பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 23 mai 2013

அழிவை நோக்கி

                                                          

பெருகி வரும் மக்கற்கூட்டத்திற்கு இருப்பிட வசதி செய்யவேண்டிய பொறுப்பினால் நிலங்கள் குடியேறும் கட்டிடங்களாக மாறுகின்றன என்பதில் கூட பொருள் இருக்கலாம். ஆனால் பதிலாக விவசாய நிலங்கள் உருவாக்கப்படுவதிலும், நீர்நிலைகள் மாசு நீக்கப்படுவதிலுமுள்ள மெத்தனமே அல்லது பொறுப்பின்மையே உலக சுகாதாரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. போதாததற்கு வன்முறை அட்டகாசங்கள் வாழ்வையே கேள்விக்குரியதாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அழிவுப் பாதையில் சில உதாரணங்கள்:

பூமியின் வெப்பம் கடந்த 100 ஆண்டுகளில் 1° பாரன் ஹீட் உயர்ந்துள்ளது. சென்ற 30 ஆண்டுகளில் இந்த உயர்வு விகிதம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே வெப்ப நிலை உயர்ந்தால், அடுத்த நூறாண்டுகளில் 20 முதல் 30 சதவீத உயிரினங்கள் அழிய வாய்ப்புள்ளதாம்!

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விடக் கடல் மட்டம் 4 முதல் 6 மீட்டர் வரை உயர்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் 1 மீட்டர் உயர்ந்தாலே மிக அதிக நிலப்பகுதி மூழ்கி விடும் என்கிறது ஐ.நா. சபை!

2009 பட்ஜெட்டில் இந்தியத் தொகைப் பங்கீடு: 

ராணுவம்-ஒரு கோடியே 66 லட்சத்து 663 ஆயிரம் கோடி 
உள் நாட்டுப் பாதுகாப்பு - 37 ஆயிரத்து 300 கோடி 
கல்வி-44 ஆயிரத்து 528 கோடி

28 ஆண்டுகளுக்கு முன் போபாலில் 'யூனியன் கார்பைட் நிறுவனம்' பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரிக்க, ஆலையிலிருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோ சயனைட்' 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் குழந்தைகளில் 25இல் ஒன்று ஊனம் என பயங்கரத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அந்த இடத்தைச் சுற்றி 350 டன்  நச்சுக் கழிவுகளால்  நிலத்தடி நீர் நஞ்சாகி, ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு ரசாயனக் காரணிகள் அடங்கியத் தண்ணீரை அருந்துகிறார்கள். விளைவு புற்று நோயாளிகளும், சிறுநீரக நோயாளிகளும் பெருகி வருகிறார்கள். இன்னும் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லை.

ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாய வெளிநாட்டுக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி ஆகின்றன.

தில்லிவாசிகளில் 49 சதவீதத்தினர் குடிசைப் பகுதியிலேயே வாழ்கின்றனர்.

ஒரு மணி நேரத்தில் 13 பேர் வீதம் ஒரு வருடத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 590 பேர் இந்தியச் சாலை விபத்தில் இறக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் வருடத்திற்கு 12 ஆயிரம் பேர்.

பிறந்து ஒரு மாதத்திற்குள் 5 லட்சம் குழந்தைகளும், 5 வயதைத் தாண்டாமல் 10 லட்சம் குழந்தைகளும் சாகிறார்கள்.

வருடாவருடம் கருச்சிதைவால் மரணமுறும் இந்தியக் குழந்தைகள் 50 லட்சம். சென்ற வருடம் ஒரு கோடிக் கரு, சிசுக் கொலை நடைபெற்றுள்ளது. போதிய சுகாதாரமில்லாமல் பிறந்து இறக்கும் சிசுக்கள்-5500!

கடந்த 5 ஆண்டுகளில் 1,85,452 பெண்கள் தமிழகத்தில் குறைவாக உள்ளனர்.

உலக முழுவதும் 20 ஆயிரம் மரணதண்டனைக் கைதிகள் உள்ளனர். சராசரி 11 வருடங்கள் கழித்தே தூக்கிலிடப்படுகின்றனர்.(90% வக்கீல் வைத்துக்கொள்ள வசதியில்லாத ஏழைகள்).

நீரிலுள்ளக்கனிமங்கள்  அளவு 300 புள்ளிகள் இருந்தால் அது குடிநீர். தமிழ் நாட்டில் அது தற்போது 3000 புள்ளிகளைத் தாண்டி விட்டது!

இந்தியா ஆண்டுக்கு 4 மி.மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. ஆனால் முந்தைய அளவில் இது பாதி. மீன்களின் உருவ அளவும் பாதியாகி விட்டதாம்!

250 கிலோ உணவருந்தும் யானைகளின் உணவு  வழிகளை அழித்து தொழிற்சாலை, அணைகள், வீடுகள் வந்து விட்டதால், அவை கிராமங்களில் நுழையவும், மனிதர்களைத் தாக்கவும், பதிலுக்கு மனிதர் அவைகளைக் கொல்லவும்  நேரிடுகிறது.

