ஆவார். அறுபதுகள் முதல் அவர் தனது ஓவியங்களை சிறுபத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திற்கும் வழங்கி வந்தார்.

கோட்டோவியம் என்பது இந்திய ஓவியத்திற்கான அடையாளம் என்றொரு கண்டுபிடிப்பை அறுபதுகளில் உணர்வதற்கு முன்னரே பேனாவும் மையும் கொண்டு 1953ம் ஆண்டு காந்தியை கோட்டோவியமாய் வரையத் தொடங்கியவர் . அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னரே அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து காந்தியை சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைந்த ராய் செளத்ரி, தனபால் போன்றோரிடத்தில் ஓவியம் பயின்றார். காந்தியின் சித்தாந்தம் மீதும் கொள்கைகளின் மீதும் அவர் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார்.

கோட்டோவியத்தின்பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று பிக்காஸோவின் ஓவியங்களின்பால் அவருக்கு இருந்த நாட்டம். தனது கட்டுரை ஒன்றில் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்: ‘காந்தியை பல கலைஞர்கள் தனது படைப்புகளில் வெளியிட்டுள்ளனர். கார்ட்டியர் ப்ரஸான் புகைப்படத்திலும், மேற்கில் டாவிட் லோ தனது கார்ட்டூன் சித்திரங்களாலும், நந்தலால் போஸ், சந்தான ராஜ் போன்றவர்கள் தங்களது ஓவியங்களாலும் சித்தரித்த போதும்கூட ஓவியர் ஆதிமூலம் அளவிற்கு காந்தி என்ற ஒரு உருவத்தை ஒரு அடையாளக் குறியீடாகக் கொண்டு எண்ணற்ற ஓவியங்களை வரைந்தவர் எவரையும் எனக்குத் தெரியாது’.

கோட்டோவியத்தின் மூலம் மண்ணின் அடையாளங்களை வரைந்து மக்களை இன்புறச் செய்தவர் ஓவியர் ஆதிமூலம். மீசை, தாடி, வாள், தலைப்பாகையுடன் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அரசர்கள், ஐயனார் உருவங்கள், தாயும் சேயும் என அவரது கோடுகளின் வீச்சில் புதிய வெளிப்பாடு கொண்ட உருவங்கள் எண்ணிலடங்காதவை. தங்கு தடையின்றி பயணிக்கும் கோடுகள் அவரது ஓவியத்தின் முக்கிய அம்சம். அதன் ஓட்டத்தை தடைசெய்யாதிருக்கவேண்டி அவர் அவற்றை ஒரு நாளும் திருத்தி அமைத்தது கிடையாது. 1964 முதல் 1996 வரை அவர் வரைந்த கோட்டோவியங்கள் ‘Between the Lines’ என்ற பெயரில் 1997 ம் ஆண்டு புத்தமாக வெளிவந்தது. “The Art of Adimoolam” என்ற புத்தகம் 2007ல் வெளிவந்துள்ளது.
அவர் வரைந்த உருவமற்ற ஓவியங்கள் பல, சர்வதேச அளவில் புகழ் பெற்றவையாகும்.

இளம் ஓவியர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது அவர்களது கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்றபோதெல்லாம் ஒரு சிறிய தொகையை அவர்களை ஊக்குவிப்பதற்காக அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இதுதமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். தமிழ் நாட்டு ஓவியர்களுக்குள் இருக்கும் குழுக்கள் பலவற்றிற்கும் இடையே ஒரே அளவு நட்பு பாராட்டியவர் என்ற பெருமையும் அவரைச் சாரும். தமிழக ஒவிய உலகின் அடையாளமாகவும், குரலாகவும் இருந்த அவரது இடத்தை நிரப்புவது கடினம்.



                                                                   
                                                                    ஜெயராஜ் 


மாறிவரும் நவநாகரீக உலகத்திற்கு ஏற்ற முறையில் அதே சமயம் ஆபாசம் என்று முகம் சுளிக்க வைக்காத அளவிற்கு இளம் பெண்களை வரைந்து பெயர் பெற ஆரம்பித்தவர் ஓவியர் ஜெயராஜ். பிரபல எழுத்தாளரான குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) எழுதிய சீதாப்பாட்டி - அப்புசாமி கதைக்கு, இவர் வரைந்த சீதாப்பாட்டி - அப்புசாமி உருவங்கள் தமிழ் பத்திரிகை உலகின் சாகாவரம் பெற்ற பாத்திரங்கள் என்றால் மிகை ஆகாது. சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்று எந்த வடிவில் இந்த கதை, எந்த பத்திரிகையில் வந்தாலும் அதற்கு ஜெயராஜ் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தை தன்னுடைய தனி திறமையால் ஏற்படுத்திக்கொண்டவர் ஜெயராஜ்.                                        
                                                   


CCF21012013_00006.jpg   
அரஸ் 
                  


1980களின் இறுதியான காலகட்டங்களில் இளம் தலைமுறையினரின் பிரதிபலிப்பாக ஓவிய உலகில் புயலென நுழைந்து புகழ் பெற்றவர் அரஸ்.ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு குறிப்பிட்ட தொடருடன் ஒன்றி இவரின் ஓவியங்கள் இருக்கும் உருவங்கள்,வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர். குறிப்பாக ஆனந்த விகடனில் மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' என்கிற சரித்திர தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் கூடுதல் சிறப்பு சேர்த்தன என்று சுஜாதா அவர்களே பாராட்டி உள்ளார் எனபது இவரின் திறமைக்கு ஒரு சான்று.

Aucun commentaire:

Enregistrer un commentaire