பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 13 juin 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். பிரான்ஸ் கம்பன் கழகம் பெரும் சாதனை ஒன்றை ஓசையிடாமல் செய்திருக்கிறது. கடந்த இரு வருடங்களில், 10,000 க்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களை விளக்கவுரையுடனும், சுவை மிகுந்த பாடல்களின் அழகு நயத்துடனும் ஓதி முடித்திருக்கிறது. இலக்கியச் சுவை காண விரும்பியோரும், பக்திச் சுவையுடன் நெருங்கியோரும் நிறைவு கண்டுள்ளனர்.

குறைந்த அளவில் 35 நபர்களும், மொத்த அளவில் 150 நபர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். நிறைவு விழா சென்ற 22-5-2010 அன்று நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும்  சான்றிதழ்கள் தரப்பட்டன.  இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்கள், எல்லோருமே உற்சாகத்தோடு  பாடல்களை உரக்கப் படித்ததை மிகவும் பாராட்டினார். ராமபட்டாபி்ஷேகம் பற்றி மட்டுமே அனைவரும் அறிந்திருக்க, இப்படி முற்றும் ஓதியதால், பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டதையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார்.

அடுத்து, திருக்குறளை விளக்கத்துடன் ஆய்ந்தறிய கழகம் முடிவு செய்துள்ளது.  நகைச்சுவைத் தென்றல் சண்முக வடிவேல் அவர்கள் உலகப் பொதுமறை பற்றிய விளக்கங்கள் வாழ்வுக்குத் தெளிவு கொடுக்கும் எனக் கூறி, அதன் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.

கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கழக உறுப்பினர்களை அணுகி “குறள் அரங்கம்”  பற்றிய விபரங்களைப் பெறலாம்.

முதல் “குறள் அரங்கம்” வருகிற 27-6-2010 அன்று கம்பன் தலைமையகத்தில் நடைபெறும். நன்றி.


இராசேசுவரி சிமோன்