இன்றைய ஆமைகள் கடலில் வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன் என உண்டு இறக்கின்றன.

சாயப்பட்டறைக்கழிவுகள் ஆற்று நீரை விஷமாக்குகின்றன. உம் : பாலாற்றங்கரையில் 800 தொழிற்சாலைகள் உள்ளன. அங்குள்ள 46 ஊர்களின் 27800 கிணறுகளை உபயோகப்படுத்த முடியவில்லை!

14 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் காவிரி நீர் இல்லாததால் கருகின.

88 புலிகள் கடந்த ஆண்டு இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளன .

திருமதி சிமோன் 


ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்

நீண்ட விடுமுறையில்  பிரான்சிலிருந்து  தாயகம் வந்துள்ள நான் சமைக்க காய்வாங்க மார்கெட் சென்றேன்.அழகிய தக்காளிப் பழங்கள் என்னைக் கண்சிமிட்டி வரவேற்றன.அவை  புதிதாக அவதாரம் எடுத்துள்ள  பெங்களுரு தக்காளியாம். அடுத்த மாதம்  மகளைப்  பார்க்க பெங்களுருக்குப்  போகும்பொழுது மலிவாக வாங்கலாமே என்ற என்   எண்ணத்தில் மண்விழுந்தது. காரணம் இது அங்கு மட்டுமே   பயிரிடப்படுவதில்லையாம்.அதுசரி அந்த அழகிய நிறம், தோற்றம் இவற்றின் ரகசியம்? .நாட்டுத் தக்காளியின் தோல் மென்மையானது.பழுத்த ஒரு சில  நாட்களிலேயே அழுகிப்    போய்விடும்.அதனால் உருளைக்கிழங்கின் மரபணுக்களைத்  தக்காளியில் கலந்து  தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி தயாரித்து அதற்குப்  புதிய பெயர்  சூட்டப்பட்டுள்ளது.அதாவது என்னை ஏமாற்றியது  மரபணு மாற்றப்பட்ட புதியவகை தக்காளி.சாலட்,பர்கர்,பீஸா என்று எல்லா உணவுகளிலும் இதுதான்  பயன்படுத்தப்படுகிறது என்பது  கூடுதல் செய்தி.

 பிரான்சில்மரபணு மாற்றப்பட்ட (O GM) சோளம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுவாக வரவேற்பு கிடைக்கவில்லை.விவசாயிகளுடன்  சேர்ந்து மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். (ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத் தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன).மரபணு மாற்றத்திற்கு ஆதரவாகச் சொல்லும் ஒரே காரணம் -அதிக மகசூல், பஞ்சத் தடுப்பு, வறுமை ஒழிப்பு - அதிகமாக உணவு உற்பத்தி செய்து, பசியை ஒழித்துவிடலாம் என்பதுதான்.

மரபணு மாற்றம் என்றால் என்ன?
ஜீன் எனப்படும் இந்த மரபணுக்கள் அனைத்தும் புரதங்களால்ஆனவை .ஒவ்வொரு புரதமும் பல்லாயிரக்கணக்கான குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன.ஒட்டுரகங்கள் மூலமாக புதிய பயிரை உருவாக்க முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டன.இந்த முறையில் மரபணு மாற்றம் இயல்பாக நடந்தது.ஆனால் இப்போது பயோ டெக்னாலஜி எனப்படும் உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பிரிவான மரபணு தொழில்நுட்பத்தில் தேவையான  புரதங்களை நமது விருப்பம், தேவைக்கு ஏற்பத்  தேர்ந்தெடுக்கலாம்.புரதங்களின் விளைவு மோசமானதாக, தீங்கானதாக இருந்தால் அதை நம்மால் எளிதாகக்  கட்டுப்படுத்த முடியாது.

.நம்  உடலில் உள்ள புரதங்களில் இயல்பாக நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது. கிருமிகள் உடலுக்குள் நுழையும்போது  எதிர்த்துப் போராடி அவற்றைச்  செயலிழக்கச் செய்கின்றன. புதியவகை  உணவுப் பொருட்கள் மூலம் உடலுக்குள் புதிய புரதங்கள் நுழையும்போது, நம்முடைய உடல் அதை உடனே ஏற்றுக்கொள்ளாது.இதனால் ஒவ்வாமை என்னும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.அதன் விளைவாக  இறப்பு கூட ஏற்படலாம்.
பல நாடுகளில் மரபணு மாற்றபட்ட  விதைகள் பயிரிடப்பட்ட காலங்களில் இலட்சக் கணக்கான தேனீக்கள் இறந்துள்ளன.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்குப்  பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்ப்பட்டதாக  ஆய்வுகள் கூறுகின்றன.  "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபு மாற்றப் பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.

மரபணு மாற்றுப் பயிர்களைப் பயிரிட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன .ஆனால் பன்னாட்டுக் குழுமங்களான .மான்சாண்டோ, கார்கில், சின்செண்டா, ஏடிஎம் குழுமங்கள் தமது பண வலுவால் பல நாடுகளில் தடைகளை உடைத்து நுழைந்து வருகின்றன. கொரியா, இந்தோனேசியா, கிழக்கு தைமூர், அமெரிக்கா,காங்கோ, ஸ்பெயின், சிலி,  கனடா, குரேசியா, வெனிசுலா போன்ற நாடுகளில் சின்செண்டா என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்தை எதிர்த்துக்  கடும் போராட்டங்கள் நடந்து  வருகின்றன.
25 05 2013 - மான்சாண்டோ நிறுவனத்துக்கு எதிரான உலகளாவிய சாத்வீக  எதிர்ப்பைத்  தெரிவிக்கும் நாளாக அறிவிக்கப்பட்டது.ஏன் இவ்வளவு கோபம் விவசாயிகளுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்க்கும்?
மொன்சாண்டோ  என்பது  பன்னாட்டு வேளா ண்மை உயிரித் தொழில்நுட்பக்  கூட்டுத்தாபனம் .
கிபி 1901 ஆம் ஆண்டு ஜான் எப்க்யுனி என்பவரது  மனைவி ஒல்கா மான்சாண்டோவின் பெயரால் துவங்கப்பட்ட நிறுவனமாகும்.உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட   உணவுப் பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது.இதன் கிளைகள் 55 நாடுகளில் உள்ளன.இதில் இந்தியாவும் அடங்கும். .உலகம் முழுவதும் உணவுப் பொருள்களை பயிரிட இந்த நிறுவனத்தின் விதைகளை  மட்டும் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிடத்  திட்டமிட்டுச்  செயல்பட்டுவருகிறது . 2100 -உ க்குள் உலக உணவுச்சந்தையில் ஒரே ஒரு வல்லரசு நிறுவனமாக, சர்வாதிகார நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளது.  இந்த நிறுவனம் கொடுக்கும் விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை.வழக்கமான விதைகளைவிட ஒன்றரை மடங்கு அதிகமானத் தண்ணீரை  உறிஞ்சக்கூடியவை .உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடும் அதிகம் தேவை.இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்துவிடும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.ஒரு பயிரில் தொடர்பில்லாத மற்றொரு உயிரின் மரபணு புகுத்தப்படுவதால் மரபணுக்களில் குளறுபடி நடக்க வாய்ப்பிருக்கிறது .BIO DIVERSITY எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படலாம்.  

மத்திய அமெரிக்காவின் வறுமை மிக்க ஹெய்தி நாட்டில், தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெய்தி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில்,  மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.
ஹெய்தி நாட்டுக்குப்  பல நூறு  டன் விதைகளைக் கொண்டுவந்து குவித்தது.  மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.ஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெய்தியில் கொண்டுவந்து கொட்டப்பட்டன .
தம்  அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை  உணர்ந்த  ஹெய்தி நாட்டின் விவசாயிகள்,மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.
சோயா உற்பத்தி அண்மைக் காலங்களில் மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. சோயாவிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுவதால் உலகச் சந்தையில் அதன் தேவை அதிகரித்துள்ளது.பெரும்பான்மை இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பயிரிடப்படும் சோயா, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் மரபணு  மாற்றம் செய்யப்பட்டவையே. குறிப்பாக, மான்சாண்டோவின் ரவுண்ட் அப் ரெடி சோயா   பயிரிடப்படுகிறது. இந்த சோயா விதை மான்சாண்டோ கம்பெனி உற்பத்தி செய்யும் க்ளைபோஸ்ட் (Glyposte) என்ற களைக் கொல்லியைச் சார்ந்து நிற்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தப் பூச்சிக் கொல்லிகள் உண்மையில் உயிர்க் கொல்லிகளே,ஒரு காலத்தில் அங்கு வனவிலங்குகள் நிறைந்த காடுகளும், சிறு விளைநிலங்களும், கல்விக் கூடஙகளும் நிறைந்திருந்தன.  ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள்  சமூகமாக வாழ்ந்த நிலைமாறி, இன்று வெறும் 30 குடும்பங்கள் மட்டுமே  அங்கு உள்ளன. மரங்களும் பறவைகளும், விலங்குகளும் இன்று அங்கு இல்லை.நம் நாட்டின் நிலைப்பாடு என்ன?
1960 -களில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப்புரட்சியின் காரணமாக உணவு பற்றாக்குறையைச்  சமாளித்தாலும் நமக்குக் கிடைத்தது குறுகிய காலத்தில் பலனைத்  தரக்கூடிய சத்துக் குறைவான அரிசி வகைகளே.இவ்வகையான அரிசியின் மோகம் அதிகரித்ததால் ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறுதானியம் எனப்படும் கம்பு,தினை இவற்றை மறந்து வாழ்கிறோம். பழைய காலத்தில் 120 000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன.உழவர்களின் வருவாயைப் பெருக்கிக் கிராம முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்ற கருத்தைப் பரப்பி வீரிய விதைகளையும் அவற்றின்   கட்டுக்கடங்கா விலைகளையும் விவசாயிகள்  மீது திணித்ததால் நிலமும், உடலும் பாழாகி, எதற்கும் லாயக்கற்றதாகி இன்று நிற்கின்றன  நிலமும் அதைச் சார்ந்த வேளாண் மக்களும். வறுமையில் வாடும் மக்களின் துயரைப்போக்க விவசாயம் இல்லை.இந்தியக் குடிமக்கள் எதைச்  சாப்பிட வேண்டும் எனப்  பன்னாட்டுக்  கம்பனிகள் தான் முடிவு செய்கின்றன  என்பதே  தற்போதைய நிலைமை.
மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலக மயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், '' இந்த விதைகள் நம்  நிலங்களை மலடாக்கிவிடும், எல்லாத்   தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிந்துவிடும்.'' என எதிர்ப்புத் தெரிவித்தன.  மேலும், ''வழக்கமாக, உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபு மாற்று விதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபு மாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள் விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும்.  விதைகள் தேவைப்படும் ஒவ்வொரு முறையும்  நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்துக்  கூறின. அவற்றைச் செவிமடுக்காததன் விளைவு வட இந்தியாவில் பி.டி பருத்தி எனப்படும் மரபணு பருத்தியை அறிமுகம் செய்தது  மான்சாண்டோ.
பி . டி  என்றால் என்ன?
BT என்பது Bacillus Thuringiensis என்ற நுண்ணுயிரி(பாக்டீரியா).பருத்திச் செடியைத் தாக்கும். புழுக்களிடமிருந்து காப்பாற்ற இந்த நுண்ணுயிரிலிருந்து எடுக்கப்பட்ட ""கிரை 1ஏசி'' விஷப்புரதம் பருத்திச் செடியின் மரபணுவில் புகுத்தப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன.இந்தியாவில் பிடி பருத்தி மூலம் ஏராளமான விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.  எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை .கடனைச்  செலுத்த  முடியாமல் போனதால்,  கந்து வட்டிக்குக்  கடன் கொடுக்கும் தனியாரிடம் ஏறக்குறைய 60 சதவீத  விவசாயிகள்  மாட்டிக் கொண்டுள்ளதாகவும் இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான்  பெரும்பான்மையான தற்கொலைகள்  நிகழ்ந்துள்ளன என்றும் தெரிகின்றன .மிக மோசமாக 1995  -இல் இருந்து 2010 வரை  50 000 விவசாயத்  தற்கொலைகள் நடைபெற்றுள்ளமை  மகாராஷ்டிராவின் பதிவுகளில் பதிவாகி உள்ளது .மேலும் 1500 ஆடுகள் இறந்து போனதற்கு இந்த விதைகளின் வீரியம் பச்சையிலைகளிலும் தீவிரமாக இருந்ததே காரணம்.

அடுத்த அறிமுகம் பி.டி கத்தரிக்காய்.உலக அளவில்  கத்தரிக்காய் மரபணு மாற்றம்  செய்த மான்சாண்டோ என்ற அமெரிக்கக்  கம்பெனி, ஐரோப்பாவிற்குக்  கொண்டு செல்வதற்குப்  பதிலாக இந்தியாவுக்குக்  கொண்டு வருகிறது.. .இதில்   விஷத் தன்மை இருப்பதால் புழு,பூச்சி வெட்டு ஏற்படாது. இந்தக் கத்தரிக்காயைக்  கடிக்கும் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடும்.  அதனால்  இக்கத்தரிக்காய்  நீண்டநாள் கெடாமல் இருக்கும்.மரபணு மாற்றப்பட்ட பிடி கத்தரிக்காய் மூலம் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என முழுமையாகத்  தெரியவில்லை. .மரபணு  மாற்ற்றப்பட்ட  கத்தரிக்காய் விதைகளால், விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. ஒவ்வொரு கத்தரிக்காய்ச்  செடிக்கும், அந்த நிறுவனத்திற்குக்  காப்புத் தொகை (ராயல்டி) கொடுக்க வேண்டும். இந்தக்  கத்தரிக்காய் மூலம் தோல் நோய், மலட்டுத்தன்மை, அலர்ஜி, சிறுநீரகக்  கோளாறு ஆகியவை ஏற்படும் எனக்   கூறப்படுகிறது. இதனால் பிடி கத்தரிக்காய்க்குப்  பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இதைப்  பயன்படுத்தத்  தொடங்கிவிட்டால் எதிர்காலத்தில் உண்மையான விதை கிடைக்காது. பிடி கத்தரிக்காய் அருகே பயிரிடப்பட்ட இடத்தில் உள்ள நாட்டுக்  கத்தரிக்காய் கூட மகரந்த சேர்க்கையால் பிடி கத்தரியாக மாறும். கருவில் உள்ள குழந்தைகளுக்குக்  கூடப்  பாதிப்பு ஏற்படும். எனவே பிடி ரக விதைகளை நிரந்தரமாகத்  தடை செய்து எதிர்கால சந்ததியினரைப்  பாதுகாக்க வேண்டும். பப்பாளி,வெண்டைக்காய் போன்றவற்றின் மீதும் ஆய்வுகள் தொடர்கின்றன .
  இந்தியாவில் BT பருத்தி, கத்திரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வ்ந்து கொட்டிய அதே பிரச்சாரம்தான் ஆப்பிரிக்காவிலும் தொடர்கிறது.
இந்தியாவின்  வாழ்வாதாரமாகிய விவசாயத்தை ஒருபோதும்  வியாபாரமாக்கக்கூடாது.எந்தப்  பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளையும் மண்தான். இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழி.
லூசியா லெபோ





தமிழும், வழியும்

                                                       


நாடு வாழ, நன்மைக்  காண, நல்லப் பாதை வேண்டுமே,
ஏடு சொன்ன உண்மை, நேர்மை இன்றிக் கல்வி உள்ளதே!
வீடு காக்க அன்பு, பண்பு மிச்ச மீதி இல்லையே!
கேடு நீக்க, மாசு போக்கக்  கண்டு வாக்குச் சொல்லுமே!


உலகினில் மானுடம் ஒன்றி யங்கியே
நிலமெனும் தாய்தனை நித்தம் வாழ்த்தியே
வலம்வர நல்வளம் மன்றம் சேருமே
உலவிட இக்தொரு ஊரும் சொர்க்கமே!


தாய்சொல்லைத் தட்டாமல் கண்காணா நாட்டினிலும் தன்னுணர்வு                                         காத்திருந்தான்!
தவமியற்றிப் பெற்றாளோ  பெறற்கரிய மகாத்மாவாம் தங்கமகன், தன்னுயிராம்
தாய்நாட்டின் பெருமைதனை உலகறியச் செய்திடவே, தன்னலமே
தான் துறந்து
தகைவிலாத சத்தியத்தின் முழுவடிவாய் மாறிநின்றான்! தனக்கொருப் பாதையென
வாய்மையினைத் தேர்ந்தெடுத்தே இந்தியர்க்கு மாறாத வழிகாட்டி, உத்தமனாய்
வாய்த்தஅந்த காந்தியவன் சாற்றிநின்ற கொள்கையென்றும் வாழ்ந்திடவே
செய்திடுவோம்!
தூய்மையினைப் போற்றிஎன்றும் சரித்திரத்தின் ஏட்டினிலே தூதர்க
ளாய்அமைதி
துலங்கிடவே துணைபுரிவோம் மனிதகுலம் தழைத்திடவே  துயர்தனையும்
ஏற்றிடுவோம்!

திருமதி சிமோன்



lundi 29 avril 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விடவும், நமது வாழ்க்கையே சிக்கலாக உள்ளது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. பெரும்பாலான கணவன்-மனைவியரிடையே பிரிக்க இயலாத, பிரிக்கக் கூடாததான உறவில் சேர்ந்திருப்பதே தண்டனையாக உள்ளது. மலர்க் குவியல் போல அழகு சிந்தும்  குழந்தைச் செல்வங்கள் சுமக்க விரும்பாத சுமையாகக் கருதப்படுகின்றன. போற்றி வந்தச் சென்றத் தலைமுறை, தவிர்க்கப்பட வேண்டிய உறவாகக் கருதப்படுகின்றது.  இப்படி உலக வாழ்வின் ஆதாரமான குடும்ப வாழ்வு ஆட்டம் கண்டு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

நமது சச்சரவுகளும், மோதல்களும் ஒருபுறம் இருக்கட்டும்! அது தாறுமாறானதாக இருந்தாலும், ஒரு தலைமுறையோடு ஒழிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாழ்க்கைச் சுழற்சியின் அடிப்படையான அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் அல்லவா?

அவசரமான, பளு நிறைந்தப் பாதையில் எந்த அளவுக்குப் பொறுப்புக்களைக் கழற்றி விடுகிறோமோ, அந்த அளவு அது புத்திசாலித்தனம் என்கிற மனப்பான்மைதான் அடிப்படையாக இன்று உள்ளது. இதை 'take it easy policy' என்ற போர்வையில், எல்லாவற்றையும் கடந்த நிலையில் வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற மாயையை உண்டாக்குகிறார்கள். உண்மையில் இவர்கள் பற்றற்று, மனத்தால் விலகி அனுபவங்களைப் பார்ப்பதில்லை. தன்னை எது கட்டுப்படுத்தி விடுமோ என்ற பயத்தில் அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்!

இதுவே துணிந்து திருமணம் என்னும் கட்டுக்குள் அடைபடவும், குழந்தை என்ற வாழ்நாள் பொறுப்பை ஏற்கவும் தடுக்கிறது. என் வாழ்வு, என்  சுகம்,என் இன்பம் எனத் தன் மயமாகச் சிந்திக்க வைக்கிறது. துன்பங்களை அல்லது மன பாரத்தைத் தவிர்க்கிறோம் என்று கூறி, கடமைகளைத் தட்டிக் கழிக்கிறார்கள். இந்தப் பாதைக்  கருவறையின் கதவைச் சாத்தி, மன பந்தத்தை நீக்கி, வெறும் உடல் உணர்வில் முடிகிறது.

ஒரு படி மேலே போய், தவறி உருவானதை மனசாட்சியின்றி அழிக்கவும் துணிகிறது. குழந்தை அல்லது தாயின் உடல் நிலைக் கருதித் தவிர்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். பாதிக்கப் பட்ட பெண்ணொருத்தி தான் மனமறிந்து செய்யாத குற்றத்திற்காக  தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகையில் மாற்று வழி தேடலாம். இதில் கூட சம்பந்தப்பட்ட ஆண் மனசாட்சியோடு நடந்து கொண்டால் இந்நிலை தவிர்க்கப்படக்கூடியதே ஆனால் வாழ்க்கை வசதிக்காக, இன்னபிறக் காரணங்களுக்காக ஓர் உயிர்க் கொலை என்பது ஏற்றுக்கொள்ள இயலாததாய் இருக்கிறது. 'கருவைச் சுமப்பவள் பெண். எனவே குழந்தை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவள் உரிமை' என்றொரு வாதம்.சுமப்பவள் அவள் என்பதால், ஓர் நுண்ணுயிரை அழிக்கும் உரிமையையும் அவளிடம் கொடுத்து விட முடியுமா?  தாய்மை அடையும் எத்தனை இளம் பெண்களுக்குத்  தக்கக் காரணத்தோடு மட்டுமே  இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் முதிர்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியும்?

அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட குழந்தைப் பிறப்பும், அதன் ஆயுளும் முழுதாக மனிதரின் கைகளில் இல்லாத நிலையில், நமக்கு அழிக்கும் உரிமை இல்லை என்றே தோன்றுகிறது!

திருமதி சிமோன் 


அழகுப் பெட்டகங்கள்

                                                               
               (நேபால் விமான விபத்தில் மறைந்த குழந்தை நட்சத்திரம்  'தருணி ')

இந்த அழகு முகம் மறைந்துவிட்டது என்ற செய்தி நம் உள்ளத்தை ஊடுருவித் தாக்கவில்லை? ஒரு பூவைப்போல அசைந்தாடி கவனத்தைக் கவர்ந்த புதையல், இனி இல்லை என்ற உண்மை இதயத்தை வலிக்கச் செய்யவில்லை? இந்த அருமைக் குழந்தையை அறிந்தவர்கள், உறவினர் எப்படித் தவித்திருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கத்தின் ஊடே தோன்றவில்லை? இந்த அழகுப் பெட்டகத்தை ஈன்ற அந்த முகமறியா தாயும், தந்தையும் எப்படித் துடித்திருப்பார்கள் என்ற உண்மை மனதைப் பிழிய வில்லை?

ஈர நெஞ்சம் கொண்ட யாரும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. கையறு நிலையில் விதியைச் சபிக்காமல் இருக்க முடியாது. இறைவனுக்கு ஏன் கருணை இல்லாமல் போயிற்று  என்ற கேள்வி பிறக்காமல் போகாது. யாருக்கோ, என்றோ வந்த சோகம் என்று வாளாவிருக்க முடியாது!

எவருடைய குழந்தையோ இந்த பூமியில் இல்லாமற் போன வெறுமை இத்தகைய வலிமைக் கொண்டது என்றால், நம் உதிரத்தில் தோன்றிய, நமது இன்பத்தின் சான்றான, வழித் தோன்றலை, குடும்ப விளக்கை இழக்கும் பாரம் எத்தகையதாக இருக்கும்?

பெற்று, அதன் முகத்தைப் பார்த்தப் பின்தான் அது நம் குழந்தைய?! உருவானப் பிறகு, அதற்கு உலகைப் பார்க்கும் உரிமை இல்லையா? அந்த உரிமையைப் பறிக்க நாம் யார்?

அதுவும் அந்தக் கொலைப் பாதகத்தைச் செய்வது அதைத் தாங்கி நின்றவளையும் எப்படி மனதாலும், உடலாலும் பாதிக்கும் என்பதை இந்நினைவு தோன்றுமுன் எண்ணிப் பார்ப்பது நலம்.


தவறான கருக்கலைப்பின் விளைவுகள்:

கரு, கருப்பையில் ஒட்டுமுன் கலைப்பது சுலபம். ஆனால் அதற்கான  மருந்தோ  அல்லது கலைக்கும் முறையோ தாய்க்கு எமனாக மாறலாம்.

ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டால், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு, கரு ஒட்டாது வெளியேறும்.

சில உணவு வகைகள், வைட்டமின் ஏ, ஈ போன்றவற்றை மிக அதிக அளவில்  உண்டால்  சமச் சீரற்றத் தன்மை உருவாகி, கரு வெளியேறும்.

கரு முழுதும் வெளியேறாது, அதன் பிசிறுகள் தங்கினால், உதிரப் போக்கு நிற்காமல்  இருக்கும்.

கருக்கலைப்பின் போது சுகாதாரம் மிக மிக அவசியம். இல்லையேல் தொற்றுக் கிருமிகள் மூலம் நோய்ப்பட வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை வலுவிழந்து போய் விடச் சாத்தியக் கூறு உள்ளதால், பிறகு என்றைக்குமே கருத் தரிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.

இறந்த பிண்டம் வயிற்றில் இருக்கும்போது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும்.

தாயின் ரத்தம், உறையும் தன்மை இழப்பதன் மூலம் மரணம் சம்பவிக்கலாம்.

கரு கருப்பையில் ஒட்டிய பிறகு, 12 வாரங்கள் வரை சட்ட பூர்வ கருக்கலைப்புச் செய்யலாம்.  ஆனால் பொதுவாக 7ஆவது வாரத்தில் கருவின் இதயத் துடிப்பு வளர்ச்சியுறுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அது உலகில் நடமாடத் தன் முதலடியை எடுத்து வைக்கிறது என்றுதானே அர்த்தம்? ஒரு வேளை 12 ஆவது வாரத்தில் பல்வேறு காரணங்களால் அது நின்று போக வாய்ப்புள்ளதாம். அதனால் தான் 7-12 வாரங்களில் ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். 'மன வளர்ச்சிக் குறைபாடு' இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

இதற்குப்பின் செய்யப்படும் கருக்கலைப்புகள் தாயின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தையும் கொண்டு வரலாம்.

இதை விட முக்கியமானது-தாய்மைக்கு இருப்பிடமான பெண்மை, மனதார இந்தக் கொடுமையை ஏற்காது. அவள் மனதில் முள்ளாக நெருடி, என்றும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

இன்பத்தில் சரிசமமாக பங்கு கொள்ளும் ஆணும், மனசாட்சி உள்ளவனாக இருந்தால் என்றேனும் அந்த முள் குத்தும்!

திருமதி சிமோன்

மழலைக் கவிதை


                                                           


மழலை முத்தம்:

அன்னை மடியின் அழகு மழலைத்  தருமே அமுதமுத்தம்
இன்பத்  தேனை இதயங் களிக்க வருமே இனிமைசத்தம்
செண்டு போல செழித்தக் கன்னம் கரும்பைத் தெவிட்டவைக்கும்
வண்டு விழியும் வண்ண உடலும் பெருமை வரவாக்கும்!


அசையும் தென்றல்:

அசைந்துவரும் தென்றலென அருகில் வந்தே
    ஆசையோட ணைக்கவிடு சின்னச் சிட்டே!
இசைந்துதரும் முத்தமென்ற இனிமை ஒன்றே
     இசைக்குமின்ப கீதமென்றன்  மனதுக் குள்ளே!
திசையெங்கும் பேரின்பம் தோன்றும்! உள்ளம்
     திகைக்கின்றேன் நீயில்லா நொடியில்! நானும்
வசைபாடும் இவ்வுலகை மறப்பேன், உன்னை
     வாயாரச் சீர்பாடி மகிழும் போதே!


குழந்தைச் சிரிப்பு:

வண்ண வண்ணப் பூக்களுமே
   வடிவாய் இங்கு  மணம்பரப்பும்
எண்ண எண்ணத் தொலையாத
    எழிலும் எங்கும் நிறைந்திடுமே
சின்னச் சின்ன விழிகாட்டிச்
     சிறுகை கொண்டு சிலிர்த்திடவே
என்னை, உன்னை மறந்திடவே
     எழிலாய் மழலைச் சிரித்திடுமே!


மழலையின் வெளியுலகு:

அன்னைக் கைகளில் அன்புக் குழந்தையின்
முன்னைச் சுகமே முற்றும் மறந்திட
பிள்ளைக் கனியது பேதமைத் துறந்திட
தள்ளும் வழியே படிப்பு!


பேதைமை, உண்மையும் பேரெழில் வண்ணமும்
தீதறு சொல்லுமாய்த் தீண்டிடும் செல்வமே!
உன்மன வானில் உவப்பினை நல்கவே
இன்பந் தருமோ உலகு!

திருமதி சிமோன்



குழந்தை 
குழவின் குரலோ குயிலினை வெல்லும்
மழவின் நடையோ மயிலினம் தோற்கும் 
மழலைச் சிரிப்போ மனதினை அள்ளும்
குழந்தைச் செயலே குறும்பு.
                               கவிஞர் வே. தேவராசு
முன்னை வினைவந்து முந்தியே தள்ளிட 
அன்னை வயிற்றில் ஐயிரண்டுத் திங்களாய்த்
தன்னை மறந்துத் தலைகீழ்த் தவமிருந்து 
மின்னலாய்த் தாக்கிய மெல்லடியில் ஊர்ந்தேஇம்  
மண்ணில் பிறந்த மகவும் சிறுபோழ்தில் 
"என்னே இதுநானெங் கேயிருக் கின்றேன்? 
பின்னே யுமிங்கே பிறந்தேனே!"என்றயர்ந்(து) 
அன்னியப் பட்டே அழுகின்ற(து) ஈங்கே!
                               சரோசா தேவராசு


ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரோ ஆரோ ஆரி ராரோ 
தென்னன் தமிழே! தென்றல் காற்றே! 
மன்னும் அழகே! மலரும் பொழுதே! 
மூன்றாம் பிறையே! முன்னோர்த் தவமே!
தோன்றும் கதிரே! தொல்மணித் திரளே! 
பட்டுப் பூவே! பனியின் துளியே! 
கட்டிக் கரும்பே! கனகச் செப்பே!
மொட்டே! மலரே! மோனத் தெழிலே! 
சிட்டாய் வந்தென் சிந்தை நிறைந்தாய்! 
கண்ணின் மணியே! களிப்புறு வண்டே! 
பொன்னின் அணியே! பொருந்தும் கலையே!
மானே! மயிலே! மழலைக் கிளியே! 
தேனே! சுவையே! தெவிட்டா அமிழ்தே! 
முத்துச் சரமே! முல்லைக் கொடியே! 
கத்தும் குயிலே! கம்பன் கவியே! 
வண்ணத் தமிழே! வளரும் புகழே!
அன்னை அருளே! அற்புதப் பொருளே 
ஆரி ராரோ ஆரி ராரோ 
ஆரோ ஆரோ ஆரி ராரோ

கருக்கலைப்பு - ஒரு கண்ணோட்டம்

                                                                 

கருக்கலைப்பு என்பது கருவை அல்லது முதிர்கருவை கருப்பையிலிருந்து முற்றாக அகற்றி விடுவதாகும். (சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படும் பொழுது  அது  கருச்சிதைவு  எனப்படும்). இது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படும்  கொடூரம் . இந்த சிசுக் கொலைகள் உலகெங்கும்  நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. . கருக்கலைப்பு இன்றைய மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கேற்ப நவீன சாதனங்களின் உதவியுடன் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் மலிந்து போயிருக்கும் கருக்கலைப்புக்கு பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டாலும்  ஆய்வுகளின்படி, கருக்கலைப்புக்களில் 95 வீதமானவை குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே செய்யப்படுகின்றன. பாலியல் வல்லுறவு, குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதற்கான அறிகுறிகள், குழந்தை பிறப்பதினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம்    போன்றவையாலும் கருக்கலைப்புக்கள் செய்யப்படுகின்றன.கருக்கலைப்பிற்கு ஒரு சில நியாயமான காரணிகள் இருந்தாலும் அநேகமானவை சுயநலத்திற்காக செய்யப்படுகின்றதென்பதே உண்மை.

 மேற்குலக நாடுகளில் நிலவுகின்ற, தற்பொழுது நம் நாட்டிலும் புகுந்துள்ள உடன் வாழ்வு (Living Together), தற்காலிக திருமணம், Life partner, Boy/Girl friend போன்ற சீர்கேட்ட இவ் வாழ்க்கை முறைகளின் விளைவாகவும்  இந்தக் கருக்கலைப்பு வீதம் அதிகரித்து வருவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
 

 பிரிட்டன்  1967 ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்கா , ஐரோப்பா 1973 ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் அதற்கு அடுத்த ஆண்டிலும் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளன.2007 இல் போர்த்துக்கல் இதை அமுல்படுத்தியது .

கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோத செயலாகும்.



 எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம்.
  
இந்தியாவைப் பொறுத்தவரை  1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவில் பெண் சிசுக் கொலையே அதிகமாகச் செய்யப்படுகின்றது. இந்தியாவில் தலைவிரித்தாடும் வரதட்சணைக் கொடுமையால் பெருமளவில் பெண் சிசுக் கொலைகளே புரியப்படுகின்றன. ஒவ்வொரு  ஆண்டும் 10 இலட்சம் பெண் சிசுக்கள் கருவறுக்கப்படுகின்றன. அதாவது தினந்தோறும் 2500 சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. 2007, 2008ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வுகளின்படி,  பெண் சிசுக் கொலைகள்  சீனாவில் 45 விகிதமாகவும் இலங்கையில் 58 விகிதமாகவும் காணப்படுகின்றது.

  பீஜிங்:சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகரப் பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மீறினால் தண்டனை என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு 1971 முதல் 2010 வரை 33 கோடி கருக்கலைப்புகள்  செய்யப்பட்டுள்ளன என்று சீன நல்வாழ்வுத்துறை இணைய தளம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதுஇதன் எதிரொலியாக அந்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமானது, பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இலங்கையில் தற்பொழுது   நாள்தோறும் ஆயிரம் கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சமூக  சேவைகள் அமைச்சர்   பீலிக்ஸ் பெரேரா 09 2013 அன்று தெரிவித்துள்ளார்.


அயர்லாந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர், அங்கு அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால்  காலமானார்.தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 



  ஐரோப்பாவில் கருக்கலைப்புச் செய்யும் பெண்களில்  அதிகமானவர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள். ஆபிரிக்காவில் 26% பெண்கள் 20இற்கும் குறைந்த வயதில் கருக்கலைப்புச் செய்கின்றனர். அமெரிக்காவில்   35% பெண்கள் 45 வயதை அடையும் முன்பு ஒரு முறையேனும் கருக்கலைப்பிற்குள்ளாகி விடுகின்றனர்.


 உ லகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம். பெண்களின் கல்வியறிவின்மையும்  விழிப்புணர்ச்சி இல்லாமையுமே இதற்கு காரணமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.



  இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி, விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொண்டு சிந்திப்போம்.

தொகுப்பு:
லூசியா லெபோ.